விடாமல் விலகும் பெண்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 11, 2024
பார்வையிட்டோர்: 327 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

முந்தைய நாள் வரை நன்றாக பேசிவிட்டு, மறுநாள் உன்னைப்போல ஒருவனைப் பார்த்தது இல்லை என்ற வகையில் முகம் கூட கொடுக்காமல் நட்பில் இருந்து, வெளியேறும் காரணங்களைக் கூட விளக்காமல் வெளி நடப்பு செய்யும்பெண்கள் என் வாழ்க்கையில் ஏராளம் இதில் முன்னாள் காதலிகளும் அடக்கம்… வருத்தம் இல்லை எனினும் அடிக்கடி இப்படி நடப்பதனால் இதில் எங்கேயோ ஓர் ஒற்றுமை மட்டும் ஒளிந்து கொண்டு இருக்கின்றது என்பது புரிகிறது. ஒவ்வொருவரின் விலகலையும் தனித்தனி சிறுகதைகளாகவே எழுதலாம்.

இன்று காலையில் இருந்து எனது ஆராய்ச்சிக்கூட அல்பேனியத் தோழி என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டாள் போலும், புன்னகைக்குப் பதில் இல்லை, காப்பிக் குடிக்க அழைத்த பொழுது நேரமில்லை என்று முகம் கொடுக்கவில்லை. இவளுக்கு என்ன செய்தேன் என கடைசி ஒரு மணி நேரமாக யோசித்துக் கொண்டிருக்கின்றேன், ஒன்றும் புலப்படவில்லை.

நேற்று கூட எங்களது கூடத்தில் நடைபெற்ற ஒரு விருந்தில் நன்றாகத்தானே பேசிக்கொண்டிருந்தாள், ஆடு, மாடு, கோழி, பன்றி, மீன் என வரிசையாக அடுக்கி வைத்திருந்ததை ஒரு கட்டுக் கட்டிக்கொண்டிருந்த பொழுதும் என்ன சாப்பிடுகிறாய் என அக்கறையாய் கூட கேட்டுவிட்டு போனாளே !!! அதன் பின்னர் சரக்கு அடித்த பின்னரும் சரியாகத் தானே பேசினேன்.இது போன்ற குழு விருந்துகளில் சரக்கு அதிகமாக அதிகமாக, மிகுந்த உள்ளுணர்வோடு குறிப்பாக பெண்களிடம் இரண்டடிகள் தள்ளி நின்றுதான் உரையாடுவேன் அல்லது பேசுவதைத் தவிர்த்து விடுவேன். நடனக் கேளிக்கை விடுதிகளில் இது பொருந்தாது. யாரையும் கையைப் பிடித்து இழுக்க வேண்டும் எனத் திட்டமிட்டு, இரண்டு மடக்கு அதிகம் குடித்து விட்டு ஆட்டம்போடலாம்.

கண்ணே !!! மணியே கோபமா என்று போய் கெஞ்சும் காலம் எல்லாம் போய் விட்டது. திரிஷா இல்லாவிடின் திவ்யா என வேகமெடுத்துப் போய்க் கொண்டிருக்கும் காலத்தில், அல்பேனியப் பெண்ணிடம் காரணங்களைக் கேட்க விரும்பவில்லை.

கடைசியாக நான் கெஞ்சியது ஜெனியிடம் மட்டுமே !!! அவள் வரும் வழியெல்லாம் நின்று, கண்ணில் பட்டு எந்தத் தவறு செய்து இருந்தாலும் மன்னித்துவிடு எனத் தொடர்ந்து ஒரு மாதம் மன்னிப்புக் கேட்பதை நிறுத்தியது, அவளை வேறு ஒருவனுடன் பார்த்தபின்னர்தான். அடுத்த வருடம் அவள் அவனையே மணந்து கொண்டாள் என்பது ஒரு துணைக்கதை.

நிர்வாணத்தைவிட விலகும் உடைகளுடன் கூடிய உடலே அழகு என்று எதோ பேச்சுவாக்கில் சொல்லப்போக நன்றாகப் பேசிக்கொண்டிருந்த தோழிகள் கல்லூரிக் காலங்களில் காணாமல் போனார்கள்.

என்ன செய்து கொண்டிருக்கிறாய் என மின்னரட்டையில் கேட்டத் தோழிக்கு ஷகீலா படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என உண்மையைச் சொல்லப்போக கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு என் வாழ்க்கையில் இருந்து காணாமல் போனாள். இடையில் இட ஒதுக்கீட்டை ஆதரித்துப் பேசப்போய் சில ஸ்ரீரங்கத்துத் தேவதைகளும் காணாமல் போனார்கள். வேறு ஒரு தோழியுடன் நெருக்கம் காட்டியதால் விலகியவர்களும் உண்டு. சிலப் பெண்கள் இருக்கின்றனர், நம்மை விட்டு விலகிய பின்னர், நம்மை வெறுப்பேற்ற வேண்டுமென்ற நமக்கு பிடிக்காத ஒருவனிடம் நெருக்கம் காட்டுவார்கள். வேறு சிலப் பெண்களின் நிலை மேலும் பரிதாபம், அவர்களின் ஆண் தோழனுக்கோ, கணவனுக்கோ, காதலனுக்கோ நம்மைப் பிடிக்காவிடில் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் விலகுவார்கள். எந்த வகைப்பாட்டில் விலகினாலும் காரணங்களைச் சொல்ல மாட்டார்கள். பெண்களின் மனப்போக்கேத் தனி, வருத்தப்படுவதைக் காட்டிலும் கொஞ்சம் தூரம் தள்ளி ரசிக்க ஆரம்பித்து விட்டால், பிரிவுகள் பெரும் பிரச்சினை அல்ல.

கல்யாணம், முதல் குழந்தை என கொஞ்சம் அசதிப்படும் கடை இருபதுகளிலும் ஆரம்ப் முப்பதுகளிலும் இருக்கும் பெண்களுக்கு பழைய நண்பர்கள் விட்ட குறை தொட்ட குறையாய் நினைவுக்கு வரும். பெண்களும் கூகுளில் நம்மைத் தேடிக் கண்டுப்பிடிப்பார்கள் என்பது சமீப பேஸ்புக் காலங்களில் நன்குப் புலப்படுகிறது. ஓரிரவில் மறைந்த ஐந்து வருடங்களுக்கு முந்தையத் தோழிகள் ஒருவர் பின் ஒருவராக நட்பு வட்டாரத்தில் இணைகின்றனர். இன்று ஷகீலாவிற்குப் பதிலாக சன்னி லியோன் படம் பார்த்துக் கொண்டிருக்கின்றேன் என்று சொன்னாலும் பதிலை ரசிக்கிறார்கள். திரும்பி வந்தவர்களில் பெரும்பாலோனோர் சொன்னது, “நீ மட்டும் அப்படி பேசி இருக்காவிடில் உன்னைக் காதலிக்கத் தொடங்கி இருப்பேன் என்பதுதான்”

நல்லவேளை அவர்கள் சொல்லவில்லை, ஏதேனும் ஓர் இடத்தில் அணை போடப்பட்டிருப்பின் இத்தனை அனுபவங்கள் எனக்கு கிடைத்தே இருக்காது.

பெண்கள் தங்களாகவே ஒரு பிம்பத்தை தங்களுக்குப் பிடித்த ஆண்களின் மேல் உருவாக்கி வைத்துக் கொள்வார்கள். கொஞ்சம் கொஞ்சமாய் நொறுங்கும்பொழுது பீலிபெய் சாகாடாக ஒட்டு மொத்தமாக ஒதுங்கிவிடுவார்கள். ஆரம்பக் காலங்களில் எனக்கென ஒரு பிம்பத்தைஉருவாக்க நினைத்தது உண்டு, பைசாவிற்குப் பிரயோசனமில்லாத பிம்பத்தை வைத்துக் கொண்டு ஒரு கோப்பைத் தேநீர் கூட வாங்க முடியாது புரிந்த மத்திய இருபதுகளில் பிம்பங்களைத் தூக்கி கடாசிவிட்டேன்.

பெண்களும் தலைவலியும் இரட்டைப்பிறவிகள் போல, கொஞ்சம் நெற்றிப்பொட்டில் வலிக்க, காப்பிக் குடித்தால் தேவலாம் போல இருந்ததால், மாடிக்கு சென்றேன். அல்பேனியத் தோழி ஷாகித்துடன் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த பொழுதுதான் சட்டென உறைத்தது… நேற்று அல்பேனியத் தோழி என்னிடம் வந்து பேசிக்கொண்டிருந்த பொழுது, நான் ரசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தது பன்றிக்கறி, அவள் ஓர் அல்பேனிய முஸ்லீம்… அடடா !!! மற்றும் ஒருமுறை பிம்பத்தை உடைத்துவிட்டேனோ !!!

காப்பி கோப்பையை எடுத்துக் கொண்டு இருக்கைக்கு வந்த பொழுது, அவ்வளவு நெருக்கமில்லாத கல்லூரித் தோழி ஏஞ்சலா

“நீ பொதுவுடமைத் தத்துவங்களில் ஆர்வம் உடையவன் என்பதை உனது பேஸ்புக்கில் இருந்து தெரிந்து கொண்டேன். எனக்கும் இடது சாரித்தத்துவங்கள் மேல் ஆழ்ந்த ஈடுபாடு, ஏற்கனவே உன்மேல் இருக்கும் மதிப்பு இதன் மூலம் மேலும் உயர்ந்து விட்டது, முடிந்தால் இந்த வார இறுதியில் சந்திப்போம்” என மின்னஞ்சல் அனுப்பி இருந்தாள்.

இந்தப் பிம்பம் எப்பொழுது உடையப்போகிறதோ எனக் கவலைப்படாமல், உங்களுக்கு நான் சொன்ன இந்தக் கதையின் முதல் பத்தியை முகநூலின் நிலைத் தகவலாக வைத்தேன், வைத்த ஒரு மணி நேரத்தில் சில பெண் தோழிகளை நட்பு வட்டாரத்தில் இருந்து காணவில்லை.

– வினையூக்கி சிறுகதைகள், முதற் பதிப்பு: 2014, மின்னூல் வெளியீடு: http://FreeTamilEbooks.com, வினையூக்கி செல்வகுமார், சுவீடன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *