பேய் பேய்தான்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: February 25, 2020
பார்வையிட்டோர்: 103,622 
 

கல்பனாவுக்கு வயது இருபத்தி நான்கு. பி.ஈ முடித்துவிட்டு சென்னையில் ஒரு பிரபல ஐடி கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலையில் இருந்தாள். கழுவிச் சீவிய பப்பாளி நிறத்தில் தளதளவென்று இருந்தாள். சொந்த ஊர் மதுரை.

பெண்களுக்கான ஹாஸ்டல் டி.நகர் மார்க்கபந்து மேன்ஷனில் அவளுடைய தோழி நீரஜாவுடன் கல்பனா தங்கியிருக்கிறாள். நீரஜா மத்திய அரசின் ஆர்க்கியாலாஜி டிபார்மென்டில் வேலை செய்கிறாள். வாழைக்காய் கெச்சல் போல இருந்தாள். சொந்தஊர் காரைக்குடி.

இருவருக்கும் கடந்த மூன்று வருடங்களாக நட்புடன் கூடிய நல்ல புரிதல். பொங்கலை ஒட்டி வந்த ஒரு நீண்ட விடுமுறையில் இருவரும் ஊட்டி சென்றுவர முடிவு செய்தனர்.

நீரஜாவின் அப்பாவின் நெருங்கிய நண்பர் சிவா, ஊட்டி பார்ஸன் வாலியில் (Parsan Valley) ஒரு பழைய ஹோட்டல் வைத்திருந்தார். கோயமுத்தூர் ஏர்போர்ட்டுக்கு அவரே ஜீப்பை ஓட்டிவந்து தோழிகளை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். அந்த ஹோட்டல் ஊட்டிக்கு வெளியே சற்று ஒதுக்குப்புறத்தில் ஒன்பது அறைகளுடன் தனிமையாக இருந்தது. அறைகள் மிகப் பெரியதாக உயரமான கூரைகளுடன் காணப்பட்டது. பெரிய அறையின் மூலையில் ஒரு டேபிள், அதன்மீது அழுக்காக ஒரு போன், அதற்குக் கீழே ஒல்லியாக ஊட்டி டெலிபோன் டைரக்டரி வைக்கப் பட்டிருந்தது. மலைகளின் நடுவில் ஹோட்டல் அமைதியாக வீற்றிருந்தது. பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், பயமுறுத்தும் விதமாக அமானுஷ்யமாக இருந்தது.

நீரஜா கல்பனாவைத் தவிர வேறு எவரும் அந்த ஹோட்டலில் அப்போது தங்கியதாகத் தோன்றவில்லை. இரவு ஏழுமணிக்கே சாப்பாடு தயார்செய்து சுடச்சுட பரிமாறினார்கள். குளிர்வேறு வாட்டி எடுத்தது. சாப்பாடு முடிந்ததும் ஹோட்டல் விளக்குகள் அணைக்கப்பட்டன. வெளிப்புறம் இரண்டு செக்யூரிட்டிகள் மட்டும் காவலுக்கு இருந்தனர்.

தூக்கம் வராததால் நீரஜா பேய்க் கதைகள் நிறைய சொல்ல ஆரம்பித்து விட்டாள். கல்பனா மிகவும் பயந்த சுபாவம். அன்று இரவு சற்று பயத்துடன் இருவரும் தூங்கி எழுந்தனர்.

மறுநாள் காலை ஒன்பது மணிவாக்கில் சிவா ஜீப்பை ஓட்டிக்கொண்டு வந்தார். அவர்களுக்கு பார்ஸன் வாலியை ஜீப்பில் சுற்றிக் காண்பித்தார். அந்த இடத்தில்தான் மணிரத்னம் டைரக்ஷனில் ‘ரோஜா’ படத்தின் க்ளைமாக்ஸ் எடுக்கப்பட்டதாகச் சொன்னார். அடுத்து அவர்களை வெஸ்டர்ன் காட்ஸ் பகுதிக்கு அழைத்துச்சென்று யானைகளையும், கேரளாவின் பார்டர் ஏரியாவையும் காண்பித்தார். ஹோட்டலுக்குத் திரும்பி வந்து அனைவரும் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, நீரஜாவின் மொபைல் சிணுங்கியது.

எடுத்துப் பேசியவள் “ஐயோ அப்பா” என்று அலறினாள். அவளுடைய அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் என்று அம்மா சொல்லியதாகச் சொல்லி அழுதாள். சிவா அவளை உடனே அழைத்துக்கொண்டு கோயமுத்தூர் ஏர்போர்ட் விரைந்தார். தைரியமாக இருக்கச் சொன்னார்.

கல்பனா ஹோட்டலில் தனித்து விடப்பட்டாள். அடுத்தநாள் மாலைதான் அவளுடைய சென்னை விமானம். அந்த ஹோட்டலில் தனியாகத் தங்க அவளுக்கு பயமாக இருந்தது. சிவாவின் வீடு ஊட்டியில் இருக்கிறது என்பதால் அவர் ஊட்டிக்கு சென்றுவிட்டார். மறுநாள் மதியம்தான் அவர் ஹோட்டலுக்கு திரும்பி வருவார், கல்பனாவை பத்திரமாக ஏர்போர்ட்டில் கொண்டு சேர்ப்பதற்காக.

ஆனால் அன்று மாலை ஐந்து மணிவாக்கில் கோயமுத்தூர் சென்று அங்கு தங்கிவிட கல்பனா திடீரென முடிவு செய்தாள். ஷோல்டர் பேக்கை எடுத்துக்கொண்டு ஜீன்ஸ் டீஷர்ட்டில் ஸ்டைலாக ஹோட்டலை விட்டுக் கிளம்பினாள். ஹோட்டலில் ட்ரான்ஸ்போர்ட் வசதி எதுவும் இருக்கவில்லை. எனவே அருகிலிருந்த ஒரு சிறிய பஸ் நிறுத்தத்தை நோக்கி நடந்துசென்று பஸ்ஸுக்காக காத்திருந்தாள்.

ரொம்ப நேரம் காத்திருந்தும் பஸ் எதுவும் வரவில்லை. மழைவேறு[SK1] பிசுபிசுக்க ஆரம்பித்தது. இருட்ட ஆரம்பித்தது. கல்பனாவுக்கு மெல்லியதாக அடி வயிற்றில் ஒரு பயம் ஆரம்பித்தது. இன்று இரவு ஹோட்டலில் எப்படியேனும் கஷ்டப்பட்டு தனியாக தங்கியிருந்துவிட்டு நாளைக் காலையில் கிளம்பியிருக்கலாமே என்று தோன்றியது.

அப்போது ஒரு கார் வெளிச்சத்தை பரப்பிக்கொண்டு விரைந்து வந்தது. கல்பனா உடனே ரோட்டின் மத்திய பகுதிக்கு சென்று லிப்ட் கேட்டு கையை ஆட்டி காரை நிறுத்தச் சொன்னாள். ஆனால் அந்தக் கார் அவளை உரசிக்கொண்டு தாண்டிச் சென்றுவிட்டது. கல்பனாவுக்கு மிகுந்த ஏமாற்றமாகிப் போய்விட்டது. பயம் அடிவயிற்றைப் புரட்டியது. மழைவேறு சற்று வலுத்தது. முற்றிலும் இருட்டாகி விட்டது. கல்பனா தனியே பஸ்ஸுக்காக காத்திருந்தாள். மணி ஏழரை. குளிர் வாட்டியது.

அடுத்த பத்து நிமிடங்களில் மற்றொரு கார் சற்று மங்கலான வெளிச்சத்தை உமிழ்ந்துகொண்டு அவளை நோக்கி மெதுவாக ஊர்ந்து வந்தது. கல்பனா உடனே மழையில் நனைந்தபடி காரின் மேல் விழுந்து விடுவதுபோல் அதை மறித்தபடி ஓடிப்போய் நின்றாள். அது மெதுவாக ஊர்ந்ததே தவிர முற்றிலுமாக நிற்கவில்லை. யோசிக்க நேரமில்லை. ஆபத்துக்கு பாவமில்லை என்று எண்ணிய கல்பனா உடனே காரின் பின்பக்க கதவை அவசரமாகத் திறந்து பாய்ந்து உள்ளே புகுந்து கொண்டாள். அப்பாடா என்று நிம்மதியடைந்து சற்று நிதானமாகப் பார்த்தபோது அந்தக் காரில் யாருமில்லை. உள்ளே இருட்டாக இருந்தது.

அப்பொழுதுதான் கல்பனா கவனித்தாள். காரின் முன்பக்க டிரைவர் ஸீட்டில் யாருமே இல்லை. ஆனால் கார் மட்டும் தானாக நகர்ந்து கொண்டிருந்தது. கல்பனா உறைந்து போனாள். பயத்தில் நாக்கு ஒட்டிக்கொண்டது. கத்தவும் முடியவில்லை. அப்படியே கத்தினாலும் அந்த இருட்டு வனாந்தரத்தில் யார் உதவிக்கு வரப்போகிறார்கள்?

கார் சீராக ஓடிக் கொண்டிருந்தபோது ஒரு பெரிய வலதுபக்க திருப்பம் வந்தது. எதிரே மிகப்பெரிய பள்ளத்தாக்கு. கார் அதில் விழுந்து நிச்சயம் செத்தோம் என்று பயத்தில் பதறியபோது, திடீரென ஒரு நீண்ட மனிதக் கை ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து கார் ஸ்டீரியங்கை வலதுபுறம் திருப்பியது. கல்பனா பயத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டாள்.

கார் சரிவான ரோடில் சற்று வேகமாகச் சென்றது. சற்று தூரத்தில் ஒரு பெரிய கேட் தெரிந்தது. உள்ளே விளக்குகளின் வெளிச்சம். அது ஒரு பெரிய ஹோட்டல் என்பதைப் புரிந்துகொண்டாள். கார் வேகமாக கேட்டினுள் புகுந்தபோது அங்கிருந்த செக்யூரிட்டி காரைத் தடுத்து நிறுத்த முயன்றான். அது நிற்காமல் அவனைக் கடந்து சென்று தறிகெட்டு ஓடி போர்ட்டிகோவில் ஏற்கனவே நின்றிருந்த மற்றொரு காரின் மீது மோதி நின்றது.

அவ்வளவுதான், கல்பனா மின்னலென காரிலிருந்து வெளியேறி ஹோட்டல் ரிசப்ஷனுக்கு ஓடிச்சென்று “பேய் பேய்” என்று அலறியபடி அங்கிருந்த சோபாவில் மயங்கிச் சரிந்தாள். ரிசப்ஷன் ட்யூட்டியில் இருந்த ஆண்கள் போர்ட்டிகோவுக்கு ஓடிச்சென்று பார்த்தனர். அங்கு இரண்டு கார்கள் மோதியபடி நின்றதைப் பார்த்து திகைத்து நின்றனர். புதிதாக உள்ளே வந்து மோதிய காரில் ட்ரைவர் இல்லாதது கண்டு மேலும் அதிர்ச்சியாகினர்.

அடுத்த இரண்டு நிமிடத்தில் அந்த இடத்திற்கு இரண்டு இளைஞர்கள் மூச்சிரைக்க ஓடிவந்தனர்.

அதில் ஒருவன் “ஸாரி ஜென்டில்மென், நாங்கள் பார்ஸன் வாலியில் காரை நியூட்ரலில் நிறுத்திவிட்டு டீ குடிக்கச் சென்றோம். ஹாண்ட் ப்ரேக் போட நான் மறந்துவிட்டேன் போலும். அதனால் கார் நகர ஆரம்பித்துவிட்டது. காரைத் துரத்திக்கொண்டே அதன் பின்னாலேயே நாங்கள் ஓடி வந்தோம்; நல்லவேளையாக ஒரு பெரிய திருப்பத்தில் காரைத் திருப்பிவிட்டோம். அது என்னடாவென்றால் சரிவான ரோடில் விரைந்துவந்து உங்கள் ஹோட்டலுக்குள் நுழைந்து விட்டது…”

மற்றொருவன் பதட்டத்துடன், “ஹாங்… ஒரு பெண் காரின் உள்ளே பாய்ந்து ஏறிக்கொண்டாளே…” என்று காரினுள் எட்டிப்பார்த்தான்.

உள்ளே யாருமே இல்லாதது கண்டு, “ஓ காட், அது பெண்ணல்ல பேய்” என்று அலறியபடி சரிந்தான்.

Print Friendly, PDF & Email

2 thoughts on “பேய் பேய்தான்

  1. தெரியாத்தனமாக இரவில் கதையை படித்தேன். பயந்துவிட்டேன். விறுவிறுப்பான கதை.
    லாவண்யா, மேட்டூர்அணை, சேலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *