வெள்ளந்தி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 8, 2023
பார்வையிட்டோர்: 2,507 
 
 

“தம்பி தம்பி”

“சொல்லுங்க பாட்டி”

“ஆயிரம் ரூபா ஏரி வேல காசு வந்திருக்கு.. எடுக்கணும்.. இந்த பார்ம கொஞ்சம் எழுதிக் கொடுப்பா.. நான் கை நாட்டு வச்சு வாங்கிக்கறேன்..”

“அச்சச்சோ.. பாட்டி.. நான் எழுதக் கூடாதே.. பேங்க்ல வேல செஞ்சிட்டு, என்னோட கையெழுத்து இந்த பார்ம்ல இருந்தா, பின்னாடி எதாவது பிரச்சனைனா.. என்னைத் தான் கேப்பாங்க.. வேற யார்க்கிட்டயாவது எழுதி வாங்கிட்டு வாங்க.. நான் பணம் கொடுத்தர்றேன்..”

“என்னப்பா இப்படி சொல்லிட்ட..!? நானே காலச்சாப்பாடு கூட சாப்பிடாம, ஆஸ்பத்திரிக்கு போயிட்டு, பேங்குக்கு வந்திருக்கேன்.. பேங்குக்குள்ள வேற யாருமே இல்ல.. நான் யார்க்கிட்டையா எழுதி வாங்க.. கொஞ்சம் நீயே எழுதிக் கொடுப்பா..”

“ம்.. சரி.. உங்க பேங்க் புக்க கொடுங்க… அக்கவுண்ட் நம்பர் பார்க்கணும்”

“இந்தாப்பா” “அக்கவுண்ட்ல ஆயிருத்து முன்னூறு ரூபா இருக்கு.. ஆயிரம் ரூபா வேணுமா?”

“ஆமாப்பா..”

“இந்தாங்க.. கட்ட விரல்ல மையத்தொட்டு இங்கயும் இங்கயும் வைங்க…”

“இப்படியாப்பா.. இந்தாப்பா வச்சாச்சு…”

“சரி… இதப்புடிங்க.. ரெண்டு ஐநூறு ரூபா நோட்டு…”

“ம்.. கொடுப்பா.. ஒன்னு ரெண்டு.. சரிப்பா… ரொம்ப சந்தோஷம்.. வரேன்பா…”

‘வாங்க பாட்டி..” அப்பாடி… பாட்டிய ஒரு வழியா அனுப்பி வச்சாச்சு.. இப்ப அடுத்த வேலையைப் பார்க்கலாம்.. என்று பரபரப்பாக வேலையில் மூழ்கினான் ரமேஷ்..

===

சிறிது நேரத்தில்..

“தம்பி தம்பி…”

“என்ன பாட்டி.. திரும்பி வந்திருக்கீங்க..? அதான் பணம் எடுத்துட்டுப் போயிட்டீங்களே.. அப்பறம் எதுக்கு இப்ப வந்தீங்க…?

“என்னோட நூறு ரூபாயக் காணோம் தம்பி..”

“என்னது நூறு ரூபாயா?”

“ஆமாம் தம்பி..”

“ஆனா நான் உங்களுக்கு ரெண்டு ஐநூறு ரூபா தானே கொடுத்தேன்..”

“அது இருக்கு தம்பி.. இந்தா பாரு.. ஒன்னு ரெண்டு..”

“அப்பறம் எந்த ரூபா பாட்டி?”

“நான் உங்கிட்ட என்னோட புக் கொடுத்தேன்ல.. அதுல ஒரு நூறு ரூபா வச்சிருந்தேன்.. வீட்டுக்குப் போய் பார்க்கறேன்… அந்த நூறு ரூபாயக் காணோம்.. அப்படியே பக்குனு ஆயிடுச்சு.. அதான் ஓடியாந்தேன்…”

“எது? நூறு ரூபா அந்த புக்குல இருந்துச்சா, நான் எதும் பார்க்கலையே”

“ஆமா தம்பி, இருந்துச்சு, இப்பக் காணோம்”

“என் கண்லயே படல பாட்டி நூறு ரூபா, நீங்க எதோ ஒரு பைல இருந்து தானே பேங்க்புக்க எடுத்தீங்க, அதுல விழுந்திருக்கும் பாருங்க”

“எல்லாப்பக்கமும் தேடிப்பார்த்திட்டேன்.. எங்கேயும் இல்ல. அந்தப் புக்குக்குள்ள தான் இருந்துச்சு.. எனக்கு அது வேணும்?”

“அதான் நான் பார்க்கவே இல்லேனு சொல்றேனே பாட்டி.. இல்லாத பணம் எப்படி வரும்?”

“ஆனா இருந்துச்சே..”

“அத நீங்க சொல்றீங்க.. நான் சொல்லலையே…”

“இல்லப்பா.. எனக்கு அந்த நூறு ரூபாய் வந்தாத்தான் நான் இந்த இடத்த விட்டு வெளிய போவேன்..”

“ஏன் பாட்டி.. எழுதத் தெரியாது எழுதிக் கொடுனு சொன்னீங்க.. பார்க்கவே பாவமா இருந்துச்சு.. சரினு ஒரு உதவி செய்யப் போனா.. இப்ப உபத்திரவத்துல வந்து தள்ளி விடறீங்களே!”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது.. எனக்கு என்னோட பணம் வேணும்..”, என கொஞ்சம் சத்தமாகவே பாட்டி கத்த.. எல்லாருமே கேஷியர் ரமேஷையே வேடிக்கை பார்க்க.. அவனுக்கு ரொம்ப சங்கடமாக

ஆகிவிட்டது. இரண்டு கஷ்டமர்கள் அவனிடமே வந்தனர். “சார்.. அதான் பாட்டி இருந்துச்சுனு சொல்றாங்களே!?”

“அதான் நான் பார்க்கவே இல்லேனு சொல்றேனே!” “சரி சார்.. நீங்க பார்க்கவே இல்லேனு வச்சுக்கலாம்.. ஆனா இப்ப இந்தப்பாட்டி இப்படி கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணினா நல்லாவா இருக்கு.. இதனால உங்க பேரு கெடும்.. உங்க பேங்க் பேரு கெடும்..”

“அதனால..”

“அதனால.. நீங்களே ஒரு நூறு ரூபாயக் கொடுத்து பாட்டிய அனுப்பிவிட்டுடுங்க.. பிரச்சனை தீர்ந்திடும்..”

“நான் பார்க்காத பணத்த, நான் எதுக்காக கொடுக்கணும்? அத நீங்களே கொடுத்திடுங்களே!”

“என்னது நாங்களா?’, என்றபடி அவர்கள் பின் வாங்கினர்.. இதற்குள் பாட்டியின் சத்தம் இன்னும் அதிகமானது.. கூடவே வேலை செய்யும் பாலா, ரமேஷிடம் வந்தான்.

“ரமேஷ்.. பேசாம நூறு ரூபாயக் கொடுத்து பாட்டிய அனுப்பிவைங்க.. இந்தப்பாட்டி இப்ப இங்க இருந்து போகாது போல இருக்கே.. இதனால இங்க இருக்கற மத்த கஷ்டமருங்களுக்கும் ப்ராப்ளம்.. வேல செய்யற மத்த ஷ்டாப்கும் ப்ராப்ளம்..”

“அப்ப நான் நூறு ரூபாய பாட்டிக்கிட்ட கொடுத்தா, இந்த பிரச்சனை தீர்ந்திடும்னு சொல்றீங்களா? நான் தீரவே தீராதுனு சொல்றேன்..”

“எப்படி இவ்ளோ தீர்க்கமா சொல்றீங்க?”

“இன்னைக்கு நூறு ரூபாய் இப்படி காணாம் போச்சுனு கேட்டு வந்தவங்க, நாளைக்கே ஆயிரம் ரூபாய் வச்சிருந்தேன், காணாம்னு சொல்லிட்டு வரலாம்.. அப்ப நீங்க அந்த ஆயிரம் ரூபாயக் கொடுக்க ரெடினா சொல்லுங்க, நான் இப்ப நூரு ரூபாய கொடுத்து இந்தப் பிரச்சனைய தீர்த்து வைக்கறேன்..”

வாயை மூடிக்கொண்டு கப்சிப்பென தனது இடத்தில் உட்கார்ந்து வேலையைப் பார்க்க ஆரம்பித்தான் பாலா.

“பாட்டி கெளம்புங்க.. நான் என் வேலைய பார்க்கணும்..”

“அப்ப என் நூறு ரூபா..”

“அதான் நான் பார்க்கவே இல்லையே!”

“நான் போக மாட்டேன்.. எனக்கு நூறு ரூபா வேணும்..”

“சரி.. அப்ப ஒன்னு செய்யலாம்.. இங்க கேமரா இருக்குல்ல.. அதுல எல்லாமே பதிவாகி இருக்கும்.. நீங்க பேங்குக்கு வந்தது, எங்கிட்ட பேசினது.. அந்த புக்க கொடுத்தது.. எங்கிட்ட பணம் வாங்கிட்டுப் போனது.. எல்லாம்.. வாங்க.. அதப்போய் பார்க்கலாம்.. அதுல எல்லாம் தெளிவா பதிவாகி இருக்கும். அப்படி பார்க்கும் போது உங்க புக்ல நூறு ரூபாய் இருந்தது தெரிஞ்சா.. நான் உங்களுக்கு கொடுத்தர்றேன்.. அப்படி இல்லேனா.. இருநூறு ரூபாய் நீங்க எனக்கு கொடுக்கணும்.. சரியா…?”

“இது என்ன புதுக்கதையால்ல இருக்கு.. நான் எதுக்கு இருநூறு ரூபா தரணும்?”

“அதையேத்தான் நானும் அப்ப இருந்து கேட்டுட்டு இருக்கேன்.. நான் எதுக்கு நூறு ரூபாய் தரணும்னு… யாருமே காதுல வாங்கிக்கல…’

அப்போது வேகவேகமாக ஒரு சிறுவன் பேங்குக்குள் நுழைந்தான்.. பாட்டியின் முகம் அவனைக் கண்டதும் சட்டென மாறியது.

“பாட்டி பாட்டி”

“டே.. முருகா.. இங்க எதுக்குடா வந்த?” “சொல்றேன்.. சொல்றேன்.. நீ எங்கிட்ட காலைல ஆஸ்பத்திரிக்கு வர்றதுக்கு முன்னாடி நூறு ரூபாயக் கொடுத்து.. இத பத்திரமா வச்சுக்க.. நான் இன்னைக்கு இதே மாதிரி ஒன்னு சம்பாதிச்சிட்டு வரேனு சொல்லி கெளம்பினீல.. அந்த நூறு ரூபாய அப்பா பார்த்துட்டார்.. எதுடா இந்த காசுனு சொல்லி அடிக்க ஆரம்பிச்சுட்டார்.. இத பாட்டு கொடுத்து, வச்சுக்க சொன்னுச்சு.. இப்பவே நான் போய் கொடுத்தர்றேனு சொல்லிட்டுத்தான் இங்க ஓடிவந்தேன்.. இந்தா புடி நூறு ரூபா.. நான் கெளம்பறேன்..”, என்று பாட்டி கையில் நூறு ரூபாயைத் திணித்துவிட்டு ஓடியே விட்டான். பாட்டியின் முகத்தில் ஈயாடவில்லை. அப்படியே தலை குனிந்தபடி வெளியே நடக்க ஆரம்பித்தார் பாட்டி…

பாட்டிக்கு ரூபாய் கொடுக்கச் சொன்ன இருவரையும் பார்த்தான் ரமேஷ்.. சகபணியாளர் பாலாவையும் பார்த்தான். அனைவரும் பாட்டியை மிகுந்த கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“பாட்டி பாட்டி’, என சத்தமிட்டுக் கூப்பிட்டான் ரமேஷ்.. அவர் திரும்பிப் பார்க்கவே இல்லை அவனோ கவுண்டரை விட்டுவிட்டு வெளியே வந்து, பாட்டிக்கு முன்னால் நின்றான்..

“பாட்டி, இந்தாங்க நூறு ரூபா”

“ம்.. வேணா வேணா.. நான் கெளம்பறேன்..”

“பரவால்ல பிடிங்க.. இது உங்களுக்கு இல்ல.. உங்க பேரனுக்கு.. சரியான நேரத்துல வந்து என்னை காப்பாத்தினதுக்கு.. இது ரொம்ப தப்பு

பாட்டி.. எங்க எங்க இருந்தோ வந்து உங்க கிராமத்துல உங்களுக்கு சேவை செஞ்சிட்டு இருக்கோம்.. இப்படி ஒத்த நூறு ரூபாய வச்சு எங்க நேர்மைய வெல பேசாதிங்க..”

பாட்டி அமைதியாகவே நின்று கொண்டிருந்தார்.

“பாட்டி.. எனக்கு போன வாரம் நடந்த இன்னொரு விஷயமும் தெரியும்.. பேங்குக்கு வெளிய இதே மாதிரி யாரையோ எழுதிக் கொடுக்கச் சொல்லி.. ஒரு காலேஜ் பையன்கிட்ட நூறு ரூபாய் வாங்கியிருக்கீங்க..’

“அவன் அன்னேலயிருந்து யாருக்காவது உதவி செய்யப் போவான்னு நெனைக்கறீங்க? இதெல்லாம் வேணாம் பாட்டி.. விட்டுடுங்க.. கிராமங்கள்ல தான் வெள்ளந்தி மனுஷ்ங்க இன்னும் வாழ்றாங்கன்னு நாட்டுக்குள்ள பலபேர் இன்னும் நம்பிக்கிட்டு இருக்காங்க.. அவங்க நம்பிக்கைல மண்ணப் போட்றாதிங்க.. ப்ளீஸ்..”, எனச் சொன்னபடி தனது இருக்கையை நோக்கிச் சென்றான் ரமேஷ்..

அவன் கையில் திணித்த நூறு ரூபாயை அருகில் இருந்த கோவில் உண்டியலில் போட்டுவிட்டு கண்ணீரைத் துடைத்தபடி வீடு நோக்கி நடந்தார் பாட்டி..

இனி ஒரு வெள்ளந்தி பாட்டியைப் பார்க்கலாம்..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *