கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 12, 2022
பார்வையிட்டோர்: 1,306 
 

(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருக்குறள் கதைகள்

வேண்டியவர்களைக்கண்டால் அவர் சொன்னதை மறுக்க முடியாமை

தசரதன், கைகேயிக்குக் கொடுத்த இரண்டு வரங்களில் ஒன்றால் பரதன் அரசாளவேண்டும், மற்றொன்றால் இராமன் காட்டிற்குச் செல்லவேண்டும், என்று இரண்டு வரத்தையும் கேட்டாள். அந்தத் தசரதன், பரதன் அயோத்தியை ஆளட்டும், ஆனால் இராமன் காட்டிற்குச் செல்வதை விட்டு வேறு வரம் கேள் தருகிறேன்” என்றான். “நான் கேட்டபடி தராவிட்டால் எனக்கு வரமே வேண்டாம்” என்று அழுதாள். இவ்வழுகையைக் கண்ட அயோத்தி மன்னன், “கண்ணோடிருந்தும், கருணையில்லாத இவள் மரத்திற்கு ஒப்பாக இருக்கிறாள் இவளோடு வாழ்தலைக் காட்டிலும் வாழாமையே நன்று” என்று தன் உயிரை விட்டான். வள்ளுவரும், “கருணையில்லாதவர் மரத்திற்குச் சமம் ஆவர்” என்று இக்குறளில் கூறியுள்ளார்.

மண்ணோடு இயைந்த மரத்தனையர்; கண்ணோடு
இயைந்து கண்ஓடா தவர். (42)

கண்ணோடு = (இரக்கத்தோடு பார்த்தற் குரிய) விழியோடு

இயைந்து = பொருந்தி இருந்தும்

கண் ஓடாதவர் = அவ்விரக்கம் இல்லாதவர்

மண்ணோடு = (நடமாட்டமுடையவராய் இருந்தும்) மண்ணுடனே

இயைந்த = பொருந்தி நின்ற

மரத்து அனையர் = மரத்தை ஒப்பார்.

கருத்து: இரக்கமில்லாதவர் மரத்திற்கு ஒப்பாவர்.

கேள்வி: கண் ஓட்ட மில்லாதவர் எதற்கு ஒப்பாவர்?

– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *