ராஜாராமனும் பதிமூனு நெய் தோசையும்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: June 11, 2016
பார்வையிட்டோர்: 25,328 
 

ஒரு நோய்வாய்ப்பட்ட கரப்பான்பூச்சி மாதிரி பரகாலன் எட்டிப்பார்க்க அத்தை முணுமுணுத்தாள். “வந்தாச்சிம்மா கலகம்…வாடா பந்தம் தாங்கி….. வந்து ஏதாவது கொளுத்திப்போடு…வாடாப்பா வா…உன்னைத்தான் காணமேன்னு கேட்டா..வந்துட்டே..”

‘என்னத்தே…முன்னாடி வேற என்னமோ பேசினமாதிரி தெரிஞ்சதே..அக்கா.. அமர்களமா……. ப்ரகாசமா இருக்கேக்கா……என்னாச்சு உனக்கு….முகம் ஜொலிக்கறதே.ஹை…அட..புதுத்தோடா…சூப்பரா இருக்குக்கா…அக்கா…

மாமா வந்தாச்சா…சூப்பர்க்கா…என்று பக்கத்தில் வந்து காதைத்தொட்டுப்பார்த்தான்

பரகாலன்’…வைரமாக்கா….ஆஹா…லட்ச ரூபா இருக்குமா..’

‘கொரங்கே…வெல தெரிஞ்சு என்னடா செய்யப்போற..உன் கண்ணிலே கொள்ளிவைக்க

ஜாக்கிறதம்மா ..ராத்ததிரிவந்து காத அறுத்துட்டுப்போயிடுவான்…’ என்றாள் அத்தை..

‘சும்மாயிருங்கத்தே..ஆசைக்குத்தானே பேசறான்…இது அத்தைக்கு வாங்கினதுடா..

அழகா இருந்ததா நான் வாங்கிப் போட்டுகிட்டேன்..சூப்பரா இருக்கதில்லே…’

‘த்தூ…உனது இல்லையா..விடு ..இந்த கெழட்டுக்கம்மலுக்கே இப்படி டாலடிக்கிறயே

உன் காதுக்குன்னு ஸெலக்ட் பண்ணியிருந்தா அப்படியே ரம்பை மாதிரி ஜொலிப்பே தெரியுமா…’

‘தாயாரு சீக்கிரமா ரெண்டு மொளகாய் கொண்டு வந்து சுத்திப்போடு..இந்த நாய் வந்து

புள்ள மேல கண்ணைப்போட்டுட்டான்…’

தாயாரு..எட்டிப்பார்த்தாள்…’.டேய்…பரகாலா அது எனக்கு மாப்பிள்ளை வாங்கினதுடா..

எடுத்துப்போட்டுட்டு தரமாட்டங்கறா….அழகா இல்லே…..’

பிரசண்ணா அறையில் இருந்து வெளியில் வந்தான்’….முட்டாப்பயலே…ஒரு பொருளைப்பார்த்துக் கண்டு பிடிக்கத்தெரிய வேண்டாம்..அது ஒரு டாலர் சமாச்சாரம்..

ஊத்தரான்…அவளை ஐஸ்வர்யா ராய்ங்கறான்..அப்படியே கண்ணு செறுகி அவ மெதக்கறா…”

‘ஹலோ மாமா.. பத்து நாள் கழிச்சி திரும்பிப்போற போது பாதி கூட தேறமாட்டீங்க..

ஜாக்கிறதை…சொல்லிட்டேன்….ஆமா ..அது யாரு வீடியோ..ஸ்கைப்பு ஸெல்ப்பி

எல்லாத்துலேயும் ஒரு சைனாக்காரியே தெரியுது…..’

‘தின்னத்தானே வர்ரே ..அத மாத்திரம் செய்யி…கொளுத்திப்போடற வேலை செய்யாதே’

என்றான் பிரசன்னா…ஏம்மா..உன் மருகளுக்கு நல்ல சாவகாசமே கெடைக்காதா…..’

‘ஹலோ …பழசு மறக்காதீங்க என்ஜினீயர் அந்த காலத்துலே உங்க லெட்டர் இந்தம்மாவுக்கு கொடுத்தப்போ நான் நல்ல சாவகாசம்…இப்ப கெட்டவன் ….நன்றி இல்லாத உலகம்டா பரகாலா….என்றான் பரகாலன்..

‘ஏன் அவன் கேக்கறதுக்கு பதில் சோல்றது அந்த சைனாக்காரி யார்ன்னு கேக்கறது தப்பா என்ன…’என்றாள் பிரியா…

‘அதான் சைனாக்காரின்னு அவனே சோல்றானில்லே..அப்புறம் என்ன…அவ என் பி.ஏ’ என்றான் பிரசன்னா…

‘அப்ப நான் யாரு …இங்கே என்னை பி.ஏன்னு சொல்றீங்க..அங்க அவ பி. ஏ ன்னா என்ன அர்த்தம்..டேய் பரகாலா…அங்க ஒரு ஆம்பிளை பி.ஏ கெடக்கலையா உங்களுக்கு…பிரியா திரும்பினா என்ன ஆகும்னு சொல்லுடா அவருக்கு…’

‘டேய் சாமி அவ எனக்கு தங்கச்சி மாதிரி…’என்றான் பிரசன்னா…

‘யாருக்கு தங்கச்சி மாதிரி …உங்களுக்கா..இல்லே நம்ம பிரியா அக்காவுக்கா….’

‘வேண்டாண்டா..சிண்டு முடியாதே..பத்து நாளாவுது சந்தோஷமா இருக்க விடுங்கடா..’

‘சரி..பொழச்சிப்போங்க…அக்கா ..காதைக்கொண்டாயேன்..ஒரு ரகசியம் கேட்டா நீ உசிரை விட்டுருவே….’

‘அதெல்லாம் முடியாது..இந்த வீட்லே ரகசீயமே கெடையாது ..எதுவானாலும் எல்லாத்துக்கும் தெரியனும் …என்னத்தே…’ என்றாள் பிரியா..

‘ஆமாம்..நாயே…. முதல்லே விஷயம் சொல்லு…என்றாள் அத்தை..ஏதாவது அளந்து விட்டே அடி தாங்க மாட்டே…’

‘சொன்ன பின்னாடி அடி அத்தே….எல்லாரும் கேட்டுகுங்க…நேத்து ராஜாராமன் ஒரு பர ஸ்திரி வீட்லே படுத்திருக்கான்…அத்தே உன் வளப்பு…. பொழப்பைப் பாத்தியா..என்ன ஷாக் ஆயிட்டயா..ஹார்ட் அட்டாக் வரல்லே.. தூக்கி வச்சி கொண்டாடரீங்களே அந்த

ஆஞசநேயப் பிரபு ..அவன் ராத்திரி முழுக்க ஒரு தனியா இருந்த பொம்பிளை புள்ள வீட்லே ரகசிமா படுத்துட்டு அலுங்காம குலுங்காம..ஆபிஸ்லே திரியறான்…ஜட்ஜம்மா நீங்க என்ன சொல்லப்போறிங்க..வெப்லே ஒரு சைனாக்காரி பக்கத்திலே இருக்கறதுக்கே முகம் சிவக்கற திருமதி பிரியா பிரசன்னா என்ன சொல்லப்போறாங்க…மாமா இதுக்கு உங்க ரீ ஆக்க்ஷன் என்ன….’என்று பேசிக்கொண்டே போன பரகாலனை மறித்தாள் அத்தை…….

‘இருடா …ரொம்ப பேசறே…அவன் வேற வீட்லே படுத்தான்…அதுக்கு பத்து காரணம் அவன்கிட்டே இருக்கும்…நான் ஸ்டேட்ஸ்லே படிச்சவ…அங்க பாதி புருஷன்மார்கள் சொந்த வீட்லே படுக்கறதில்லே…அவ்வளவு என்னத்துக்கு நான் படிச்சப்போ என் ரூம் மேட் ஒரு சைனாக்காரன் ..அப்புறம் சில புருஷன் மாருக்கு எவ பொண்டாட்டின்னே ஞாபகம் இருக்கறதில்லே…பேச வந்துட்டான்….குடிச்சிட்டு பக்கத்து வீட்லே படுக்கறவன்

எவன் எங்க கெடக்கறான்னே தெரியாது..எல்லாம் பாத்தவடா நான்….

‘அக்கா லாஜிகலா யோசி ..அந்த சைனாக்காரி தங்கச்சி மாதிரின்னு மாமா சொலறார்..அத்தை என்னன்னா. சைனாக்காரன் ரூம் மேட் ங்கறாங்க….உதைக்கலே…’

‘எல்லாருமா சேர்ந்து ஒக்கப்போறாங்க …ஓடிரு….’என்றாள் பிரியா

‘சரி விடுங்க..மாமா ….ராஜாராமன் விஷயத்திலே உங்க அபிப்பிராயம்…?

‘அதான் அம்மா சொல்லிட்டாங்கல்லே ..அதுக்கு மேல என்னடா..அவனைக்குத்தம் சொல்லாதே…அவன் என்னிக்கும் ஆஞ்சநேயன்தான்…”

‘ரூமுக்கு வெளியே அம்மா சொல்றது சரி…ருமுக்குள்ளே பொண்டாட்டி சொல்றதே சரி..அடுப்படி போனா அத்தை சொல்றது சரி …சிங்கப்பூர் போனா நீங்க செய்யறது சரி..

எத்தனை கலர் மாமா உங்களுக்கு…..’

‘டேய் அவர்கிட்ட நீ நேரா பேச வேண்டாம்…இப்ப அந்த ராஜாப்பயல் வரட்டும் ..இருக்கு அவனுக்கு….’

‘துப்பாக்கி எடுத்து ‘டுப்’ புனு சுடப்போறிங்க…அக்கா என் கிட்டயே ஆக்ட் பன்றியே…ஐயோ..தம்பி …கண்ணா… ஏண்டா வாடிப்போயிட்டே…எவனாவது திட்டுனானா..காபி சாப்புடு அப்படின்னு…அப்படியே உருகுவியே…’..உம் புள்ள மாத்திரம் பத்து வயசு ஜாஸ்தியா இருந்தா பிடிச்சுப்போட்ருவியே…’

‘ஏன்டி என்னாச்சு இந்த நாய்க்கு ..இப்படிக் காயறான்….’என்றாள் அத்தை…

‘ விடுங்கத்தே நாளைக்கு ரெண்டு பேரும் கோத்துகிட்டு திரிவானுங்க.. இவன்

பேசறது ஒரு பேச்சா…என்று பிரியா சொல்லிக்கொண்டிருந்த போதே நம்ம கதாதாயகன்

கம்பீரமாக உள்ளே வந்தான்..’.அட…நீயா..எங்க வந்தே…ஏதாவது வெல்டிங் வேலை செஞ்சிருப்பியே….’

திடுக்கென்று தாயாரு ஹாலுக்கு வந்தாள்…ஏண்டா குட்டி…ராத்திரி தூங்கினயா…வாடி

இருக்கயே….’

‘கேட்டிங்களா மாமா இந்த வீட்லே ஆள் மாறும் ஆனா வசனம் மட்டும் மாறவே மாறாது….இவன் குட்டியாம்…பன்னி மாதிரி ஊறிப்போய் ஊதி உப்பிக் கிடக்கறான் இவன் ..வாடிப்போயிட்டானாம்..பெரியம்மா உன்னைக்கட்டிப்போட்டு கபாலீஸ்வரர் கோயில் கொளத்திலே இறக்கனும்…’

‘சும்மா இருடா ..பாரு ..உனக்கு அடை ரெடி ..உள்ளே வா இதுக்காக உங்க அம்மாவை நீ அந்தத் திட்டு திட்டியிருக்க வேண்டாம்…’

‘பேச்சை மாத்தாதே…… .உம் பையனைப்பத்திப் பேசு…அவனை வீட்டுக்குள்ளே விடாதே..தீட்டு..மொதல்லே குளிக்க வை….’

‘அக்கா இந்த பைத்தியக்காரனை ஏன் வீட்டுக்குள்ளே விட்டே…என்றான் ராஜா..ஹை

புதுத்தோடா…மாமா சூப்பர்…அக்கா ..எங்கயோ போயிட்டே…என்று குதூகலத்துடன் பிரியாவின் பக்கத்தில் உட்கார்ந்த அடுத்த வினாடி ‘ஊள்’ என்று தேள் கொட்டின வலியுடன் அலறினான் ராஜா…. என்னக்கா செஞ்சே…ஐயோ…’

‘எருமை ..ஏண்டி அவனை அடிச்சே..’ஆத்திரத்துடன் முன்னே வந்தான் பிரசன்னா..

‘ஹலோ …இது உள் நாட்டுப்பிரச்சனை…நீங்க வர வேண்டாம்…என்ன சத்தம் ஜாஸ்தியா

வருது..மச்சினன் மேல கரிசனமோ..எருமைங்கறீங்க…ஏண்டி..தோண்டின்னு கூவரீங்க

அவன் என் தம்பி…சாகடிப்பேன் ..உரிமையிருக்கு…’

‘அம்மா உன் முன்னாலே எப்பிடி எதுத்துப் பேசறா…பாத்தியில்லே..அடங்க மாட்டேட்டேங்கறா..’தாக்கறேன் ‘பாரு ஒருநா…அப்புறம் தெரியும் பிரசன்னா யாருன்னு….’

‘அடங்குடா..அவளை நீ ஒன்னும் கிழிக்க முடியாது…பேசாம வேடிக்கை பாரு ..வந்துட்டான்..மச்சினனைக்காப்பாத்த..அவளைத் தொட்டுத் தாக்கிடுவியா கொன்னேபுடுவேன்.. காலைப்புடுச்சி கல்யாணம் பன்னிக்குவானுங்களாம்..அப்புறம் பொண்டாட்டி கழுத்தில காலை வைப்பானுங்களாம்…’

‘உன் மருமக திமிருக்குக் காரணமே நீதான்…நான் அவ காலைப்புடிச்சி கல்யாணம் பண்ணிணா.. அவ என் அப்பா காலைப்புடிச்சி என்னைக்கலயாணம் பண்ணிட்டா..நான் இல்லைன்னா செத்துடுவேன்னு சொன்னது அவளா நானா..உடனே எனக்கு விளக்கம் வேணும்…அப்பா இல்லைன்னு மறைக்க நெனைக்காதே…’

‘ஏண்டா..என்கிட்டயா பேசறே…எவனோ அவளைப் பொண்ணு கேட்டதுக்கே ரெண்டு நாள்ளே நாலு கிலோ எளைச்சு தேவதாஸ் ஆனவன் நீ …கூட பூச்சி மருந்து வச்சிட்டு என்னை மெரட்டினே..அடமுட்டாளே அவ பொறந்ததும் உனக்குன்னு ஒத்துகிட்டாச்சிடான்னா விட்டயா..எல்லாத்துகிட்டயும் சத்தியம் கேட்ட… உடுவாரா உங்கப்பா..பி.இ முடிக்கலை நீ தேவதாஸா போயிடுன்னுட்டார்..அப்புறம்தான நீ படிச்சே..

இல்லே நீ பி.இ எங்க முடிக்கறது ..ஒரு வாரம் என்னையில்ல சாகடிச்சே..பேசறே நீ..ரிஸல்ட் வரல்லே.. அப்புறம் என்னை மறந்துடுன்னு எவ்வளவு ஆட்டம் காட்டினே …..’

‘அட அத விடுங்கத்தே..ஹலோ பிரசன்னாஜி…..ஆமா நான் மாமா கால்லே விழுந்து உங்களைக்கட்டிகிட்டேன்..அதே நீங்க அதே மாமா கால்லே விழுந்து அழுதீங்களே அவரு என்ன சொன்னாரு ஞாபகம் இருக்கா.. ஞாபகப்படுத்தறேன் கேட்டுகுங்க..போய்ப் பொழப்பைப் பாருடா..பி.இ முடிக்கத் துப்பில்லே கல்யாணம் வேணுமா உனக்குன்னு கேக்கலை..அன்னிக்கு ராத்திரி பாத்ரூம்லே நடந்ததை மாமா கிட்ட சொல்லியிருந்தா நீங்க இப்ப இங்க இருக்க முடியாது..தெரியுமில்லே.. சுட்டிருப்பாரு ..போனாப்போகுதுன்னு உங்களை விட்டு வச்சேன்…’

‘என்னடி ப்ளாக் மெயில் பன்றே என்ன இருந்தாலும் அவரு எனக்கு அப்பா..உனக்கு மாமாங்கறது ரெண்டாம் பட்சம்….’

‘யார்ரா சொன்னது..எங்களுக்கு இவளும் ராஜாவும் மொதல்லெ…நீ ரெண்டாம் பட்சம்தான் ஓடுகாலிப்பயலே…எத்தனை தடவை ஊரை விட்டு ஓடி எங்களை சாகடிச்சிருக்கே…வந்துட்டான் பேச….’

‘அவளை மாத்திரம் விட்டுத்தரமாட்டியே..என்றவன் பிரியாவிடம் திரும்பினான்….இருக்குடி உனக்கு ஒரு நாளைக்கு…’

‘அப்ப பாத்துக்கலாம்…’

‘அக்கா அப்புறம் நீங்க கொஞ்சுங்க…இவன் விஷயம் முடிங்க …என்று குறுக்கே விழுந்தான் பரகாலன்….

‘இவன் ஒருத்தன் நடுவிலே ‘..என்று சலித்துக்கொடண்டாள் அத்தை…

‘ ஆமா .. இருங்கத்தே மொதல்லே இவன் விஷயம் முடிச்சிடறேன்…ஏன்டா ராத்திரி பூரா வீட்டுக்கு வராம ஊரைச்சுத்துவே ..வீட்டுக்கும் சொல்லமாட்டே…நாங்களா தெரிஞ்சுக்கனும்..இல்லியா..’

‘பாருக்கா ‘அந்த டீம் லீட் நாயி மன்னார் குடி போறண்டா ..வீடலே அவ தனியா இருக்க பயப்படுவா இன்னிக்கு ஒரு நாள் படுத்துக்கோன்னான்…’உனக்கு சொல்லலாம்னா இந்த நாயி என் ஸெல்லை கொண்டு போயிட்டான்…அந்த வீட்லே ஸெல்லு போனு எதுவும் வேலை செய்யலே…உங்க ப்ரண்ட் ராமகிருஷ்ணன் மாமா..’

‘ஏண்டா ..அவன் ஸெல்லை நீ ஏண்டா எடுத்தே… எல்லாத்தொந்தரவும் உன்னாலேதான் ஆரம்பிக்ககும் ..அப்புறம் .அப்புறம் குத்தம் சொல்ல வருவே…’ என்றாள் ப்ரியா

‘தப்புதான் சாமி ..தப்புதான்…ஸெல்லா அது அதுலே..காசு இல்லே ..சார்ஜு இல்லே…அத விட அது வேலை கூட செய்யல்லே…இவன் ஸெல்லை ஜன்மத்துக்கும் நான் தொடமாட்டேன்….என்னை விடு…அவனை விஜாரி…’

‘சொல்லுடா மேல என்ன ஆச்சு…’

‘கீழே என்ன ஆச்சுன்னு கேளு….’என்றான் பரகாலன்…

‘அவன் வாயிலே போட்றி…குறுக்கே குறுக்கே பேசிட்டு…’என்றாள் அத்தை…

‘அப்புறம்க்கா ஒரு பத்து நிமிஷம் டி.வி பார்த்தேன் ஒரே போர்..அவ அதான் காயத்திரி

‘பேண்டைக் கழட்டி அந்தப்பக்கம் போடு’ என்னடா பேண்ட் போடறிங்க பொம்பிளை

ஜாக்கட்டு போடறமாதிரி’ ன்னா’…இறுக்குல்லே…உன்னைப்பாத்தா எனக்கு மூச்சு முட்டுதுன்னா.’.

‘எங்களுக்கெல்லாம் டைட்டா இருந்தாத்தான் பிடிக்கும்னேன்க்கா.’

‘அழகாச்சொன்னேடா…என்றான் பிரசன்னா…அதுக்கு அவ என்னடா சொன்னா…’

‘கெரகமே.. நாராசாரமாப்பேசாதே..பேசாமே சொன்னதைச்செய்யின்னா…சரின்னு பேண்டை உருவி எடுத்துட்டேன்…’

‘உள்ளாடை ஏதாவது போட்டிருந்தயா…’ என்றான் பரகாலன் .

‘அக்கா பேண்ட் அவுக்கறபோத்தான் அந்த சந்தேகமே வந்தது…’

‘ஐயோ…ஜட்டி போடாமப்போயிட்டயா ..பாவி..’ என்றாள் பிரியா….

‘இல்லக்கா எப்பிடிக்கா திடீர்னு என் ட்ரங்ஸ் செகப்பா மாறினது..அதில்லாம….திடீர்னு

அது எப்பிடி டைட்டாச்சு…ஒன்னுமே புரியல்லேக்கா….’

‘ஒரு நாள்ளே திடீரன்னு ‘அது’ வளந்திருக்கமோ என்றான் பிரசன்னா…’

‘எனக்கும் அந்த சந்தேகம் வருது மாமா’ என்று ஆமோதித்தான் பரகாலன்..

‘ச்சும்மாயிருங்க .. லஞ்சையில்லாம பேசிட்டு.’.என்று பிரியா புருஷனை அதட்டினாள்.

‘ஏண்டா..நீ ஜட்டி போடறத கவனிக்கறதா என்னோட வேலை என பிரியா ஆரம்பித்தபோது

குறுக்கே விழுந்தாள் வேலைக்கார சுமதி’…அக்கா ஒரு தப்பு நடந்து போச்சி….’

‘என்னடீ ..உன் பிரச்சினை என்ன….’

‘அக்கா மேல் வீட்டு சவிதாவோட சமாச்சாரம் காணமாம் …’

‘சமாச்சாரமே காணமாமா பரகாலா ரொம்ப சுவாரஸ்யமா இல்லேடா’..என்றான் பிரசன்னா

‘ரொம்ப ரொம்ப….’என ஆமோதித்தான் பரகாலன்…’அப்ப சமாச்சாரம் இல்லாம அப்புறம் எப்படி அவ…’

‘இந்தாடி எதச்சொன்னாலும் சரியா சொல்லு …என்னடி காணமாம் ..அதுக்கு இங்க

என்னடி இருக்கு….வந்துட்டாளுங்க…’

‘உள்ள போடற பேண்டீஸ்க்கா…இங்க கிடந்ததாம்…அப்புறம் எடுத்தக்கலாம்னு விட்டுட்டாளாம்..நான்தான் கவனிக்காம எடுத்து தம்பியோட துணியோட சேர்த்து வச்சிட்டேன்…ஸாரிக்கா…ஆமா தம்பி ..அவ்வளவு சின்ன பேண்டீஸ்லே உன் மொத்த சமாச்சாரமும் எப்பிடி உள்ளே போனது…ரெண்டு கால் அப்புறம் எல்லாம் எப்படி உள்ளே விட்டே..

‘அடே..மூனு காலை இல்ல உள்ள விட்டிருக்கான்…’ என்றான் பிரசன்னா..

‘அதானே..இது எப்பிடி என்னாலேயே நம்ப முடியல்லியே ..தம்பி ஸைஸ் வேற பெரிசு…’என்றாள் சுமதி…

‘சனியனே..உள்ள போடி..மாமா ஜாஸ்தியா போறீங்க..அத்தே கவனிங்க…’

அதற்குள் ராஜாராமன் அலறினான்…

‘ஐயோ..என் ரூம்லே ஒரு பொட்டப்புள்ளயோட துணியா..அக்கா..ஏய் …இன்னியோட உன்

வேலை காலி…’என்றான் ராஜா..

‘பெரிய கம்யூட்டர் என்ஜினீயர் வேலை…மஞ்சக் கடுதாசி கொடுத்துட்டே போய்யா.நாளைக்கு ஒரு புது வேலைக்காரியை வச்சிக்கோ.அப்ப தெரியும் என் அருமை

உன்பேண்டைத்தொவைக்கிறவ நாத்தமா நாரிச் சாவா…பேண்டாஅது..சாணத்துணியை சாக்கடையிலே நனைச்சா மாதிரி.. ஓவ்…ரெண்டு நாளா வாந்தி…வேற புது வேலக்காரி வந்தா எத்தினி நாள் தாங்கறான்னு பாத்துடறேன் ‘ என்று பதிலடி தந்தாள் சுமதி..

‘ஏய் ..இங்க வா.ஆம்பிளைங்க மத்தியிலே சரிக்கு சரியா நின்னு பேசாதேன்னு எத்தனை

தடவை சொல்லியிருக்கேன்..வாடி காலுபோச்சா தோலு போச்சான்னு பேசிக்கிட்டு..’ என்று சுமதியை உள்ளே இழுத்துப்போனாள் தாயாரு…

.

‘ ம் …ஓ..கே..இப்ப எங்கேயிருந்து ஆரம்பிக்கறது…என்றாள் பிரியா…’

‘ஜட்டியிலேயிருந்து ஆரம்பி கண்ணம்மா..’என்றான் பிரசன்னா…

‘பாருங்க நீங்க ஓவர் சொல்லிட்டேன்….’டேய் நீ சொல்லுடா அப்புறமா என்ன நடந்தது…’

‘ஜட்டியைக் கழட்டினனா..’

‘ஐய்யய்யோ..அத ஏன்டா கழட்டின…’

‘ஸாரிக்கா..கன்ப்புயூஸ்ஆயி..தவறிட்டேன்…’

‘ஐயோ..ஆஞ்சனேயா நீயுமா…..தவறிட்டயாடா…அம்மா உன் வளப்பு அரோகரா …’என்றான் பிரசன்னா…

‘அக்கா பேண்ட் ன்னு சொல்ல வந்தேன்..ஸ்வாரஸ்யத்திலே ஜட்டின்னுட்டேன்..’

‘பொம்பிளை முன்னே எதக்கழட்டினாலும் ஸ்வாரஸ்யம் தாண்டா கண்ணா…’என்றான் பிரசன்னா..

‘வாய் மேல போடுவேன்…ஏண்டா சும்மாவே இருக்க மாட்டியா..’

‘கர்மம் …இவங்களை வச்சிட்டு விசாரிக்கவந்தேன் பாரு ..அது என் தப்பு…நீ மேல சொல்லுடா..’

‘ஏண்டா இப்பிடி முண்டமா நின்னா எப்பிடி ..அசிங்கமா இல்லே உனக்கு..இந்தா இதச்சுத்திக்கோன்னு ஒரு வேஷ்டி தந்தாக்கா…கொசு வலை மாதிரி இருந்தது அதப்போய் நான் கட்டுவனா..இதென்ன என் வீட்லே வடாம் பிழியற துணி மாதிரி. இருக்கு நான் ஜரிகை இல்லாத வேஷ்டி கட்ட மாட்டேன் ..இப்பிடியே இருக்கறது எனக்கு வசதின்னு அடிச்சிட்டேன்…எப்பிடி அத்தே..’

‘ சபாஷ்டா கண்ணா…என்றாள் அத்தை’ அப்புறம் சொல்லு அவ என்னதான் செஞ்சா….’

‘இந்த ராவுலே நான் ஜரிகை வேஷ்டிக்கு எங்கடா போவேன் ..எனக்குன்னு ஒரு ஆளைத்தேடி அனுப்பினியா…. அடேய்..ராம கிருஷ்ணா நீ வீட்டுக்கு வா புடுங்கிடறேன்..அப்படின்னு புலம்பினா.அப்புறமா ஒரு பட்டு வேஷ்டி கொண்டு வந்தாக்கா…சின்ன ஜரிகைதான் ..கட்டிகிட்டேன்…இப்ப சந்தோஷமா’ன்னா..’.என்ன சந்தோஷம்…என் வேஷ்டி ஒவ்வொன்னுக்கும் ஜரிகை ஜான் அகலம் இருக்கும் அப்படின்னேன்..அவ்வளவு அகலம் வேணுமானா என் புடவைய சுத்திக்கோன்னாக்கா..

எனக்கு சம்மதம் எனக்கு புடவை கட்டினா அம்சமா இருக்குன்னு அத்தை கூட ஆசையா சொல்வாங்கன்னு அடிச்சிவிட்டேன்..அடே….ராவணா…. என்னக்காப்பாத்துன்னு அலற்ரா…ராத்திரிக்குள்ளாற இவன் என்னென்ன கேக்கப் போறானோ பகவானேன்னு ரெண்டு கையையும் இப்பிடி நெஞ்சிலே வச்சிட்டா ஏன்க்கா….’

‘அவ ஜரிகைப்புடவைகட்டுவா நீ சட்டுனு அவ.. பு டவையைப்பிடுங்கிடுவையோன்னு

பயந்திருப்பா ‘நீ என்ன துச்சாதனனா..கெடக்கறா…ஏய் என் தம்பிடி அவன்…’

‘அதானே அப்புறம்க்கா…கேளுக்கா…’

‘கேட்டுகிட்டுதானே இருக்கேன் சொல்லு…’

‘இருந்தாலும் உனக்கு அசாத்திய பொறுமை பிரியா என்றான் பிரசன்னா..’

‘அடேய் ..தினமும் அவன்அக்காகிட்ட எல்லாம் ஒப்புவிச்சுட்டுத்தான் சாப்பிடவே போவான்…இது தினக்கூத்து’..என்றாள் அத்தை..

‘சரி விடுங்க யாருக்கும் நான் சொல்றது பிடிக்கல்ல..நான் சொல்லலே…’என்றான் ராஜா..

‘ச்சீ..ச்சீ கோவிச்சுக்காதே கண்ணா .அவங்க கெடக்கறாங்க எனக்காக நீ சொல்லு…’

என்றாள் பிரியா….

‘அப்புறம் தோசை வாத்து தரேன்னு டைனிங்லே கீழே ஒக்காத்தவச்சு தட்டு வச்சாக்கா..இதென்ன தட்டா..பொட்டு மாதிரி இருக்கு..என் வீடலே என் தட்டு தாம்பாளம் மாதிரியில்லே இருக்கும்னேன்.அவளுக்கு சரியான ஆத்திரம்.’.இருடா உனக்கு தாம்பாளமே வச்சிடறேன்னு தாம்பாளம் கொண்டு வந்து வச்சி இது சரியான்னா…என் சாப்பாட்டுத்தட்டு இதவிட பெரிசு தெரியுமான்னேன்…அவளுக்கு வேர்த்தே போச்சு…எங்கப்பன் கொடுத்ததிலே இதாண்டா பெரிய சீதனத்தட்டு…ராம கிருஷ்னா நீ தெய்வன்டான்னா..’என்னைப்பாத்து டேய் உனக்கு பதிலா உனக்கு வர்ர மாமனார்தான் காசி யாத்திரை போவான் ..ஆனா திரும்பியே வர மாட்டான்ங்கறா…ஏங்ங்க்கா ..நான் என்ன அவளைக் கடிச்சனா என்ன……..எதுக்கா

ஏன் அப்பிடி அவ சொன்னாக்கா..அதுக்கு என்ன அர்த்தம் நீயே சொல்லு…’
என்று ராஜா கேட்டபோது அத்தை குறுக்கிட்டாடாள்…..

‘பெருமாளே…ஏண்டி தாயாரு என்னடி உனக்கு அவசரம் ஒரு நாலு நிமிஷம் தள்ளி இவனப் பெத்திருந்தா கொஞ்சம் ஜாதகமாவது மாறி இருக்குமே…சுத்த சுடு தண்ணிடி

மடிப்பாக்கத்திலே போய் மானத்தைக்கெடுத்தியேடா பாவி….’

‘இருங்கத்தே இன்னும் நெறைய இருக்கும் ..முழுசா கேட்ருவோம்…’என்றாள் பிரியா

‘சொல்லு ..சாமி சொல்லு..மடிப்பாக்கத்திலே நம்ம பிரக்ஞாதி கொடி கட்டி பறக்குது’ முழுசாச்சொல்லிடு…’என்றாள் அத்தை….

‘அப்புறம் தோசை வார்த்துப் போட்டக்கா …பாரு …இவ்வளவே இவ்வளவு…எனக்கு சரியான ஆத்திரம்….தோசையா அது..நம்ம சரண்யா அப்பச்சி மாதிரி.. ‘

‘நல்ல வேளை சரண்யா பேரைச் சொன்னான்..நீ தப்பிச்சே ப்ரியா…’என்றான் பிரசன்னா..

‘பாருங்க…இதான் உங்க லிமிட்…சொல்லிட்டேன்…..’+

‘அந்த தோசையைப்பாத்து எனக்கு வந்ததே ஒரு ஆத்திரம்…..என்றான் நம்ம ஆள்.

.

‘உனக்குத்தான்…ஆத்திரம்வந்துச்சி… இல்லையா கண்ணா…..’ என்றாள் பிரியா

‘ஆமாம். எனக்குதான்.. உடுவனாஆமா..தோசை போடறேன்னே.இப்ப இட்டிலி போடறியே.

எம்.ஈ படிச்ச எனக்கு தோசைக்கும் இட்டிலிக்கும் கூட வித்தியாசம் தெரியாதா.எனக்கு

தோசை தான் பிடிக்கும்.. அதே போடுன்னேன்…அவ சுண்டிப்போனாக்கா…’. அடேஅது ..தோசைடா என் புருஷன் மேல சத்தியமா நான் சொல்றேண்டா அது தோசைதாண்டா…

அப்பிடின்னு என்னைக் கன்வின்ஸ் பண்றாக்கா….அவ தலையிலே அவளே அடிச்சிட்டு

சத்திமெல்லாம் பண்றா..’

‘நீ ஒத்துக்க மாட்டியே…’என்றாள் பிரியா…

‘மூச்…நம்மகிட்ட ஆகுமா..முதல்லே தோசை போடு அப்புறம் பேசுன்னுட்டேன்…எங்கம்மா

தோசை வார்த்து பார்த்திருக்கியா.அப்படியே யானைக் காது மாதிரி அகலமா சன்னமா

ஒரு குழந்தையை அந்த தோசையிலே படுக்க வைக்கலாம்ன்னேன்..எங்க வீட்டுலே இதை நாங்க இட்டிலின்னு சொல்லுவோம் ..எங்கம்மா இட்டிலி இவளோ பெரிசா இருக்கும்..வந்து பாரு அப்புறம் தெரியும்ன்னேன்…’

‘உங்கம்மாவுது அவ்வளவு பெரிசாடான்னா.’…’ஆமா ஒரு தோசையை நாலா மடிச்சி வச்சாத்தான் இந்த தட்டே கோள்ளும்ன்னேன்…சரிதானேக்கா…’

‘அடியே…தாயாரு இங்க வந்து இதக்கேளுடி…அப்புறம் வேலையப்பாக்கலாம்…’

‘கேட்டுட்டுதான் இருக்கேன்….அவன் நெஜம்தானே சொல்றான்…நீ சொல்லு கண்ணா…’

அப்புறம்.. திடீர்னு அவ சொல்றா ‘நீ நாசமாப்போவே…பத்துநாள் சோறில்லாம போய் , சுடுகாட்லே செத்து அங்கயே உன்னைப் புதப்பாங்கன்னா…இப்பிடிக் கிழக்கே திரும்பி நின்னுசொன்னாக்கா…கையைக்கூட நெரிச்சாக்கா….’

‘ஐய்யய்யோ பாவி….உன்னையாடா அப்பிடிச் சொன்னா…’

‘என்னைச்சொன்னா விடுவனா யாரைத் திட்டரே காயத்திரி.என்னையான்னேன்…

பாரு காயத்திரி ..அதிதி தேவோ பவ…அப்பிடின்னா விருந்தாளி கடவுளுக்கு சமம்

என்னகின்ன திட்டினே உனக்கு சிசு ஹத்தி தோஷம்வந்து சேரும்..அப்புறம் அது

ஏழேழு பதினாலு பூலோ ஜன்மத்துக்கும் நிக்கும் என் னோட விளையாடாதே …நான் யாரு…தெரியுமா நான்ஆஞ்சநே பக்தன்….பாத்துக்கோன்னேன்……..’

‘ச்சீ ….ச்சீ…உன்னச்சொல்லுவனா அந்த ராம கிருஷ்ணனைச்சொன்னேன்டா…இவன்

மன்னார் குடி போவட்டும் மண்ணாவே போகட்டடும்..எனக்குக்கூடப் படுக்க ஆள் கேட்டனா…நீ பொறு சாமி நான் வேற தோசக்கல்லுலே தோசை வாத்துத்தறர்றேன்னா…

அப்புறம் பெரிய தோசைக்கல்லா எங்கிருந்தோ வாங்கி போட்டுக்குடுத்தாக்கா…அத மின்னாடியே செய்ய வேண்டியதுதானே…’

‘அதையாவது நீ சாப்பிட்டியா..’

‘எப்பிடி சாப்பிடறது..நான் எப்பவாவது நெய்யில்லாம சாப்பிட்டுருக்கனாக்கா… என்னது வெறும் தோசைபோடறே…எங்க வீட்லே சுத்தமான பசு நெய்..ஸ்ரீவில்லிபுத்தூர்லேயிருந்து

வரும் …நான் நெய்யில்லாத தோசை சாப்பிட்டது மாத்திரம் எங்க வீட்டுக்கு தெரிஞ்சா

துடிச்சுப்போயிடுவாங்க.. எங்க வீட்டு தோசையைப் பிழிஞ்சா அப்படியே தொடையிலே நெய்யா வடியும் தெரிஞ்சுக்கோ.. அப்படின்னேன்..அவ.. அதான் காயத்திரி நின்னே போயிட்டா..டேய்..டேய்ங்கறா…ஏங்க்கா…தொடையிலே நெய் வடியறது ஒரு விஷயமாக்கா…அவ அலற்ராளே…அன்னிக்கு ஒரு நா நீ கூட பார்க்கல்லேடா…

ஆமாம்..ஆமாம்…நான் பார்த்து தொடையத்தொடடான்னு கூட சொன்னேனே…’

‘டேய்..டேய்..மடப்பயலே.. தொடையிலயா நெய் வடியும்னு சொன்னே…’என்றாள் அத்தை

பிரியா தலையைக்குனிந்து கொண்டாள்.அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஓரக்கண்ணால் புருஷனைப் பார்த்தாள்…அவனால் சிரிக்கக்கூட முடியவில்லை…வயிற்றைப் பிடித்துக்கொண்டிருந்தான்…அத்தை சுதாரித்தாள்…

‘ஏண்டா எல்லோரும் முழங்கை வரை நெய் வடியும்பாங்க..நீ ஏன் தொடையிலே வடியும்னே..’என்றாள் அத்தை…

‘மாத்தி யோசின்னு நீங்தானே சொல்லிக்கொடுத்தீங்க.. எல்லாரும் சொல்றதை நான் ஏன் சொல்லனும் அத்தை..மாத்தி யோச்சசேன் அப்புறம் முழங்கைன்னா என்ன..

தொடைன்னா என்ன ..ரெண்டும் ஒண்ணுதானே…எங்க வடிஞ்சா என்ன நெய் ன்னா

நெய்தானே….அத்தே..நீ சொன்னதுதானே நான் செஞ்சேன்… ‘

‘தாயாரு..வாடி.. வந்து உட்கார்ந்துகேளு ..ஆஞ்சநேயனே சுந்தரகாண்டம் படிச்சா இப்படித்தான்…ச்சீ..எல்லோரும் எந்திரிச்சு போங்கடா ..நாய்களா..தலையணையை எடுத்து மகனின் மேல் விசிறினாள் அத்தை..’நீ மொதல்லே எந்திரிடா…சிங்கப்பூர்லே இருந்து வந்துட்டான் ப்ரவசனம் கேட்க……’

‘சும்மா இரும்மா இதெல்லாம் சிங்கப்பூர்லே எவன் பேசுவான்…சொல்லுடா ராஜா…

வழியாதீங்க…..அத்தை இன்னும் நேறைய இருக்கு அத்தே…’என்றாள் பிரியா கிளைமாக்ஸ்இன்னம் வரலை..நெறைய இருக்கு….’

‘இது கிளைமாக்ஸ் இல்லையா..இவன் ரொம்ப மாத்தி யோசிக்கறாண்டி..இதுலே நடுவே

நம்மளை வேற இழுக்கறான்… அடுத்து என்ன….’என்றாள் அத்தை…

‘இந்த ராவுலே நான் நெய்க்கு எங்கடா போவேன்னு அழுவறா சும்மா புலம்பாதே பாட்டிலை எடு.. குலுக்கு நெய்யா வரும்…வச்சிகிட்டு வஞ்சனை செய்யாதே..அப்பிடின்னேன்…

…’அடப்பாவி..இப்பிடியெல்லாத்தையும் சரளமா பேச யார்ரா உனக்கு கத்துக்குடுத்தது…தெரிஞ்சுதான் பேசறியா என்ன…டேய் ..இரு ..ஆமாம்..பசு நெய்

எருமை நெய்ன்னு சொன்னியே வித்தியாசம் எப்பிடிடா கண்டு பிடிக்கறதுன்னா… ‘

‘அது சுலபம் காயத்திரி..பசுமாடு கறந்தா அது பசு நெய் எரும கறந்தா அது எருமை நெய்ன்னேன்..ஏண்டா எருமையோ பசுவோ அது பால்தானே கறக்கும்னா..உடுவனா…

அட மண்டு..இதுகூடத்தெரியாதா..அதுகளுக்கு தட்டு புண்ணாக்கு வச்சா பால் கறக்கும்..வெண்ணையே கொடுத்தா நெய்யா கொட்டிரும்னேன்…ஆஹான்னா ராஜா இதுக்குதாண்டா கம்ப்யூட்டர் மாத்திரம் படிக்காதே..எல்லாம் படின்னு எங்கப்பா சொன்னார்..அதவிடு ராசா..ஊர் பேரு மடிப்பாக்கம் ..சரி..அதுக்காக இந்த அர்த்த

ஜாமத்திலே பசு மாடு மடி பாத்து என்னாலே கறக்கவெல்லாம் முடியாது..அப்பிடியே நெய் வந்தாலும் நீ காராம் பசு நெய்யான்னு கேட்பே ..அப்புறம் நெய் ஏன் தண்ணிமாதிரி இருக்கும்பே.. பாரு ..இந்த ஒரு ராத்திரி ‘என்னை’ அட்ஜஸ்ட் பண்ணிக்கோடா…விடிஞ்சதும் உனக்கு புலி நெய் கூட தருவிச்சித் தரென்னா…அப்புறமா ‘ஸர்வேஸ்வரா இந்த ஒரு ராத்திரி மட்டும் என்னக்காப்பாத்துன்னு மேல பாத்து கும்பிட்டாக்கா…அட நான் உன்னை ஒன்னும் பண்ணமாட்டேன் பயப்படாதேன்னேன்.. நீ ஒன்னும் பண்ணமாட்டேடா அது எனக்கு அது தெரியம்.. .ஆனா ராத்திரிக்குள்ளே நான் உன்னைக்கொலை பண்ணிடுவேனோன்னு எனக்கு பயம் அதான் ஈஸ்வரனைக் கூப்பிட்டேன்னாக்கா..இப்பபிடித்தாங்க்கா ஒரு நா அந்த ராமகிருஷ்டனை பட்டப்பகல்லே

மடிப்பாக்கத்திலே இவ அருவா மனையோட துரத்தி அவன் எஸ்கேப் ஆகி அப்புறம்

மண்ணடியிலே மீசை தாடியோட அலைஞ்சவனை இவன்தான் ராமகிருஷ்ணன்னனு அடையாளம் கண்டுபுடிச்சிட்டு கூட்டிட்டு வந்தோம்க்கா.’

‘அடப்பாவி…..அப்பிடியா செஞ்சா அவ…’

‘டேய் மாப்பிள்ளே ..அந்த நெய்க்கதையைக்கொஞ்சம் ஆரம்பிடா…’

‘அவசரப்பட்டா சொல்லமாட்டேன்….பாருக்கா இந்த மாமாவை…’

‘ச்சும்மாயிருங்க ..அவன் மூடைக்கெடுக்காதீங்க ..நீ சொல்லு கண்ணா..’

‘அப்புறமா ஒரு பத்து நிமிஷம் கழிச்சு ஒரு பாட்டில் நெய்யோட வந்தா..’

‘சரி..நெய் கடன் வாங்க போயிருப்பா…’

‘இருக்கும்…இருக்கும்..அப்புறம் நெய் தோசை போட்டு’ டேய் சாமி கையாலே பிழிஞ்சி பாரு ..தொடையிலே நெய் வழியல்லேன்னுஅப்பபுறம் என் மேல பாயாதன்னா…’

‘என்ன சொன்னா என்னசொன்னா..தொடையில நெய் வழியில்லேன்னா என் மேல பாயாதேன்னா சொன்னாளா…’ என்றான் பிரசன்னா..

‘ஆமா மாமா அப்பிடித்தான் சொன்னா மாமா..எல்லா சமாச்சாரமும் அவ செஞ்சிட்டு என்னை மேல பாயாதேன்னு சொல்லுவாளாம்..அத நான் கேக்கனுமாம் .இது எப்பிடி இருக்கு…’

‘இதத்தாண்டா உங்கக்கா செய்யறா…. ‘

‘சும்மாயிருங்க மாமா ..எங்க அக்காவும் அவளும் ஒண்ணா…’

‘எல்லா பொம்பிளையும் இப்பிடிதாண்டா…தூக்கி விட்ருவாளுங்க..அப்புறம் பாயாதீங்க

படுத்தாதீங்கன்னு தாங்க முடியல்லைன்னு வசனம் பேசுவாங்க… ‘

‘அத்தே ..மொதல்லே இவரை அடக்குங்க…நீங்க புறப்படுங்க…’

‘இரு கண்ணம்மா கிளைமாக்ஸ் பாத்துட்டு புறப்பட்டுடறேன்… ‘

‘அப்ப வாயை ப்பொத்திகிட்டு பேசாம இருக்கணும்..நீங்க சொல்லுங்கத்தே…

‘டேய் ..சும்மாயிருடா…நீ சொல்லு கண்ணா….’என்றாள் அத்தை’..தோசை போட்டாளா..’

‘நாலு போட்டு ..இன்னும் எத்தினி தடவை போடரதுடா’ன்னாக்கா…’

‘பாரு இதுக்கேல்லாம் கணக்கு கெடையாது…வயறு நெறைய வரை போட வேண்டியதுதான்னேன்…’ ‘ ‘ கரெக்ட்ரா கண்ணா..இது அந்த ராமகிருஷ்ணனுக்கு எங்க புரியுதுன்னா…மடையன்.. பாவி…… மாபாவின்னு…சலிச்சுக்கறாக்கா….பாருகாயத்திரி… எனக்கு வயறு ‘நிறையப்பபோடு..உனக்கும் வயறு நிறையும் ..அதிதி தேவோ பவ..புரிஞ்சிக்கோன்னேன்’

அவ மூஞ்சே மாறிப்போச்சு..ஷாக்கடிச்சா மாதிரி நிக்கறா எனக்கு ஒன்னுமே புரியலை..

என்னடாது …தப்பா கூட ஏதும் பேசல்லியே இவ ஏன் ஷாக் ஆகறான்னு எனக்கு குழப்பம்.’

‘டேய் உனக்கு வயறு நிறையப்போட்டா எனக்கு வயறு நிறையுமான்னு திடீர்னு ஆவேசமா கேட்டாக்கா…கண்டீப்பா என் வயறு நிறையட்டும் ..உன் வயறு நிறையறதை நீ பார்ப்பே… .இங்க வா நான் ஆஞ்சநேயன் சொல்றேன்னு அவளை இழுத்து அ

தலையிலே என் கையை வச்சி சொன்னேன்…அப்புறம் என்ன நெனச்சாளோ தெரியலைக்கா நொடியிலே திடீர்ன்னு ஆளே மாறிட்டாக்கா..ஒரு தோசை போட சலிச்சவ….திடீர்ன்னு வேக வேகமா தோசயாப் போடறா…நெய்யா ஊத்தறா……

தின்னுடா. வயறு நிறையத் தின்னுடான்னு தோசையை போடறா.போதும் போதும்னாலும்

விடமாட்டேங்கறா…அழுவறாக்கா..பாவமா இருந்தது… ஏன்னே தெரியலை.. அப்பிடி அழுவறாக்கா அதுக்கப்புறம் என்னாலே சாப்பிட முடியலை… எழுந்திரிச்சப்போய்,

‘நீ ஏன் அழுவறே காயத்திரி..நீ அண்ணபூரணி..ஆஞ்சநேயனை மனசிலே நினைச்சுக்கோ ..எதுக்காகவும் கவலைப்படாதே…மனசை லேசாக்கிடு..கடவுளை நினை

வேண்டுவது அறிவோய் நீ ..வேண்டுவது தருவோய் நீன்னு ஆழ் மனசிலே வை…அவன் நம்மை அளித்துக்காப்பான்னு தீர்மானமா நம்புன்னேன்..நம்ம சங்கடம் எதுவானாலும் அவன் தீர்த்து வைப்பான்னு நம்பு அப்பிடின்னேன்..அப்பிடியே அழுது சோர்ந்து போய் என்

மேல சரிஞ்சுட்டா ….அவளுக்கு என்ன கஷ்டமோ….ஏங்க்கா….’

‘ சரி நீ உள்ள போ அம்மா டிபனோட காத்திருக்கா..எனப் பிரியா சொல்ல ராஜாராமன் உள்ளே போனான்…

பிரியா தாங்க முடியாது உடைந்து அழுது விட்டாள்…பிரசன்னாவே கலங்கிப்போயிருந்தான்..அத்தை கண்களைத்துடைத்துக்கொண்டாள்…

‘அவன் சொன்னா நடக்கும்டி அவன் மனசும் வாயும் சுத்தம்…’என்றது அத்தை…

‘ஒரு மணி நேரம் முன்னே காயத்திரியைப் பார்த்தேன் அத்தை..ரொம்ப உணர்ச்சி

வசப்பட்டிருந்தா…நடந்ததை அழுதுகிட்டே சொன்னா…….’

‘அக்கா நடுக்கூடத்திலே பட்டு வேஷ்டிகட்டி குருவாயூரப்பன் மாதிரி உட்கார்ந்து நிஷ்களங்கமா சாப்பிடறான்க்கா..ஸ்வாமிக்கு நிவேதனம் பண்றமோன்னு சந்தேகம் வருது…பதிமூனு நெய் தோசைக்கா…பகவானே..இந்த மாதிரி சாப்பிட என்வயத்திலே ஒரு புழு பூச்சி வைக்கக்கூடாதா…நியாயமான ஆசைதானே இது… எனக்கு ஒண்ணு தரக்கூடாதா..நான் என்ன பாவம் செஞ்சேன்..இதுகூட அதிக பட்ச ஆசையாயிடுமான்னு அழுகை அழுகயா வருது..நேஞ்சடைக்குதுக்கா. அப்பத்தான் இவன் என்னைக் கட்டிப்பிடிச்சு ஆறுதல் சொல்றான்..ஸ்வாமி பேரைச்சொல்றான்…ஞானி

மாதிரி பேசறான்..நம்பு ..நம்ம கஷ்டத்தை ஸ்வாமி கிட்ட ஒப்படைச்சுடு…..நம்மளை முழுசா அவன் வசம் விட்டுடு…சரணடைஞ்சுடு…அவன் முன்னாடி நாம ஒன்னுமேயில்லேங்கறான்…அந்த நிமிஷத்துலே அவனே எனக்கு ஸ்வாமியாத் தெரியறான்க்கா ..நான் களைச்சு சோர்ந்து போறேன் அவன் சொன்னதே வேதம்ன்னு

புரியுது…நான் ஸ்வாதீனத்துக்கு வர்ரேன்..ஸ்வாமியை முழுசா நம்பனும்னு புரியுது..

இதான்க்கா நடந்தது.. ராத்திரி என்னிக்குமில்லாம நிம்மதியா தூங்கினேன்.எழுந்து

பாரத்தா ஆளைக்காணல்லே…போயிட்டான்……..நர்சிங்ஹோமுக்கு

இப்ப வேற விஷயமா இந்த டாக்டர் கிட்ட வந்தேன் அவங்க பாத்துட்டு ‘அடியே நீ உண்டாயிருக்கேடி ‘ன்னு சொல்றாங்க…நம்பவே முடியல்லேக்கா…ஏழு வருஷமா பாக்காத

டாக்டரில்லே….உங்க தம்பி ராஜா , அவன் சொன்னான் ..வேண்டியது அறிவோய் நீ …வேண்டுவன தருவோன்..நீ … அவன் நமக்கு அளித்துக்காப்பான்னான்….அவன் சொல்ற மாதிரி ஒப்படைச்சிட்டேன்…பூரண சரணாகதி ஜெயிச்சே தீரும் இல்லேக்கான்னா…..எனக்கு கெடச்சிடுச்சிக்கா…அவன் வாக்கு தெய்வீக வாக்கு…

அவன் சமயத்திலே தெய்வம்க்கா…ராமகிருஷ்ணனை என்ன பாடு படுத்தியிருக்கேன்…

அதெல்லாம் தப்புன்னு எடுத்துச்சொல்ல இவன் வந்திருக்கான்க்கா..இவன் என்னை அந்த பாடு படுத்தினதுகூட எதையோ உணர வைக்கத்தான்னு புரியுதுக்கா நான் இப்ப

தெளிவா இருக்கேன்க்கான்னா… அவளைச்சமாதானப்படுத்திட்டு வந்தேன்……..

அத்தே….நம்மளை மீறி இந்தப்பய ஏதோ செய்யறான்..அம்மாஞ்சியாயும் திரியறான்…

ஒன்னுமே புரியலை…..’

எல்லாம் சொல்லிவிட்டு கண்ணீரைச்சுண்டினாள் பிரியா…

உள்ளே அம்மாவுடன் எதற்காகவோ தீவிரமா சண்டை போட்டுக்கொண்டிருந்தான் நம்ம ‘அம்மாஞ்சி…..’

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *