இக்கட்டில் அனிதா!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 18, 2023
பார்வையிட்டோர்: 2,382 
 

அம்மாசிக்குத் தாங்க முடியவில்லை! அவனுக்கு அனிதாவின் ஆட்டம் ரொம்ப வேதனையைக் கொடுத்தது.

என்னடா இது? இப்படியும் ஒரு பொம்பளையா? ஒரு ஓசனை வேண்டாமா?

இந்த ஆம்பளைகளுக்கு எத்தனை பட்டாலும் புத்தி வராது! போன்ல அவ கூப்பிட்ட ஒடனே ஆஹா ஓஹோன்னு கூவிகிட்டு ஓடறதுலதான் இருந்தான் நம்ம ராஜ்.

போனவாட்டி டவுசர் கழண்டு வீட்டுக்கு வெளிய தெரத்தி நின்னது இன்னும் நமக்கு நினைவுல கசக்குது! ராஜ், எதுவும் நேராத மாதிரி ஒரு விரைப்பில் மீண்டும் காரை எடுத்தான்- அனிதாவின் வீட்டை நோக்கி!

அதே வீடு! வேற சீன்!

அனிதா வீட்டில் தங்கியிருந்த உதவியாளர் ஆறுமுகம் மட்டும் ராஜ் தோள் மீது கைவைத்து ஆறுதலாகத் தட்டினார். “ஏண்டா! இன்னும் பத்தல்லியா?” என்று கேட்ட மாதிரி இருந்தது.

பரசு, ரூபவதி தேவி, டிரைவர், மானேஜர் எவரையும் அங்கே காணவில்லை! அனைவரும் ரூபாயுடன் வெளியேறி இருக்க வேண்டும்.

மாடி ரூமில் அனிதா! வழக்கம் போல கரம் குவித்தாள். ஏதோ சொல்ல முயன்றாள். உண்மை தடுத்திருக்க வேண்டும். ராஜ், ஏழைப் பங்காளனில் ஜெமினி மாதிரி முகத்தை சலனமில்லாமல் வைத்துக் கொண்டு அவளைப் பார்த்தான்.

அந்தப் பார்வையின் தாக்கம் தாங்கமுடியாமல் அனிதா கண்களை அடைத்துக் கொண்டு முகம் கவிழ்ந்தாள். கண் இமைக் கோடியில், அத்தனை பஞ்சத்திலும் வெள்ளம் தென்பட்டது!

அடுத்த காட்சி!

“சரி! என்ன பிராப்ளம்? என் கிட்ட சொல்லமாட்டியா?”

ராஜ் பார்வையில் பேசினான். அனிதா புரிந்து கொண்டவள் போலத் தோன்றினாள்.

கைகளைக் காண்பித்தாள். மருதாணி பேசியது! ராஜ் மூளைக்குள் இன்னும் எல்இடி லைட் மினுக்கவில்லை.

அடுத்தது ராஜ் அவளுடைய புதிய நெக்லஸைப் பார்த்தான். அட! அதன் கடைசி முனையில், அதிகார தோரணையுடன் ஒரு தாலி பளிச்சிட்டது!

“இது என்னடா! புது பூதம்?” என்று நினைத்தவனை கரகரத்த குரலில் எழுப்பினார் ஆறுமுகம்.

“தம்பீ! அந்தப் பரசு, அம்மாவுக்கு தாலி கட்டி, சொந்தமாக்கிக் கொண்டு ரூபவதி தேவியுடன் வெளி நாடு போய் விட்டான். அத்தனை பணம், நகை எல்லாம் காருடன் பெட்டியில் எடுத்துப் போய் விட்டான். இன்னும் எப்போது வருவானோ.. என்னென்ன செய்வானோ?”

“என்ன இதெல்லாம் உண்மையா?” என்று கேட்க நினைத்தவனின் கைகளைப் பிடித்துக் கொண்டு ஊமையாக அழுதாள் அனிதா, அவனிடம் முதல் முறையாக!

தாலியைக் கழட்டி வீசி விட நாங்கள் சொல்றோம். அம்மா கேட்க மாட்டேங்கிறாங்க! “தம்பீ! நீங்களாவது சொல்லி ஏதாவது மனசு மாறுமான்னு பார்ப்போம்”. சமையற்கார அம்மா விசாலாட்சி சொன்னாள்.

“கொஞ்சம் பொறுங்க! அனிதா பழைய நிலைமைக்கு வரட்டும். அப்புறம் பேசலாமே!” என்றான் ராஜ்.

அனிதா அவன் கைகளை விடவில்லை! இன்னும் பிடித்துக் கொண்டு அரற்றிக் கொண்டிருந்தாள்.

ராஜ் ஒரு முடிவுக்கு வந்தான்.

“விசாலாட்சி அம்மா! அனிதாவின் அறையில் சுத்தம் செய்யுங்க! அவுங்க கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும்”

“எனக்கு இந்தப் பக்கத்து அறையில் சுத்தம் செய்து கொடுங்க! நாளைக்கு மீண்டும் யோசனை பண்ணலாம்.”

அம்மாசியைக் கூப்பிட்டான்.

“அண்ணா! கொஞ்ச நாளைக்கு டாக்ஸியை நீதான் பாத்துக்கணும் கண்ணு. இங்கே நெலம செரியாறவரிக்கும்.

“அனிதாவை நான் தான் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்”

இப்போது அனிதா மீண்டும் அவனை ஒரு நன்றியறிதலுடன் பார்த்தாள். அதில் நட்பு இருந்தது! காதல் காணாமற் போயிருந்தது போலும்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *