கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 30, 2023
பார்வையிட்டோர்: 13,301 
 
 

பேங்க் ஆஃப் டுபாகூர் வங்கியின் சென்னைக் கிளை. நோடீஸ் போர்டில் போட்டிருக்கும் சர்குலரை ஒருவர் சத்தமாக படிக்கிறார். “நம் வங்கி அலுவலர்க்கோர் நற்செய்தி. நம் சேர்மனுக்கு வெகுநாட்களாக ஒரு சந்தேகம் நிலவி வருகிறது. அதை நல்ல ஆபீஸ் நோட் வாயிலாக தீர்த்து வைப்பவருக்கு ஆயிரம் டாலர் பரிசாக அளிக்கப்படும்.” 

தருமி அங்கு வருகிறான். “ஏம்பா? பரிசுத் தொகை எவ்வளவு?” 

“ஆயிரம் டாலர்.” 

தருமி தனிமையில் புலம்புகிறான். “ஐய்யோ ஆயிரம் டாலராச்சே! ஆயிரம் டாலராச்சே!! எனக்கு மட்டும் அந்தப் பரிசு கிடைச்சிட்டா முதல்ல பையன் இஞ்சினீரிங் காலேஜ் ஃபீஸ் கட்டிடுவேன். அப்பறம் மிச்சம் இருக்கிற பணத்தில… கிரெடிட் கார்டு ட்யூஸ் கட்டிடலாம். ஐய்யோ… அடுத்தவன் எவனாது இதை கேட்டு நோட்டு போடறதுக்கு முன்னாடி நான் போடணுமே… இந்த சமயம் பார்த்து நோட்டு போட ஒரு ஐடியாவும் வரமாட்டேங்கிறதே. என்ன செய்வேன்? யாரைப் போய்க் கேப்பேன்?” 

சொக்கன் ஞாபகம் வருகிறது. “சொக்கா.. உன்னை விட்டா வேறு யாரு இருக்கா? ப்ளீஸ் ஹெல்ப் மீ.” 

சொக்கன் வருகிறார். “வங்கி அதிகாரியே” 

“யாருய்யா நீ?” 

“நான் யார் என்பது இருக்கட்டும். உமக்கு மட்டும் அந்த நோட் கிடைத்துவிட்டால்…” 

“ஆஹா அது மட்டும் கிடைச்சிடுச்சுன்னா என்னோட முக்கியமான பிரச்சனை ஒண்ணு தீர்ந்துடும்.! அட நீயும் அறிவிப்பைக் கேட்டாச்சா!! போச்சு. எல்லாம் போயே போச்சு. போயிந்தே. ஹோகயா. இட்ஸ் கான்.” 

“எனக்கு வேண்டாம். நீயே எடுத்துக் கொள்.” 

“என்னது. உன் நோட்டை நான்.. நான்.. எடுத்துகறதா? இங்கப்பாரு நான் பார்க்கறதுக்கு சாதாரணமாக இருக்கலாம். அஞ்சு வருஷத்துல ரெண்டு பிரமோஷன் வாங்கிருக்கேன்.” 

“எங்கே, என் திறமையின் மீது உமக்கு சந்தேகம் இருந்தால் சோதித்துப் பாரேன்? உனக்குத் திறமையிருந்தால். கேள்விகளை நீ கேட்கிறாயா? இல்லை, நான் கேட்கட்டுமா?” 

“ம்ஹும். எனக்கு கேள்வி கேட்டுத்தான் பழக்கம். தட்ஸ் ஆல்.” 

“எங்கே, கேள்விகளைத் தொடங்கு” 

பிரிக்க முடியாதது என்னவோ? நாமும் நம் கோரிக்கைகளும் 

பிரிந்தே இருப்பது? யூனியனும் மேனேஜ்மென்டும் 

சேரக்கூடாதது? பிரமோஷனும் டிரான்ஸ்பரும் 

சேர்ந்தே இருப்பது? ஏடிஎம்மும் டெபிட்கார்டும் 

சொல்லக்கூடாதது? டேக் ஹோம் பே 

சொல்லக்கூடியது? டெல்லர் டோக்கன் நம்பர் 

பார்க்க முடியாதது? சர்வீஸ் ஃபைல் 

பார்த்து ரசிப்பது? சம்பள பில் 

சம்பளம் என்பது? மாதம் ஒரு முறை வருவது 

டூர் என்பது? அடிக்கடி வருவது 

அதிரடி சர்வீசுக்கு? சானியா மிர்சா  

அபார சிக்ஸுக்கு? மஹேந்திர டோனி 

சூப்பர் ஜோடிக்கு? சூர்யா-ஜோதிகா 

சண்டை பார்ட்டிக்கு? சாப்பல் – கங்கூலி 

லோக்கல் டூருக்கு? நீ 

ஃபாரின் டூருக்கு? நான் 

“அப்பா!! ஆள விடு. எனக்கு தெரிஞ்சது இவ்வளவுதான். நீர்தான் சகலகலாவல்லவர். நீங்கள் எழுதிய நோட்டை கொடுங்கள். அதை அப்படியே பார்வெர்டு செய்கிறேன்.”

கொஞ்ச தூரம் சென்றுவிட்டு திரும்பி வந்து. “அது சரி.. பரிசு கொடுத்தால் வாங்கிக்கறேன்.மெமோ, சஸ்பென்டு மாதிரி வேறு எதாவது கொடுத்தால்?” 

“என்னிடம் வா. நான் பார்த்துக் கொள்கிறேன். ” 

“என்ன, சஸ்பென்ஷன் ஆர்டரை படிச்சு காட்டவா?” 

சொக்கன் சிரிக்கிறான். “கவலைப்படாதே சகோதரா. யூ வில் கெட் த ரிவார்டு. வெற்றி நிச்சயம்.” 

“என்ன சிரிப்பய்யா, உன் சிரிப்பு! சூர்யா மாதிரி சிரிப்பு!!” 

சேர்மன் செயலகத்தில் உள்ள கான்ஃபரன்ஸ் ஹாலில் தருமி. சேர்மன் கையில் தருமி எழுதிய நோட் இருக்கிறது. “மிஸ்டர் தர்மராஜன் அலியாஸ் தருமி அவர்களே! நீங்கள்தானே இந்த நோட்டை பார்வெர்டு செய்தது.” 

“ஆமாம். உங்கள் ஐயப்பாட்டை நீக்கும் அந்த அற்புத நோட்டை நானேதான் எழுதினேன்”. 

“எங்கே, நீரே படித்துக் காட்டும்.” 

தருமி படிக்க படிக்க சேர்மன் முகம் பிரகாசம் அடைகிறது. “ஆஹா! அம்சமான ஆபீஸ் நோட்டு!! ஆழமான கருத்துக்கள்!!! என் டவுட்டை க்ளியர் செய்துவிட்ட சூப்பர் நோட்டு!!!” 

தன் செகரெட்ரியை அழைத்து பரிசை கொண்டுவரச் சொல்லுகிறார். அப்போது ஜி.எம். என். கீரன் எழுந்திருக்கிறார். “சேர்மன் அவர்களே! ப்ளீஸ் வெயிட் அந்த நோட்டில் பிழை உள்ளது.” 

“யூ மீன் மிஸ்டேக்?” சேர்மன் திடுக்கிடுகிறார். ஆனால் தருமியோ… 

“பிழை இருந்தாலென்ன? எவ்வளவு பிழையோ அவ்வளவு பரிசுத் தொகையை குறைத்துக் கொடுங்களேன்.” 

ஆனால் அதற்கு என்.கீரன், “மிஸ்டர் தர்மராஜன்! நீர்தானே இந்த நோட்டை எழுதியது? ” 

“எஸ். நானேதான் எழுதினேன். பின்னே ஆபீஸ் கான்டீன்ல யாராவது எழுதிக்கொடுத்ததை கொண்டு வந்து கொடுப்பேனா? நானே… நானேதான் எழுதினேன்.” 

“அப்படியானால் அந்த நோட்டில் எழுதியுள்ளதை விளக்கி விட்டு பரிசை பெற்றுச் செல்லுங்களேன்.” 

“சேர்மனுக்கே விளங்கி விட்டது. நீங்க யாரு குறுக்கே?” 

“நான் இந்த டூபாகூர் வங்கியின் தணிக்கை பிரிவின் தலைவர். என். கீரன். ஜெனரல் மேனேஜர். எமது சேர்மன் மிக சரியான ஆபீஸ் நோட்டுக்கு பரிசளிக்கிறார் என்றால் அதை பார்த்து சந்தோஷப்படும் முதல் ஆள் நான்தான். அதே நேரத்தில் பிழையுள்ள நோட்டுக்கு பரிசளிக்கிறார் என்றால் அதற்கு வருத்தப்படுபவனும் நான்தான்.” 

“ஹோ. இங்க எல்லாமே நீங்கதானா. ஒரு சில பேர், ஏகப்பட்ட பைல்களை பார்த்து அதையெல்லாம் ரெஃபர் செஞ்சு நோட்டு போட்டு பேர் வாங்குவாங்க. ஒரு சில பேர், போட்ட நோட்டுல எங்கடா குற்றம் இருக்குன்ணு தேடி கண்டு பிடிச்சு பேர் வாங்கிட்டு போவாங்க. இதுல நீங்க எந்த வகையை சார்ந்தவர் என்று உங்களுக்கே புரியும். ஒண்ணு மட்டும் நிச்சயமய்யா. உங்கள மாதிரி ரெண்டு பேர்.. இல்லை நீங்க ஒருத்தரே போதும். இந்த பேங்க் உருப்பட்டாப்பலத்தான். சேர்மனிடம் சொல்லிவிடுங்கள். எனக்கு பரிசு வேண்டாம். நான் வருகிறேன்.” 

தருமி வேகமாக போக என். கீரன் அழைக்கிறார். “தருமி அவர்களே!” அழைப்பை நிராகரித்து தருமி இன்னும் வேகமாக ஓட, கான்ஃபரன்ஸ் ஹாலில் சிரிப்பலை. 

சேர்மன் மிகுந்த சோகத்துடன் அமர்கிறார். “நல்லவேளை! என்னை காப்பாற்றினீர்கள் ஜி.எம். அவர்களே!! இல்லையென்றால் என் மீது விஜிலென்ஸ் என்கொயரி வந்திருக்கும். தாங்க்ஸ். 

அங்கே தருமி புலம்பிக் கொண்டிருக்கிறான். “எனக்கு வேணும். இன்னமும் வேணும். ஐயையோ யாரோ இன்னமும் தொரத்தர மாதிரியே இருக்கே. இனிமே நான் எந்த நோட் போட்டாலும் ஏம்பா இது உன் நோட்டா? இல்லே, ஆபீஸ் கான்டீனுக்கு வந்த யாராவது எழுதிக் கொடுத்ததான்னு கேப்பாங்களே? இதுக்குத்தான்… இதுக்குத்தான் கண்டவனை நம்பி காரியத்துல எறங்கப்படாதுங்கறது. மாட்டிக்கிட்டல்ல. நல்லா அவஸ்த படு. ஏன்டா… ஏன்டா… ஏன்? ஐயோ இப்படி தனியா பொலம்பற அளவுக்கு கொண்டுவிட்டானே. சொக்கா. அவனை எதுக்குக் கூப்பிடணும். அவனை நம்பாதே. அவன் வரமாட்டான். அவன் இல்லை.” 

சொக்கன் வருகிறார். “தருமி. பரிசு கிடைத்ததா?” 

“வாய்யா. எல்லாம் கிடைச்சுது. நல்லவேளை டிஸ்மிஸ் செய்யல. நான் உனக்கு என்னய்யா துரோகம் செஞ்சேன்.” 

“வங்கி அதிகாரியே கான்ஃபரன்ஸ் ஹாலில் என்ன நடந்தது?” 

“ம்… இதெல்லாம் நல்லா ஏத்த எறக்கமா பேசு. நோட் போடும் போது கோட்டை விட்டுடு.” 

“என்ன நடந்தது?” 

“உன் நோட்டில் குற்றம் என்று சொல்லிட்டாங்கையா.” 

“என் நோட்டில் குற்றமா. சொன்னவன் எவன்?” 

“உன் பாட்டன். அங்க ஒருத்தன் இருக்கான். எல்லா சர்க்குலரும் அவருக்கு அத்துபடியாம்.” 

கான்ஃபரன்ஸ் ஹாலுக்குள் தருமியும் சொக்கனும் வேகமாய் வருகிறார்கள். சொக்கன் நெருப்பாய் கக்குகிறார். “இச்சபையில் என் நோட்டை குற்றம் சொன்னவன் எவன்?” 

சேர்மன் எழுந்து நின்று, “என். கீரன். அவன் இவன் என்ற ஏகவசனம் வேண்டாம். ஹவ் சம் டீசன்ஸ்சி. மரியாதையோடு கேள்வி கேட்டால் தக்க பதில் கிடைக்கும்.” 

“யார் இந்த கிழவன்?” 

“பேங்க் ஆஃப் டுபாகூரின் தலைமை தணிக்கையாளர்! என்.கீரன்!! ஜி.எம். மிகுந்த அனுபவம் உள்ளவர்!!” 

“அதிகம் அனுபவம் இருந்துவிட்டால் அனைத்தும் அறிவோம் என்ற அகம்பாவமோ?” 

கீரன் எழுந்து, “முதலில் நீங்கள் எழுதிய நோட்டை இன்னொருவர் மூலமாக அனுப்பியதின் காரணம்?” 

“அது நடந்து முடிந்த கதை. தொடங்கிய பிரச்சனைக்கு வாரும். எங்கு குற்றம் கண்டீர்? ஸ்பெல்லிங்கிலா? அல்லது ஃபார்மெட்டிலா?” 

“ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்தாலும் அவை மன்னிக்கப்படலாம். காரணம் எங்களிடம் எம்.எஸ். வேர்ட் இருக்கிறது. ஸ்பெல் செக் போட்டுக் கொள்வோம். ஆனால் பொருளில்தான் குற்றம் இருக்கிறது.” 

“கூறும். கூறிப் பாரும்.” 

“எங்கே நீங்கள் எழுதிய நோட்டை சொல்லும்.” 

நோட்டைப் படிக்கிறார். “போதும். போர் அடிக்கிறது. சுருக்கமாக சொல்லும். இதனால் தாங்கள் சொல்லவரும் கருத்து…” 

“புரியவில்லை? இந்தியாவில் உள்ள மற்ற வங்கிகளில் என்ன Work Culture இருக்கிறதோ அதேதான் நம் வங்கி கிளைகளிலும் உள்ளது என்பதுதான் என் வாதம்.” 

“ஒருக்காலும் கிடையாது. இதோ. எங்கள் வங்கி சர்குலர்களின் தொகுப்பு சி.டி இருக்கிறது. இதில் எங்குமே நீங்கள் சொன்ன கல்சர் குறிப்பிடப்படவில்லை. சர்குலர்களில் சொல்லப்படாத எந்த விஷயத்தையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம்.” 

“நிச்சயமாக?” 

“சத்தியமாக.” 

“நீ தினம் தினம் பார்க்கும் இன்ஸ்பெக்ஷன் மான்யுவல் மீது ஆணையாக..” 

“அதென்ன ஜுஜுபி மேட்டர்? நம் எல்லோரும் மறை பொருளாக மதிக்கும் பேங்கிங் ரெகுலேஷன் ஆக்ட் மீது ஆணையாக சொல்கிறேன். அக்ரிகல்சர். ஹார்ட்டிகல்சர்.. இது மாதிரி சில கல்சர்கள் இருக்கிறதே தவிர நீ சொன்ன கல்சர் ஒருக்காலும் இங்கு இருக்க முடியாது என்பதே என் கருத்து.” 

“மிஸ்டர் என்.கீரன். நன்றாக என்னை பாரும். நான் யார் தெரிகிறதா?” 

சொக்கன் மெதுவாக எம்.ஜி.ஆர். ஸ்டைலில் மீசையை பிய்க்கிறார். என்.கீரன் திடுக்கிடுகிறார். “ஆ! நீங்களே ரிசர்வ் வங்கியின் கவர்னர் ஆகுக. உங்கள் அதிகாரத்தினால் எனது வேலை போனாலும், பென்ஷன் கொடுக்காமல் போனாலும் குற்றம் குற்றமே. குற்றம் குற்றமே.” 

“கீரா. தும் ஹோகயா.” 

கீரன் கைகளை உயரே தூக்கி, கண்கள் மூடி…. 

“நான் வாங்கும் சம்பளம் நாலு நாளைக்குத்தான் போதும் 

நாய்ப் பாடு படுவேனே தவிர உம்மைப் போல் 

கான்டினில் நோட் டிராஃட் எழுத மாட்டேன்.” 

சொக்கன் என்.கீரனை எரித்துவிடுகிறான். 

சேர்மன் கூவம் நதிக்கரையோரம் ஓடிவருகிறார். “கவர்னர் அவர்களே! என்ன செய்துவிட்டீர்கள்? நீங்கள் போட்ட நோட் என்பது என் புத்திக்கு எட்டாமல் போனது தவறுதான். அவரை மன்னித்துவிடுங்கள்.” 

அப்போது சொக்கன் குரல் கேட்கிறது. “சேர்மன் அவர்களே! கவலை வேண்டாம். உங்கள் வங்கியில் ஒரு உயர்மட்ட சர்ப்ரைஸ் டெஸ்ட் செய்யவே யாம் நடத்திய நாடகம் இது. மிஸ்டர் என். கீரரை கூவத்தில் போட்டால், என்னால் கூட காப்பாற்ற முடியாத அளவுக்கு நாறிப் போய்விடுவார் என்பதால் அவரை கரையிலேயே விட்டிருக்கிறேன். இன்றைக்கு சனிக்கிழமை. ஆபீஸ் டைம் முடிந்துவிட்டது. நாளை ஹாலிடே என்னால் ஒன்றும் செய்ய முடியாது. திங்கட்கிழமை வழக்கம் போல் என். கீரன் ஆபீஸ் வருவார். அவருக்கு ஒன்னரை நாள் டூர் பேட்டா கொடுத்துவிடு. நான் வரட்டா.” 

நிலாச்சாரல்.காம் – 26 பிப்ரவரி 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *