கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: July 10, 2023
பார்வையிட்டோர்: 4,859 
 

(1997ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குருத்து 13-15 | குருத்து 16-18 | குருத்து 19-21

குருத்து பதினாறு 

நீண்ட நேர அலங்காரத்திற்குப் பிறகு, மிகுந்த உற்சாகத்துடன், சேதுபதியைச் சந்திக்கப் போகிறோம் என்னும் குதூகலத்துடன், அவருடைய அந்தரங்கத்தை அறியப் போகும் ஆர்வத்துடன், இரண்டில் ஒன்று தெரிந்து கொண்டு விடுவதென்னும் திடமான தீர்மானத்துடன் அவருடைய வீட்டுக்குப் புறப்பட்ட பார்வதியை, ராஜாவின் பேரிடி போன்ற சொற்கள் நிலைகுலையச் செய்துவிட்டன. ஒரு கணம் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.  

“சேதுபதியிடம் எனக்குள்ள அக்கறையைப் புரிந்து கொண்டே ராஜா இப்படிப் பேசியிருக்கிறான். கடந்த சில நாட்களாக என்னுடைய போக்கில் ஏதோ ஒரு மாறுதல் இருப்பதை அவன் உணர்ந்திருக்கிறான்.அதனாலேயே இன்று நான் வெளியே போகும் நேரத்தில் என்னைத்தடுத்து நிறுத்தி, ‘பிக்விக் பேபர்ஸ்’ பற்றிப் பிரஸ்தாபித்து, மறைமுகமாக என்னைத் தாக்கியிருக்கிறான்” என்று ஊகித்த பார்வதி, அடுத்த கணமே சேதுபதியைச் சந்திக்கும் எண்ணத்தைக் கைவிட்டவளாய் மாடிப்படிகளை நோக்கி நடக்கலானாள். 

அவள் உள்ளம் குழம்பியது. உடல் பதறியது. கால்கள் தடுமாறின. கண்கள் கலங்கிச் சிவந்தன. தட்டுத் தடுமாறிய படியே மாடியை அடைந்து தன் அறைக்குள் சென்று கதவைத்தாளிட்டுக் கொண்டாள். அங்கே கண்ணாடியில் தன் உருவத்தைக் கண்டபோது, தன் கண்களிலிருந்து இரண்டு சொட்டுக் கண்ணீர் வழிந்து கொண்டிருப்பது தெரிந்தது. தன்னுடைய நிலைக்குத் தானே இரங்கினாள் பார்வதி. 

ஆம்; பார்வதிக்காக, அவள் பரிதாப நிலைக்காக இந்த உலகத்தில் வேறு யாருமே இல்லை. 

உடல் சோர்ந்து, உள்ளம் கசந்து, உறுதி தளர்ந்து, திட்டங்கள் தகர்ந்து, தட்டுத் தடுமாறி நிலை குலைந்து போன பார்வதி, நிற்கும் சக்தியற்றவளாகிப் படுக்கையில் சாய்ந்து விட்டாள். 

இனி அவள் சேதுபதியைச் சந்திக்க விரும்பவில்லை. சில நிமிடங்களுக்குமுன் வரை இருந்த அந்த ஆசையை இப்போது தன் உள்ளத்திலிருந்தே கெல்லி வீசி எறிந்து விட்டாள். 

‘அவர் பதில் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. என்னை நேசிப்பதாகச் சொன்னால் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வேன். அவர் இதயத்தில் எனக்கு இடமே இல்லை என்று கூறினாலும் அந்த அதிர்ச்சியையும் திடமாக ஏற்றுக் கொள்வேன். ஆனால் இரண்டில் ஒன்று முடிவாகத் தெரிந்து விட வேண்டும். மனத்திற்குள்ளாகவே மறைத்து வைத்துக் கொண்டு என்னால் இனி வேதனைப்பட முடியாது. இன்று முடிவு தெரிந்துவிடவேண்டும். அப்போதுதான் எனக்கு நிம்மதி ஏற்படும்’ என்ற தீர்மானத்துடன் புறப்பட்ட பார்வதிக்கு இந்த இரண்டும் கெட்ட நிலை மிகுந்த எரிச்சலைக் கொடுத்தது. 

படுக்கையில் சாய்ந்தபடியே யோசிக்கலானாள். ராஜாவின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவன் காதுகளில் பயங்கரமாக ஒலித்தன. 

‘கிழவனுக்கும் கிழவிக்கும் காதலாம்!’ 

யாரோ ஓர் ஆசரியர். ஏதோ ஒரு புத்தகத்தில் எப்போதோ எங்கேயோ, தமாஷுக்காக எழுதிய ஒரு சின்ன விஷயத்தையே ராஜாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை யென்றால், தன் சொந்த அத்தை, தாய்போல் இருந்து, தன்னைப் பாசத்துடன் போற்றி வளர்த்த அத்தை, இத்தகைய எண்ணம் கொண்டிருக்கிறாள் என்பதை அறிய நேரிடும்போது எத்தகைய சீற்றம் கொள்வான்? ஐயோ, அதை எண்ணிப் பார்க்கவே பயமாக இருந்தது பார்வதிக்கு. இதுகாறும் தன் மனத்துக்குள் இம்மாதிரி ஓர் எண்ணம் வைத்திருந்ததாகவே ராஜா அறியக் கூடாது. இப்போதே மறந்துவிடுகிறேன். மறந்துவிட்டு எப்போதும்போல் குமாரி பார்வதியாகவே, பிரின்ஸிபால் பார்வதியாகவே வாழ்ந்து விடுகிறேன். உள்ளத்தில் புகுந்து என்னுடன் இரண்டறக் கலந்துவிட்ட எண்ணத்தை அவ்வளவு எளிதாகக் களைந்து விடக் கூடியதாயிருந்தால் அது உண்மையான பற்றுதலாயிருக்க முடியுமா? 

‘ஆமாம், நீ ஏன் ராஜாவுக்காக உன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவேண்டும்’. பார்வதியின் உள் மனம் அவளைக் கேட்டது. 

‘ராஜாவை நீ உன் சொந்த மகனைப்போல் பாசம் வைத்து வளர்த்தாய். இப்போது அவன் பெரியவனாக வளர்ந்து, உலகம் தெரிந்தவனாக, நல்லது கெட்டது புரிந்தவனாக ஆகியிருக்கிறான். இத்தனை வயது கடந்த பிறகு நீ ஒருவரின் நட்பை விரும்புகிறாய், உறவை நாடுகிறாய் என்று அவன் அறிய நேரிட்டால் அவன் அதைப் பொறுத்துக் கொள்ளமாட்டான், உன் உறவையே முறித்துக்கொண்டு உன்னை அநாதையாக்கிவிட்டு உன் முகத்திலேயே விழிக்க விருப்பமின்றி, உன்னைப் பிரிந்து போய்விடுவான்’ என்றது இன்னொரு குரல். 

‘போகட்டுமே; எனக்கென்று ஒரு வாழ்வு கிடையாதா?’

‘உண்டு; ஆனால் அதைக் காலம் கடந்து விரும்புகிறாய்! இப்போது ராஜாவைப் புறக்கணித்துவிட்டுச் சேதுபதியை நீ மணந்துகொண்டால் உலகம் உன்னைச் சுயநலக்காரி என்று தூற்றும்’. 

கடைசியில் பார்வதி ஒரு முடிவுக்கு வந்தாள். சேதுபதியை அன்றோடு, அந்தக் கணத்தோடு மறந்துவிடுவது என்பதே அந்த முடிவு. 

அப்போது கடிகாரத்தில் மணி ஒன்பது அடிக்கும் ஓசை அவள் காதில் விழுந்தது. 

‘இன்னும் அரை மணி நேரத்திற்குள் காலேஜுக்குப் புறப்பட வேண்டும்’ என்ற கடமை உணர்ச்சியால் உந்தப் பட்டவள், மாடியிலிருந்து கீழே இறங்கிச் சென்றாள். 

அத்தையின் வரவுக்காகத் தினமும் காத்திருக்கும் ராஜாவை இன்று காணவில்லை. அவன் சீக்கிரமே சாப்பிட்டு விட்டு வெளியே சென்றுவிட்டான் என்பதைச் சற்று முன்பு கேட்ட ஸ்கூட்டரின் ஒலியிலிருந்தே பார்வதி புரிந்துகொண் டாள். அவனை நிமிர்ந்து நோக்கவும், அவனுடன் பேசவும் கூடக் கூசிக்கொண்டிருந்த பார்வதிக்கு, அவன் அங்கே இல்லாதது ஆறுதலாகவே இருந்தது. 

பார்வதி அதிகம் பேசவில்லை. சாப்பாட்டை முடித்துக் கொண்டு குறித்த நேரத்திலேயே கல்லூரிக்குப் புறப்பட்டு விட்டாள். வழக்கம்போல் செவிட்டுப் பெருமாள் முக்காலியை விட்டு எழுந்து நின்று வணக்கம் செலுத்தினான். கல்லூரிக் காம்பௌண்டுச் சுவர் நெருங்கும்போது காலை விந்தி விந்தி நடந்து வந்துகொண்டிருந்த மிஸஸ் அகாதா ‘ஹலோ குட்மார்னிங்’ என்றாள். அப்போது மணி பத்தடிக்க ஐந்து நிமிஷம். 

பார்வதி காரைத் தன் அறைக்கு நேராகக் கொண்டு போய் நிறுத்துவதற்குள், அட்டெண்டர் ரங்கசாமி ஓடி வந்து காரின் கதவைத் திறந்தான். இதற்குள் பிரின்ஸிபால் வந்துவிட்டார் என்ற சேதி கல்லூரியெங்கும் பரவிவிடவே. பேச்சுக் குரல் அடங்கி அமைதி நிலவிற்று. 

பார்வதி அமைதியாகத் தன் அறைக்குள் போய் அமர்ந்து கொண்டாள். அவள் கையெழுத்துக்காக மேஜை மீது ஏதேதோ கடிதங்கள் காத்திருந்தன. அவற்றைப் படித்துக் கையெழுத்துப் போட வேண்டும். பகல் ஒரு மணிக்கு வெளி நாட்டிலிருந்து யாரோ கல்வித் துறை நிபுணர்கள் வருகிறார்கள். அவர்களை வரவேற்று உபசரித்துக் கல்லூரியைச் சுற்றிக் காண்பிக்க வேண்டும். உதவிப் பிரின்ஸிபாலுக்கு உடம்பு சரியில்லை. அவளுக்குப் பதிலாக வகுப்புக்குச் சென்று பாடங்கள் நடத்த வேண்டும். மாலை நாலு மணிக்கு அவர்களை வழியனுப்ப விமான நிலையத்துக்கு வேறு சென்றாகவேண்டும். பார்வதிக்கு லேசாகத் தலையை வலித்துக் கொண்டிருந்தது. அதைப் பொறுத்துக்கொண்டவளாய், தன் கடமைகளை முடிந்த வரையில் செய்து முடித்தாள் பார்வதி. 

மணி மூன்று. அவளால் உட்கார்ந்திருக்கவும் முடியாத நிலை. பாரதியை அழைத்துவரச் சொன்னாள். 

அவள் வந்ததும் “பாரதி! இன்று எனக்கு உடம்பு சரியில்லை. ஆகையால் டியூஷனை நாளைக்கு வைத்துக் கொள்ள வேண்டியதுதான். நான் இப்போது வீட்டுக்குச் செல்கிறேன்” என்று கூறிப் புறப்பட்டாள். 

பார்வதி, சாரதாமணிக் கல்லூரியின் தலைமைப் பதவியை ஏற்று எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை அவள் தலைவலி என்று சொல்லிக் கல்லூரிக்கு வராத நாளே கிடையாது. 

பார்வதி முக்கிய அலுவல்களை யெல்லாம் ரத்து செய்து விட்டு, கடமைகளை யெல்லாம் மறந்துவிட்டு, கல்லூரியிலிருந்து இரண்டு மணி முன்பாகவே புறப்பட்டுச் சென்றது அன்றுதான் முதல் தடவை. 

மாடியில் போய்ப் படுத்தவள்தான். மாலை ஆறு மணி வரை எழுந்திருக்கவில்லை. கடுமையாகக் காற்று வீசிக்கொண்டிருக்கவே, அவள் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தாள். ஏதேதோ எண்ணங்கள் மாறி மாறித் தோன்றிக் கொண்டிருந்தன. 

சேதுபதி தன்னைக் காணவந்திருப்பது போல் ஒரு பிரமை. அவரை நினைக்கவே அவளுக்குப் பயமாக இருந்தது. ‘அவரை இனி நான் சந்திக்கவே மாட்டேன். சந்திப்பதால் என் உள்ளத்தில் வளரக்கூடிய எண்ணத்துக்கு இனி இடம் தரமாட்டேன்’ என்று எண்ணுகிறாள். 

“அத்தை ! அத்தை!” என்று அவசர அவசரமாகக் கூப்பிட்டுக்கொண்டு மாடிப்படிகளில் ஏறிவரும் ராஜாவின் பூட்ஸ் ஒலி பார்வதிக்குக் கேட்டது. அவள் மெதுவாகத் திரும்பிப் படுத்துக்கொண்டாள். ராஜாவின் முகத்தைப் பார்க்கும் துணிவு அவளுக்கு இல்லை. ராஜாவின் கைகள் தன் நெற்றியைத் தொடுவதை உணர்ந்த பார்வதி, அவனை ஏறிட்டுப் பார்த்தாள். 

“என்ன அத்தை! நல்ல ஜூரம் அடிக்கிறதே! உங்களுக்கு என்ன உடம்பு!”… பதறிப்போன ராஜா, கீழே ஓடிச்சென்று தர்மாமீட்டரைக் கொண்டுவந்து பரிசோதித்தான். 

“101 டிகிரி” என்று அறிந்தபோது, ராஜாவின் கண்கள் கலங்கின. 

“ஒன்றுமில்லை ராஜா! இன்றிரவு பட்டினி போட்டால் நாளைக்குச் சரியாகிவிடும்” என்று பார்வதி ஈன சுரத்தில் கூறினாள். 

“நீ சாப்பிடவில்லை யென்றால், நானும் சாப்பிடப் போவதில்லை. நான் போய் டாக்டரை அழைத்து வருகிறேன்” என்று கூறிப் புறப்பட்ட ராஜா, சற்று நேரத்துக் கெல்லாம் டாக்டருடன் திரும்பி வந்தான். 

பார்வதியைப் பரிசோதித்துப் பார்த்த டரக்டர் பாலம்மாள் சிரித்துக்கொண்டே, “நான் டாக்டர் தொழிலை மேற்கொண்டு ஆறு வருடங்கள் ஆகின்றன. இதுவரை உங்களுக்குத் தலைவலி என்று கூடக் கேள்விப்பட்டதில்லை. உங்களுக்குச் சிகிச்சை செய்ய இப்போதாவது எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததே!” என்றாள். 

“அப்படியானால் எனக்கு ஜூரம் வந்தது பற்றித் தாங்கள் ரொம்பச் சந்தோஷப்படுகிறீர்கள், இல்லையா?” என்று கேட்டாள் பார்வதி; பாலம்மாள் சிரித்தாள். 

“பயப்படக்கூடிய அளவுக்கு ஒன்றும் இல்லை. சாதாரண ஜுரம்தான். நான் மருந்து கொடுத்துவிட்டுப் போகிறேன். சாப்பிடுங்கள். நாளைக்கு ஜுரமே இருக்காது. ஆனால் ஓய்வு ரொம்ப முக்கியம்” என்று கூறிவிட்டுப் புறப்பட்டாள் டாக்டர். 

“சாப்பிடலாமா?” என்று கேட்டான் ராஜா. 

“ஓ” என்றாள் டாக்டர். 

“பார்த்தீர்களா அத்தை! டாக்டரே சாப்பிடச் சொல்லி விட்டார்” என்றான் ராஜா. 

டாக்டர் புன்சிரிப்புடன் திரும்பி, “சாப்பிடலாம் என்று நான் கூறியது உன்னைத்தான். உன் அத்தையை அல்ல” என்றாள். 

“பார்த்தாயா ராஜா! போய்ச் சாப்பிடு” என்றாள் அத்தை. 

அன்றிரவெல்லாம் பார்வதிக்குத் தூக்கமே இல்லை. பழைய சம்பவங்களெல்லாம் துண்டு துண்டாகப் பார்வதியின் நினைவில் தோன்றின. பலவீனம் காரணமாகக் கண்ணெதிரில் மின்மினிப் பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன. 

‘என்னுடைய கணவரின் அன்புக்குப் பத்திரமாகப் பார்க்கிறாயா; அம்மா’ – சரஸ்வதியின் குரல். 

காகிதக் குப்பைகளுக்கிடையே பளிச்சிடும் திருமண அழைப்பிதழ், விமானக் கூடத்தில் அவருடைய மூக்குக் கண்ணாடியைக் கொண்டு கொடுத்தபோது அவர் பார்த்த பார்வை – கூறிய வார்த்தை.. 

‘பெண்கள் ஒளவையைப் போல் கல்வி அறிவு பெற வேண்டும். ஆனால் ஒளவையைப் போல் திருமண வாழ்க்கையே வேண்டாம் என்று கூறிவிடக் கூடாது’ என்று தான் கூறியபோது அவர் சிரித்த சிரிப்பு.. ஒருமுறை வியர்த்துக் கொட்டியது. விடியும் நேரத்தில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள் பார்வதி. ராஜா வந்து அவள் நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். ஜூரம் இப்போது துளிக்கூட இல்லை என்று தெரிந்ததும். அவன் அவளை எழுப்பாமலே போய் விட்டான். பார்வதி கண்விழித்துப் பார்த்தபோது தன் அறைக்குள் வெயில் அடித்துக் கொண்டிருப்பதைக் கவனித்தாள். 

கடிகாரத்தில் மணி பத்து அடித்துக் கொண்டிருந்தது. ‘ஓ! மணி பத்தாகி விட்டதா’ படுக்கையை விட்டு எழுந்த பார்வதி, அவசர அவசரமாகக் கீழே இறங்கி வந்துவிட்டாள். ஞானம் பதறிப்போய், “நீங்கள் இன்று காலேஜுக்குப் போகக்கூடாது. டாக்டர் ஓய்வு எடுத்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்” என்றாள். 

“கல்லூரிக்குப் போனால் எனக்கு எல்லாம் சரியாகி விடும். ஜூரம் நேற்றோடு போய்விட்டது. மணி பத்தடித்து விட்டது. நான் போய் வருகிறேன்” என்று ஞானத்திடம் சொல்லிக் கொண்டவள், சாப்பிடாமலேயே புறப்பட்டு விட்டாள். 

அன்று பார்வதியின் கார் கேட்டைத் தாண்டியபோது செவிட்டுப் பெருமாள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வில்லை. அவன் வழக்கமாக எழுந்து நின்று கும்பிடு போடும் நேரத்தில் போட்டுவிட்டான். இன்றைக்குப் பார்வதி லேட்! 

பார்வதியின் கார் கல்லூரிக் காம்பவுண்டை நெருங்கிய போது, அங்கே மிஸஸ் அகாதாவைக் காணவில்லை. அகாதா அன்று கல்லூரிக் காம்பவுண்டை நெருங்கியபோது, ‘குட் மார்னிங் பிரின்ஸிபால்’ என்று கூறிக்கொண்டே பார்வதியின் கார் வருகிறதா என்று திரும்பிப் பார்த்தாள். காரைக் காணவில்லை. கைக் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பத்து அடிக்க ஐந்து நிமிஷம்! ஏமாற்றத்துடன் சென்று விட்டாள் அகாதா. 

வழக்கம்போல் அட்டெண்டர் ரங்கசாமி பத்தடிக்க ஐந்து நிமிஷத்துக்குக் கார்க் கதவைத் திறக்க ஓடிவருகிறான்; காரைக் காணவில்லை. முகத்தில் கேள்விக் குறியுடன் திரும்பிச் செல்கிறான். 

சரியாகப் பத்தேகால் மணிக்குப் பார்வதியின் கார் கல்லூரிக் காம்பவுண்டுச் சுவரை நெருங்கியபோது எதிரிலிருந்த காலேஜ் புத்தகக் கடைக்கார அம்மாள் கடிகாரத்தைப் பார்க்கிறாள். அது சரியாக ஓடுகிறதா என்ற சந்தேகம் வந்துவிடுகிறது அவளுக்கு. பார்வதியின் காரைக் கண்டதும் அவள் கடிகாரத்தின் முள்ளைத் திருப்பிப் பத்தடிக்க ஐந்து நிமிஷத்துக்கு மாற்றி விடுகிறாள். பார்வதியின் கார் வந்தால், மணி பத்தடிக்க ஐந்து நிமிஷம் என்பது அவளுக்கு அவ்வளவு நம்பிக்கை. 

பார்வதி இன்று லேட்டாக வந்தபோது அந்தக் கண்களுக்குப் பார்வதியின்மேல் நம்பிக்கை குறையவில்லை. கடிகாரத்தில் பழுது இருப்பதாகவே தோன்றியது. 

பார்வதி தன் அறைக்குள் சென்றுகொண்டிருந்தபோது அங்கிருந்த டெலிபோன் மணி அடித்துக் கொண்டிருந்தது. பார்வதி ரிஸீவரை எடுத்துக் காதில் வைத்துக் கொண்டாள். சேதுபதியின் குரல்! என்ன சேதுபதியா! அவளுக்கு வியர்த்துப் போயிற்று. 

“ஓ, நீங்களா? என்ன வேண்டும்?” பற்றுதல் எதுவுமின்றி உணர்ச்சியற்ற குரலில் பேசினாள் பார்வதி. 

“பாரதி சென்னாள், தங்களுக்கு உடம்பு சரியில்லை யென்று…இப்போது எப்படி இருக்கிறது?” 

“இப்போது ஒன்றுமில்லை… தாங்க்ஸ்…” சட்டென ரிஸீவரை வைத்துவிட்டாள் பார்வதி. 

அவள் இதயம் படபடத்தது. ‘இவர் எதற்காக என்னைப்பற்றி விசாரிக்க வேண்டும்? இவரை நான் மறக்க முயன்றாலும் முடியவில்லையே? ஒருவேளை இவர் என்னை நேசிக்கிறாரோ? அவர் உள்ளத்தில் எனக்கு இடமளித்திருக் கிறாரோ? அவரை நான் மறந்துவிடப் போகிறேன்; அதைப் போல அவரும் என்னை மறந்துவிட வேண்டும். அப்போது தான் நான் நிம்மதியுடன் வாழமுடியும்’. திடமான, தீர்க்க மான ஒரு முடிவுக்கு வந்தாள் பார்வதி. 

மணி மூன்று இருக்கும். பி.எஸ்ஸி. வகுப்புக்கு ஜாக்ரபி போதிக்கும் கடமை அவளை அழைத்தது. 

பார்வதி, தன் உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் தன் கடமையைச் செய்யப் புறப்பட்டாள். மெதுவாக நடந்து வகுப்புக்குள் நுழைந்தபோது, அவளுக்குத் தலை சுற்றியது. அதையும் பொறுத்துக் கொண்டு வகுப்புக்குள் நுழைந்து மேடைமீது ஏறினாள். கால்கள் தடுமாறின. மயக்கமுற்றுக் கீழே சாய்ந்துவிட்டாள். 

குருத்து பதினேழு 

பார்வதி கண் விழித்துப் பார்த்தபோது தன் வீட்டு மாடி அறையில் உள்ள கட்டிலில்தான் படுத்துக்கொண்டிருப்பதை உணர்ந்தாள். கல்லூரியில் மயக்கமுற்றுக் கீழே விழுந்துவிட்ட பின்னர் நடந்தது எதுவுமே அவளுக்கு நினைவில் இல்லை. 

ராஜா, பாரதி, ஞானம், கல்லூரி மாணவிகள் சிலர், மிஸஸ் அகாதா, இன்னும் சில புரொபஸர்கள் அத்தனைப் பேரும் அந்த அறைக்குள் கவலை தோய்ந்த முகத்துடன் பார்வதியையே பார்த்த வண்ணம் நின்றுகொண்டிருந்தனர். 

அப்போது இரவு பதினோரு மணி இருக்கலாம். பார்வதி, அவர்கள் எல்லோரையும் ஒரு முறை கண்ணோட்டமிட்டு “நீங்களெல்லோரும் எத்தனை நேரமாக இங்கே காத்திருக்கிறீர்கள்? பாவம்! சாப்பிட்டீர்களா, இல்லையா? ராஜா! இவர்களை யெல்லாம் கீழே அழைத்துக்கொண்டு சென்று சாப்பிடச் சொல்லு…” என்று ஈனஸ்வரத்தில் பேச முடியாமல் பேசினாள். 

“முதலில் நீங்கள் சாப்பிடுங்க” என்று கூறி, பக்கத்திலிருந்த ஹார்லிக்ஸை எடுத்துத் தன்கையாலேயே கலந்து கொடுத்தாள் மிஸஸ் அகாதா. 

அந்த பிரெஞ்சு ஆசிரியையின் அன்பு, பார்வதியின் கண்களைப் பனிக்கச் செய்து விட்டது. 

“பாவம்! நீங்கள் கூடவா மாடிப்படி ஏறி என்னைப் பார்க்க வந்திருக்கீங்க! கல்லூரியில்கூட மாடியில் நடக்கும் வகுப்பாயிருந்தால் பாடம் நடத்தப் போக முடியாதென்று கூறுவீர்களே!” என்றாள் பார்வதி. 

“நான் என்ன! கல்லூரி முழுதுமே இங்கேதான் இருக்குது…” என்றாள் அகாதா. 

திருவாளர் சேதுபதியும், பாலம்மாளும் அப்போது அறைக்குள் பிரவேசிக்கவே, சுற்றியிருந்தவர்கள் சற்று விலகி மரியாதையுடன் நின்றார்கள்.

சேதுபதியைக் கண்டதும் பார்வதியின் இதயம் படபடத்தது. ‘ஐயோ இவர் எதற்காக இங்கே வந்தார்? இவரை நான் மறக்க முயன்றாலும் இவர் என்னை மறக்கவிட மாட்டாரோ? இவரை இனிக் கண்ணால் காணக்கூடாது; மனத்தாலும் நினைக்கக்கூடாது என்றல்லவா எண்ணிக் கொண்டிருந்தேன். இப்போது இவரே என் எதிரில் வந்து நிற்கிறாரே!’ 

டாக்டர் பாலம்மாள், பார்வதியின் கை நாடிகளைச் சற்று நேரம் உணர்ந்து பார்த்துவிட்டுப் பின்னர் காது குழலை வைத்துப் பரிசோதித்தாள். 

“கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஒரு மாதம் ஓய் வெடுக்க வேண்டும். அதுதான் ரொம்ப முக்கியம். நான் நேற்றுச் சொல்லிவிட்டுப் போனேன். கல்லூரிக்குப் போகக் கூடாது என்று” என்று கூறிவிட்டுப் புறப்பட்டாள் டாக்டர். 

டாக்டருடனேயே கீழே இறங்கிச் சென்ற ராஜா “அத்தைக்கு என்ன ஆகாரம் கொடுக்கலாம் டாக்டர்?” என்று விசாரித்தான். 

“மில்க்கும், ப்ரூட் ஜூஸும் நிறையச் சாப்பிடனும்” என்றாள் டாக்டர். 

“என்ன ப்ரூட்ஸ் கொடுக்கலாம் டாக்டர்? மாதுளம் பழம் கொடுக்கலாமா? அத்தைக்கு மாதுளம்பழம் ரொம்பப் பிடிக்கும்..” 

“பிடிச்சால் ஜூஸாகவே பிழிந்து கொடேன்…ரெஸ்ட் ரொம்ப முக்கியம்” என்று கூறிக்கொண்டே காரில் போய் ஏறிக்கொண்டாள் டாக்டர். 

அறைக்கு வெளியே வராந்தாவிலேயே நின்று கொண்டிருந்த சேதுதிபதி, ராஜா வந்ததும், “டாக்டர் என்ன சொல்கிறார் ராஜா!” என்று விசாரித்தார். 

“அத்தைக்கு ரெஸ்ட்தான் ரொம்ப முக்கியம் என்கிறார்”. 

“டாக்டர் அப்படிச் சொல்லி யிருக்கும்போது அத்தையை நீ நேற்றுக் கல்லூரிக்குப் போக விட்டிருக்கக் கூடாது!” சேதுபதியின் குரலில் குற்றச்சாட்டு தொனித்தது.

“நான் காலை ஒன்பது மணிக்கே காலேஜுக்குப் போய் விட்டேன். அத்தை யார் பேச்சையும் கேட்க மாட்டாள். வழக்கம்போல் அவள் காலேஜுக்குப் போய் மூணு மணி வரை ஓய்வின்றி உழைத்திருக்கிறாள். மாலையில் ஜாக்ரபி வகுப்பு நடத்தச் சென்றபோதுதான் மயக்கமாகக் கீழே விழுந்திருக்கிறாள். நல்ல வேளையாக அங்கிருந்த மாணவிகள் ஓடிச்சென்று தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். செய்தி தெரிந்ததுதான் தாமதம், அத்தனைப் பேரும் ஓடிச்சென்று அத்தையைக் காரிலே ஏற்றி இங்கே கொண்டு வந்திருக்கிறார்கள்… பாரதி போன் செய்த பிறகுதான் எனக்கே விஷயம் தெரிந்து ஓடி வந்தேன்” என்றான் ராஜா. 

வராந்தாவில் நின்ற வண்ணம் சேதுபதியும் ராஜாவும் பேசிக்கொண்டிருப்பதைப் பார்வதி சற்றுக் கவனமாகவே கேட்டுக் கொண்டாள். 

அந்தப் பேச்சில், சேதுபதி அவள்மீது கொண்டிருந்த அன்பு வெளிப்பட்டது. 

‘எவ்வளவு உரிமையோடு ராஜாவைக் கோபித்துக் கொள்கிறார்? அந்தக் கோபத்தில் எவ்வளவு பரிவும் பாசமும் புதைந்து கிடக்கின்றன? என்மீது இவருக்கேன் இத்தனை அக்கறை? தம்முடைய பொன்னான நேரத்தை யெல்லாம் வீணாக்கக்கொண்டு இங்கே எத்தனை நேரமாகக் காத்திருக்கிறாரோ?’ 

“பாரதி! உன் அப்பாவை உட்காரச் சொல்லம்மா” என்று கூற வாயெடுத்தவள், சட்டென மௌனியாகி விட்டாள். காரணம், அவரைக் காணவே அவள் கண்கள் கூசின. அவரை உட்காரச் சொல்லவோ, அவரிடம் பேசவோ, அன்பு பாராட்டவோ மறுத்தது உள்ளம். உள்ளத்தை உறுதியாக்கிக்கொண்டு அவர் வந்திருப்பதையே மறந்தவளாய், மறக்க முயன்றவனாய், மறக்க முடியாதவளாய் – ஒரு பெரும் சோதனையில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தாள் பார்வதி. 

அறைக்கு வெளியிலேயே நின்றுகொண்டிருந்த சேதுபதி, பார்வதியைப் பார்க்கவே விரும்பவில்லை. காரணம் தன்னைக் கண்டதும் அவளால் படுத்திருக்க இயலாது. எழுந்து உட்கார்ந்து விடுவாள். அந்தச் சிரமத்தை அவளுக்குக் கொடுக்கக்கூடாது என்று அவர் எண்ணியது தான். 

ஒவ்வொருவராக வந்து பார்வதியிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டனர். கடைசியில் மிஸஸ் அகாதா விடைபெற்றுக்கொள்ள வந்தபோது பார்வதியின் கண்கள் கலங்கி விட்டன. காலை விந்தி விந்தி நடக்கும் அகாதா விடம் பார்வதிக்குத் தனிப்பட்ட அன்பு உண்டு.வானமே இடிந்தாலும் பூமியே பிளந்தாலும் அகாதா கல்லூரிக்கு வரத் தவறியதில்லை. 

“ராஜா! இந்த பிரெஞ்சு லேடியைக் காரிலே கொண்டு போய் விட்டுவிட்டு வா” என்று பார்வதி கூறியபோது, “இவர்களை நானே கொண்டு போய் விட்டுவிடுகிறேன். ராஜாவை எங்கும் அனுப்ப வேண்டாம். ராஜா நீ இங்கேயே இருந்து அத்தையைக் கவனித்துக்கொள். ஏதாவது முக்கியமாயிருந்தால் எனக்கு உடனே டெலிபோன் செய்ய” என்றார் சேதுபதி, வராந்தாவில் நின்றபடியே. 

“தாங்க் யூ” என்று கூறிப் புறப்பட்டாள் அகாதா. 

“அப்பா! நான் இங்கேயே இருக்கட்டுமா?” என்று கேட்டாள் பாரதி. 

“வேண்டாம்; நீ என்னோடு வந்துவிடு. நாம் வீட்டுக்குப் போனதும் உன் அத்தையை இங்கே அனுப்பி வைக்கலாம். நம்மைக் காட்டிலும் அவள் இங்கே இருந்தால் உன்னுடைய பிரின்ஸிபாலுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்து கொண்டிருப்பாள்” என்றார் சேதுபதி. 

சேதுபதியின் அன்பு மொழி ஒவ்வொன்றும் பார்வதியின் நெஞ்சத்தைச் சஞ்சலத்திலாழ்த்தின. நேற்று முன் தினமாயிருந்தால் அந்த மொழிகள் அவளுக்கு இனித்திருக்கும். இப்போது அவற்றை அவள் கசப்பு மாத்திரைகளாக்கி விழுங்கிக் கொண்டிருந்தாள். 

‘இவர் எதற்காக என்மீது அன்பு பாராட்ட வேண்டும்? அளவுக்கு மீறிய அன்பைப் பொழிந்து என்னைச் சித்திரவதைக்குள்ளாக்க வேண்டும்? நான் மயக்கமுற்று விழுந் ததற்கு இவரல்லவா காரணம்? இவரிடம் நான் கொண்டிருந்த அன்பல்லவா காரணம்! இதுகாறும் இவரையே நினைத்து நினைத்து, இவருடைய அன்புக்காகவே ஏங்கி ஏங்கிக் காத்திருந்தேன். என்னுடைய எண்ணத்தை இப்போது மாற்றிக்கொண்டு விட்டேன். இவரை மறந்து வாழ முடிவு செய்துவிட்டேன். இப்போது நான் வேண்டுவதெல்லாம் இவர் என்னிடம் அன்பு பாராட்டாமல் இருக்க வேண்டும் என்பதுதான். தேவி! இந்தச் சோதனையிலிருந்து நீயே என்னைக் காக்க வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டாள். 

வாசலில் சேதுபதியின் கார் புறப்படும் ஓசை கேட்ட போது பார்வதி அந்த ஓசையை உற்றுக்கவனித்தாள். தன் கண்களில் பெருகி வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்ட பார்வதி, ‘என்னால் அவரை மறக்க முடியவில்லை…’ என்று தனக்குத்தானே கூறிக் கொண்டாள். 

மறுநாள் காலை.மணி எட்டு கூட அடித்திருக்காது. பாரதியையும், தங்கை காமாட்சியையும் அழைத்துக் கொண்டு வந்துவிட்டார் சேதுபதி. காரிலிருந்து இறங்கியவர் நேராக மாடிக்குச் சென்று பார்வதி படுத்திருந்த அறைக்குள் எட்டிப் பார்த்தார். பார்வதி அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள். மெதுவாக அந்த அறைக்குள் சென்ற சேதுபதி, தன் கையோடு கொண்டு வந்திருந்த பழங்களை எடுத்துப் பக்கத்திலிருந்த மேஜைமீது வைத்தார். அவ்வளவும் மாதுளம் கனிகள்! 

‘அத்தைக்கு மாதுளம் பழம் என்றால் ரொம்பவும் பிடிக்கும்’ என்று முதல் நாள் இரவு ராஜா டாக்டரிடம் கூறியதும், ‘பழத்தை ஜூஸாகப் பிழிந்து கொடேன்’ என்று டாக்டர் பதில் கூறியதும் சேதுபதியின் காதில் விழுந்திருக்க வேண்டும். அவர் சந்தடியின்றிப் பழங்களை வைத்துவிட்டுப் புறப்பட்டபோது பார்வதி சட்டென்று கண் விழித்துக் கொண்டு ‘நீங்களா? இப்போது எதற்கு வந்தீர்கள்? மாதுளம்பழங்களெல்லாம் ஏது?…’ என்று கேட்டாள். 

“என் தங்கையை அழைத்து வந்தேன். அவள் தங்களுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்வாள். எனக்குக் கொஞ்சம் அவசர வேலையிருக்கிறது! நான் மறுபடியும் மாலையில் வந்து பார்க்கிறேன். நீங்கள் அதிகம் பேசக்கூடாது. மனசுக்கு அமைதியும் உடலுக்கு ஓய்வும் மிக முக்கியமாம். டாக்டர் கூறியிருக்கிறார்.” மேலே எதுவுமே சொல்லாமல் புறப்பட்டு விட்டார் சேதுபதி. 

‘இவர் யாரோ? நான் யாரோ? இவர் எதற்காக எனக்கு இத்தனை உபசாரம் செய்ய வேண்டும்? நான் இவரை மறக்க நினைக்கும்போது இவர் ஏன் என்மீது அளவற்ற அன்பைப் பொழிகிறார்? எனக்கு மாதுளம் பழத்தின்மீது ஆசை என்பது இவருக்கு எப்படித் தெரிந்தது! ராஜா கூறியிருப்பானோ?’

“ராஜா!” என்று அழைத்தாள். 

“கூப்பிட்டிர்களா அத்தை?” என்று கேட்டுக்கொண்டே வந்தான் ராஜா. 

“ஆமாம்; மாதுளம்பழம் இங்கே எப்படி வந்தது?”

“தெரியாதே! ஒருவேளை சேதுபதி வந்திருப்பார்” 

“அவருக்கு யார் சொன்னது?” 

“டாக்டர் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ஒருவேளை அது அவர் காதில் விழுந்திருக்கலாம்…” 

“ஓ…” 

“ஏன் அத்தை சாப்பிடறீங்களா, ஜூஸ் பிழிஞ்சுக் கொடுக்கிறேன்…” ஆர்வத்துடன் கேட்டான் ராஜா… 

“வேண்டாம்…” அலட்சியத்துடன் சாரமற்ற குரலில் பதில் கூறினாள் பார்வதி. அதில் வெறுப்பும் இழையோடி இருந்தது. 

சேதுபதியின் அன்பு அவள் இதயத்தை நெகிழ வைத்தது. ஆனால் அதை அவள் பாராட்டவில்லை. அவர் காட்டும் அன்பை ஏற்றுக் கொள்ளவும் தயாராயில்லை. அந்த அன்பை அவள் பொருட்படுத்தவும் இல்லை. அலட்சியம் செய்யவும் இல்லை. அவர் தன்னிடம் அன்பு கொண்டிருப்பதை அவள் உணர்ந்ததாகவே காட்டிக் கொள்ளாமல், அவர் வருகிறபோதும், பேசுகிறபோதும், உணர்ச்சியற்ற மரக்கட்டையாக இருந்து சர்வ சாதாரணமாகப் பதில் கூறிக்கொண்டிருந்தாள். 

இப்போது? அவர் ஆசையோடு கொண்டுவந்து வைத்து விட்டுப் போயிருக்கிற மாதுளம் பழங்களைச் சாப்பிடுவதா, வேண்டாமா? 

‘கூடாது; இதைச் சாப்பிட்டால் அவர் என்மீது கொண்டுள்ள அன்பை நான் ஏற்றுக் கொள்வதாகும். இந்தப் பழங்களை நான் கையினாலும் தொடமாட்டேன். இன்று மாலை அவர் இங்கே வருவார். வந்ததும் வராததும் மாதுளம் பழங்களை நான் சாப்பிட்டு விட்டேனா என்று கவனிப்பார். பழங்கள் அப்படியே கிடப்பதைக் கண்டதும் என்மீது அவருக்குக் கோபம் கோபமாக வரும். என்னிடம் வெறுப்புத் தோன்றும். பிறகு அவர் என்னிடம் வைத்துள்ள பாசத்தை, நேசத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துவிட எண்ணுவார். அதைத்தான் நானும் எதிர் பார்க்கிறேன்.’ அவள் அந்தப் பழங்களைத் தொடவே இல்லை. 

மாலை ஐந்து மணி. சேதுபதியின் கார் வரும் ஓசை கேட்டுப் பார்வதியின் இதயம் அடித்துக் கொண்டது. 

‘தாங்கள் வைத்து விட்டுச் சென்ற மாதுளங்கனிகள் அமுதமாக இனித்தன’ என்று பார்வதி கூறுவாள். அந்தப் பதிலைக் கேட்டதும் என் முகத்தில் எந்தவித மாறுதலும் தோன்றக் கூடாது…’ இவ்வாறு எண்ணியபடியே படிகளைக் கடந்து பார்வதியின் அறையை அடைந்தார் சேதுபதி. 

பார்வதி அவரை ஏறிட்டுப் பார்த்தாள். அந்தப் பார்வையில் எந்த உணர்ச்சியுமே இல்லை. 

“நன்றாகத் தூங்கினீர்களா?” சேதுபதி ஆவலுடன் கேட்டார். 

“தூங்கினேன்…” 

பார்வதியின் பதிலில் அத்தனை உற்சாகமில்லை. 

சேதுபதியின் பார்வை பழங்கள்மீது பதிந்தது, காலையில் வைத்து விட்டுப்போன அத்தனைப் பழங்களும் அப்படியே அநாதைபோல் கிடந்தன. அந்தக் காட்சி அவருக்கு வேதனையை அளித்தது. வேதனைகளெல்லாம் ஓர் உருண்டையாக மாறி நெஞ்சுக்குள் அடைத்துக் கொண்டதுபோல் ஓர் உணர்ச்சி. அதை விழுங்கி ஜீரணித்துக் கொள்ள முயன்றார்: முடியவில்லை. 

ஒரு நிமிஷம் அந்த அறைக்குள் மௌனம் நீடித்தது. அந்த ஒரு நிமிஷத்துக்குள் பார்வதிக்கு இதயமே வெடித்து விடும்போல் தோன்றியது. 

வேதனையைச் சகித்துக் கொண்டு மௌனத்தைக் கலைத்துக்கொண்டு அவர்தான் பேசினார். 

“சாப்பிட்டீர்களா?” 

அந்தக் கேள்வியில் எல்லா வேதனைகளும் அடங்கிக் கிடந்தன. 

“உங்கள் கையால் அதை எடுத்துக் கொடுங்கள்” என்று சொல்லத் துடித்தது அவள் இதயம். ஆனால் வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை. துக்கம் நெஞ்சை அடைத்துக் கொள்ள, கையை நீட்டினாள் பார்வதி.

குருத்து பதினெட்டு 

‘மாதுளம்பழம் எனக்குப் பிடிக்கும் என்னும் ரகசியத்தை எப்படியோ அறிந்துகொண்டு இந்தப் பழங்களை எனக்காக ஆசையோடு வாங்கி வைத்திருக்கிறார். நான் இவற்றைச் சாப்பிட்டால் அவர் அன்பை ஏற்றுக்கொண்டதாக ஆகும். அவரை நான் மறந்து வாழ விரும்புகிறேன்; அதைப்போல் அவரும் என்னை மறந்து வாழ வேண்டுமென்று எண்ணுகிறேன். அவர் செலுத்தும் அன்பை நான் அங்கீகரித்தால் அது பெரும் விபரீதத்தில் கொண்டுபோய்விடும். ஆகவே இந்தப் பழங்களை நான் தொட மாட்டேன். தொடவே மாட்டேன்.’ பார்வதியின் வைராக்கியம், திடசித்தம், தீர்மானம் எல்லாம் சேதுபதியைக் கண்டபோது தவிடு பொடியாகத் தகர்ந்து போயின. 

பார்வதி கை நீட்டிக் கேட்டபோது சேதுபதியின் முகம் மலர்ந்தது. சட்டென அவர் அந்தப் பழங்களில் ஒன்றை எடுத்துத் தோலை அகற்றி அதனுள் புதைந்து கிடந்த கெம்புக் கற்கள் போன்ற முத்துகளை எடுத்து அவளிடம் கொடுத்தார். 

‘இத்தனை நாளும் இவர் அன்புக்காக நான் காத்திருந்தேன். இப்போது நானே இவருடைய அன்பை ஏற்றுக் கொள்ள மறுக்கிறேன்.’ 

இவ்வாறு எண்ணிய பார்வதிக்கு துக்கம் நெஞ்சை அடைத்தது. 

மீண்டும் சேதுபதி முத்துகளை எடுத்துக் கொடுத்த போது ‘போதும்’ என்று கையசைத்தாள் பார்வதி. 

“ஏன்? பழத்தில் ருசி இல்லையா?” 

“ருசி இருக்கிறது, பசி இல்லை.’ 

பார்வதியின் பதிலில் வழக்கமாக உள்ள உற்சாகம் இல்லை. 

‘ஏன் இப்படிப் பேசுகிறாள்? ஒருவேளை உடல் நிலை சரியில்லாதது காரணமாயிருக்குமோ?’ சேதுபதி ஒரு கணம் சிந்தித்தார். பிறகு சட்டென ஒரு முடிவுக்கு வந்தவர்போல், “சரி; நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். நான் அப்புறம் வந்து பார்க்கிறேன்” என்று கூறிவிட்டுப் புறப்பட்டார். 

பார்வதி அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவருடைய கம்பீரமான தோற்றமும், பெருந்தன்மை மிக்க பேச்சு, பேச்சிலே கனிந்த அன்பு எல்லாவற்றையும் ஒருமுறை எண்ணிப் பார்த்தாள். 

அவர் மாடிப்படிகளில் நடக்கும்போது, ஒவ்வொரு படியாகக் காலடி எடுத்து வைக்கும் ஓசையைக் கவனமாகக் கேட்கலானாள். 

‘அவரை நேரில் காணும்போது ஆசை, அன்பு, பாசம், பரிவு எதுவுமே இல்லாதவள்போல் வெறுப்பாகப் பேசுகிறேன். அவர் கண்களிலிருந்து மறைந்ததும் அவரைக் காணத் துடிக்கிறது என் உள்ளம். ஐயோ, இதென்ன விசித்திரம்? இந்த வேதனையிலிருந்து எனக்கு விடுதலையே கிடையாதா?’ 

அவள் துக்கமெல்லாம் கண்ணீராகப் பெருகிக்கொண்டிருந்தது. 

கீழே, சேதுபதி யாருடனோ பேசிக்கொண்டிருப்பது கேட்கவே அதை உற்றுக் கவனித்தாள். 

“காமாட்சி! நான் அப்புறம் வருகிறேன். பார்வதியின் உடம்பு குணமாகிறவரை, நீ இங்கேயே இருந்து கவனித்துக் கொள். அவர் மனத்தில் எதையோ வைத்துக்கொண்டு வெளியே சொல்ல முடியாமல் சஞ்சலப்படுவதுபோல் தோன்றுகிறது. அவர் படித்தவர். அத்துடன் சிறந்த அறிவாளி…” 

சேதுபதியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பார்வதியின் நெஞ்சத்துக்குள் புகுந்து மாதுளை முத்துக்களாய் இனித்தன. 

‘என்னிடம் இவர் எத்தனை மதிப்பு வைத்திருக்கிறார்? எவ்வளவு அன்பு கொண்டிருக்கிறார்? என் உள்ளத்தை எவ்வளவு நன்றாகப் புரிந்துகொண்டிருக்கிறார்!’ 

மீண்டும் அவருடைய குரல் கேட்கிறது. 

“பாரதி! நான் வீட்டுக்குப் போகிறேன்.நீயும் வருகிறாயா என்னுடன்..” 

“நான் இங்கேயே இருக்கிறேன், அப்பா! அத்தை இங்கே இருக்கும்போது எனக்கு மட்டும் அங்கே என்ன வேலை? பிரின்ஸிபாலுக்கு உடம்பு குணமாகிறவரை நானும் அத்தையோடுதான் இருக்கப் போகிறேன்” என்றாள் பாரதி. 

“பேஷ்! அதுதான் சரி; உன் இஷ்டப்படியே செய்; ஆனால் உன் பிரின்ஸிபாலுக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது. நீயாகவே படித்துப் பாஸ் செய்யவேண்டும். தெரிந்ததா?” 

கார் புறப்பட்டு வாசல் காம்பவுண்டைத் தாண்டிச் செல்லுகிறது. 

பார்வதி அந்த மாதுளங் கனிகளைக் கவனித்தாள். அந்தச் சிவந்த முத்துக்கள் அவளைப் பார்த்துச் சிரித்தன. ‘பயித்தியமே! உன்மீது இவ்வளவு அன்பும் அக்கறையும் கொண்டிருக்கும் சேதுபதியையா அலட்சியம் செய்கிறாய்?’ என்பதுபோல் தோன்றுகிறது. 

ஹார்லிக்ஸுடன் வந்து நின்ற காமாட்சியைக் கண்டதும் “இப்படி உட்காருங்கள்” என்று கை காட்டினான் பார்வதி. 

“கொஞ்சம் ஹார்லிக்ஸ் சாப்பிடுகிறீர்களா? உங்களுக்கு உடம்பு குணமாகும்வரை என்னை இங்கேயே இருந்து கவனித்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறான், என் அண்ணா…” என்றாள் காமாட்சி. 

“ஓ! அப்படியானால் அவரை யார் கவனித்துக் கொள்வார்கள்?”- பார்வதி கேட்டாள். 

“வீட்டிலே சமையல்காரன் இருக்கிறான். பார்த்துக் கொள்கிறான். நான் அங்கே இருந்தாலும் என்னை ஒரு வேலையும் செய்ய விடமாட்டான். ‘நீ பேசாமல் உட்கார்ந்து கொண்டிரு. வேலைக்காரர்கள் கவனித்துக் கொள்வார்கள்’ என்பான். பிறர் துன்பப்படுவதை அவன் சகிக்கவே மாட்டான், இளகிய மனசு அவனுக்கு. இதுவரை என்னை அவன் யார் வீட்டிலும் தங்க அனுமதித்ததில்லை. அப்படிப்பட்டவன் என்னை இங்கே அனுப்பி உங்களைக் கவனித்துக் கொள்ளச் சொல்லி யிருக்கிறான் என்றால் அது தங்கள்மீது அவனுக்குள்ள அக்கறையையே காட்டுகிறது” என்றாள் காமாட்சி. 

சேதுபதியைப்பற்றி மேலும் அறிந்துகொள்ள விரும்பினாள் பார்வதி. ஆயினும் அந்த விருப்பத்தை அவள் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாமல் மறைமுகமாகச் சில கேள்விகள் கேட்டாள். 

“உங்க அண்ணா ரெம்பப் பிடிவாதக்காரரோ?” பார்வதி குழந்தை போல் கபடமின்றிச் சிரித்தபடியே கேட்டாள். 

“அதை ஏன் கேட்கிறீர்கள்? சின்ன வயசிலிருந்தே பிடிவாதக் குணம் அதிகம். அவன் அப்பா ஒரு நாள் ஏதோ கோபமாகச் சொல்லி விட்டார் என்பதற்காக வீட்டை விட்டே வெளியேறி விட்டான். அப்புறம் எப்படியோ கஷ்டப்பட்டுப் படித்துத் தானே விழுந்து எழுந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னுக்கு வந்தான். இப்போது லட்சக் கணக்கில் பணத்தைக் குவிக்கிறான். ம்..என்ன குவித்து என்ன பிரயோஜனம்!” பெருமூச்சுவிட்டாள் காமாட்சி. 

“ஏன்! இப்போது அவருக்கு என்ன குறைவு?” 

“ஒரு குறைவுமில்லை. சரஸ்வதியோடு வாழக் கொடுத்து வைக்காத குறைதான்… பாரதியைப் பெற்றெடுத்த சில வருடங்களுக்குள்ளாகவே அவள் இறந்து விட்டாள். பாவம் சரஸ்வதியின்மீது அவன் உயிரையே வைத்திருந்தான். அவள் மறைந்த பிறகு, ஆறு மாதம் சரியாகக் கூடச் சாப்பிட வில்லை. எந்நேரமும் பித்துப்பிடித்த மாதிரி கலங்கி நிற்பான். அப்போதுதான் அந்த வீட்டின் முழுப் பொறுப்பையும் நான் வந்து ஏற்றுக்கொண்டேன். அண்ணாவின் நிலை எனக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது. ஒருநாள் அவன் தனியாக உட்கார்ந்திருந்த சமயம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்துப் பார்த்தேன். 

‘நீ ஏன் அண்ணா இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது?’ என்று கேட்டேன். அதற்கு அவன் என்ன பதில் சொன்னான் தெரியுமா? ‘இன்னொரு கல்யாணமா? சரஸ்வதியின் ஸ்தானத்தில் வேறொருத்திக்கு இடமா’ என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டே எழுந்து போய்விட்டான்…ம்… இதெல்லாம் பழைய கதை…ஹார்லிக்ஸ் ஆறிப் போகிறது. சாப்பிடுங்கள்” என்றாள் காமாட்சி.

ஹார்லிக்ஸை அருத்தியபடியே பார்வதி யோசித்தாள்.

“அவ்வளவு வைராக்கியத்துடன் வாழ்ந்து வரும் சேதுபதியைப்பற்றியா நான் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறேன்? என் அந்தரங்கத்தில் நான் அவர் மீது அவர்மீது கொண்டுள்ள அன்பே என் கண்களை மறைத்து அவரும் என்னை நேசிப்பதாக எண்ணத் தூண்டுகிறதோ? எல்லோரையும்போல் அவரும் என்னிடம் சாதாரணமாகவே பழகியிருக்கலாம். நானாகவே அவருடைய செய்கைக்கும் பேச்சுக்கும் தவறான நோக்கங்களைக் கற்பித்துக் கொண்டு வீண் பிரமை கொள்கிறேனா? அவர் சாதாரணமாகத்தான் பழகுகிறார் என்று எண்ணியபோது அவளுக்குப் பெரும் ஆறுதலாயிருந்தது. அடுத்தகணமே, அவர் தன்மீது அன்பு செலுத்தவில்லை என்கிற எண்ணம் அவளைச் சஞ்சலத்தில் ஆழ்த்தியது. காரணம் அவள் உள்ளம் இயற்கையாகவே அவர் அன்புக்கு ஏங்கியிருக்கிறது. இப்போது அவர் அன்பு செலுத்தவில்லை என்று தெரிந்ததும் அவள் போலியாகச் சந்தோஷப்பட்ட போதிலும் இயற்கையில் அவள் மனம் சொல்லொணாத வேதனையையே அனுபவித்தது. 

அந்த வேதனையையும் ஹார்லிக்ஸுடன் சேர்த்து விழுங்கிய பார்வதி, “…ம்…அப்புறம்?” என்று கேட்டாள்.

“அப்புறம் என்ன, அதற்குப் பிறகு நான் அவன் திருமணத்தைப் பற்றியே பேச்செடுப்பதில்லை. இப்போது கொஞ்ச நாட்களுக்கு முன் ஒரு நாள் என்னிடம் அவனாகவே பேச்செடுத்தான். ‘நான் மறுமணம் செய்து கொண்டால் உலகம் என்ன நினைக்கும் காமாட்சி!’ என்று கேட்டான்”. 

“நீங்க என்ன பதில் சொன்னீங்க?” 

“என்ன சொல்வேன்? உலகம் சிரிக்கும். இத்தனை வயசு கழித்துக் கல்யாணமாம்!” என்றேன். 

“அதற்கு அவர் என்ன சொன்னார்?”

“‘அசடே! சுத்தப் பயித்தியமாயிருக்கிறாயே! நான் விளையாட்டாகக் கேட்டதை நிஜமாகவே நம்பிவிட்டாயா?’ என்று கூறி மழுப்பிவிட்டுப் போய்விட்டான்”. 

“அப்புறம்!…” 

“அப்புறம் என்னிடம் கலியாணப் பேச்சே எடுப்பதில்லை. எப்போதாவது பேசினாலும் பொதுவாகப் பேசி விட்டுப் போய் விடுவான். யாரைப்பற்றியும் அதிகம் பேசமாட்டான். ஆனால் உங்க கல்லூரியைப்பற்றியும் உங்களைப்பற்றியும் பேச ஆரம்பித்து விட்டால் மணிக் கணக்கில் பேசிக்கொண்டிருப்பான்.” 

இதைக் கேட்டபோது பார்வதியின் இதயம் மகிழ்ச்சியில் திளைத்தது. 

“அப்படியா!…அவர் வாயால் புகழக் கூடிய அளவுக்கு நான் என்ன செய்துவிட்டேன்?” சேதுபதி தன்மீது அனவற்ற அன்பு கொண்டிருக்கிறார் என்பதை அறிந்த பிறகு பார்வதியின் உள்ளத்தில் நிம்மதி பிறந்தது. அந்த நிம்மதியுடன் மன அமைதியுடன் அன்றிரவு தூங்கி எழுந்தாள் பார்வதி. 

மறுநாள் காலை. பார்வதி கட்டிலில் படுத்தபடியே சிந்தித்துக் கொண்டிருந்தாள். வீட்டில் உள்ள ஜன்னல்களையும் கதவுகளையும் என்ன தான் மூடி வைத்தாலும் காற்று உள்ளே வராமல் இருக்கிறதா? மனத்தை எவ்வளவு உறுதிப் படுத்திக் கொண்டாலும் பலவீனமான சிந்தனைகள் வந்து கொண்டுதானிருக்கின்றன. 

அவரை மறந்துவிட அவள் எவ்வளவோ முயன்றுதான் பார்த்தாள். ஆனால் முடியவில்லை. பூவின் நிறத்தையும் அழகையும் எளிதில் மறந்துவிடலாம். ஆனால் அதனுடைய மணத்தை மறக்க முடிவதில்லையே! 

“அம்மா, கல்லூரியிலிருந்து ஏழெட்டுப் பேர் வந்திருக்கிறார்கள் தங்களைப் பார்க்க வேண்டுமாம்… கீழே வராந்தாவில் காத்திருக்கிறார்கள்” என்று சொல்லிக் கொண்டே வந்தாள் ஞானம்.

“மாணவிகள் மட்டுமா, புரொபஸர்களும் கூடவா?” என்று கேட்டாள் பார்வதி. 

“அதெல்லாம் எனக்குத் தெரியவில்லை” என்றாள் ஞானம். 

பார்வதியின் நெற்றியில் சுருக்கம் கண்டது. 

“சரி; நீ போய் அவர்களை மேலே வரச் சொல்..” 

சற்று நேரத்துக்கெல்லாம் அவர்கள் மேலே வந்தார்கள். “இரண்டு நாட்களாக வேலை சரியாயிருந்தது. அதனால் தங்களை வந்து காண முடியவில்லை. மன்னிக்கவேண்டும்” என்றனர். 

“இப்போது மணி என்ன தெரியுமா?” பார்வதி கேட்டாள். 

“பதினொன்று…” 

“இப்போது கல்லூரி நடக்கும் நேரத்தில், வகுப்புக்குப் போகாமல் இங்கே வந்திருக்கக் கூடாது..” 

“தங்களை இரண்டு நாட்களாகக் காணாமல் இருந்ததே தவறு.”

“கல்லூரி நேரத்தில் வகுப்பை விட்டு வந்தது அதை விடப் பெரிய தவறு. உங்களுடைய முதல் கடமை படிப்பு தான். படிப்பையும் பரீட்சையையும் விட்டுவிட்டு இங்கே வந்திருக்கக் கூடாது. இந்தச் சின்ன விஷயம் மாணவிகளாகிய உங்களுக்குத்தான் தெரியவில்லை யென்றால், ஆசிரியைகளாவது உங்களுக்குச் சொல்லியிருக்க வேண்டும். சரி; நேரத்தை வீணாக்காமல் புறப்படுங்கள் ” கொஞ்சம் கடுமையாகவே பேசி முடித்தாள் பார்வதி பிரின்ஸிபாலின் கண்டிப்பு அவர்களுக்குத் தெரிந்ததே! ஆகவே, “போய் வருகிறோம்” என்று தாழ்ந்த குரலில் விடைபெற்றுக் கொண்டு உடனே புறப்பட்டு விட்டார்கள் அவர்கள். 

அவர்கள் சென்றதும், ‘பாவம், கண்டிப்பாகப் பேசி அனுப்பி விட்டேன். கொஞ்சங் கூடப் பண்பில்லாதவள் நான்’. வருத்தத்துடன் தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள் பார்வதி. 

ஆயிற்று; பார்வதி படுக்கையாகப் படுத்து விளையாட்டாகப் பதினைந்து நாட்கள் ஓடிவிட்டன. காமாட்சியும் ஞானமும், பார்வதியின் உடம்பைத் தேற்றுவதற்கு இரவு பகலாகக் கண் விழித்துப் பாடுபட்டும் அவள் உடம்பு தேறாமல் நாளுக்கு நாள் கேவலமாகிக் கொண்டேயிருந்தது. உள்ளத்தில் வேதனைகள் புகுந்து அரித்துக் கொண்டிருக்கும் போது உடலை எவ்வளவு போஷித்தும் என்ன? 

சேதுபதியின் அன்பைப் பார்வதி என்று மறந்துவிடத் துணிந்தாளோ அன்று முதல் அவளுக்கு நிம்மதியே இல்லை. அவருடைய அன்பை அவளால் மறக்கவோ மறுக்கவோ முடியாமல் உள்ளத்தில் வலி கண்டு, அந்த வலியே அவள் உடலை இளைக்கச் செய்து கொண்டிருந்தது. 

பார்வதி கண்களை மூடிப் படுத்திருந்தாள். பழ ரசத்துடன் மெதுவாகக் கட்டிலின் அருகே வந்து நின்றாள் பாரதி. கண் விழித்த பார்வதி, “பாவம்! என்னால் உங்களுக் கெல்லாம் சிரமம்… பரீட்சையெல்லாம் சரியாக எழுதியிருக்கிறாயா, பாரதி! ராஜாவை எங்கே காணோம்? அவன் எப்படி எழுதியிருக்கிறானாம்?” என்று கேட்டாள். 

“இரண்டு பேருக்குமே நேற்றோடு பரீட்சை முடிந்து விட்டது. நன்றாகவே எழுதியிருக்கிறோம்…” என்றாள் பாரதி.

“ரொம்ப சந்தோஷம். ராஜாவை இங்கே வரச் சொல்லு…” 

“கூப்பிட்டீங்களா அத்தை!” என்று கேட்டுக் கொண்டே வந்து நின்றான் ராஜா. 

“பரீட்சையில் எப்படி எழுதியிருக்கிறாய் என்று கேட்கத் தான் கூப்பிட்டேன்…லீவு விட்டு விட்டார்கள் அல்லவா? இனிமேல் உன்பாடு குஷிதான். ஒரு படம்கூடத் தவற மாட் டாய்!” என்றாள் பார்வதி. 

“இல்லை அத்தை!” என்று தலை கவிழ்ந்தபடியே கீழே இறங்கிச் சென்று விட்டான் ராஜா. அப்போது எதிரில் வந்த பாரதியைப் பார்த்து, “அத்தை நல்ல ‘மூட்’லே இருக்கிறாள். சினிமாவுக்குப் போக ‘பர்மிஷன்’ வாங்கிவிடு. இது தான் நல்ல சமயம். இன்று மாலை மூன்று மணிக்கு நான் காலேஜிலிருந்து வந்து விடுவேன். எங்க காலேஜுக்கு எதிரில் காந்தி மண்டபம் இருக்கிறது. மூணு மணிக்கு நீ அங்கே வந்துவிடு. அதற்குப் பக்கத்தில் பெரிய காடு இருக்கிறது. அந்தக் காட்டில் நிறைய மான்கள் இருக்கின்றன. அந்த இடத்தைச் சற்று நேரம் சுற்றிப் பார்த்துவிட்டு ஆறரை மணி ஷோவுக்குப் போகலாம்.” என்றான். 

“சினிமாவுக்குப் போவதாகச் சொன்னால் பிரின்ஸிபால் என்னை வெளியே அனுப்பவே மாட்டாங்களே!” 

“சிநேகிதிகளொடு போவதாகச் சொல்லு. சரிம்பாங்க. பயித்தியமாயிருக்கிறாயே! இதெல்லாம் கூடவா நான் சொல்லிக் கொடுக்கணும்…?” 

மணி மூன்றடித்ததோ இல்லையோ, கல்லூரியை விட்டுப் புறப்பட்டு விட்டான் ராஜா. காரை எடுத்துக்கொண்டு நேராகக் காந்தி மண்டபம் போய்ச் சேர்ந்தான். ஆனால் அங்கே பாரதியைக் காணவில்லை. ஒருவரையுமே காண வில்லை. நல்ல வெயில் நேரமானதால் நாலைந்து காகங்கள் கரைந்து கொண்டிருந்தன. ஐந்து நிமிஷம், பத்து நிமிஷம், பதினைந்து நிமிஷமும் கடந்தன. வருகிற போகிற வண்டிகளை யெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான் ராஜா. பாரதி வந்தபாடில்லை. கடைசியில் சற்றுத் தூரத்தில் ஒரு டாக்ஸி வருவது தெரிந்தது. பாரதி அதில் உட்கார்ந்திருப்பதைக் கண்டதும் ராஜாவின் முகம் மலர்ந்தது. 

“ரொம்ப நேரமாகக் காத்துக் கொண்டிருக்கிறீர்களா?” என்று சிரித்தபடியே டாக்ஸியை விட்டுக் கீழே இறங்கி வந்தாள் பாரதி. 

அவளுக்காகத் தான் காத்துக் கொண்டிருந்ததாகச் சொல்வது மதிப்புக் குறைவு என்று எண்ணிய ராஜா, “இல்லையே; நான் இப்போதுதான் வந்தேன்” என்றான், 

“சரி; மான்கள் எங்கே”? என்று கேட்டாள் பாரதி.

“இப்பதானே சகுந்தலை வந்திருக்கீங்க?இனிமேல்தான் மான்களும் வரும்.”

“துஷ்யந்த மகாராஜாவே! எனக்கு உடனே மான்களைக் காட்டப் போகிறீர்களா, இல்லையா?” சிரித்துக்கொண்டே கேட்டாள் பாரதி. 

“ஆமாம்; வீட்டை விட்டுப் புறப்படும்போது பிரின்ஸிபாலிடம் சொல்லிக் கொள்ளாமல்தானே வந்தாய்?” 

“அதை உங்களுக்கு யார் சொன்னது?” 

“உன் தலை!” 

“என் தலையா?” என்று தன் தலையைத் தொட்டுப் பார்த்தாள் பாரதி. “ஓகோ! இந்த மாதிரிக் கொண்டை போட்டுக்கொண்டு பிரின்ஸிபால் எதிரில் போயிருக்க மாட்டேன்னுதானே கேட்டீங்க? பிரின்ஸிபால்கிட்டே சொல்லிட்டுத்தான் வந்தேன்.” 

“அப்ப. பிரின்ஸிபாலிடம் சொன்னபிறகு கொண்டை போட்டுக் கொண்டிருப்பாய்!” 

“சரி, காட்டுக்குப் போகலாம் வாங்க..” 

ராஜா அவளைக் கிண்டி எஸ்டேட் வனத்துக்குள் அழைத்துச் சென்றான். 

“ரொம்ப அழகாயிருக்கே பாரதி. இந்த இடம்” என்றாள். 

“நீ கூட இன்று ரொம்ப அழகாயிருக்கே. உன்னை இந்த இடத்தில் இப்போது ஒரு படம் எடுக்கப் போகிறேன். இந்தக் காடு ஓர் ஆசிரமம் மாதிரி இருக்கிறதா? பக்கத்திலே மான்கள் வேறு சஞ்சரிக்கிறதா? நீயும் ரிஷி குமாரி மாதிரி வந்திருக்கிறாயா? இந்தச் சூழ்நிலையிலே உன்னைப் படம் எடுத்தால் அசல் சகுந்தலை மாதிரியே இருக்கும்!” 

“ஏன் ஒரு சினிமாவே எடுத்துடுங்களேன்…!”

“ஐயோ, வேண்டாம்; புராணிக் பிச்சராயிடும். எடுத்தால் ஸோஷல் எடுக்கணும்.” 

“சரி சரி, போட்டோ எடுங்க,” 

ராஜா காமிராவை எடுத்துச் சரி செய்து கொண்டான். “எங்கே! இப்படிக் கொஞ்சம் என்னைப் பாரு! லிட்டில் ஸ்மைல்!… வெரி குட்!ஒன், டூ, த்ரீ!… தாங்க்ஸ்”… என்றான் ராஜா, 

“ஒரு மானைப் பிடித்து வந்தால் அதோடு சேர்ந்து ஒரு படம் எடுத்துக் கொள்ளலாம்…” என்றாள் பாரதி. 

“நான் ராமன் இல்லை. மானைத் துரத்திக்கொண்டு போவதற்கு – துஷ்யந்தன்!” என்று கூறிச் சிரித்தான் ராஜா. 

“இல்லை” என்றாள் பாரதி. 

“வேறு யாராம்?” என்று கேட்டான் ராஜா.

“துஷ்யந்த மகாராஜா!” என்று திருத்தினாள் பாரதி!

“நேரமாகிறது, புறப்படலாமா?” ராஜா கேட்டான்.

“எங்கே?” 

“லைப்ரரிக்கு”

“அப்புறம்?”

“ஓட்டலுக்கு”

“அப்புறம்?”

“சினிமாவுக்கு!” 

இருவரும் காரை நோக்கி நடந்தனர். திடீரென்று பாரதி “ஐயோ!” என்று கூறிக்கொண்டே கீழே குனிந்தாள். 

“என்ன பாரதி!” பதறிப் போனான் ராஜா. 

“காலில் முள் தைத்துவிட்டது”.

ராஜா மெதுவாக அவள் வலது காலைத் தூக்கி அருகிலிருந்த ஒரு பெரிய கல்மீது வைத்தான். பிறகு அவள் காலிலிருந்த முள்ளை அப்புறப்படுத்தினான். முள்ளை எடுத்த இடத்திலிருந்து ரத்தம் பெருகியது. உடனே அவன் தன் கைக்குட்டையால் அவள் காலில் ஒரு கட்டுப் போட்டு அவள் கையைப் பிடித்துக் காருக்கு அழைத்துச் சென்றான். போகும் போது “அன்று ஹாஸ்டலில் ஆணி அடிக்கும்போது பாணிக் கிரகணம் ஆயிற்று. இன்று வலது காலைத் தூக்கி அம்மிக் கல்லில் வைத்தாயிற்று” என்று சிரித்தான் ராஜா. அதைக் கேட்டுப் பாரதியும் சிரித்துவிட்டாள்!

– தொடரும்…

– விசிறி வாழை, 12வது பதிப்பு: 1997, சாவி பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *