கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 5, 2022
பார்வையிட்டோர்: 7,978 
 

(1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

4. பொம்மையைக் காணோம்

“மாமீ…..ஈ..ஈ” என்று உரக்கக் கூப்பிட்டான் ஜக்கு.

வாசல்புறத்தில் அவன் மாமா வந்திருந்தார். அவருடன் மாமி பேசிக்கொண்டு நின்றாள். மாமா அவனிடம், “ஏண்டா ஜக்கு, வருகிற திங்கள்கிழமை எல்லா ஸ்கூல்களையும் திறக்கிறார்களாமே?” என்றார்.

“சரிதான்; பள்ளிக்கூடம் திறந்தால் என்ன? இவன் ஒரு வாரம் கழித்துத்தான் போகட்டுமே” என்றாள் மாமி.

இந்த மாமிக்கும் அவன் அம்மாவுக்குந்தான் எவ்வளவு வித்தியாசம்? சும்மா அவனை அவன் அம்மா, “தேங்காய் வாங்கிக் கொண்டு வா; மாங்காய் வாங்கிக்கொண்டு வா!” என்று ஏதாவது தொணதொணத்துக்கொண்டே இருப்பாள். ஆனால் இந்த மாமியோ அதற்கு நேர் எதிரிடை. பேசாமல் நநது சொல்கிற மாதிரி பட்டணத்திலேயே இருந்து படித்தால் எவ்வளவு ஜோராய் இருக்கும்!

காலையில் நந்து வந்து, “அடுத்த வருஷம் முதல் ஜக்கு இந்த ஊரிலேயே படிக்கப் போறானாமே, மாமி. உண்மைதானா?” என்று கேட்டான்.

“அடுத்த வருஷம் என்ன. இப்பவே சேர்க்கவேண்டும் என்று தான் எனக்கு. ஆனால் பாதிப் படிப்பில் சேர்க்கிறது எவ்வளவு கஷ்டம்!” என்றாள் மாமி.

இந்தப் பதில் நந்துவுக்குத்தான் ரொம்ப ஆனந்தத்தைக் கொடுத்தது. அவன், ‘ஏண்டா ஜக்கு. நீ கீழே இந்த அறையில் படுககையைக் கொண்டு வைத்து இருப்பதற்கு மாமா ஒண்ணுமே கேட்கல்லையா?’ என்றான்.

“இல்லை.”

“மாமியும் கேட்கல்லையா?”

“இல்லை.”

“அடேய், நீ சந்தோஷமாய் இருப்பதற்கு பதில் ஏன் இப்படி மூஞ்சியைத் தூக்கி வச்சுண்டிருக்கே, சொல்லேன்!”

ஜக்கு ஜக்கு ஜேபியிலிருந்து ஒரு துண்டுக் கடிதத்தை அவனிடம் நீட்டி, “இதைப் படித்துப் பார்” என்றான். நந்து ஆவலுடன் அதைப் பிரித்துப் பார்த்தான்: ‘டெலிபோனுக்குப் பயந்து நீ கீழே போய்விட்டாய். ஆனால் என்னிடமிருந்து நீ தப்ப முடியாது. எதற்கும் ஜாக்கிரதை!’

“நான் தூங்கி எழுந்தபோது என் தலைமாட்டில் இருந்தது இது” என்றான் ஜக்கு. நந்துவுக்கு ஒன்றுமே தோன்றவில்லை.

அன்றைக்குப் பொது விடுமுறை நாள். மணி பதினொன்று இருக்கும். மரீனா பீச்சில் உள்ள ‘ஸ்விம்மிங் பூல்’ திமிலோகப் பட்டது. பையன்களுடைய அட்டகாசம் தாங்க முடியவில்லை. அதோ மேல் கட்டையிலிருந்து கரணம் போட்டுக் குதிப்பது யார்? ஜக்குவா? இதோ அதைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பது? ஆமாம்; நந்து தான்.

“அடே ஜக்கு. இங்கே வாயேன்; இங்கே வாயேன்!” என்று கரையில் இருந்தபடியே அலறினான் நந்து.

இப்படி ஒரு கைமாற்று, அப்படி ஒரு கைமாற்று; ஜக்கு கரையேறி வந்தான்.

“இந்தப் பசங்களெல்லாம் உன்னை ஒரு மாதிரியாப் பார்க்க றாங்கடா ஜக்கு. அதோ, நீல நிக்கரும் பூனைக் கண்ணும் செம்பட்டைத் தலையுமாய், ‘அந்தர்’ அடிக்கிறானே, அவன் தாண்டா ‘உல்ப்’. அவன் உன்னோடே போட்டி போடப் போறானாம்” என்றான் நந்து.

“வரட்டும்டா பாத்துக்கிறேன்” என்று சொல்லிவிட்டு ஜக்கு ஓடிப்போய், ‘கரணம் போடுறா ராஜா, போடு கரணம்’ என்று சொல்லிக்கொண்டே கட்டையிலிருந்து கும்மென்று குதித்தான்.

கரையோரமாய் விளிம்பைப் பிடித்துக்கொண் டிருந்த பையன்கள் ‘ஹோ!’ என்று கூச்சல் போட்டார்கள். “டேய், தஞ்சாவூர்ச் சிங்கம் கரணம் போடறதைப் பாருங்கடோய்! பிச்சைக்காரக் குறவன் இழுத்துண்டு வர குரங்குக்குட்டி கரணம் அடிக்கிறது போல!’ என்று கேலி செய்தார்கள்.

உல்ப் அடித்தொண்டையில் வீல் என்று கத்தினான். “(அ)சிங்கம் எங்கேடா காணோம்?”

நோஞ்சல் பூனையைப்போல் இருந்த ஒரு பையன், “முழுகியே போகப் போறான் போல் இருக்கடா, பட்டிக்காட்டுச் சிங்கம்” என்று உயிரைப் பிடித்துக்கொண்டு கத்தினான். விலா எலும் பெல்லாம் விம்மிப் புடைத்துக்கொண்டது.

“அடேடே, உசிரை விட்டுடாதேடா, பாவி! நீ கத்தறதைப் பார்த்தா மேலே போகிற மூச்சு, கீழே வராமலே போய்விடும் போல் இருக்கேடா” என்றான் நந்து, துறை ஓரமாய் வந்து. அவனுக்கு மூழ்கிய ஜக்கு வெளிப்படாமல் இருக்கிற ஆத்திரம், பையன்க ளுடைய கேலியைத் தாங்க முடியாத ரோசம். உல்ப் கோஷ்டியிடம் சகிக்க முடியாத வெறுப்பு. அந்த ஆத்திரத் தினால் காலை உதைத்துக் கொண்டான்.

“தஞ்சாவூரிலே ‘ஸ்விம்மிங் பூ’ லைப் பார்த்திருந்தாத்தானே?” என்று கதறினான் சோனி.

“அடே, எனக்குத் தெரியும்டா கபாலி; அங்கே எருமை குளிப் பாட்டற குட்டை இருக்குடா” என்றான் உல்ப். ஒரே கைதட்டல், விசில், ஆரவாரம். நந்துவுக்கு வந்த கோபத்தில் தண்ணீ ரில் குதித்து இந்தப் பையன்களை ஒரே அறையாக அறைய வேண்டும்போல் இருந்தது. ஆனால் அவனுக்குத் தண்ணீரில் இறங்கியே பழக்கமில்லையே!

“டேய், டேய்!” என்று பயங்கரமாய் அலறினான் உல்ப். கபாலி உடனே பெரிய பலசாலியைப்போல அவன் கையைப் பிடித்துக்கொண்டான். ஆனால் முதலை பிடித்து இழுப்பதுபோல் தண்ணீருக்குள் யாரோ தன் காலை வாரி இழுப்பதை உணர்ந்தான் உல்ப். அவன் ‘தத்தக்கா பித்தக்கா’ என்று தத்தளித்துக் கொண்டே நடுத் தண்ணீருக்கு இழுத்துப் போகப்பட்டான். கபாலியும் அவனுடன் கதறிக்கொண்டே தடுமாறினான். நந்து ஆரவாரம் செய்தான். மூச்சுத் திணறுகிற சமயத்தில் தான் உல்பைப் பிடித்திருந்த பிடி நழுவியது. எல்லாம் இரண்டு மூன்று நிமிஷங்கள் தான். ஜக்குவை அக்கரையில் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் கட்டைமேல் பாட்டுச் சத்தம் கேட்டது.

“ஓநாயின் ஊளையைக் கேட்டீங்களோ, கேட்டீங்களோ …ஓ…ஓ!” என்று பலீன் சடுகுடு ஆடுவதுபோல ஜக்கு பாடிக்கொண்டே தண்ணீரில் குதித்தான்.

உல்ப் திணறிக்கொண்டே கரைக்கு நீந்தி வருவதும் ஜக்கு குதிப்பதும் ஒன்றாய் இருந்தன. ‘பொதக்கடீர்’ என்று உல்பின் மேல் குதித்தான் ஜக்கு. உல்ப் எப்படியோ சமாளித்துக் கொண்டான். பூனைக் கண், புலிக்கண்போல் உருட்டி விழித்தது. சீறிப் பாய்ந்தான் முழு வேகத்துடன். ஜக்கு வெளிப்பட்டதும் அவன் தலைமயிரைப் பிடித்துக்கொண்டான். “எலே பட்டிக் காட்டுப் பையா? உடம்பு ‘நமு நமு’ன்னு ஊறுதோ?” என்று சொல்லிக்கொண்டே தண்ணீருக்குள் ஓர் அழுத்து அழுத்தி னான். சோனிக் கபாலி இன்னும் கரைக்கு வந்து சேரவில்லை. மற்றப் பையன்கள் மட்டும் கரகோஷம் செய்தனர். உல்பின் கோபம் அவர்களுக்கு ஓர் ஒப்பற்ற காட்சி.

நந்து கரையிலிருந்தபடியே காற்றில் கையை உதறிக்கொண் டிருந்தான். ஆனால் என்ன செய்வது? ஜக்கு மேலே வருவதும் ‘உல்ப்’ மறுபடி கீழே அமுக்குவதும் இரண்டு மூன்று தடவை ஆயின.

“காமிரா இருந்தால் போட்டோப் பிடீங்கடா! கப்பல்லே போட்டோ போட்டாப்பலே இதையும் போடட்டும்டா” என்று உறுமினான் உல்ப்.

ஒரே விநாடிதான். அடுத்த கணம் உல்ப் வாயைப் பிளந்து ஊளையிட்டான். தண்ணீருக்குள் இருந்தபடியே அவன் காலைப் பிடித்து ஒரே வாராக வாரியெடுத்துக் கவிழ்த்து விட்டான், ஜக்கு.

“அடே, உன் ஜோலிக்கு இனி வரல்லே, வரல்லே” என்று கதறினான் உல்ப்.

சோனி கரைக்கு வரமுடியாமல் தவித்துக்கொண் டிருந்த தைக் கண்ட ஜக்கு, ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து அவனை இழுத்துக் கரையில் தள்ளினான். “மிஸ்டர் சோனி, குரங்குக் குட்டியைப் பார்த்தியா? அந்தக் குரங்கு கரணமும் போடும்! உன் உயிரையும் காப்பாத்தும், தெரியுமா?” என்றான் ஜக்கு.

“யாரப்பா இங்கே ஜக்கு?” என்று கேட்டுக்கொண்டே காவற்காரன் வந்தான்.

“ஏன்?” என்றான் ஜக்கு.

“போன் வந்திருக்குது.”

ஜக்குவும் நந்துவும் அதற்குமேல் அங்கே ஏன் நிற்கிறார்கள்? போன் மூலம் யார் பேசுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாதா?

மத்தியான்னம் ஜக்கு காமிரா அறையில் படுத்துக்கொண் டிருந்தபோது வெளியில் பேச்சுக் குரல் கேட்டது. எழுந்து வந்து பார்த்தான். அப்போது உல்பும் சோனிக் கபாலியும் அவன் வீட்டினுள்ளிருந்து வெளியே போய்க்கொண்டிருந்தார்கள்.

சற்றுப் பொறுத்து அவன் எதிர் பார்த்த படியே மாமி வந்து அவனை மாமா அழைப்பதாகக் கூப்பிட்டாள். ஜக்கு நேராக மாடிக்குப் போனான். அங்கே மேஜையைக் கவனித்தான். ‘சொரக்’ என்றது. அவன் ஊருக்குக் கொண்டுபோக வாங்கி வந்திருந்த ‘கண்ணை மூடித் திறக்கும்’ செலுலாயிடு பொம்மையைக் காணவில்லை. அதை ) மூடியிருந்த காகிதம் மட்டும் கீழே கசங்கிக் கிடந்தது.

“பொம்மை எங்கே?”

“ஏது பொம்மை?” என்றார் மாமா.

“நானும் பார்க்கவில்லையே” என்றாள் மாமி.

“இங்கே இரண்டு பையன்கள் வந்தார்களே?” என்று கேட்டான் ஜக்கு.

“ஒருவரும் வரவில்லையே?” என்றாள் மாமி.

“நான் அவர்கள் வெளியில் போனதைப் பார்த்தேனே!”

“எங்களுக்குத் தெரியாது.”

ஜக்கு விக்கிப்போய் நின்றான். மாமா அவனிடம். “உன்னை எதற்குக் கூப்பிட்டேன், தெரியுமா?” என்றார்.

“எனக்குத் தெரியாது. ஆனால் நான் இன்னிக்கி ராத்திரியே ஊருக்குப் போகப் போறேன்” என்றான் ஜக்கு முந்திக்கொண்டு.

“அப்படியா?” என்றாள் மாமி.

“ஆமாம்; நான் முடிவு செய்துவிட்டேன். இனிக் கோடை லீவின் போது தான் திரும்பி வருவேன்” என்றான் ஜக்கு.

அதற்கு ஒருவரும் பதில் சொல்லவில்லை.

மாமியும் ஜக்குவும் வீட்டில் ஓர் இடம் பாக்கி யில்லாமல் பொம்மையைத் தேடினார்கள். பொம்மையைக் காணவே காணோம். யார் இவ்வளவு தைரியமாய் எடுத்துப் போயிருப்பார்கள்?

இதை நந்துவிடம் சொல்வதற்கு ஜக்கு வெளியில் போனான். மாமி தேடி அலுத்துப்போய் மாடிக்குப் போனாள். ஜக்கு திரும்பி வந்ததும் அவன் படுக்கையில் ஒரு காகிதம் செருகி வைத்திருந்தது.

“அடேய் ஜக்கு, பொம்மையைத் தேடாதே. என்னிடந்தான் இருக்கிறது பொம்மை. இன்று இரவு ஊருக்குப் போகப்போவதாகத் தெரிகிறது. எங்கே பார்க்கலாம்” என்றும் அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தது. பின்குறிப்பு என்று அடியில் ஒரு வாக்கியம் காணப்பட்டது. அதில், “இன்றைக்கு ஸ்விம்மிங் பூலில் நடந்தது எனக்குத் தெரியும்” என்றுதான் எழுதி யிருந்தது.

“ஊருக்குப் போகப் போவதாகத்தான் இருந்தேன். ஆனால் இது யாரென்று கண்டுபிடிக்காமல் போகப் போவதில்லை” என்று சொல்லிக்கொண்டான் ஜக்கு.

– தொடரும்…

– ஜக்கு, முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1952, கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *