மலரே என்னிடம் மயங்காதே…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 18, 2024
பார்வையிட்டோர்: 1,790 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

எத்தனை முறை உன்னிடம் சொல்வது மைதிலி. காதல் இறந்து யாசித்து பெறுவதில்லை. உண்மையான காதல் அடிமனதிலிருந்து உயிர் பெற்று எழும் நீருற்று. நீ என்னை விரட்டி விரட்டி காதலிப்பதால் நான் உன்னை காதலிக்க வேண்டுமென்றோ உன்னைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றோ என்று எந்த வகையிலும் என்னை நீ வற்புறுத்த முடியாது. சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்ப எத்தனித்த ரவியை வழி மறித்த மைதிலி ‘ஓகே. நீங்கள் ஏற்கனவே காதலித்த பெண் இறந்து விட்டாள். இனி என்ன செய்யப் போகிறீர்கள்? யாரோடு வாழ போகிறீர்கள்!’ என்று கேட்டாள்.

நான் இன்னும் மோகனாவுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நினைவுகள் மிகவும் இனிமையானவை பெண்ணே! அவள் என்னை விட்டு போய் விட்டாலும் அவள் நினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். கவலைப்படாமல் போய்வா!

நீங்கள் நினைப்பது சரிதான். இது வாழ்க்கை ரவி. இன்றும் உங்களோடு இளமையும் வாழ்நாளும் இருக்கிறது. இப்போது நீங்கள் உடலளவில் கவலைப்படாமல் மனதளவில் என்ன வேண்டுமானாலும் இறுமாப்போடு சொல்லிவிட்டுப் போகலாம். இனிவரும் நாளைகளுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டியதிருக்கும்.

மைதிலி என்னைப்பற்றி எனக்கு உன்னைவிட நன்றாகத் தெரியும் என்றே நினைக்கிறேன். என் மோகனாவோடு நான் கழித்த ஒவ்வொரு நிமிடத்தையும் நான் அசைபோட விரும்பினால் என்னால் ஆயிரம் வருசங்கள் வாழ்ந்து விட்டுப் போக முடியும்.

இப்படிச் சொன்ன பல காவிய நாயகர்கள் எல்லாம் கூட எங்கேயோ அலைக்கழிக்கப்பட்டு எப்படி எல்லாமோ திருமணம் செய்து கொண்டு வாழ்ந்திருக்கின்றனர். பார்க்கலாம் ரவி, நான் வருகிறேன்.

வராதே நீ வீணாக என்னை விரட்டியடித்ததில் எனக்கு உன் மேல் இரக்கம் வராமல் எரிச்சல் தான் வருகிறது.

அட்லீஸ்ட் என்னைப் பார்த்தால் எரிச்சலாவது வருகிறதே… அது கூட எனக்குச் சந்தோஷம் தான்.

அம்மா வந்தால் தப்பாக நினைக்கப்போகிறார்கள்.

தப்பாக நினைக்கட்டுமே. பின்னே எப்படி உங்க அம்மாவிற்கு நம் காதலை தெரியப்படுத்துவது.

‘ஏய் என்ன சொன்னாய்… நம் காதலா… விளையாடுகிறாயா’ என்று சொல்வதற்குள் உள்ளே வந்த ரவியின் அம்மா சொர்ணம் ‘என்னம்மா மைதிலி எப்போது வந்தாய்’ என்று கேட்டாள்.

இப்போதுதான் வந்தேன். எங்கே மார்க்கெட்டுக்கா போயிருந்திங்கள். ஆமாம்மா உட்கார். காபி கொண்டு வருகிறேன். என்னடா நீ எங்கே கிளம்பி விட்டாய்? என்று ரவியைப் பார்த்துக் கேட்டாள்.

இவள் தொந்தரவு பொறுக்க முடியாமல் வெளியே ஓடினேன் என மெதுவாக மைதிலிக்கு மட்டும் கேட்கும்படி சொல்ல ‘என்ன முணங்குகிறாய்?’ என்றாள் சொர்ணம்.

ஒன்றுமில்லையம்மா சும்மா ஒரு நண்பனைப் பார்த்து விட்டு வரலாமுண்ணு கிளம்பினேன்.

சரிசரி என்றவாறு சமையற்கட்டிற்குள் கிளம்பினாள் சொர்ணம்.

ஆமாம் நீங்கள் மோகனாவை காதலித்தது. அவள் இறந்தது எல்லாம் உங்கள் அம்மாவிற்கு தெரியுமா?

தெரியாது என்பது போல் ரவி தலையை அசைத்தான்.

என்னை நீங்கள் தவிர்ப்பது இருக்கட்டும், உங்கள் அம்மாவிடம் என்ன சொல்லப்போகிறீர்கள?

அது என் சொந்த விஷயம்?

ஆனால் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொள்ள நான் விரும்புகிறேன்.

வீணாக பகல் கனவு காண்கிறாய்?

நான் ஒன்றும் ஆகாயத்து நிலவைப் பிடித்து தரச் சொல்லவில்லையே.

அதைக் கூட நீ பிடித்துவிடலாம். ஆனால் என் இதயத்தில் மோகனாவைத் தவிர வேறு யாருக்கும் இடம் கிடையாது.

‘பார்க்கலாம்’

நீ இனி எங்கள் வீட்டிற்கு வராமல் இருப்பது, என்னைப் பார்க்காமலிருப்பது தான் நல்லது மைதிலி.

திரும்பத்திரும்ப என்னை வந்து பார் என்று தான் என்னை அழைத்தது போல இருக்கிறது ரவி.

இப்படியே நீ என்னைத் தொந்தரவு செய்வதாக இருந்தால் நான் இந்த ஊரையே காலி செய்ய வேண்டியிருக்கும்.

ரவி நீங்கள் மோகனா மேல் கொண்ட காதலில்…. அதுவும் இறந்து போன ஒரு பெண் மேல் இவ்வளவு ஆழமான அன்போடு இணைந்திருக்கும் போது, நான் விரும்பும் ராஜாகுமாரன் நீங்கள் எனக்கு கிடைக்காமல் போய் விடுவீர்களா பார்க்கலாம் என கறுவிக் கொண்டே கிளம்பினாள் மைதிலி.

– தமிழ் போஸ்ட், 18 செப்டம்பர் 2004

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *