தப்புத் தப்பாய்……சரி…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: March 7, 2018
பார்வையிட்டோர்: 19,435 
 

அவசர சிகிச்சைப் பிரிவில், ”சார்! நீங்க தான் என் மனைவி காப்பாத்தனும்…” என்ற முகேசை விலக்கி ஆளைப் பார்த்த சுதனுக்கு அதிகமான மின்னதிர்வு.

நிர்மலா துவண்ட கொடியாய் கட்டிலில் கிடந்தாள்.

மறைத்துக்கொண்டு ”என்ன உடம்புக்கு ?.” அவனைக் கேட்டான்.

”என்னன்னு தெரியலை சார். இருந்தாப்போல இருந்து காக்காய் வலிப்புப் போல வெட்டி வெட்டி இழுத்து சாய்ஞ்சு… கொஞ்ச நேரத்துல பேச்சையும் காணோம் மூச்சையும் காணோம். உயிர் மட்டும் ஓடிக்கிட்டிருக்கு. தூக்கிக்கிட்டு வந்தேன்.” என்ற மகேஷ் வழிந்த கண்ணீரைத் துடைத்தான்.

டாக்டர் சுதனுக்கு அவன் கண்ணீர் நெஞ்சில் படவில்லை. மாறாக….’மவளே இன்னைக்கு உன்னை…..!!!’ என்று மனசுக்குள் ஆத்திரம் வந்தது.

”சிஸ்டர் ! இந்த பேஷண்டைச் சீக்கிரம் சிறப்பு சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்புங்க.” உத்தரவிட்டான்.

அடுத்த விநாடி அவள் ஓடி ஸ்டெச்சரை எடுக்க ஓடினாள்.

”சார்! என் மனைவிக்கு……” அருகிலிருந்த முகேஷ் கலவரத்தில் தடுமாறினான்.

”உயிருக்கே ஆபத்து.! சீக்கிரம்.” என்ற சுதன் ஸ்டெச்சரைத் தள்ளிக் கொண்டு வந்த நர்சை விரட்ட… அவள் வேகமாக தள்ளிக்கொண்டு வந்து கட்டிலுக்கருகில் நிறுத்தி முகேசிடம் ”சார்! ஒரு கை கொடுத்து உதவுங்க..” என்றாள்.

அடுத்த விநாடி… அவர்கள் இருவரும் சேர்ந்து நிர்மலாவைத் தூக்கி ஸ்டெச்சரில் வைத்தார்கள். நர்சுக்குத் துணையாய் எங்கேயோ சென்ற வார்டு பெண் வர… இருவரும் ஸ்டெச்சரைத் தள்ளிக்கொண்டு வேகமாகச் சென்று திருப்பத்தில் திரும்பி சிறப்பு சிகிச்சைப் பிரிவிற்குள் மறைந்தார்கள்.

பின்னாலேயே சென்ற சுதனுக்கு நினைவுகள் ஓடியது.

ஆறு மாதங்களுக்கு முன்…

இதே மருத்துவமனையில் தன் தனியறையில் சற்று ஓய்வாக அமர்ந்திருந்த சுதன் முன் நிர்மலா வைத்தியத்திற்காக நுழைந்தாள்.

நல்ல எடுப்பான உடம்பு. வாலிப்பான வயது. கண், மூக்கு, மார்பு…. இடை, உடை ஆளைப் பார்த்ததுமே இவனுக்குள் சிவுக்கென்று மின்சாரம் பாய்ந்தது. இது ஒரு சில பெண்களின் பிரத்தியோக கவர்ச்சி. இயற்கையின் வரப்பிரசாதம்.

அருகில் உட்கார்ந்தவளிடம்.. ”உடம்புக்கு என்ன? ” கேட்டான்.

”கணுக்கால்ல ஒரு கட்டி வந்து சிவந்து வீங்கி விண்விண்ன்னு வலி சார்.”

”காட்டுங்க ? ”

அவள் குனியும்போதே இடைவெளியைப் பார்த்து சுதன் பாதி செத்தான். புடவையை சிறிது வழித்து மேலே தூக்க…. அதன் நிறம், வாழைத்தண்டு பளபளப்பு கண்டு மொத்தமுமாக செத்தான்.

சாதாரண கட்டி வீங்கி சிவந்திருந்தது.

”அப்படி படுங்க.” திரை மறைவு கட்டிலைக் காட்டினான்.

நிர்மலா படுக்க….. சுதன் கண்களுக்கு அவள் ஒரு நோயாளியாகவேத் தெரியவில்லை. தன்னைச் சாய்க்க வந்த தேவதையாகத் தெரிய…..இவனுக்குள் வெப்பமும் மின்சாரமும் கூடியது.

புடவையைக் கணுக்கால் வரை ஏற்றி ஆராய்வது போல் கைவைத்து ”வலிக்குதா வலிக்குதா? ” கேட்டு மெல்ல அழுத்தி கேட்டு முன்னேற்றினான்.

அவள், ”இல்ல சார். இல்ல சார். வலிக்குது சார். இங்கே இல்லே சார் அடித்தொடையிலெல்லாம் இல்லே சார்.” என்று நெளிந்தவள் அடுத்த விநாடி, ”பொறுக்கி நாயே !” கத்தி அவனை அவசரமாகத் தள்ளி எழுந்தாள்.

சுதன் அதிர்ந்தான்.

”இப்படியா நீ ! இந்த நிமிசமே கத்தி வெளியில சேதி சொன்னா உதை விழும். அதோடு மட்டுமில்லாம…இந்த மருத்துவமனை தூளாகி எதிர்காலமே இருட்டாகிடும். போனாப் போகுது விடுறேன். மீறினா… நடக்கிறதே வேற. விலகு.” கத்தி வேகமாக வெளியேறினாள்.

அடுத்த விநாடியே உறைந்து சிலையாகிப் போன சுதனுக்கு அவள் சொன்னதெல்லாம் மண்டையில் ஏற…. குப்பென்று வியர்த்து உடல் நடுங்கியது. மெல்ல வந்து நாற்காலியில் சாய்ந்து இளைப்பாறினான்.

இதோ மறுபடியும் நிர்மலா. சாதாரண வலிப்பில் மயக்கம்.

உள்ளே நுழைந்த சுதன்…சுறுசுறுப்பாக நிர்மலா முகத்தில் செயற்கை சுவாச கருவி பொறுத்தினான். அதே விறுவிறுப்பில் ஸ்டெத்தை அவள் நெஞ்சில் வைத்து பரிசோதித்து தன் அறைக்குச் சென்று வந்து தானே அவளுக்கு ஊசி போட்டு பிரிஸ்கிரிப்சன் எழுதினான்.

”சிஸ்டர் ! நோயாளி நிலைமை ரொம்ப மோசம். நான் கிட்டே இருந்து கவனிக்கனும். நீங்க போங்க.” என்று உத்தரவிட்டு அவர்களுக்கு முன் வெளியே வந்தான்.

தனக்குப்பின்னால் வெளியேறியவர்களிடம் ”இந்த அம்மா கணவனை அனுப்புங்க” சொல்லி வாசலில் நின்றான்.

அவர்கள் சென்ற அடுத்த விநாடி முகேஷ் கலவரமாக வந்தான்.

”இந்த ஊசியை நோயாளிக்கு ஒரு மணி நேரத்துல போட்டாகனும். போய் சீக்கிரம் வாங்கி வாங்க.” சீட்டை நீட்டினான்.

வாங்கிய முகேசுக்குக் கை நடுங்கியது. ”சார் ! எங்கே கிடைக்கும் ? ” பார்த்தான்.

”இங்கே கிடைக்கிறதுக்கு வாய்ப்பில்லே. கண்டிப்பா விழுப்புரத்துல கிடைக்கும். பேருந்துல போனாக்கூட போக அரை மணி நேரம் வற அரை மணி நேரம். ஒரு மணி நேரத்துல திரும்பிடலாம். கார் எடுத்துப் போனீங்கன்னா… கால்மணி நேரம் முன்னதாவே திரும்பிடலாம்.”

”நான் கார் வைச்சிருக்கேன் சார்.”

”அப்போ பிரச்சனை இல்லே.”

”விழுப்புரத்துல எங்கே சார் ? ”

”மரியம் மருந்து கடையில கிடைக்கும். இல்லேன்னா… அங்கேயே விசாரிச்சா…இருக்கும் இடம் சொல்வாங்க. பயப்படவேணாம். நீங்க ரொம்ப படபடப்பா இருக்கீங்க. வேகம் போக வேணாம்;. நான் ரெண்டு மணி நேரம் தாங்குறாப்போல முதலுதவி செய்திருக்கேன். கிடைக்கும் இடம் தேடிப் பிடிச்சு வாங்கி பொறுமையாய் வாங்க.”

”சரி சார்.” அவன் வேகமாக அகன்றான்.

‘இந்த நிலைமையில டாக்டர் சொல்றதுதான் வேதம்ன்னு மனுசன் செயல்படுவான் என்கிறதை வைச்சு இங்கே கிடைக்கும், தன் மருத்துவமனை மருந்தகத்தில் கைவசமிருக்கும் அந்த சாதாரண ஊசிக்காக காவல் இருக்கும் ஆளை அப்புறப்படுத்தியாச்சு.!’ என்று நிம்மதியாக உள்ளே நுழைந்த சுதன்,

”நிர்மலா ! உன் உயிருக்கு ஆபத்தில்லே. ஆனா…பார்வைக்கு ஆபத்து என்கிற மாதிரி சும்மா செயற்கை சுவாச கருவி பொருத்தி பார்க்கிற கண்களுக்குப் பாவலாக காட்டி இருக்கேன். நீ சீக்கிரம் கண் விழிக்கக் கூடாது என்கிறதுக்காக முன்னெச்சரிக்கையாய் மயக்க ஊசி போட்டாச்சு. இப்போ நீயும் நானும் தனி. என் ஆசையை நிறைவேத்திக்கப் போறேன். இப்போ தடுத்துப் பார்.” மனசுக்குள் சொல்லி தொட்டான்.

அடுத்த விநாடி அதற்குள் சின்ன மளுக்.

‘ஆசையை முடிச்சிக்கிறது சுலபம். ஆனா…அடுத்து ? நிர்மலா கற்பு உள்ளவள். அடுத்தவன் கைபட சம்மதிக்காதவள். சுதாரிப்பானவள். கண் விழிச்சு எழுந்ததுமே தனக்கு நடந்தது அவளுக்குத் தெரியும். தெரியலைன்னாலும் சந்தேகத்துல வேற மருத்துவமனையில் போய் பரிசோதிப்பாள். குட்டு உடையும். பிறகு… ஆபத்து, அவமானம், சிறை, தொழில் நாசம், எதிர்காலம் மோசம். தேவையா ? ‘ நினைப்பு வர….தொட்ட கையை எடுத்தான்.

‘கிடைக்காதது…இருக்கிறதைவிட இல்லாம போறதுதான் சரி ! சம்பந்தம் இல்லாத மருந்தைச் செலுத்தி சாகடி !’ அதே மனசு குளறுபடி அடித்தது.

‘இல்லாம போறதுன்னு முடிவிற்கு வந்த பிறகு…அதை அனுபவச்சி அனுப்புறதுல தப்பு இல்லே !’ குரங்கு புத்தி ஒன்றும் குறுக்கால் பாய்ந்தது.

”வேணாம் ! போஸ்ட்மார்ட்டம்ன்னு போனால் குட்டு அம்பலமாகும். நீ முன்னெச்சரிக்கையாய் மயக்க ஊசி போட்டதே அதிகம். அதிலேயே அவள் ஆயுசு கம்மி. குறிப்பிட்ட நேரத்திற்குள் மருந்து வரலைன்னா ஆள் முழுசும் காலி. போஸ்ட் மார்ட்டம் போனால்கூட அது

முதலுதவிக்காகப் போட்ட முன்னெச்சரிக்க நடவடிக்கைன்னு சொல்லி தப்பிக்க வாய்ப்பிருக்கு. சாதாரண தப்புன்னு சகதொழில்காரனைக் காட்டிக் கொடுக்க மனசு இல்லாம மன்னிப்பாங்க. அதிகம் போனால் வாய்ப்பிருக்காது. ஜாக்கிரதை !” எச்சரித்தது.

அவ்வளவுதான். சுருங்கினான்.

ஆனாலும் மனம் கேட்காமல் ‘உன் புருசன் மருந்து வாங்கி சீக்கிரம் வா வாய்ப்பில்லை. வந்தாலும் விபத்து அது இதுன்னு குறிப்பிட்ட நேரத்துக்கு வராம தாமதமாய் வருவான். நீ செத்துத் தொலை.!!’ மனசுக்குள் சொல்லி வெளியே வந்தான்.

‘மரியம் மெடிக்கல் கடல்’ பெயருக்கேற்றாற்போல் கடை பெரிதாக இருந்ததேத் தவிர கூட்டம் இல்லை. முதலாளி கல்லாவில் அமர்ந்திருக்க… ஐந்தாறு தொழிலாளிகள் ஆளுக்கொரு வேலைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மருந்துகளைச் சரி பார்த்துக்கொண்டிருந்த வேலன், ”மொதலாளி ! இந்த மருந்து தேதி இன்னையோட காலாவதி. தூக்கிப் போட்டுடலாமா ? ” அவரிடம் குப்பியைக் காட்டினான்.

வாங்கிப் பார்த்த தனசேகரனுக்கு விலை ஆயிரம் என்றதும் விடமனசில்லை.

”இன்னைக்கு ஒரு நாள் இருக்கட்டும். வாங்குறவங்க கவனிக்கலைன்னா போகட்டும். பார்த்து திருப்பினால் மன்னிச்சுக்கோங்க சொல்லி தூக்கிப் போடலாம்.” திருப்பினார்.

வேலன் அதை வாங்கி உள்ளே வைக்கும் நேரம்….முகேஷ் படியேறி ”சார் ! இந்த மருந்து அவசரம், சீக்கிரம்!” அவனிடம் பிரிஸ்கிரிப்சனை நீட்டினான்.

உடன் வாங்கிக் கொண்டு அதே வேகம் படி இறங்கினான்.

சரியாய் ஒரு வருடத்திற்கு முன் விஜயா பார்மாச்சுக்கள் மருந்து தயாரிப்பு கம்பெனி.

வீட்டில்…. இரவு அதிக நேரம் கண்விழித்த தாக்கம் மருந்து கலவைக்காண கணனியில் வேலை செய்துகொண்டிருந்த ராகுலுக்கு அவ்வப்போது கண்கள் இழுத்தது. சமாளித்து ஒப்பேற்றிக் கொண்டிருந்தான்.

வந்து கணனியைக் கவனித்த ரூபனுக்கு அதிர்ச்சி.

”ஏய்ய்… நிறுத்து நிறுத்து !” மெலிதாய்க் கூவி ஒரு பட்டனைத் தட்டினான்.

நின்றது.

”என்ன ? ”

”உன் தூக்கத்தினால மருந்துக் கலவைத் தவறிப்போகுது.”

”அப்படியா ?!!!” ராகுலுக்கு அதிர்ச்சி. ”என்ன செய்ய ?”

”காலாவதி தேதிதான் அதிகமாகும். பாதகமில்லே. திருத்திக்கோ. ஒழுங்கா இரு” திருத்தி சொல்லிப் போனான்.

வேகமாக படியேறி மூச்சிரைக்க வந்து மருந்தை நீட்டி நின்ற முகேசைப் பார்த்த சுதனுக்கு அதிர்ச்சி.

”பரவாயில்லே. அரை மணி நேரம் முன்னதாக வந்துட்டீங்க” என்றவன் காலாவதி தேதியைப் பார்த்ததும் மலர்ந்தான்.

”நிர்மலா ! உன் ஆயுசு அற்பம். நான் போனாப் போகுதுன்னு விட்டால் கூட எமனுக்கு உன்னைவிட மனசில்லே. இந்த மருந்தை உன் உடல்ல செலுத்தி…. தப்பிக்க என் கைவசம் இருக்கும் மருந்தை பயன்படுத்தினாப்போல உடைச்சு சரி செய்ஞ்சுக்கிறேன்.” என்று மனசுக்குள் சொல்லி சிறப்பு சிகிச்சைப் பிரிவிற்குச் சென்று அவள் உடலில் அந்த ஊசியை ஏற்றினான். !!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *