பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தான் முத்து. வந்ததிலிருந்து ஓர் ஓரமாக அமர்ந்து, ஏதோ சிந்தித்துக் கொண்டிருந்தான். முகம் சோகமாகக் காணப்பட்டது.
இதைக் கவனித்த அவனுடைய அம்மா, அவனருகில் வந்து, “எதுக்குப்பா, ஒரு மாதிரி இருக்கே..?’ என்று கேட்டார்.
“இன்னிக்குப் பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும்போது, வழியெல்லாம் இருந்த மரங்களையெல்லாம் வெட்டிப் போட்டிருக்காங்க… நேத்து இருந்த மரங்கள் இன்று இல்லை… இப்படியெல்லாம் இருக்குற மரங்களையெல்லாம் வெட்டிப்போட்டால், நம்மால் எப்படிம்மா வாழமுடியும்?’ என்றான் முத்து.
இதைக் கேட்டவுடன் அவனது அம்மா, “உன் கவலை எனக்குப் புரியுது! இதுக்குக் காரணம் உங்க அப்பாதான்… அவருதான் சாலையில் இருக்குற மரங்களையெல்லாம் வெட்டி, அவருடைய தொழிலுக்குப் பயன்படுத்துறாரு. முதல்ல நீ அவரைத் திருத்தப் பாரு…’ என்று கூறிவிட்டு அவனுக்கு காபி எடுத்துவர உள்ளே போனார்.
அப்போது அவனுடைய அப்பா வீட்டுக்குள் நுழைந்தார்.
அப்பாவுக்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க நினைத்த முத்து, மேஜை மீதிருந்த மாம்பழத்தை எடுத்துத் தின்றான். தின்று முடித்த பிறகு, மாம்பழத்தின் கொட்டையையும் தின்பதற்கு முயன்றான். இதைக் கவனித்த அவனுடைய அப்பா, அவன் கையைப் பிடித்துத் தடுத்தார்.
“என்னடா, மாம்பழக் கொட்டையைத் தின்னப் போகிறாயா? வயிற்றில் மரம் வளரும்’ என்று கூறினார்.
முத்து, அப்பா கூறியது பொய்தான் என்றாலும் அதை உண்மை என்று நம்பியதைப் போல நடித்தான்.
“அப்பா, சாலையிலுள்ள மரங்களையெல்லாம் வெட்டுகிறீர்கள்… என் வயித்திலாவது ஒரு மரம் வளரட்டுமே!’ என்றான் முத்து.
இதைக் கேட்டதும் அப்பாவுக்கு ஷாக் அடித்தது போல இருந்தது. தனது அறியாமையை நினைத்து வருநதினார்.
“இனிமேல் ஒரு மரத்தையும் வெட்ட மாட்டேன் முத்து…’ என்றார்.
அத்துடன் அன்றிலிருந்து மரம் வெட்டும் தொழிலை நிறுத்திவிட்டார்.
நிறைய மரக்கன்றுகளையும் நட ஆரம்பித்தார்.
– பே.மாரி சங்கர், அம்பாசமுத்திரம். ஆசிரியர் (மார்ச் 2012)