பட்டினப் பரவசம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 23, 2023
பார்வையிட்டோர்: 4,431 
 

ஆள் அரவமில்லாத பாளையங்கோட்டை ரயில்வே ஸ்டேஷனில் ஒரு பெஞ்ச்சில் தன்னந்தனியாய் உட்கார்ந்து நான் பலவித யோசனைகளால் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, கிட்டத்தட்ட இதே பெஞ்ச்சில், இருபதாம் நூற்றாண்டில், சிவராமனோடு உட்கார்ந்து மணிக்கணக்கில் வெட்டி அரட்டை அடித்துக் கொண்டிருந்த கவலைகளற்ற வசந்த காலம் நினைவுக்கு வந்தது.

ஊருக்கு ஒக்குப்புறமான இந்த ரயில்வே ஸ்டேஷன், கட்டபொம்மன் சிலையடிவாரம், அசோக் டாக்கீஸ், சங்கரம்பிள்ளைக் கடை முக்கு, மூளிக் குளக்கரை, சரோஜினி பார்க், மரியா கான்ட்டீன் என்று பலப்பல சந்திப்பு ஸ்தலங்களில் சேக்காளிகளோடு அரசியல் பற்றி, சினிமா பற்றி, சாராட்டக்கர் காலேஜ் பெண்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்த விடலைப் பருவம் அது.

பாளையங்கோட்டையை விட்டால் திருநெல்வேலி ஜங்ஷன், டவுன், தச்சநல்லூர். அவற்றைத் தாண்டி வேறு உலகமே தெரியாது. மூன்று தலைமுறைகளாய் வாழ்ந்து கொண்டிருக்கிற ஊர். இளைய தலைமுறைக்கு ஒத்து வரவில்லை. புலம்பெயர்ந்து சிங்காரச் சென்னையில் குடியேறியே ஆக வேண்டுமென்று மூன்று பிள்ளைகளுமே கொடி பிடிக்கிறார்கள், பெற்றவளின் ஆசீர்வாதத்தோடு.

“என்னப்பா நீங்க இன்னும் சுத்தப் பட்டிக்காடா இருக்கீங்க. ஐட்டில ஒலகம் ஹைட்டெக்காப் போய்ட்டு இருக்கு, அதோட சேந்து நானும், ஐ மீன் நாமளும் முன்னேற வேண்டாமா? மெட்ராஸ்ல போய் இருந்தாத்தான் அது முடியும். யோசிக்காதீங்கப்பா” என்கிறான் பெரிய பையன்.

ஹைட்டெக்காய் ஒரு சென்னை சிநேகிதியை இன்ட்டர்நெட் மூலம் அவன் வசீகரித்து வைத்திருக்கிற ரகசியத்தை நம்ம வீட்டுக்காரி என் காதில் போட்டு வைத்து விட்டாள் என்கிற விவரம் அவனுக்குத் தெரியுமோ தெரியாதோ!

சின்னவன் ஸ்கூல் கிரிக்கெட் டீமில் இருக்கிறான். சென்னைக்குக் குடிபெயர்ந்தால் தான் அவன் ஸ்டேட் லெவலில் ஷைன் பண்ண முடியும் என்று தீவிரமாய் நம்புகிறான்.

“நீ ஷைன் பண்றதுக்கு நா ஃபைன் கட்டணுண்டேய். மெட்ராஸ் ஸ்கூல்கள்ள ப்ளஸ் ஒன்ல சேர்றதுக்கு டொனேஷன் எவ்ளோ குடுக்கணும் தெரியுமா ஒனக்கு?” என்கிற என்னுடைய புலம்பல்

அவனிடம் எந்தப் பின்விளைவையும் ஏற்படுத்தவில்லை.

“இந்தப் பாளையங்கோட்ட இக்னேஷியஸ் கான்வென்ட் போரடிக்கிப்பா” என்கிறாள் கடைக்குட்டி.

“மெட்ராஸ்க்குப் போய், ஜெயலலிதா படிச்ச சர்ச் பார்க் கான்வென்ட்ல” படிக்கணுமாம் அவளுக்கு.

இந்த மூணுக்கும் வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பது அவங்க அம்மா. இலக்கிய ஆர்வம் பீறிட்டு, இப்போ ரெண்டு வருஷமாய்த் தமிழ்ச் சிறுகதைகளும் கவிதைகளும் எழுத ஆரம்பித்திருக்கிற நம்ம சம்சாரம். அவள் வாரப் பத்திரிகைகளுக்கு அனுப்பிய இலக்கியப் படைப்புகள் அத்தனையும் பத்திரமாய்த் திரும்பி வந்து சேர்ந்து விட்டன.

“சே, எவ்ளோ கஷ்டப்பட்டு எழுதினாலும் எல்லாமே திரும்பி வந்துருதே” என்று அவள் வருத்தப்பட்டதற்கு நான் சொன்னேன், “இனி ஸ்டாம்ப் வச்சு அனுப்பாத, அப்பத்தான் திரும்பி வராது” என்று.

அவள் எதிரணியில் இணைந்ததற்கு என்னுடைய நக்கலும் ஒரு காரணம். தவிர, மெட்ராஸில் போய் இருந்து கொண்டு, ஒவ்வொரு பத்திரிகை ஆஃபீஸாய்ப் படையடுத்துத் தன் படைப்புகளை எப்படியாவது அச்சில் பார்த்துவிட வேண்டும் என்கிற ஹிடன் அஜண்டாவும் அவளிடம் உண்டு.

யார் எப்படி நெருக்கடி கொடுத்தாலும் பாளையங்கோட்டையை விட்டுப் புலம் பெயர்வதில்லை என்கிற என்னுடைய உறுதி எத்தனை நாள் தாக்குப் பிடிக்கும் என்கிற சந்தேகத்தோடயே தெக்கு பஜார், வடக்கு பஜார் வழியாய்ப் பொடி நடையாய் வீடு வந்து சேர்ந்தேன்.

ராத்திரி திரும்பவும் எனக்கு மூளைச் சலவை ஆரம்பமானது. “இப்படியே நாட்களத் தள்ளிக்கிட்டே போகாம, புத்திசாலித்தனமா ஒரு முடிவுக்கு வாங்கப்பா” என்றான் மூத்தவன்.

“வாழ்க்கையில மேல மேல முன்னேறணும்னா, ஒரு ஸ்டேஜ்க்கு மேல ஸிட்டிக்கி ஷிஃப்ட் பண்ணிரனும்ப்பா. இந்த ஊர்ல எல்லாம் முன்னேற்றத்துக்கு இனி ஸ்கோப்பே இல்ல.”

சின்னவன் வீட்டுக்குள்ளேயே வெறுங்கையால் மட்டை விளாசிக் கொண்டிருந்தான். இவனுடைய வீச்சுக்கு சென்னையின் விசாலம் தேவையாம். கடைக்குட்டி மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டு மூலையில் உட்கார்ந்திருந்தது.

“நாங்க நாலுபேரும் எதிர்க்கட்சியாயும் நீங்க ஆளுங்கட்சியாவும் இருக்கீங்க” என்று ஆரம்பித்தாள் என்னவள்.

“நீங்க நாலு பேரும் சரி, நா ஒரு ஆளும் சரி. நா குடும்பத் தலைவனாக்கும்!” என்று நான் காலரை உயர்த்தி விட்டுக் கொண்டேன்.

“ஸோ, இப்ப ஸ்டேல்மேட்ங்றீங்க!”

“அப்படித்தான் வச்சிக்க.”

“அப்ப, நம்ப குடும்பத்துலயிருக்கிற ஆறாவது ஆளக் கேப்போம். ஆறாவது ஆள் என்ன சொல்லுதோ அதான் ஃபைனல்.”

இந்த வீட்டுச் செல்லப் பிள்ளையான அந்த ஆறாவது ஆளை இவர்களெல்லாரும் சேர்ந்து எனக்கெதிராய்த் தயார்ப்படுத்தி வைத்திருப்பார்கள் என்கிற நியாயமான சந்தேகம் எனக்கிருந்தாலும், ஜனநாயகக் கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட வேண்டியவனானேன்.

“குட்டப்பா” என்று குரல் கொடுக்கப்பட்டதும் குடுகுடுவென்று ஓடி வந்து எல்லோர் முன்னிலையிலும் பிரசன்னமானான் “ஆறாவது ஆள்”.

மூணு வயசுப் பாமரேனியன்.

“குட்டப்பா, நாம மெட்ராஸ்க்கு ஷிஃப்ட் பண்ணனும்னு சொல்லுதியா, வேணாம்னு சொல்லுதியா?”

வவ் வவ் வென்று குரல் கொடுத்துச் சம்மதத்தையும் சந்தோஷத்தையும் வெளிப்படுத்தினான் குட்டப்பன்.

“ஹை, குட்டப்பன் சரி சொல்லிட்டான்!” என்றொரு கரகோஷம் எழுந்தது.

சபையோரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு குட்டப்பனிடம் நான் பேசினேன். “குட்டப்பா, வேண்டாம்னு சொல்லுடா, ஒனக்கு ஐஸ்க்ரீம் வாங்கித் தர்றேண்டா.”

“லஞ்சம் லஞ்சம்” என்று கோரஸ் எழுந்தது.

ஆனாலும், ஐஸ்க்ரீமுக்குக் குட்டப்பன் மசியவில்லை. தலையைத் தாழ்த்தி ம்ம்ம் மென்று முனகினான். தோல்வியை நான் ஒப்புக் கொண்டே ஆக வேண்டிய நிர்பந்தம்.

அடுத்த கட்டமாய், எமிக்ரேஷன், மற்றும் பயணத் திட்டங்கள் பற்றிய கலந்துரையாடல் நடந்தது. சென்னையில், நிரந்தரமாய்க் குடியேறிவிடப் போவதால், வாடகை வீடெல்லாம் வேண்டாம், மூணு பெட்ரூம் ஃப்ளாட் ஒன்றைக் கிரயம் பண்ணி வாங்கி விடுவது என்று பெரும்பான்மை முடிவு எடுக்கப்பட்டது.

இந்தப் பாளையங்கோட்டை வீட்டை விற்று விடுவது என்கிற தீர்மானத்தை நான் வீட்டோ செய்து தடுத்து விட்டேன். இப்போதைக்கு இந்த வீட்டை விற்பதில்லை, பூட்டி விட்டுப் போய்விடுவது. வாடகைக்கு விடுவதா, விற்று விடுவதா என்பதைப் பிற்பாடு யோசித்துக் கொள்ளலாமென்று ஏகமனதாய் முடிவெடுக்கப்பட்டது.

எப்படியானாலும், இந்த வருஷ தீபாவளிக்கு நாங்கள் சென்னைவாசிகள் என்று தீர்மானமானது. பெரியவனும் நானும் சென்னைக்கு வந்து ஒரு வாரம் தங்கியிருந்து, அண்ணா நகரில் புதிதாய்க் கட்டி முடிக்கப்பட்டிருந்த, நூற்றிச் சொச்சம் ஃப்ளாட்களைக் கொண்ட விசாலமான ஆடம்பரக் காம்ப்ளக்ஸில் மூணாவது தளத்திலொரு மூணு பெட்ரூம் ஃப்ளாட்டை முப்பது லட்சத்துக்கு முடித்தோம்.

பாளையங்கோட்டையைக் காலி செய்கிற துக்க நாளில், ஸ்டேஷனுக்குப் போவதற்குக் குட்டப்பன் உட்பட எல்லோரும் டாக்ஸியில் ஏறிக் குதூகலமாய்க் காத்திருக்க, பனித்த விழிகளோடும் கனத்த இதயத்தோடும் நான் கடைசிப் பூட்டைப் போட்டுப் பூட்டிவிட்டு வண்டியேறினேன்.

புத்தம் புது ஃப்ளாட்டும், காலனியின் சூழ்நிலையும் குட்டப்பன் உட்பட எல்லோருக்கும் பிடித்துப் போனது. சிங்காரச் சென்னையின் சிருங்காரக் கனவுகளோடு எல்லோரும் புளகாங்கிதத்திலிருந்த வேளையில் நிகழ்ந்தது முதல் பின்னடைவு. சர்ச் பார்க்கில் கடைக்குட்டிக்கு ஸீட் கிடைக்கவில்லை .

ஆனால் ஆச்சர்யமென்னவென்றால், சென்னை விஜயம் சர்ச்சையிலிருந்த போது மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தவள், சர்ச் பார்க்கில் இடங்கிடைக்காததைப் பெரிய தோல்வியாய்ப் பார்க்கவில்லை.

“அதுக்கென்னப்பா, இதவிட நல்ல ஸ்கூல் மெட்ராஸ்ல இப்ப எத்தனையோ வந்துருச்சாம். என்னோட நல்ல மார்க்குக்கு ஒரு நல்ல ஸ்கூல்ல எனக்கு நிச்சயமா எடம் கிடைக்கும்.”

எங்களுடைய ஃப்ளாட் அமைந்திருக்கிற விசாலமான வளாகம், பார்க், நீச்சல் குளம், ஜிம், டென்னிஸ் கோர்ட் என்று அமர்க்களமாயிருந்தது.

இளையவன் திடுதிடுதிப்பென்று ஒரு நாள் புத்தம் புதிய டென்னிஸ் ராக்கெட்டுடன் வந்து நின்றான். கேள்விக்குறியாய் நான் அவனைப் பார்த்ததுற்கு, “அப்பா நா கட்சி மாறிட்டேம்ப்பா” என்று சிரித்தான்.

க்ரிக்கெட்டிலிருந்து டென்னிஸ்க்குத் தாவிவிட்டானாம். இந்த வளாகத்தில், டென்னிஸ் கற்றுத் தருவதற்கு ஒரு பயிற்சியாளர் வருகிறாராம். அவரிடம் சிஷ்யனாய்ச் சேர்ந்து விட்டானாம்!

இந்த ரெண்டு பிள்ளைகளும் இந்த சென்னை வாழ்க்கையில் எப்படி சர்வ சாதாரணமாய்க் காம்பரமைஸ் பண்ணிக் கொண்டார்கள் என்பதைப் பார்க்க வியப்பாயிருந்தது.

பெரியவன் சமாசாரம் எப்படி என்று நான் அவதானிக்க முனைந்தபோது, வழமைக்கு மாறாக அவன் நாலு நாள் தாடியோடு இருந்ததைப் பார்த்துக் கேட்டேன், “என்னடேய், ஷேவ் பண்ணிக்காம இந்தக் காலத்துத் தமிழ் சினிமா ஹீரோ மாதிரி இருக்க? சினிமா கினிமாவுலச் சான்ஸ்க்கு ட்ரை பண்ணிட்டிருக்கியா?”

என் கிண்டலுக்கு அவனுடைய அம்மாவிடமிருந்து பதில் வந்தது, தணிந்த குரலில்.

“அந்தப் பொண்ணுக்குக் கல்யாணம் நிச்சயமாயிருச்சாம்.”

சரி, இந்தப் பயலுக்கும் சிங்காரச் சென்னை ஒரு சரிவைத் தந்து விட்டது. இவனாவது மனம்மாறிப் பாளையங்கோட்டை மேல் பாசங்கொள்கிறானா என்று பார்த்தால், அடுத்த மூணாவது நாளே மழுங்க மழிக்கப்பட்ட தாடையோடு, சந்தோஷமாய்த் தெரிந்தான். இவனுடைய இன்ட்டர்நெட் வலையில் புதுசாய் ஒரு தோழி சிக்கிக் கொண்டாள் என்று தெரிய வந்தது.

எனக்கோ இந்தக் கூவம் நதிக்கரை நாகரீகத்தோடு சுத்தமாய் ஒத்துப் போக முடியாமலேயே இருந்தது. வேக வாகனங்களும் ஏக வசனங்களும் அந்நியமாயிருந்தன. கூவத்தின் உபந்தியொன்றின் அண்மையில் அமைந்திருந்த எங்கள் குடியிருப்பு வளாகத்தில் கொசுக்களின் கொடுங்கோலாட்சி வேறே.

இந்தக் குடும்பத்தின் ஒரேயொரு உறுப்பினர் மனந்திருந்தி, சொந்த ஊருக்குத் திரும்பிப் போகிற விருப்பத்தை வெளிப்படுத்தினால் போதும், மூட்டை முடிச்சுகளோடு திரும்பவும் தாமிரவருணித் தென்றலை சுதந்திரமாய் சுவாசிக்கப் போய்விடலாமே என்கிற அற்ப ஆசை என் அடிமனத்தில் அரைத் தூக்கத்திலிருந்தது.

இதற்கிடையில், நம்ம ஆள், ஷேர் ஆட்டோக்களில் ஊர்வலம் போய்ப் பத்திரிகை அலுவலகங்களுக்குப் படையெடுத்துக் கொண்டிருந்தாள், அவளுடைய படைப்புகளோடும் மினரல் வாட்டர் பாட்டில்களோடும்.

ஆனால் இவளுடைய இலக்கிய தாகத்துக்கு ஒரு சொட்டுத் தண்ணீர்கூடத் தரக்கூடாது என்பதில் எல்லாப் பத்திரிகைகளும் கறார் கர்நாடகாவாய் இருந்தன.

சரி, இவளாவது மனம் நொந்துபோய் சொந்த ஊருக்குத் திரும்பிப் போக விரும்புவாளென்கிற என்னுடைய சின்ன எதிர்பார்ப்பும் சிதைந்து போனது. இந்தக் குடியிருப்பு வளாகத்தில் குடியிருக்கிற மேட்டுக்குடிப் பெண்மணிகளெல்லாம் சேர்ந்து புதிதாய் மாதர் சங்கம் ஒன்று ஆரம்பிக்கவிருக்கிறார்களாம். அதில் தன்னை இணைத்துக் கொண்டு சமூக சேவை செய்யப் போகிறாளாம்.

இப்போது நான்தான் நொந்து போனேன். என்னோடு சேர்ந்து, இந்த வீட்டின் நிஜமான கடைக்குட்டியான குட்டப்பனின் அபிமானிகள் எல்லோரும் நொந்து போகிற மாதிரி, குடியிருப்பு மன்றச் செயலாளரிடமிருந்து ஓலையொன்று வந்தது. ஓலையின் வாசகம் முழுக்குடும்பத்தையுமே செயலிழக்கச் செய்துவிட்டது.

“…… கடந்த செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டபடி, நம்முடைய வளாகத்தின் எல்லைக்குள்ளே செல்லப் பிராணிகள் வளர்க்கத் தடை விதிக்கப்படுகிறது. எந்த ஃபிளாட்டிலும் நாய், பூனை, வாத்து, முயல், முதலை முதலிய செல்லப் பிராணிகளை வைத்துப் பராமரிக்கக் கூடாது என்றும், அவற்றை உடனடியாய் அப்புறப்படுத்தி விட வேண்டும் என்றும் இதனால் அறிவுறுத்தப் படுகிறது. எதிர்வரும் தீபாவளி வரை கெடு. அதற்கு முன்னால் செல்லப் பிராணிகள் அப்புறப்படுத்தப்படா விட்டால், பலவந்தமாய் அகற்றப்பட்டு எஸ் பி ஸி ஏ வசம் ஒப்படைக்கப் படும்….”

ஆங்கிலத்தில் வந்த அறிவிப்பு அனைவரையும் ஒரு ஆட்டு ஆட்டிவிட்டது. குட்டப்பனுக்கு ஆங்கிலம் வாசிக்கத் தெரியாது என்பதால் அவன் மட்டும் ஆடிப் போகவில்லை. ஆனாலும் முழுக் குடும்ப சோகம் அவனையும் பாதிக்க, எல்லோர் முகத்தையும் ஏறிட்டுப் பார்த்தபடி விவரம் புரியாமலிருந்தான்.குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமிருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்தன.

“இது அக்கிரமம், அராஜகம் அப்பா. இது என்ன ஹவுஸிங் காம்ப்ளக்ஸா இல்ல ஜெயிலா! இவங்க யார் சட்டம் போடறதுக்கு?”

“நாம இதுக்கு ஒத்துக்கக் கூடாதுங்க. அந்த செக்ரட்டரியப் பாத்துப் பேசுங்க நீங்க.”

“பேச்சுவார்த்தை பலனளிக்காவிட்டால் தர்ணாப் போராட்டம் நடத்துவோம்னு ஒரு அறிக்கை விடுங்கப்பா.”

“அம்மா, ஒங்க மாதர் சங்கத்துல சொல்லி, செல்லப் பிராணிகளோட பிறப்புரிமையையும் சுதந்திரத்தையும் நிலை நாட்டக் கூடாதா அம்மா, இதுகூட ஒரு சமூக சேவை தானே.”

“நம்மள மாதிரி, குட்டப்பன்களை வளக்கிற எல்லா ஃப்ளாட் காரங்களையும் ஒன்று திரட்டி நாம ஒரு போட்டிச் சங்கம் ஆரம்பிச்சிப் போராட்டம் நடத்துவோம்.”

இந்தப் புலம்பல்களும் புரட்சிக் குரல்களும் நாலு சுவர்களுக்குள்ளே முடங்கிப் போயின.

வைத்த முறையீடு பரிசிலிக்கப்படவில்லை. வேறு ஃப்ளாட் காரர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை. மாதர் சங்கத்துக்கு வேறு முக்கியமான டீ பார்ட்டிகள் இருந்தன. தர்ணா என்பதெல்லாம் நடக்கிற காரியமில்லை.

நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. தீபாவளி நெருங்கிக் கொண்டிருந்தது. இந்த இக்கட்டிலிருந்து எங்கக் குட்டப்பனை எப்படி மீட்பது என்று புரியாத மனக் குழப்பத்தில், ஆளாளுக்கு அவனைத் தூக்கி வைத்துக் கொஞ்சுகிற வேலை மட்டும் முன்னிலும் மும்முரமாயிருந்தது.

அந்தக் கொஞ்சலின் பின்னணியிலிருந்த சோகம் குட்டப்பனையும் எட்டியிருக்க வேண்டும். அவனுடைய முனகல்கள் அதை வெளிப்படுத்தின. குட்டப்பனுக்கு இப்போது வாக்கிங் கிடையாது. ஃப்ளாட்டுக்கு வெளியே விடாமல் அவனைப் பொத்திப் பொத்திப் பராமரித்தோம்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை, வாசலில் மணி ஒலிக்க, கதவைத் திறந்த கடைக்குட்டி, வளாகக் காவலாளியொருவரை எதிர் கொண்டாள்.

“பாப்பா, ஒங்க வூட்ல நாய் வளக்கறீங்க இல்லியாம்மா?”

“நாயா? எங்க வீட்லயா? இல்லியே!”

“பொய் சொல்றியே பாப்பா. நா பாத்திருக்கேனே, வெள்ளையா ஒரு குட்டி நாய் இருக்குல்ல?”

“நாய் இல்லியே, அது எங்கக் குட்டப்பன்.”

“குட்டப்பனோ நெட்டப்பனோ, தீபாவளிக்கி இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு. அக்குள்ள நாயக் காலி பண்ணலன்னா, நாங்க வந்து புச்சிட்டிப் போயிருவோம். அப்பா கைல சொல்லு, என்ன?”

கதவைச் சாத்திவிட்டு வந்த கடைக்குட்டி, குட்டப்பனை வாரி அணைத்தபடி ஸோஃபாவில் உட்கார்ந்தாள். அவளுடைய கண்களில் திரண்ட கண்ணீர் முத்துக்கள் குட்டப்பனின் உடம்பில்

சொட்ட, அவன் உடல் சிலிர்த்து அவளை நிமிர்ந்து பார்த்தான்.

யாருக்குமே பேச்சு வரவில்லை.

கடைக்குட்டி, கண்களைத் துடைத்துக் கொண்டு, “அப்பா” என்றாள். “நமக்கு இந்த மெட்ராஸ் வேண்டவே வேண்டாம்ப்பா. தீபாவளிக்கி முந்தி நாம எல்லாரும் குட்டப்பனக் கூட்டிக்கிட்டுப் பாளையங்கோட்டக்கிப் போயிரலாம்ப்பா.”

நான் அவளைப் பார்த்தேன். பிறகு அங்கிருந்த ஒவ்வொரு முகத்தையும் ஒவ்வொன்றாய்ப் பார்த்தேன்.எல்லா முகங்களிலும் கொஞ்சம் கொஞ்சமாய் சோகம் கம்மி ஒரு பிரகாசம் மலர்ந்தது.

இளையவன் சட்டென்று எழுந்தான். கடைக்குட்டியிடமிருந்து குட்டப்பனைக் கைப்பற்றி அணைத்தபடி அவனுக்கு முத்தமழை பொழிந்தான்.அவனைத் தொடர்ந்து, பெரியவன்.

ஆனந்தக் கண்ணீரினூடே என்னவள் என்னைப் பார்த்துச் சிரித்தாள்.

இதோ நாங்கள் குட்டப்பனோடும் மூட்டை முடிச்சிகளோடும் தீபாவளிக்குப் பாளையங்கோட்டைப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

(கல்கி, தீபாவளி மலர், 2007)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *