புலி கிளம்பிவிட்டது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 1,551 
 

ஒரு வரிப்புலி , வேட்டைக்குக் கிளம்பியது. மிருகங்களை அடித்துத் தின்றது; பசிதீர்ந்த பின், குகைக்கு ஒடி வந்தது.

குகையினுள்ளே கல்லிடுக்கில் புலி படுத்தது. உண்ட மயக்கம் நன்கு உறங்கி விட்டது.

மாலை வந்தது நிலா எழுந்தது- ஒளியைச் சொரிந்தது. காடெங்கும் ஒரே வெளிச்சம்!

குகையினுள்ளும் நிலவின் ஒளி புகுந்தது!

புலியிருந்த இடமல்லவோ இது. இப்பொழுது, வெற்றிடமாய்க் காட்சியளிக்கிறதே.

புலி எங்கே ?

எங்கே போயிருக்கும்?

அதோ , காட்டில் கேட்கும் அரவம், அக் கேள்விக்கு விடை கூறுகிறது. அது, மீண்டும் வேட்டைக்குக் கிளம்பி விட்டது.. காடே நடுங்குகிறது…

குகையில், புலியைக் காணவில்லை என்றால், மீண்டும் வேட்டைக்குப் போய்விட்டது என்பதே பொருள். இது புலியின் கதை!

புலியைப் போன்றவன் வீரன். புலியின் கதைதான் வீரன் கதையும்.

வீரனை ஈன்றெடுத்த அன்னை அதனை நன்கறிவாள். அவ்வீரப் புலியைச் சுமந்தது அவள் வயிறுதானே? அப்புலி உறங்கிய குகையும் அதுதானே?

அத்தகைய வீரத்தாய் ஒருத்தியை உன் மகன் எங்கே?’ என்று கேட்டாள் பக்கத்து வீட்டுக்காரி. அவள் என்ன சொல்வாள்?

“குகையினின்றும் புலி கிளம்பி விட்டது. அது பகைவர்களை வேட்டையாடும் போர்க்களத்திற்குப் போயிருக்கிறது” என்றுதான் கூறினாள்.

– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)