தங்கியிருந்த லாட்ஜில், ‘காலை ஆறரை மணிக்குத்தான் டீ , காபி சப்ளை. சர்வீசுக்கு ஆள் கிடையாது!’என்று சொல்லி விட்டாள் ரிசப்ஷனிஷ்ட்.
கதிருக்கு அதிகாலை ஐந்து மணிக்கே டீ காப்பி சாப்பிட்டு பழக்கம். ஐடி கம்பெனி ஒன்றிற்காக வேலை தேடி வெளியூர் வந்தவன் காலை எழுந்து காலாற நடந்தான்.
ஒரு அரை கிலோ மீட்டரில் ஒரு டீ கடை ‘வேலைக்கு ஆட்கள் தேவை!’ விளம்பர பலகையோடு அவனை வரவேற்றது.
இங்க வேலைக்குக் கேட்டுப் பார்க்கலாம். முன்னதாக அப்பாவுக்கு போன் பண்ணுவோம். அதற்கும் முன்னதாக இங்க சம்பளம் கேட்டுவிடுவோம் என்று நினைத்து,
‘வேலைக்கு ஆள் கேட்டிருக்கீங்களே? என்ன சம்பளம் தருவீங்க ?’என்றான்.
கடைக்காரர் அவனை ஏற இறங்க பார்த்துவிட்டு ‘யாருக்கு?’ என்றார்.
‘எனக்குத்தான்.’ என்றான்.
‘சம்பளம் பதினைந்தாயிரம் அக்கவுண்டிலபோட்டுவேன். நல்லா வேலை செஞ்சா இன்சன்டிவ் போனசெல்லாம் உண்டு. போனஸ் ரெண்டு முறை’ என்றார் டீ கடை ஓனர்.
‘ரெண்டு முறையா?’ கேட்டான் ஆச்சரியமாக.
‘ஆமாம்! தீபாவளிக்கு ஒருமுறை பொங்கலுக்கு ஒருமுறை!’ என்றார் ஓனர்.
யோசித்தான்.
ஐடி கம்பெனி வேலைல எட்டாயிரம்தான் தருவான் இவன் பதினைந்தாயிரம் தரேன்கறான். எங்க வேலையாயிருந்தா என்ன? எதுக்கும் அப்பாட்ட கேட்போம் போன் பண்ணி விவரம் சொன்னான்.
‘எல்லாம் சரிதான்டா ஆனா டீ கடைல வேலை பாக்கறேன்னா எவ கட்டிக்குவா?’ என்றார் அப்பா.
நியாயமாய்பட்டது.
‘எட்டாயிரம் ஐடி கம்பெனி வேலைல வாங்கற சம்பளம் பந்தாவுக்குத்தான். அதைவிட இங்க அதிகம்.
வெளிநாட்ல டாலர்ல சம்ளம்னாலும் ரூபாயா மாத்திதானே இங்க செலவு செய்ய முடியும்?.
எங்க என்ன வேலைங்கறதுல என்ன இருக்கு? எப்படி வேலை பார்க்கறோம்கற வைத்துத்தான்.
இந்த வேலை அதிகாலையே வரணும், ஐடி கம்பெனிலயும் அப்படித்தான்.
மேல்நாட்டுல தங்கி பெத்தவங்களை இங்க தனியா தவிக்கவிட்டுடாமே, அப்பா அம்மாவோட உள்நாட்லயே இருந்து அவர்களுக்கு உதவி செய்யலாம்.
கைநிறைய இங்கயே சம்பாதிப்போம். இதில் கவுரம் ஒண்ணும் குறையாது.
இதை மதிக்கற பொண்ணு கிடைச்சா கல்யாணம். இல்லேன்னா கல்யாணமும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம்!’ என்ற முடிவோடு, ‘வேலைக்கு நான் ரெடி! எப்ப வரட்டும்?’ என்றான்.