(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பணத்திலே, மனிதனுக்கு ஆசை வேண்டியது தான். ஆனால், சிலருக்கு அளவு கடந்த பணப்பித்து இருக்கிறதே, அது மகா மோசம். பணத்திலே அப்படிப் பேராசை கொண்டிருப்பவனுக்குச் சந்தோஷமே கிடைப்பதில்லை. ஏனென்றால், சந்தோஷத்தை அவன் அடைய முடியாதபடி அவனுக்கும் சந்தோஷத்துக்கும் நடுவிலே, வேலியாக நின்று, அந்தப் பேராசை தடுக்கிறது. அவனுக்கு வயிறு பசிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். கிளப்புக்குள் செல்கிறான். அங்கே பலகாரம் சாப்பிடும் பொழுது பலகாரத்தில் மனம் செல்வதில்லை. பணத்தைப்பற்றியே நினைப்பதனால், ‘ஐயோ’ இரண்டு இட்டிலிக்கு இரண்டணாப் போய் விடுமே!’ என்று கவலைப்பட்டுக்கொண்டே சாப்பிடு கிறான். இரண்டு அணாவுக்கு மேல் தின்னவே கூடாது என்று எல்லையும் கட்டிக்கொள்கிறான். ஆதலால், சாப் பிடுவதனால் உண்டாகும் ருசியின்பத்தை அவன் இழந்து விடுகிறான். அவனது பசியும் அடங்குவதில்லை. கிளப்பை விட்டு வெளிவந்தவுடனே, மறுபடியும் பசிதான்.
ரயில்வே ஸ்டேஷன், பிரயாணிகள் விடுதி முதலிய இடங்களெல்லாம், அவன் கண்ணுக்குக் கொள்ளையடிக் கும் இடங்களாகவே தோன்றுகின்றன. ஒவ்வொரு மனிதனும், தன்னுடைய பொருள்களைக் கொள்ளையடிக் கவே வந்திருப்பதாக அவனுக்குச் சதா நேரமும் ஒரு பயம் இருந்துகொண்டே யிருக்கிறது. இதெல்லாம் பண ஆசைப் பித்தின் விபரீதங்கள்!
பண ஆசை பிடித்தவர்களுக்கு, ஒவ்வொரு தம்பிடியைச் செலவழிக்கும்போதும் பரம வேதனை ஏற் படுகிறது. ஒரு சமயம், என்னோடு ஒரு நண்பர் ரயிலில் வந்தார். அவரது சாமான்கள், வண்டியில் பாதி இடத்தை அடைத்துக்கொண்டன. திருச்சி ஜங்ஷனில், வேறு வண்டியில் மாறுவதற்காக, நாங்கள் இருவருமே இறங்கினோம்.
நண்பர், தமது சாமான்களையும் என் சாமான் களுக்குப் பக்கத்திலே இறக்கி வைத்துவிட்டு, என்னை நோக்கி “கொஞ்சம் நம்ம சாமான்களையும், ஒரு கூலி பிடிச்சு அந்த வண்டிக்குக் கொண்டுவரச் செய்யிறீங் களா? நான் இதோ வாரேன்” என்று எங்கேயோ அவ சரமாகப் போய்விட்டு வரப்போகிறவர் போலக் கேட்டார். நானும், ‘சரி’ என்று தலையை ஆட்டினேன். அவர் சிறிது தூரம் போய், யாரையோ எதிர்பார்ப்பவர் போல நின்றுகொண்டிருந்தார். நான், எங்கள் இரண்டு பேர் பெட்டி படுக்கைகளையும் இரண்டு கூலிகளிடம் கொடுத்து, மாற்று வண்டிக்குக் கொண்டு போகச் செய் தேன். கூலி தமது சாமான்களைத் தூக்கினானோ இல் லையோ, நண்பரும் பின்னாலேயே வந்துவிட்டார்.
அவர், சாமான்களைத் தூக்கிவந்த ஆளுக்குக் கூலி கொடுக்க வேண்டிய கட்டம் வந்தது. தாமே கொடுப்ப தாகச் சொல்லி, என்னைத் தடுத்துவிட்டார். ஆனால் உடனே கொடுக்கவில்லை. வண்டியில் ஏறிக்கொண்டு, வெகுநேரம் வரையில் தம் சாமான்களை எல்லாம் சரி பார்த்துக்கொண் டிருந்தார். ஆள், சிறிதுநேரம் பொறுத்துப் பார்த்தான். அவர் கூலி கொடுக்கிற வழியாய்த் தெரியவில்லை. கடைசியில் அவனே கேட்டு விட்டான். நண்பர் ஓர் இரண்டணாவை அவனிடம் வீசி யெறிந்தார். ”இதென்ன சாமி, இது! என்ன பிர்சைக் காசா?” என்று அவன், நண்பரிடம் அதைத் திருப்பி எறிந்தான். நண்பர் தகராறு செய்ய ஆரம்பித் தார். அவனை அமர்த்தியவர் அவரா? நான்தானே. ஆகையால், அந்த விஷயத்தைத் தமது பேரத்துக்கு ஒரு வாதாக அவர் உபயோகிக்கத் தொடங்கினார்.
“ஏண்டா, நானாடா உன்னைக் கொண்டுவரச் சொன் னேன் ? என்ன கெட்டுப் போனாப்போல இருக்கு? கொடுத்ததை மரியாதையாய் வாங்கிக்கிட்டுப் போ இல்லே, சும்மாப் போகவேண்டியதுதான். ஒரு தம்பிடி கூடக் கொடுக்கமாட்டேன்” என்று கர்ஜித்து, மேலும் ஓரணாவைச் சேர்த்து, மூன்றணாவாக, அவனிடம் நண் பர் நீட்டினார். இதற்கெல்லாம் கூலியா மசிகிறவன்? அவனும் மேலும் கூச்சல் போட்டான். இவரும் கத்தி னார். இவருக்குமேல் அவனும், அவனுக்கு மேல் இவரும், மேலும் மேலும் சத்தம் போட்டுக்கொண்டே யிருந்தார்கள். வண்டி புறப்படும் சமயம் நெருங்கி விட்டது. நண்பரின் மேல் வேட்டியை, ஜன்னல் வழி யாக அந்தக் கூலி எட்டிப் பிடித்துக்கொண்டு, “என்ன ஏமாற்றவா பார்க்கிறாய் ? பணத்தை வச்சிட்டு மறுவேலை பாரு,” என்று மிரட்ட ஆரம்பித்தான். நண்பர் பயந்து விட்டார். பிறகு கசக்கிக் கசக்கி ஒவ்வொரு காலணாவா கப்பையிலிருந்து எடுத்துக் கொடுத்துக்கொண்டேயிருந்தார். அப்படி அவர் கொடுத்ததெல்லாங் கூடி மொத் தம் நாலணாத்தான். அதற்குள் வண்டியும் நகர்ந்து விட்டது. பாவம்! கூலியாள் அதற்குமேல் ஒன்றும் செய்ய முடியவில்லை. திட்டிக்கொண்டே நின்றான்.
இந்தப் பண ஆசை பிடித்த மனிதர் முதலில், “என் னடா காசு போயிற்றே!” என்று மிகவும் வருத்தப்பட்டார். ஆனால், “கொடுக்க வேண்டிய கூலி காட்டணாவில் நாலணா மிகுத்துவிட்டோம்” என்று பிறகு கொஞ்சம் மனத்திருப்தி அடைந்தார். ஆனாலும், அது சந்தோஷமில்லை. சந்தோஷமென்பது, அவர் சம்மந்தப்பட்டமட்டில் மலடியின் குழந்தை மாதிரிதான். அவரால் சந்தோஷப்படவே முடியாது.
இப்படிப் பணப்பித்துப் பிடித்து அலைகிறார்களே, இவர்கள் தாங்கள் தான் சுகப்படுவதில்லை; பிறரையாவது சும்மா விடலாகாதா? அதுவுமில்லை. எல்லாருக்கும் அவர்களால் கஷ்டம் தான்.
பணத்தைச் சேகரிப்பதற்கு நூற்றுக்கணக்கான நல்ல வழிகள் இருக்கின்றன. பணத்தைச் சேகரிப்பது குற்றமல்ல. ஆனால், அந்தப் பணத்தின் மேல் அபார மோகம் கொண்டு, எப்பொழுதும் அதைச் சம்பாதிப்பதி லேயே கவனமாக இருப்பதுதான் குற்றமாகிறது. பணத்தை வெளியே ஓட விடாமல், பெட்டியில் பூட்டி வைத்திருப்பதனாலேயோ, அல்லது பாங்கியில் போட்டு வைத்திருப்பதனாலேயோ ஒருவித உபயோகமு மில்லை.
எப்பொழுதும் பணம் நல்ல வழியில் செல்வாகிக் கொண்டே இருக்க வேண்டும். செலவழிப்பதைத் தவிர, பணத்தால் வேறே என்ன பிரயோசனம்? உண்ணாமல், உடுக்காமல், உறங்காமல் பணத்தைச் சேமித்து வைத் தால், நமக்குப் பின் வருபவர் யாரோ ஒருவர் அதைச் செலவழித்துவிடத்தான் போகிறார். தகப்பன் தம்பிடி கூடச் செலவழிக்காமல் லட்சக் கணக்காய்ச் சேர்த்து வைத்திருப்பான். மகன் அதையெல்லாம் கெட்ட வழி களிலேயே செலவழிப்பான். அதனால் அந்த லோபி யடைந்த புண்ணியந்தான் என்ன?
பணத்தைத் தானே வைத்துக்கொண்டிருப்பதால் சந்தோஷம் வந்துவிடாது. பிறருக்குக் கொடுத்து அவர்கள் நன்மை பெறச் செய்தால்தான் தன்னை அவர்கள் போற்றிப் புகழ்வார்கள்; தனக்குப் பின்னும் தன் பெயர் நிலை நிற்கும். எச்சிற் கையாலும் காக்கை ஓட்டாதவனாக இருந்தால், யார் தான் மதிப்பார்கள்? உடலுடன் பெயரும் புதைப்பட்டுத்தான் போகும்.
பள்ளிக்கட்டப் பையன்களில் பலர், மேல் நாட்டாரைப் பார்த்து, வேடிக்கையாகத் தபால் தலைகள் சேகரிக்கிறார்களல்லவா? அதுபோலத்தான் பண ஆசை கொண்டவனும் பணத்தைச் சேகரிக்கிறான். ஆனால், தபால் தலை சேகரிப்பது பொழுது போக்குக்காக ஓய்வு நேரத்தில் செய்யும் வேலை. பணம் சேர்ப்பதோ, வாழ்க்கை முழுவதையுமே ஈடுபடுத்திச் செய்யும் வேலை யாக இருக்கிறது. தபால் தலை சேகரிப்பதில் உற்சாகம் இருக்கிறது. பணம் சேகரிப்பதிலோ, உற்சாகத்தின் வாசனைகூட இல்லை. ஒரு லட்ச ரூபாய் கையில் உள்ள வன் பத்து லட்ச ரூபாய் அடைய விரும்புகிறான். மீதி ஒன்பது லட்சத்தையும் சம்பாதிப்பதற்காக, அவன் தரித்திரனாகவே வாழ்ந்து வரவேண்டி யிருக்கிறது. அரை வயிற்றுக்குக்கூடச் சாப்பிட மனம் வருவதில்லை. எந்த வழியில், எப்படி, எவரிடமிருந்து பணத்தைப் பறிக்கலாம் என்றெல்லாம் சதா ஆலோசனை செய்ய வேண்டியிருக்கிறது. அவனது வாழ்க்கையில் சுகம் எப்படி ஏற்படும்?
ஏராளமான லோபிகள் இருக்கிறார்கள். கையிலுள்ள பணத்தைக் குரங்குப் பிடியாய்ப் பிடித்துக் கொள்ளுவதுதான் அவர்கள் வழக்கம். எப்போதும் பரி தாபகரமான நிலைமையிலேயே அவர்கள் வாழ்கிறார்கள். வீடுவாசல், நிலபுலம் எல்லாம் ஏராளமாக ஒரு லோபிக்கு இருக்கும். ஆனால், கிழிந்த வேஷ்டி, பிய்ந்த செருப்பு இவற்றைத்தான் அவன் எப்போதும் அணிந்துகொண்டு வீதியில் நடந்து செல்வான். இப்படி அவன் கஷ்டப் படுவது எதற்காக? பணத்தை மிகுத்து வைப்பதற்காகத்தான்! சாகும் வரை மிகுத்து மிகுத்து வைத்துக் காணும் பலன் தான் என்ன?
இம்மாதிரி லோபிகளாவது, கையில் உள்ள பணத்தைச் செலவழிக்கமால் பூட்டி வைப்பதோடு நிற்கிறார்கள். ஆனால், இந்த லோபித்தனத்தைவிட மிகவும் மோசமாக வேறு ஒன்று இருக்கிறது. அதுதான் பணத்தை மேலும் மேலும் சேர்க்க வேண்டுமென்னும் ஆசை. பணம் கையை விட்டுப் போகாமல் அதைக் காப்பாற்ற ஒரு காரணமிருந்தால், பணத்தைச் சம்பாதிக்க ஒன்பது காரணங்கள் இருக்கின்றன.
டாக்டர் ஜான்சன் என்ற ஆங்கில ஆசிரியர் ஓரிடத்தில் “மனிதன் பணத்தைச் சம்பாதிப்பதைவிடக் குற்றமற்ற காரியம் வேறொன்றில்லை” என்கிறார். ஆனால் சில மனிதர்கள் பணம் சம்பாதிப்பதைப் பார்த்தால், பயங் கரமாக இருக்கிறது. “நாம் பணம் சேகரிப்பதற்காகவே உலகில் ஜன்மம் எடுத்திருக்கிறோம்” என்று எண்ணிக் கொண்டு, பணம் பணம் என்று பேயாய் அலைகிறார்கள். நல்ல வழியோ கெட்ட வழியோ, அதைப்பற்றி அவர் களுக்குக் கவலையே இல்லை. ஏழைகளிடமிருந்துகூடக் கொள்ளையடிக்கிறார்கள். செய்கையில் இப்படி இருந்தாலும் வெளியே மிகவும் நல்லவர்கள் போல் நடிக்கிறார்கள். அவர்களுடைய ஆடம்பரமும் வீண் பேச்சுகளுமே அவ்வாறு நடிப்பதற்கு அணிகளாக இருக்கின்றன.
இந்தப் பணப்பேய்களைவிட, அந்த லோபிகளே மேல் என்பது என் அபிப்பிராயம். கருமிகளால், பிறருக்கு உபகாரமில்லாவிட்டாலும் அபகாரமில்லை; இவர்களால் அதுவுமன்றோ விளைகிறது!
– வாழ்க்கை விநோதம் (நகைச்சுவைக் கட்டுரைகள்), நான்காம் பதிப்பு: நவம்பர், 1965, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை