‘நாளைக்கு ரெண்டுல ஒண்ணு’ பார்த்துடறதுன்னு முடிவுக்கு வந்தாள் முத்தம்மா..! ‘அதெப்படி, நான் தவமாத் தவமிருந்து பெத்த பிள்ளையை ‘மாடு மேய்க்கத்தான் லாயக்கு’ன்னு அந்த டீச்சர் திட்டலாம்?!. டீச்சர்னா என்ன வேணாலும் பேசிடலாமா? கேட்க, ஆளில்லைனு நெனைச்சுட்டாளா அவ?’ கோபத்தில் டாஸ்மாக்கிலிருந்து வந்த தனபாலிடம் கொதித்தாள்.
‘இத பாரு…! டீச்சர்தானே திட்டினாங்க? நம்ம பிள்ளை நல்லதுக்குன்னு அதை எடுத்துக்கோ. இதுக்கெல்லாமா டீச்சரை கோபிப்பாங்க..? சொன்னாக் கேளு! ஸ்கூல்ல போய் சண்டைகிண்டை போடாதே!’ என்றான் தனபால்.
‘தோ பாரு!, உனக்கு நல்ல நாள்லயே புத்தி வேலை செய்யாது. நீ குடிகாரன் வேற?!, டீச்சர் பிள்லைய மாடு மேய்க்க லாயக்குனு சொன்னது உனக்கும், உன்புத்திக்கும் எப்படி எட்டும்?! ரோஷமிருக்கற ஆம்பளையா நீ?!’ என்று அவனைச் சாடினாள்.
‘மாடு மேய்ச்சவந்தான் பின்னொருநாள் குதிரையைச் சாரதியா இருந்து பராமரிச்சான். அப்புறம் அவனே கீதை சொல்லலை?! என்ன தொழில் ஆரம்பத்தில் பண்ணறோம்கறது முக்கியமில்லை.. அதிலிருந்து எப்படி உயர் நிலைக்கு வறோம்கறதுலதான் வெற்றி இருக்கு. குடிகாரனான என் புத்தி நிதானத்துல இல்லேன்னு சொல்றே..! குடிக்காத நீதான் கோபத்துல என்னையும் உசுப்பேத்தறே…! நான் நிதானமாத்தான் இருக்கேன். நீயுமேன் நிதானமா யோசிக்கக்கூடாது?!’ என்றான்.
உண்மைதானே?! ஆரம்பத்தில் ஆயர்பாடியில் மாடு மேய்த்தவன்தான் குருசேத்திரத்தில் கீதை சொன்னான். தன்பிள்ளையும் ஒருநாள் ஊருக்கு நீதி சொல்ற அளவுக்கு உயர்வான்னு முத்தம்மா முடிவுக்கு வந்தாள்!