கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 3, 2022
பார்வையிட்டோர்: 4,316 
 

செல்லத்திற்கு வயது 83 அவளது கணவன் ராஜூவிற்கு வயது 88. இரண்டு மகள்களுக்கும் கல்யாணம் செய்து கொடுத்தாகி விட்டது. ஆயிற்று, இரண்டு மகள்களும் பேரன் பேத்தி எடுத்தாகி விட்டது.

ராஜூவிற்கு சொந்தமாக சென்னையில் ஒரு வீடு இருக்கிறது. தேவையான அளவிற்கு மேலேயே வருமானம், வங்கியில் போட்டு வைத்திருக்கும் வைப்பு நிதியிலிருந்து வட்டியாக வருகிறது .

தனியாகத்தான் வாழ்க்கை. நிம்மதியாக காலத்தை “ஹரே ராமா ஹரே கிருஷ்ணா” என்று ஓட்டலாம், காலம் முடியும் வரை.

ஆனால், விதி யாரை விட்டது?. செல்லத்திற்கு ஒரே சந்தேகம். தன் கணவன் வங்கியிலிருந்து யாருக்கோ மாதா மாதம் பணம் அனுப்புகிறார் என்று. கணவன் பேரில் சந்தேகம்.

சின்ன வயதில் ராஜுவிற்கு குடிப் பழக்கம் உண்டு . பெண்கள் தொடர்பும் இருந்ததாக கேள்வி . மனைவி ராதாவிற்கு இது அரசல் புரசலாக தெரியும். ஆனால், சின்ன வயதில் கேள்வி கேட்க பயம்.

ராஜு சின்ன வயதில் பார்க்க கவர்ச்சியாகவே இருப்பார். டக் செய்த பேன்ட் ஷர்ட், சிவந்த நிறம், சிரித்த முகம், நல்ல உயரம், பார்க்க கொஞ்சம் கவர்ந்திருக்கும் அழகான முகம், எந்த மனைவிக்கு தான் சந்தேகம் வராது ? அதுவும் சந்தேக பிராணி செல்லத்திற்கு?

இப்போது ,83 வயதில் செல்லத்திற்கு தைரியம் வந்து விட்டது . கூடவே, கணவனுக்கு பிறகு தான் தனியாக என்ன செய்ய போகிறோம் ? மகள்கள் வீட்டிற்கு போக விருப்பமில்லை . இருக்கிற காசை கணவன் யாருக்காவது கொடுத்து விட்டால் , தான் நிர்கதியாகி விடுவோமோ என்ற பயம் . தேவையற்ற பயம். மன உளைச்சல்.

செல்லத்திற்கு இப்போது இதுவே மன அழுத்தம். கணவனிடம் தினமும் சண்டை. ஓவென்று கத்துவாள். வேலியம் என்ற தூக்க மாத்திரைக்கு அடிமையானாள். ““வாழ்க்கை கடும் வேதனையளிக்கிறது” என்று அடிக்கடி சொல்லுவாள். படுக்கையில் முடங்கி படுத்து கொள்வாள் . கழுத்து வலிக்கிறது, உட்கார முடியவில்லை, இடுப்பு வலிக்கிறது, என்று ஏதாவது நோய் சொல்லிக் கொண்டே இருப்பாள்.

கணவருக்கு காது கேட்காது . அதனால் , அவள் கதறலில் பாதி காதில் விழாது. மீதியை சட்டை பண்ண மாட்டார்.

செல்லம் படிக்காதவள் . அதனால், செல்லம், தனது கணவனின் பேங்க் பாஸ் புத்தகத்தை அடிக்கடி தனது மாப்பிள்ளைகளிடம் கொடுத்து “ யார் யாருக்கு பணம் பட்டுவாடா ஆகியிருக்கிறது?” என்று பார்க்க சொல்வாள். கணவனை நம்ப மாட்டாள். மற்றவரையும் நம்ப மாட்டாள். எல்லோரும் கணவனுக்கு சாதகமாக பொய் சொல்கிறார்கள் என்ற அவநம்பிக்கை.

தினமும், சண்டை. பஞ்சாயத்து . “இப்பவும் அந்த சரோஜாவுக்கு பணம் அனுப்பியிருக்கே. எனக்கு தெரியும். நீ அந்த காலத்திலே 9 பேரை வெச்சிண்டிருந்தே . அதுவும் எனக்கு தெரியும்,” என்று கணவனை திட்டி தீர்ப்பாள். கணவனை ஒரு துளியும் நம்ப மாட்டாள். என்ன சொன்னாலும் கேட்க மாட்டாள்.

மகள்களிடம், தனது கணவனின் கடந்த கால வாழ்க்கை பற்றி, தான் பட்ட அவதிகள் பற்றி கொட்டி தீர்ப்பாள். ‘இனிமேல் என்னால் இதை தாங்கிக்கொள்ள முடியாது’ ‘நான் எதுக்காக இனியும் வாழணும்?’ இதுவே அவள் புலம்பல்.

டாக்டரிடம் வர மாட்டாள். “எனக்கு என்ன வியாதியா? உங்க அப்பனை அழைத்துக் கொண்டு போங்க. அவனுக்குதான் கெட்ட சகவாசம்” இந்த ரீதியில் பேசுவாள்.

தாங்காத மன உளைச்சலால், நிறைய தூக்க மாத்திரை போட்டு எப்போதும் அசதியாக இருந்தாள். வாழ்க்கை நரகம் தான் .. காசிருந்தென்ன, பணமிருந்தென்ன, நிம்மதியாக வாழ்க்கையை அனுபவிக்க தெரியவில்ல .

அவள் கணவன் ராஜூவிற்கும் நிம்மதி இல்லை “எனக்கு எந்த கெட்ட தொடர்பும் இல்லை! அதற்கான வயதா இது? மீண்டும் மீண்டும் என்ன சொன்னாலும் கேட்கவில்லையே! எல்லா வங்கி கணக்கும், இந்த வீடும் எனக்கு அப்புறம் உன் பேரில் தானே. என்ன பண்ணுவேன்? இந்த கொடுமையை யாரிடம் சொல்வேன்? எனக்கு தானே அவமானம்?”

***

செல்லம் மட்டும், தன் மன அழுத்தத்தை குறைத்துக் கொண்டிருந்தால், தனது எண்ணங்களை வேறு ஏதாவது மாற்று நடவடிக்கையில் ஈடு படுத்தியிருந்தால், அற்ப காரனங்களுக்காக ஏற்பட்ட மனச்சிதைவை தவிர்த்திருக்கலாம். வாழ்க்கையை இனிமையாக வாழ்ந்திருக்கலாம்.

83வயதில் வரும் சந்தேகமா இது?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *