விளம்பர வாழ்க்கை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 7, 2014
பார்வையிட்டோர்: 18,077 
 

சுப ஜனனம்

இன்று காலை ஏழு மணிக்கு ராவ் பகதூர் ராஜாராமின் மனைவியார் ஸ்ரீமதி மீனாட்சி பாய்க்கு ஒரு புருஷப் பிரஜை ஜனனமாகியிருக்கிறது. தாயும் சிசுவும் §க்ஷமமாக இருக்கிறார்கள் என்று உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அறிவிக்கப்படுகிறது.

நர்ஸ் தேவை

குழந்தைகளைப் பராமரிக்க அநுபவமுள்ள நடுத்தர வயதுள்ள நர்ஸ் தேவை. வேறு அலுவல்கள் எதுவும் இல்லாமல் குடும்பத்துடன் வந்து தங்கியிருக்க சம்மதப்படுபவர்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படுவார்கள். மாதச் சம்பளம் ரூ.15, காலை 7 மணி முதல் 10 மணி வரையில் நேரில் வந்து பார்க்கலாம்.

ராவ்பததூர் ராஜாராம்
“மஞ்சுளா”, மயிலை, சென்னை

அறிவிப்பு

சென்ற வாரம் நடைபெற்ற எங்கள் செல்வன் கோபாலன் ஆண்டு நிறைவுக்குப் பரிசுகளும் வாழ்த்துச் செய்திகளும் ஏராளமாக அனுப்பியிருந்த நண்பர் உறவினர்களெல்லாருக்கும் எங்கள் மனப் பூர்வமான நன்றியைச் செலுத்துகிறோம். ஒவ்வொருவருக்கும் தனித் தனியே எழுதித் தெரிவித்துக் கொள்ள இயலாததற்கு மன்னிக்கக் கோருகிறோம்.

ராவ்பகதூர் ராஜாராம்
மீனாட்சிபாய்

உடனே தேவை

ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சியுள்ள ஒரு பி.ஏ. ஆசிரியர், பன்னிரண்டு வயதுப் பையனுக்கு ட்யூஷன் சொல்லிக் கொடுக்க உடனே தேவை, தெலுங்கு பேசத் தெரிந்தவர்கள் மட்டுமே மனுச் செய்து கொள்ளலாம். காலை மாலை இருமுறை வரவேண்டியிருக்கும். மாதச் சம்பளம் ரூ. 20.

ராவ்பகதூர் ராஜாராம்
சென்னை

வாடகைக்குப் பங்களா

கவர்ன்மெண்ட் காலேஜ் சமீபத்தில் எலெக்ட்ரிக் விசிறி முதலிய வசதிகளுடன் சிறு பங்களா ஒரு வருஷத்துக்கு வாடகைக்குத் தேவை. வாடகை முப்பது முதல் நாற்பத்தைந்துக்குள், கீழ்க்கண்ட விலாசத்துக்குத் தெரிவிக்கவும்.

ஆர். கோபாலன்,
ஜூனியர் பி.ஏ. வகுப்பு,
கவர்ன்மெண்ட் காலேஜ், சென்னை

மணமகள் தேவை

பி.ஏ. வகுப்பில் படித்து வரும் சுமார் லட்ச ரூபாய்க்குப் பூஸ்திதி உள்ள 22-வயது இளைஞனுக்கு-எஸ்.எஸ். எல்.ஸி படித்து, வீணை வாசிக்கக்கூடிய ஆந்திர, பாரத்வாஜ கோத்ரமல்லாத பெண் தேவை. ரூ. 10,000க்குக் குறைவாக எதி¡ ஜாமீன் கொடுக்க முடியாதவர்கள் எழுத வேண்டியதில்லை.

ராவ்பகதூர் ராஜாராம்

சொந்த சமாசாரம்

சரோஜா! இனித் தாமதிக்க முடியாது. நாளை இரவு ரயிலடியில் தயாராயிரு!

கோபு.

சொந்த சமாசாரம்

அன்பரே! கவலை வேண்டாம் நான் தவறமாட்டேன்!

சரோஜா

இளைஞன் காணப்படவில்லை

உளவு சொல்பவருக்கு வெகுமதி ரூ.200.

ஒற்றை நாடி சரீரர், சிவந்த மேனி, கூர்மையான மூக்கு, அகண்ட நெற்றி-காதில் வைரக் கடுக்கன், ஸில்க் ஷர்ட், ப்ரிக் பாட்டர்ன் போட்ட ஜரிகை வேஷ்டி, இந்த அடையாளங்களுடன் சென்ற 20 மாலை முதல் என் குமாரன் கோபாலன் காணப்படவில்லை. கடைசியாக சென்ட்ரல் ஸ்டேஷனில் கண்டதாகத் தெரிகிறது. உளவு சொல்பவருக்கு ரூ. 200 வெகுமதி அளிக்கப்படும்.

ராவ்பகதூர் ராஜாராம்,
“மஞ்சுளா”, மயிலாப்பூர், சென்னை.

ரிஜிஸ்தர் விவாகம்

ராவ்பகதூர் ராஜாராமின் புதல்வனான ஸ்ரீ கோபாலனுக்கும் சரோஜா பாய்க்கும் இன்று பங்களூரில் ரிஜஸ்தர் முறைப்படி விவாகம் நடந்தது. புது தம்பதிகளுக்கு வாழ்த்துச் செய்திகளும் பரிசுகளும் அனுப்பிய நண்பர்களுக்குத் தம்பதிகள் நன்றி செலுத்துகிறார்கள்.

கைலாஸ ஔஷதாலயம்

நிச்சயமான சிகிச்சை உத்திரவாதமான ஔஷதங்கள்! நீரிழிவு மது மோகம் முதலிய சகல நோய்களுக்கும்-எவ்வளவு நாள் பட்டதாக இருந்தாலும்-எங்கள் ஔஷதங்களினால் நிரந்தரமான குணம் ஏற்படுகிறது. பிரபல டாக்டர்கள் சிபார்சு செய்கிறார்கள். ஒருவர் ஒரே முறை சிகிச்சை செய்து கொண்டால் போதும்.

ஆனந்த வைத்தியர், மெடிகலிஸ்ட்.

காலமானார்

சென்னை பிரமுகரான ராவ்பகதூர் ராஜாராமின் மனைவியான ஸ்ரீமதி மீனாட்சி பாய் பல நாட்களாக நீரிழிவினால் கஷ்டப்பட்டு கைலாஸ ஔஷதாலயத்தில் சிகிச்சை பெற்று வந்தவர், நேற்றிரவு பரமன் திருவடி சேர்ந்தார். அவருக்கு வயது 52. கணவரையும் ஏக புத்திரனையும் விட்டுச் செல்கிறார்.

நோட்டீஸ்

இதன் மூலம் எங்கள் கட்சிக்காரர் ராவ்பகதூர் ராஜாராம் சகலமான பேர்களுக்கும் தெரிவித்துக் கொள்வததென்னவென்றால் இப்போது பல இடங்களில் அவருடைய குமாரன் கோபாலன் அவர் பெயரை உபயோகித்துக் கடன் வாங்கித் திரிந்து வருவதாகக் காதுக்கு எட்டியிருக்கிறது. எங்கள் கட்சிக்காரருடைய இஷ்டத்துக்கு விரோதமாக இவர் மணந்து கொண்டு குடும்பத்திலிருந்து விலகி விட்டதால் அவர் வாங்கும் கடன்கள் எங்கள் கட்சிக்காரரை எவ்வழியிலும் கட்டுப்படுத்தா. எங்கள் கட்சிக்காரர் சொத்துக்கள் யாவும் சுயார்ஜிதமாகையால், அவரது குமாரர்க்கு இவைகளில் எவ்வித உரிமையும் இல்லை.

ராகவன், வரதன்
கோபாலன், அட்வகேட்ஸ்.

மரணம்

திடீரென்று மாரடைப்பினால் ராவ்பகதூர் ராஜாராம் நேற்றிரவு 9 மணிக்கு மரண மடைந்தார்.

தாராள மனதுடையவரும் பிரமுகருமான ராஜாராம் பல தர்மங்களில் ஈடுபட்டிருக்கிறார். இது சமாசாரம் அவருடைய குமாரன் ஸ்ரீ ஆர். கோபாலனுக்கு அறிவிக்கப்படுகிறது.

ஞாபகார்த்தம்

என் அருமைத் தாய் மாது ஸ்ரீ மீனாட்சி பாய் அம்மையும், தந்தை ராவ்பகதூர் ராஜாராம் அவர்களும் பொன்னணி உலகு சேர்ந்ததன் ஞாபகார்த்தமாக, சோகமும் அன்பும் பொங்கி வழியும் இருதயத்துடன்.

ஆர். கோபாலன்

வந்தன அறிவிப்பு

எங்கள் அருமைப் புதல்வன் சிரஞ்சீவி ராஜாராமனுடைய ஆண்டு நிறைவு வைபவத்துக்குப் பரிசுகளும் வாழ்த்துச் செய்திகளையும் அனுப்பி வைத்த உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மனமார்ந்த வந்தனத்தை அறிவிக்கிறோம்.

ஆர். கோபாலன்,
ஜி. சரோஜா பாய்.

புதுவருஷப் பட்டங்கள்

ராவ் சாகிப்………………ஆர். கோபாலன்……..
“ரெண்டு நாளைக்கு முந்தி இந்தப் பக்கமா ஒரு திருடன் ஓடி வந்தானா?”
“உடனே கேட்காம, ரெண்டு நாள் கழிச்சி வந்து கேட்டா எப்படி?”
“உங்களைப் பார்க்கிற போது தானே நான் கேட்க முடியும்? இப்பத் தானே உங்களைப் பார்க்கிறேன்!”
– பர்வதவர்த்தினி

ஷஷ்டி அப்த பூர்த்தி

அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

ராவ் சாகிப் ஆர். கோபாலனுக்கு நாளது ஜூன் மாதம் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடக்கவிருக்கும் ஷஷ்டி அப்த பூர்த்தி வைபவத்தின் போது, நண்பர்களும், அபிமானிகளும் சிறப்பாக ஒரு பண முடிப்பு அளிக்கத் தீர்மானித்துள்ளோம். ராவ் சாகிப் கோபாலன் நமது நகருக்குப் பாடுபட்டு உழைத்திருப்பதை அறியாதவர் யாரும் இருக்க முடியாது. அனைவரும் அவரவர்களாலானதை நன்கொடையாக அளித்து வைபவத்தைச் சிறப்பாகச் செய்விக்கக் கோருகிறோம். அபிமானிகள் நன்கொடைகளைக் கீழ்க் கண்ட விலாசத்துக்கு 12ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

ட்ரெஷரர்
ராவ்சாகிப் ஆர். கோபாலன்,
ஷஷ்டி அப்த பூர்த்தி ஸெலிப்ரேஷன் கமிட்டி,
சென்னை.

உயந்யாசகர் தேவை

வேத சாஸ்திரப் பிரதிபாத்யமாயுள்ள சர்ச்சைகளைத் தெளிவாக எடுத்துக் கூறி, பரலோக பரமான ருத்ர நமக சமக மந்திராதிகள் பூஜா விதிகளை அனுஷ்டான பூர்வகமாகக் கற்றுக் கொடுக்க யோக்யதாம்சங்களுடன் பூரண அத்யயனம் செய்துள்ள ஆசிரியர் தேவை. குடும்பத்துடன் வந்து இருக்கத் தயாராக உள்ளவரே வேண்டும். அவரது குடும்ப சம்ரக்ஷணையுடன் மாதம் முப்பது ரூபாயும் அளிக்கப்படும். இதர உபாத்தியாயங்கள் அலுவல்கள் எதுவும் வைத்துக் கொள்ள அனுமதிக்க முடியாது.

ராவ்சாகிப் ஆர். கோபால சர்மா

தேக வியோகமானார்

சமீபத்தில் ரிடயராகி, ஞான மார்க்கத்தில் சத்காலம் கழித்து வந்த ராவ் சாகிப் ஆர். கோபால சர்மா தேக வியோகமானார். இறக்கும் போது வயது 63. மனைவியையும் ஒரு குமாரனையும் எண்ணற்ற நண்பர்களையும் துக்க சாகரத்தில் ஆழ்த்தி விட்டுச் செல்கிறார்.

ராவ்சாகிப் ஆர். கோபால சர்மா.

சொந்த சமாசாரம்

என் தந்தையார் ராவ்சாகிப் ஆர். கோபால சர்மா காலமானது பற்றி எங்களுக்கு வருத்தம் தெரிவித்திருக்கும் ஏராளமான நண்பர்களுக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் தனிப்பட எழுதித் தெரிவித்துக் கொள்ள இயலாததற்கு மிக வருந்துகிறோம்.

தாயும் தனயனும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *