திருமகள் தேடி வந்தாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 14, 2020
பார்வையிட்டோர்: 7,472 
 

என் தாத்தா; என் பாட்டியை “நாச்சியார்” என்று வாய் நிறைய அழைப்பார்கள். அவர்கள் அழைப்பதைப்பார்த்து, நான் “நாச்சி” என்று மழலையில் அழைக்கத் துவங்கி, அப்படியே இன்று வரைக்கும் பழக்கமாகிவிட்டது. எங்கள் குடும்பம் அன்பு நிறைந்த குடும்பம். அதற்கு காரணம் முழுக்க முழுக்க என் நாச்சிபாட்டிதான். அவர்களின் அன்பான, கனிவான பேச்சு எல்லோரையுமே அன்பினால் கட்டிப் போட்டு அன்பினால் நிரப்பி இருந்தது.

நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதுதான் என் நாச்சியை நான் பிரிய நேரிட்டது. அப்பாவுக்கு வேலை நிமித்தமாக ஓரிரு வருடங்களாவது ஆப்ரிக்கா போகவேண்டி இருந்தது. தாத்தா, பிடிவாதமாக என்னையும் அம்மாவையும் அப்பாவுடன் கூடவே ஆப்ரிகாவுக்கு அனுப்பி வைத்து விட்டார்கள்.

அங்கு, தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற தமிழ் மக்களுக்கான பள்ளியில் சேர்ந்து படித்துவரலானேன். ஆப்ரிக்கா வந்த புதிதில் தினந்தோரும் நாச்சியுடன் போனில் பேசி வந்தேன். ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு தாத்தாவுக்கு திடீரென்று உடல் நலம் குன்றி படுத்த படுக்கையாகிவிட, “நாச்சிக்கு, தினமும் போன் பண்ணி தொல்லை கொடுக்காதே” என்று அப்பா சொல்லிவிட்டார்கள். எனக்கு ஏகமாக வருத்தம் ஆகிவிட்டது. எனக்கும், நாச்சியை தொந்தரவு செய்ய மனம் வரவில்லை. ஆகவே போன் பேச்சு மாதம் ஒரு முறை மட்டும் என்றானது. எல்லோருக்கும் தாத்தா குரித்த கவலை பெரும் கவலை ஆனது. தொடர்ந்து வந்த தத்தாவின் மரணச் செய்தி, பேரிடியாக எங்களைத் தாக்கியது. எனக்கு இங்கு வருடாந்திர தேர்வு என்பதால் என் பெற்றோர்; அப்பாவின் நண்பர் வீட்டில் , என்னை விட்டுவிட்டு ஊர் போய் வந்தார்கள். தாத்தாவின் இழப்பு எனக்கு தளர்சியைத் தந்தது. தேர்வுகளை ஏனோதானோ என்று எழுதி வைத்தேன்.

ஊரிலிருந்து திரும்பிவந்த பெற்றோர் சோர்வாக காணப்பட்டனர். “தாத்தாவுக்கு, பேரன் கையால் நெய்ப்பந்தம் பிடிக்காமல் செய்துவிட்டாயே” என்று அப்பாவை நாச்சி கடிந்துகொண்டார்கள் என்று அம்மா என்னிடம் சொன்னார்கள்.

வருடங்கள் இரண்டு ஓடிப்போனது. நாச்சியை இங்கு வரும்படி அழைத்தும், அவர்கள் வர மறுத்துவிட்டார்கள். “அதான் ஆறேமாதத்தில் ஊரோடு வந்துவிடப் போகிறீர்களே” என்று சொல்லிவிட்டார்களாம். நாச்சியை கூடிய சீக்கிரம் சந்திக்கப்போகிறோம் என்ற புத்துணர்சியினால் படிப்பில் அதிக கவனம் செலுத்தினேன். நான் மருத்துவம் படிக்கவேண்டும் என்ற நாச்சியின் ஆசையை நினைவு படுத்திக்கொண்டு அப்படிப்பில் சேர அதிக மதிப்பெண்கள் பெற பாடு பட்டு படித்தேன்.

சிறிது நாட்களிலெயே நாச்சிக்கு உடல் நலம் சரி இல்லை என்ற செய்தி வரவே, என் பெற்றோர்கள் மட்டும் ஊருக்கு சென்றார்கள்.

அப்பாவின் நண்பர் வீட்டில் நான் தங்க வைக்கப்பட்டேன். அந்த மாமாவின் போனிலிருந்து நாச்சியிடம் பேசினேன். ரொம்ப முடியாமல்தான் பேசினார்கள். இங்கு வந்துவிடு நாச்சி என நான் கெஞ்சிக் கேட்டும் “நீதான் சீக்கிரமே இங்கு வந்துவிடப்போகிறாயே நேரிலேயே ” என்று சமாதானம் சொல்லி மறுத்துவிட்டார்கள். அப்பாவும், அம்மாவும் ஊரிலிருந்து வந்ததும் நாச்சி பற்றி விசாரித்தேன். நேரில் போய் பார்த்துக் கொள்ளலாம் என்றார்கள்.

ஒருவாறு தேர்வுகள் முடிந்தன. மகிழ்ச்க்சியுடன் இந்தியாவுக்கு கிளம்ம்ப மூட்டை கட்ட ஆரம்பித்தேன் “என்னைப் பார்த்தால் நாச்சி உடல் நலம் தேறிவிடுவார்கள் அப்பா” என சோர்ந்திருந்த அப்பாவுக்கு சமாதானம் சொன்னேன்.

ஊர் வந்தவுடன்தான் தெரிந்தது “நாச்சி என்னை விட்டு மட்டுமல்ல உலகத்தைவிட்டே போய் விட்டர்கள்” என்ற விவரம். “ஊருக்கு வந்தவுடன் நேரில் பார்க்கலாம் என்றாயே. என்னை ஏமாற்றி விட்டாயே! நீ பெரிய ஏமாற்றுக்காரி” என நான் கதறி அழுதேன். “ஏன் என்னை ஏமாற்றினாய்” என அழுது மனம் சோர்ந்தேன்.

நாட்கள் நகர்ந்தன. மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்துவந்தேன்.ஒரு நாள் ஒரு முக்கிய வகுப்பிற்காக வகுப்புத் தோழர்கள் குழுமி இருந்தோம். ஹாலின் நடுவிலிருந்த மேஜைமேல் வைக்கப்பட்டிருந்த உடலின் மீது போர்த்தப்பட்டிருந்த போர்வை அகற்றப்பட்டது. அங்கு என் நாச்சி தேய்வீக களையுடன் படுத்திருந்தார்கள்!!. “என் நாச்சி பொய் சொல்லமாட்டர்கள். இந்தியா வந்தவுடன் என்னை நேரில் பார்கலாம் என்றார்களே. இதோ அந்த திருமகள் தேடி வந்து விட்டார்கள். நாச்சி! உன் உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக் கொடுத்துவிட்ட காரணம் நான் உன்னை நேரில் பார்க்க வருவேன் என்பதற்கா நாச்சி”? நான் உடைந்து போனேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *