கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: July 10, 2013
பார்வையிட்டோர்: 14,310 
 

சன்னல் வழியே சுள்ளென்று எட்டிப் பார்த்தது சூரியன். சன்னல் தன்னை உள் வாங்கியதால் அதற்குக் கட்டுப்பட்ட சூரியன், தனது ஒளியில் சன்னல் வடிவம் காட்டி அதற்கு நன்றி கடன் செய்தது. அதன் வரி வடிவ ஒளியை இரசித்தவாறு படுத்திருந்தாள் வைதேகி.

“”வைதேகி” சன்னமாக காற்றைக் கிழித்த சத்தம். “”இன்னுமா தூங்கறே?” என்ற கணவர் குரலுக்கு,

“”ம்ம்ம் எழுந்திருச்சாச்சு..” பதிலளித்தாள்.

வைதேகி காத்திருந்தாள்பிரிந்திருந்த கூந்தலை அள்ளி முடிந்தாள். ஒற்றை நாடி சரீரம். மிக லேசாக எழும்பிய வயிறு. நெற்றியில் ஒட்டியிருந்த ஸ்டிக்கர் பொட்டை சரி செய்தாள். அவளின் மூக்கும், பெரிய கண்களும் அவளது பொட்டு சைஸýக்கு தன்னைச் சரிப்படுத்தி கொண்டாற்போல் கச்சிதமான தோற்றம்.

நிதானமாகப் படுக்கையை எடுத்து வைத்து விட்டு, வாஷ்பேஸினுக்குச் சென்று முகம் அலம்பி, பல்துலக்கி விட்டு வந்தாள்.

மாமனார் காலத்திய வீடென்பதால், வீடு சற்றுப் பெரிதாகவும், தோட்டம் போடும் அளவுக்கு மண் வளம் உள்ளதாகவும் இருப்பதில் அவளுக்கு ரொம்பப் பெருமை. அதிலும் தோட்டத்து கிணறு, அதையொட்டிய துவைக்கும் கல், கொடிக் கயிறு இதெல்லாம் அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால்தான் வீட்டை புதுப்பிக்கும்போது, பிடிவாதமாக இவற்றை இடிக்கக்கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டாள்.

வாசலில் சிறிது நேரம் நின்று காலை நேரத்தை அனுபவித்தாள்.

வெள்ளைக் கோலத்தில் ஆரஞ்சு வண்ணம் இழுத்தாற்போல் பவழமல்லி பூ கொட்டிக் கிடந்தது. அதன் வாசம் தெருவிற்கே சென்ட் தெளித்தாற்போல் வீச, அந்த வாசத்தை அனுபவித்தவாறு, கேட்டில் கட்டி தொங்கவிடப்பட்டிருந்த பையிலிருந்து பால் பாக்கெட்டை எடுத்தாள்.

காலையில் வாசல் பெருக்குவது என்பது வைதேகிக்கு கஷ்டமான வேலை. அழகாக கொட்டி கிடக்கும் பூவை குப்பையென அள்ளி கொட்டி, பின் நீர் தெளித்து கோலமிட மனம் வராது. அதனாலேயே வாசல் பெருக்க ராமாயி அக்காவை வேலைக்கமர்த்தியிருந்தாள்.

“”என்னம்மா.. இன்னும் இங்ஙனயே நின்னுட்டு இருக்கீங்க?” ராமாயியின் குரல் கேட்டு கலைந்தாள்.

“”இந்த பூ கொட்டி கிடக்கிறத பாருக்கா.. எப்படி தான் மனசு வந்து கூட்றியோ, தெரியல”

“”குப்பை கிடந்தா கூட்டிதானேம்மா ஆகணும்” என்றவாறு பரட் பரட்டென்று பெருக்கினாள் ராமாயி.

தரையில் நியூஸ் பேப்பரை விரித்து படித்துக் கொண்டிருந்தார் ராஜகோபால்.

ராஜகோபால் – அவளது கணவர். அமைதியானவர். கோதுமை நிறத்தில் லேசான முன்வழுக்கையில், களையான முகம். காதோரம் நரைத்த முடி அவர் வயதை அறுபது என உரக்கச் சொல்லும். வேலை, குழந்தை வளர்ப்பு, குழந்தைகளின் படிப்பு என அவரது கவனத்தை, மனைவியின் இரசனை என்றைக்குமே கவர்ந்ததில்லை.

பாலை அடுப்பில் ஏற்றி, டீத்தூளை போட்டு, இரண்டு இஞ்சியையும் தட்டி போட்டாள். நல்ல நிறத்தில், சுவையான டீ.

“”ஏழரை ஆச்சு இன்னும் குளிரும் போகலை,.. வெயிலும் உறைக்கல … டீ நல்லா இதமா இருக்கு” ராஜகோபால்

“”மார்கழி பனியும், ஆண்டாள் திருப்பாவையும் விடியற்காலையிலே லேசான பனியும், உறைக்காத வெயிலும், பாரதியார் பாட்டும் இந்த இளங்காலையிலே சூப்பர் காம்பினேஷன் இல்ல” என்றாள் ஆர்வமாக கணவனிடம்.

“”பனியும், வீசிங்கும் கூட சூப்பர் காம்பினேஷன் தான் என்ன சொல்ற?”

பதிலை எதிர்பார்க்காதவாறு அவர் பேப்பரில் மூழ்கி விட, அவள் பழைய நினைவுகளில் ஆழ்ந்தாள்.

“”ஏண்டீ வைதேகி இவ்ளோ நேரமா வாசலைப் பெருக்கறே?” ஓங்கி ஒலித்தது அம்மாவின் குரல்.

“”இதோ வந்துட்டேம்மா..” இலைகளில் தவழ்ந்திருந்த பனியை சூரியன் சொட்டு சொட்டாக வெளியேற்ற, அதனை ரசித்து பார்த்துக் கொண்டிருக்கும் வைதேகி, அம்மாவின் குரலை கேட்டதும் உள்ளே ஓடுவாள் .

காலைப் பொழுதை வாசனையால் நிறைக்கும் பூ வாசம், சாணத்தின் வாசம், பாம்பு போல நெளிந்து நெளிந்து ஓடும் கிராமத்து மண் சாலைகள், சைக்கிள் போகும் பாதையில் ரோட்டோரம் கதிர் சுமந்து சாய்ந்தவாறு கிடக்கும் நெற்பயிர்கள், கிராமத்து அண்ணனை ஜெராக்ஸ் எடுத்ததுபோல கோபமும், தோழமையுமான மதுரை வீரன் சாமி, எதிர்பார்ப்பும், எதிர்ப்புமான தோழியின் காதல், ஓட்டமும் நடையுமாக நாலைந்து குட்டிகளுடன் அலையும் நாய்கள், “கொக், கொக்’ என்ற சத்தத்துடன் தானியங்கள் நிறைந்த பிளாஸ்டிக் தட்டை “டொக் டொக்’ என்று கொத்தித் தின்னும் கோழிகள், “பட்பட்’டென்று அம்மி தட்டும் ஓசை என ரசிக்க எத்தனையோ இருக்கிறது அவளுக்கு.

“”காலை நேரத்தில பொம்பள புள்ள துறுதுறுன்னு வேலை பார்க்க மாட்டீயா? எப்ப பாரு எதையாவது வெறிச்சு வெறிச்சுப் பார்த்துக்கிட்டு… இப்படி இருந்தா போற வீட்டில எப்படி குப்பை கொட்ட போறீயோ?” அம்மா அலுத்துக் கொண்டாள்.

இரவில் எல்லோரும் உறங்கிய பிறகு, கதைப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு உட்கார்வாள். “”ஏன்டீ நேரங்கெட்ட நேரத்தில இதெல்லாம் படிச்சிக்கிட்டு. வா வந்து படுத்துக்கோ” என்று பாசமாக மகளை அழைத்து பக்கத்தில் படுக்க வைத்துக் கொள்வாள்.

பாவம் என்ன செய்வாள் அம்மா. டவுனுமல்லாத, கிராமுமல்லாத அந்த ஊரில் மகளை சமுதாயக் கண்ணோட்டத்தில் பதவிசாக வளர்க்க வேண்டிய கடமை அவளுக்கு.

இவள் கையில் ஏதாவது புத்தகத்தையோ, நோட்டையோ திறந்து விட்டால் போதும்.

“”கதை, பாட்டுன்னு இப்படி உக்காந்தா, போற வீட்டில உன் குடும்பத்த யார் பாத்துக்குவா? பொண்ணா இலட்சணமா வீட்டு வேலையைக் கத்துக்க வா?” பெருங்குரல் எடுத்து அம்மா கத்துவாள்.

“”இப்ப அம்மா சொல்றபடி வீட்டு வேலை கத்துக்கடா. அப்பா உனக்குன்னு தனி சூட்கேஸ் வாங்கி தரேன். அதுக்குள்ள இதெல்லாம் வச்சுக்க. பின்னால உன் கல்யாணத்துக்கப்புறம் உன் புருஷன்ட்ட காட்டு அவர் சம்மதிச்சா எழுதுடா..” என்று தன் செல்ல மகளின் மனம் நோகாமல் பிரச்னையை முடிப்பார் அப்பா.

பட்டப் படிப்பிலும் பெற்றோர் விருப்பமே நிறைவேறியது. இவள் கேட்டது தமிழ் இலக்கிய படிப்பு. அம்மாவிடம் விருப்பத்தை சொன்னாள்.

“”என்னங்க வைதேகி என்ன சொல்றாள்னு கேளுங்க தமிழ் பண்டிட் ஆக போறாளாம்” அம்மாவின் கிண்டல் வென்று, தொழில் படிப்பில் அவளைச் சேர வைத்தது. படிப்பிற்கேற்ப நல்லதொரு வேலையும் கிடைத்தது. ஆனால் அவளுக்கு தான் ஏதோ குறைந்தாற்போலவே இருந்தது.

“”ஏங்க நம்ம பொண்ணு வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்தவுடனே கையில கதை புத்தகத்தை எடுத்துக்கறா. அதுல என்ன நல்லாவா எழுதுறான். கண்டதையும் படிச்சிட்டு கெட்டு போறதுக்குள்ள இவளுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வைச்சிடுங்க” என்று அப்பாவின் காதில் கிசுகிசுத்தது இவளுக்குக் கேட்காமல் இல்லை.

திருமணமும் முடிந்தது. கணவனின் அன்பும் கிடைத்தது.

ஒருமுறை பிறந்த வீட்டிலிருந்து வரும்போது ஒரு பெரிய பெட்டியைத் தூக்கி வந்திருந்தாள். அந்த சூட்கேஸின் மேலே பனிமலர் என்ற ஸ்டிக்கர் வேறு திருத்தமான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது.

“”என்னடீ கையில சூட்கேஸ்லாம் பலமாயிருக்கே”

நடுஹாலில் திறந்து வைத்து கணவரிடம் தான் ஒளித்து ஒளித்து எழுதிய கட்டுரைகள், கவிதைகள், பள்ளி, கல்லூரி நாளைய கலெக்ஷன் என ஆசைஆசையாய்க் காண்பித்தாள் வைதேகி.

“”இதெல்லாம் கூட உனக்கு தெரியுமா?”

“”இந்தாங்க.. படிச்சு பாருங்களேன்” என்று ஆர்வமாக அவன் கையில் திணித்தாள்.

“”எனக்கு இதிலெல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்லைம்மா” என்றான் விகல்பமின்றி.

முகத்தை தூக்கி வைத்து கொண்டாள் வைதேகி.

“”ஏம்மா டீயை குடிச்சிட்டு அப்படியே உக்காந்திருக்க” ராமாயி அக்காவின் குரல் அவளை நிகழ்காலத்திற்கு உசுப்பியது.

அவர்களுக்குள் ஒரு விநோத விஷயம். ராமாயி இவளை “அம்மா’ என அழைக்க, இவளோ ராமாயியை வயதைக்கருதி “அக்கா’ என்றழைப்பாள்.

இரவு சமைத்திருந்த பாத்திரத்தை தேய்க்க போட்டு விட்டு சோஃபாவில் வந்தமர்ந்தாள் வைதேகி.

எங்கே செல்கிறது மனம்? முன்பெல்லாம் முடியுமா? பேப்பர் வந்தாகிவிட்டது என்பது அது போடப்படும் சத்தத்தில் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.

பேப்பர் போடும் நேரத்திற்குள் பாதி சமையல் முடிந்திருக்கும். காலை நேர தெருவின் குரல்கள் அவள் கவனத்தை உரசும். மகனும், மகளுமாக இரு பிள்ளைகள். அப்போது தான் புத்தகத்தை எடுத்து வந்து எதையாவது சந்தேகம் கேட்பார்கள். குளிக்க வைப்பதிலிருந்து, பின்னல் போடுவது வரை என வேலைகள் வரிசை கட்ட,

சிந்திக்கவும் மறந்து விடுவாள்.

அனிச்சையாக டிஃபன் செய்தாள். மனம் ஏனோ நழுவி நழுவிச் சென்றது.

குழந்தைகள் பள்ளி பருவத்தில் இருக்கும்போது வருடத்திற்கு ஒருமுறை லீவுக்கு மாமியார் வீட்டிற்கு செல்ல வேண்டியிருக்கும்.

வெள்ளி பதித்தாற்போல் ஓடும் காவிரியின் சலசலப்பு அவளுக்கு பிடித்தமானதொன்று. அதிகாலையில் பட்டை பட்டையாக விபூதி சகிதம் அபிஷேக நீர் எடுக்கும் குருக்கள், கரையோர ஆலமரத்து பிள்ளையார், குடிநீர் சேந்தும் ஈர உடைப் பெண்கள், படித்துறையில் “டப்டப்’ என்ற ரிதத்துடன் துவைக்கப்படும் துணிகள் என எத்தனை சுவாரஸ்யங்கள் காவிரியில்.

கொழுந்தன் குடும்பம், நாத்தனார் குடும்பம், மாமியார், மாமனார் என பெரும் கும்பலைச் சமாளித்து நிமிரும்போது தான், இவளுக்கு தான் பெற்ற குழந்தைகளே நினைவுக்கு வரும். இதில் எங்கே தனக்கு நேரம் ஒதுக்குவது?

மார்கழி மாத காலை நேரம் அவளுக்கு மிகவும் பிடிக்கும். அதிகாலை நான்கு மணி முதல் கேட்கும் பஜனை சத்தம். ஸ்பீக்கரில் அலறும் மாரியம்மன் பாட்டு, பால்காரரின் “டபடப’ சத்தம். வாசல் தெளிக்கும் சத்தத்துடனான மண்பரியும் வாசம், மார்கழி காலையில் வாசலில் எரியும் சிறிய அகல், காலை நேர தண்ணீர் வருகை, எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்ததுபோன்ற வெண்பனி. அந்த பனி இலைகளில் சிலிர்த்து நிற்கும் தோற்றம் என பரவசமான மார்கழி காலை.

வரிசை கட்டி நிற்கும் காலை வேலைகளும், கணவரின் குரலும் அவளை நிற்க விடாது துரத்தும். பாதி கோலமிடுகையில் தூக்கம் விழித்து வரும் மகனும், மகளும் கலர் பொடியை கோலத்தில் கொட்டி கையால் தீட்ட, இரசித்து பார்ப்பாள் வைதேகி. செடிகளில் பூத்திருக்கும் பனியை கைகளால் தட்டி, தட்டி அதன் சில்லிப்பில், உடலை சிலிர்த்துக் கொள்ளும் குழந்தைகளை ஸ்வெட்டரோடு அணைத்துக் கொள்வாள்.

கணவரிடமிருந்து கோபமாகக் குரல் வரும், “”மணி ஆறரையாகுது. மூணுபேரும் வாசல்ல என்ன செய்றீங்க? இந்த பனியில ஸ்கூல் திறக்கிற நேரத்தில சளி, காய்ச்சல்னு படுத்துக்கிறத்துக்கா?”

குழந்தைகளை அழைத்துக் கொண்டு உள்ளே வருவாள்.

“”வைதேகி இன்னுமுமா இரண்டு சப்பாத்திய சாப்பிடுற?” கணவரது பரிவான குரல் நிஜ உலகத்திற்கு கூட்டி வந்தது அவளை.

நினைவுகளாகிப் போனது நடந்தவை மட்டுமல்ல, ஆறிப் போனது சப்பாத்தியும்தான்.

பிஸினஸ் பிஸினஸ் என்று நேரம் கெட்ட நேரத்தில் வருகிறாரே என கணவரைப் பற்றி தோன்றும் எண்ணங்களுக்கு பனிக்காலத்தில் மட்டும் ஓய்வு. இரவு நேர பனி, ஒளிச்சிதறல்களாகத் தெரியும் தெரு விளக்குகள். ஓளியால் பனி அழகா? பனியால் ஒளி அழகா? அங்கொன்றும் இங்கொன்றுமாக வாகன ஓட்டிகள். நாளை வேலைக்கு செல்லும் மனைவிக்கு சமையலுக்கான காய் வாங்கி வரும் மப்ளர் கணவர்கள். நேரம் செல்ல செல்ல தெரு அடங்கி 10 மணி சுமாருக்கு அவள் கணவர் வரும் நேரத்தில் அவர்களது கார் மட்டுமே தெருவில். இதுவரை சன்னல் வழியாக பார்த்த பனி இப்போது பரவலாக உடலிலும் பரவ கண் மூடி அனுபவிப்பாள்.

குழந்தைகளின் கல்லூரி வாழ்க்கை ஓடியதே தெரியவில்லை. படிப்பு, அலுவலக வேலை, பணத் தேடல்கள் என காலம் தனது இறக்கையை விரித்து பறக்க ஆரம்பித்தது. புத்தகத் தேடல்கள்கூட அவர்களது படிப்பை நோக்கி விரிந்ததேயன்றி, அவளின் ரசனையில் என்றும் குவிந்ததேயில்லை. எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் எட்டாக்கனியாகவே போனது.

பகிர்தல்கள் இல்லாத ரசனை, வெளிப்படுத்தல் இல்லாத படைப்பு என பழகிவிட்ட சூழ்நிலை இவளுக்கு இன்னும் வெறுமையேற்படுத்தவில்லை. நீறு பூத்த நெருப்பாக உள்ளே கசியும் உணர்வுகளுக்கு, நிச்சயமாக வடிகால் இருக்கும். எதிர்ப்பார்ப்பின் மையப்புள்ளியில் நினைவை நிறுத்தி விட்டு, வாழ்க்கையைத் துரத்துகிறாள்.

காலம் சுழன்றதில் மகன் மத்திய அரசாங்க பணியில் டெல்லியிலும், பெண் திருச்சியிலும் செட்டிலாகினர். இப்போது வாரிசுகளுக்குப் பணம் பண்ணும் நேரம். இவளும் விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்டாள்.

லீவுக்கு குடும்பத்தோடு வரும் மகன் அம்மா, அப்பாவிடம் தங்கிவிட்டு, பின் தங்கை வீடு, மதுரையில் உள்ள மாமியார் வீடு என சக்கரத்தைக் காலில் கட்டியவாறே வருவான்.

ஆனாலும் பாட்டியும், பேரனும் ரொம்ப ஃபிரெண்ட்ஸ் ஆகி விட்டார்கள். பாட்டி தோட்டத்து மரங்களுக்கு நீர் பாய்ச்சும் போதே ராகேஷ் அவளுடன் கை கோர்த்துக் கொள்வான். கிணற்றில் நீர் இறைப்பது, துணி துவைப்பது என்று எல்லாமே அவனுக்கு அபூர்வம்தான். பாட்டியின் கையிலிருந்து தானியங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி எங்கிருந்தோ பறந்து வரும் பறவைகளுக்கு உணவிடுவது பேரனுக்கு ரொம்ப பிடிக்கும். சின்னக் கையை அகலமாக விரித்து, “”இவ்ளோ பேர்ட்ûஸயும் வளக்கிறியா பாட்டி” என்பான் தட்டில் அவைகள் டொக்டொக்கென்று மூக்கால் ஒலியெலிப்பியப்படி அழகாக தண்ணீர் அருந்துவதை ரசித்தப்படி.

“”உங்க பாட்டி பேர்ட்ஸ் மட்டுமா வளர்க்கிறா.. சரியா லஞ்ச் சாப்பிடற நேரத்துக்கு ரெண்டு, மூணு பசு மாடுங்க வரும். உங்க பாட்டி கையால கலக்கி வைக்கிற சாப்பாட்ட தினமும் வந்து சாப்பிடுங்க”

“”அய் கவ் கூட வளர்க்கிறியா பாட்டி..”

“”அதெல்லாம் நம்ப கவ் இல்லப்பா. ஆனா உங்க பாட்டி கவ், பேர்ட்ஸ், பிளான்ட்ஸ் இதுங்ககிட்ட பேசிக்கிட்ட சாப்பாடு போடுவா. தண்ணீ ஊத்துவா. அதனால இதுங்களெல்லாம் உங்க பாட்டியோட ஃப்ரெண்ட்ஸ்” என்பார் தாத்தா கிண்டலும், சிரிப்புமாக.

“”என் பேரன் என்னை மாதிரியாக்கும். அதான் நம்ப வீட்டுக்கு வந்துட்டா என் கைய பிடிச்சுக்கிட்டே சுத்தறான்”

“”புரியுதோ, புரியவில்லையோ?” சிரித்து கொள்வான் ராகேஷ்.

“”பாட்டி இங்க பாரு.. செம்பருத்தி பூ எவ்ளோ ப்யூட்டிஃபுல்லா இருக்கு பாரு ஐ லைக் திஸ் ரோஸ் பாட்டி. கேன் ஐ டேக் திஸ் டு மை ஹோம்” என்பான் ஆர்வமாக. ஆனால் மகன்தான் ஊருக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. “”இதிலெல்லாம் கவனம் சிதறிடுச்சுன்னா அவனுக்குப் படிப்பு கெட்டுடும்மா” என்பான்.

பேரன் போன முறை ஃபோனில் பேசும் போது, “”உனக்கு ஒரு ஸர்ப்ரைஸ் வைச்சிருக்கேன் பாட்டி” ன்னு சொன்னது நினைவுக்கு வந்தது. “”என்ன ஸர்ப்ரைஸ் வைச்சுருக்கானோ? தெரியலையே” சந்தோஷமாக அலுத்தாள். உற்சாகமாக இருந்தது.

அவளுக்கு கூட ஸர்ப்ரைஸ்-ஆக தான் இருந்தது. குழந்தைகள் எல்லாம் காலேஜ் சென்று விட ஒரு நாள் தனிமையில் ராஜகோபால் கேட்டார், “”உன் பேர் வைதேகி.. ஓகே. அந்த பனிமலர் யார்? உன்னோட பெட்டியிலே பனிமலர்ன்னு எழுதி வைச்சிருந்தியே?”

உற்சாகமாகச் சொன்னாள், “”நான்தாங்க அது.. எனக்கு நான் வைச்சுக்கிட்ட பேர் அது. இந்த பேர்ல தான் எனக்கு தோணுனதை எழுதி வைப்பேன். அந்த பேர் நல்லாயிருக்காங்க” என்றாள் கண்கள் பளபளக்க.

“”வைதேகி – இந்த பேர் தான் உன் அழகுக்கும், சுறுசுறுப்பும் ஏத்தப் பேர். பனிமலர் உனக்கு பொருந்தல.. என்ன நான் சொல்றது?”

பதில் சொல்ல தோன்றவில்லை அவளுக்கு.

மதிய சமையல் விறுவிறுப்பாக முடிய, சாப்பிட்டு சிறிதுநேரம் படுத்தாள்.

முன்னெல்லாம் சாப்பிட்டுவிட்டு ரெஸ்ட் எடுக்கவே முடியாது. சமையலறையைச் சுத்தம் செய்து, பாத்திரம் துலக்கி, படிக்கவோ, எழுதவோ உட்கார்ந்தால், மகனும், மகளும் மடியில் படுத்துக் கொண்டு லூட்டி அடிக்க, டி.வி பார்த்துக்கொண்டே கண்ணயர்வாள்.

தூங்கிட்டோமோ.. திடீரென்று வாரிசுருட்டி எழுந்தாள் . ஃபோன் ஒலித்தது. மகன் தான் லைனில் வந்தான்.

“”ஹலோ தம்பி எப்படிடா இருக்கே?”

“”நல்லா இருக்கேன்ம்மா. நீ நல்லாயிருக்கியா.. தங்கச்சி வீட்ல எல்லாரும் செüக்கியம்தானே? அப்பா பக்கத்துல இருக்காரா?”

“”பக்கத்திலதான் இருக்காருப்பா…”

“”சித்ரா எப்படி இருக்குறா பேரன் எங்கப்பா?”

“”எல்லாம் இங்கதான் இருக்காங்கம்மா”

“”பாட்டி உனக்கு ஒரு கிஃப்ட் வாங்கி வச்சிருக்கேனே” உற்சாகம் வழிய ஃபோனை பிடுங்கிப் பேசினான் பேரன்.

“”நம்ம கார்டன்ல இருக்கிற கோகனட் ட்ரீல உன்ன மாதிரி குட்டி குட்டியா கோகனட் காய்ச்சிருக்குப்பா. அப்றம் நம்ப வெல்லுல தண்ணி இறைக்கிற ப்ளேஸ்ல வல்லாரை கீரை பாத்தி போட்டேன்ப்பா. நல்லா தளதளன்னு படர்ந்திருச்சு”

“”அய். நான் அங்க வரும்போது கோகனட் டைனியா இருக்குமா பிக்கா ஆயிடுமா பாட்டி”.

நீ சீக்கிரம் வந்தீன்னா டைனியாவே இருக்கும் இல்லைன்னா கோகனட்-ஆ ஆயிடும்டா கண்ணு”

“”பாட்டீ நீ சாப்பாடு போடுவியே அந்த கவ்வுக்கு பேபி பிறந்திடுச்சா?”

“”குட்டி கவ் பிறந்திடுச்சுடா கண்ணா உன்னோட

ஃப்ரெண்ட் டெல்லியிலே இருக்கான்.. பேரு ராகேஷ் லீவு விட்டா இங்க தான் வருவான்னு அந்த குட்டி கவ்கிட்ட சொல்லி வச்சிருக்கேனே”

“”முரளி, கிருஷ்ணன், ஆண்டாள், சீதா எல்லாரும் டெய்லி க்ரெயின்ஸ் சாப்பிட வருவாங்கல்ல பாட்டி”

“”பாட்டியும், பேரனும் குருவியை பத்தி பேசிக்கிறாங்க” மகன் மருமகளிடம் கிண்டலடித்தான்.

“”பாட்டி லாஸ்ட் வீக் புக் எக்ஸிபிஷன் போயிருந்தோம். உனக்கு புடிச்ச புக் நேம் நோட் பண்ணி வைச்சிருந்தேனா அதை அப்பாக்கிட்ட காட்டினேன் அப்பா வாங்கி கொடுத்தார். புக் நேம் சொல்லட்டுமா? சொல்லட்டுமா? சொல்லட்டுமா?”

ஆர்வம் தாங்கவில்லை வைதேகிக்கு. “”தமிழ்ல்ல் இலக்கிய வரலாறு அப்பா கரெக்டாப்பா..? பாட்டி கரெக்டா சொன்னேனா?” உற்சாகத்தில் பேரன் குரல் கேட்டது.

– கலைச்செல்வி (ஜூலை 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *