அப்ப்பா…ஆ !!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 7, 2017
பார்வையிட்டோர்: 5,016 
 

‘பதினெட்டு வயசுப் பையனைப் பையனாய் நெனைக்காம பாலகனாய் நெனைக்கிறீயேய்யா பாவி.! புள்ளையைச் செல்லமா வளர்க்க வேண்டியதுதான் அதுக்காக இப்படியா ?!’ – இடியாய் எனக்குள் இப்படி ஏகப்பட்ட கடுப்பு, கொதிப்பு. ஆனாலும் என்ன செய்ய ? வகையாய் வந்து மாட்டிக்கொண்டேன்.

எல்லாம் காலத்தின் கொடுமை. என்மகன் நண்பன் அப்பாவின் தொல்லை. வந்து சேர்ந்ததிலிருந்து இம்சை.

விசயத்திற்கு வருகிறேன். பையனின் பொறியியல் படிப்பிற்கு உள்ளூர் கல்லூரிகளில் கலந்தாய்வில் இடம் கிடைக்கவில்லை. யையன் எடுத்து கிழித்த மதிப்பெண்களுக்கு ஏனாம் கல்லூரியைத் தவிர இடம் இல்லை என்று கூறிவிட்;டார்கள். பையனின் எதிர்காலமாயிற்றே. விடமுடியுமோ ?! பிடித்துக்கொண்டாயிற்று.

ஏனாம் எங்கிருக்குத் தெரியுமோ ?! ஆந்திராவில் காக்கிநாடா பக்கம். காரைக்காலிலிருந்து கிட்டத்தட்ட ஆயிரம் கிலோ மீட்டர். ஆங்கிலேயர்கள் அடாவடிக் கைதிகளை எப்படி அந்தமான் சிறைக்கு அனுப்புவார்களோ அப்படி புதுச்சேரி அரசு ஊழிய அடிமைகளுக்கு அது தண்டனை இடம்.

காரைக்காலிலிருந்து பேருந்தில் எட்டு மணி நேரம் பயணம் செய்து சென்னை சென்ட்;ரல் ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து விசாகப்பட்டினம் அதி வேக ரயில் வண்டியில் மாலை ஏறி காலை காக்கிநாடாவில் இறங்க வேண்டும். அடுத்து அங்கிருந்து ஒரு மணி நேரம் பேருந்தில் பயணம் செய்து கிழக்காகச் சென்றால் ஏனாம். அடுத்து அங்கிருந்து பத்துக் கிலோ மீட்டர் பேருந்து ஷேர் ஆட்டோவில் பயணித்தால் கல்லூரி. விசாரித்து விபரம் கேட்கும் போதே தலை சுற்றியது.

போய் வர ஒரு ஆளுக்கு ஆயிரம் ரூபாய். தூரம் செலவைப் பார்த்தால் பையன் விருப்பப்பட்டுப் படிக்கும் படிப்பு கிடையாது. பையனைப் பக்கம் வைத்துக்கொள்ள உள்ளூர் கல்லூரி நிர்வாகம் பக்கம் போனால் இடம் ஒன்றிற்கு லட்சம். அதைத் தவிர ஆண்டு படிப்புத் தொகை இரட்டிப்பு மடங்கு. ஒரு வருடமென்றால் பரவாயில்லை. நடுத்தர வர்க்கத்திற்கு நான்கு வருடங்கள் தாங்காது, தீர யோசித்து இடம் வாங்கியாச்சு புறப்பட்டாச்சு.

சென்னைப் பேருந்தில் ஏறி அமர்ந்ததும் ” சேகர் ! இங்கிருந்து நம்மைப் போல் உன் நண்பர்கள் யாராவது ஏனாம் வர்றாங்களா ? ” கேட்டேன்.

“ஒருத்தன் வர்றான்ப்பா. பேர் கோபு. அவன் நேத்தியே புறப்பட்டு சென்னை போயிட்டான். சென்ட்ரல்ல வந்து சந்திக்கிறதா சொன்னான்.” என்றான்.

அப்பாடா ! மொழி தெரியாத பிரதேசத்தில் பையனுக்குத் துணை. எனக்கு நிம்மதி.

சென்னை சென்று சென்ட்ரல் அடைந்ததுமே சேகர் நண்பனைத் தேடினான். அவன் இவனுக்காகவே காத்திருந்து தூரத்திலிருந்து வந்தான். கூடவே அவனுக்குத் துணையாய் ஒருவரும் வந்தார்.

எங்களிடம் வந்த அவன், “சார்! இவர் என் அப்பா ! ” எனக்கு அறிமுகப்படுத்தினான்.

” வணக்கம் ஐயா ! ” கை கூப்பினேன்.

அவரும், ” வணக்கம் என் பெயர் சோமு. ” கை கூப்பினார்.

புறப்பட தயாராய் இருந்த ரயிலில் ரிசர்வேசன் சார்ட்டு பார்த்து நாங்கள் ஏறினோம். அதிர்ஷ்டவசம் எங்களுக்கு எதிர் எதிர் இருக்கைகள்.

5.45 க்கு புகை வண்டி புறப்பட்டு பத்து நிமிடங்கள் ஆன பிறகுதான் எல்லாருக்குமே ஆசுவாசம்.

சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு, ” ஏனாம் ரொம்ப தூரம் இல்லே சார் ? ” மெல்ல சொல்லி எதிரிலிருந்த சோமு என்னை ஏறிட்டடார்.

” ஆமாம். ” வெளியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டே தலையசைத்தேன்.

” அங்கே கல்லூரி எப்படி சார் ? ” அவர் திருப்பிக் கேள்வி கேட்டார்.

” தெரியலை ! ” ஈடுபாடில்லாமல் பதில் சொன்னேன். காரணம்…எனக்கு அதிகப் பேச்சு, இரைச்சல் பிடிக்காது. மேலும் நான் இயற்கையின் ரசிகன், மௌனத்தின் காதலன்.

” சார். பசங்க கலாட்டா இருக்குமா ? ” சோமு எனக்கு எதிர்குணம் போல. தொண தொணத்தார்.

” தெரியலை. ” எரிச்சலாக இருந்தது.

” கேள்விப் பட்டிருக்கீங்களா ? ”

” இல்லே. ”

” கலந்தாய்வு கும்பலில் விசாரிச்சீங்களா ? ”

இதே கேள்வியைத் திருப்பி நான் கேட்கலாம். பேச்சு வளர விருப்பமில்லை. “இல்லே.” துண்டித்தேன்.

” எனக்கு செலவு பிரச்சனை இல்லே சார். ஆனா இவ்வளவு தூரம் பயணம் இடையில ஒரு விபத்துன்னா… நெனைச்சுப் பார்க்கவே பயமா இருக்கு.” என்றார். பயத்தின் பாதிப்பு. அவர் குரலில் லேசான நடுக்கம்;

எனக்கு இவர் பேனை பெரிச்சாளியாக்கும் குணம் புரிந்தது.

அவர் பக்கத்தில் அமர்ந்து வந்த கோபு அவசரமாக எழுந்தான்.

” எங்கே போறே ? ”

” பாத்ரூம். ”

” பார்த்துப் போ. பெட்டி ஆடும். கதவைச் சாத்தி தாழ்ப்பாள் போட்டு சுவத்தைக் கெட்டியாய்ப் பிடிச்சிக்கிட்டு ஒன்னுக்குப் போ. ” என்றார்.

ஜன்னலோரம் அமர்ந்திருந்த இவனொத்த இளம் பெண் சிரித்தாள். பின்னே…. இவனுக்குச் சிறுவனுக்குச் சொல்வதைப் போல் சொன்னால் யார்தான் சிரிக்க மாட்டார்கள். கையால் வாயை மூடிச் சிரித்தாள். கோபுவிற்கு அவமானமாகிவிட்டது. முகம் சிவக்க நடந்தான்.

” எச்சரிக்கைப் பலமா இருக்கே. பையனுக்கு இது ரயிலில் முதல் பயணமா ?” கேட்டேன்.

” இல்லே சார். பல தடவைப் பயணம். இருந்தாலும் ஜாக்கிரதையாய் இருக்க சொல்ல வேண்டியது நம் கடமை இல்லையா ? ” சொன்னார்.

~ நீ நாசமாய்ப் போக…| மனசுக்குள் சபித்தேன். ஆனாலும் அவருக்கு அவர் மகன் இன்னும் சின்னக் குழந்தை, செல்லப்பிள்ளை. மனதைச் சமாதானப் படுத்தினேன்.
அடுத்து ஏதோ பேச வாயெடுத்தார். தப்பிக்க நான் ஒரு புத்தகம் எடுத்து விரித்தேன்.

வெளியே இருட்டு. உள்ளே ஆளாளாளுக்குப் புத்தகம், தினசரி என்று படிப்பு. வழியின்றி அவரும் ஒரு புத்தகம் எடுத்தார். அப்புறம் சாப்பாடு, படுக்கை என்று பேச்சில்லை. காலை ஏனாம் இறங்கி…பேருந்தில் கல்லூரியை நோக்கி செல்லும் போதுதான் பேச்சு.

பேருந்து கர்ப்பம் தரித்த பெண்ணாய் கோதாவரி ஆற்றங்கரையில் போய்க்கொண்டிருந்தது. நாங்கள் அடுத்தடுத்த ஜன்னலோர இருக்கையில் இருந்தோம். ஆறு அதிக அகலம். கடலில் கலக்கும் முகத்துவாரம்… கடல் எது, ஆறு எது என்று தெரியாத அளவிற்குப் பிரமாண்டம். கல்லூரி அங்குதான் இருந்தது.

” ஏன் சார். ஆத்துல வெள்ளம் வந்து வழிஞ்சாலும், கடல் பொங்கி நுழைஞ்சாலும் கல்லூரி காணாம போயிடும் இல்லியா ? ” பயப்பட்டார். ” பையனுக்கு நீச்சல் வேற தெரியாது.” முணுமுணுத்தார்.

‘ இப்படியெல்லாமா நினைத்து ஒருத்தர் கவலைப்படுவார் !? இவர் பையனைக் கல்லூரியில் சேர்க்க வந்தாhரா இல்லை….. வீட்டுக்கு ஒரு பிள்ளை. தன்னோடு இருக்க பயமுறுத்தி திருப்பி அழைத்துச் செல்ல வந்திருக்காரா ? ‘ எனக்குத் தோன்றியது,

” சுனாமி வந்தா கல்லூரியே தரை மட்டம்! ” சொல்லி அவருக்குள் பீதியை அதிகமாக்கினேன்.

என் கணிப்பு தவறவில்லை. அவர் முகத்தில் திகில். மௌனம்.

” ஏன் சார் பேசலை ? ” என்றேன்.

” என்னமோ எனக்கு பையனை இங்கே படிக்க வைக்கவேப் பிடிக்கலை. ” என்றார்.

கேட்ட கோபு என் பையன் தைரியத்தில், ” அப்பா ! நான் இங்கேதான் படிப்பேன்! ” என்றான்.

அவருக்கு விருப்பமில்லை என்பதை முகம் காட்டியது.

நான் கல்லூரிக்குள் சென்று பரபரப்பாக சேர்க்கை விண்ணப்பம் வாங்க அவர் விருப்பமில்லாமலே மெதுவாக வாங்கி அதைப் பூர்த்தி செய்யும் போது, ” கோபு ! இப்பவும் ஒன்னும் நஷ்டமில்லே. உன் முடிவை மாத்திக்கலாம். ” பாவமாகப் பார்த்தார்.

அவன் நான் பூர்த்தி செய்வதைப் பார்த்து, ” மாத்தமில்லேப்பா…! ” என்றான்.

அவரும் வேறு பேச்சு பேசாமல் பூர்த்தி செய்தார். என் பின்னாலேயே வந்து கொடுத்துப் பணத்தைக் கட்டினார்.

” அப்பாடா ! வேலை முடிஞ்சிடுச்சு. அடுத்து நாம பையனை இந்த மாத கடைசியில கல்லூரி திறக்கும் தேதிக்கு அனுப்பிச்சு வைச்சா போதும். நமக்கு ரிட்டர்ன் டிக்கட் நாளைக்குத்தான். அதனால டவுன் போய் அறை எடுத்து தங்கி ஓய்வெடுக்கலாம். “| என்றேன்.

” போவலாம் சார். பையன் தங்கும் விடுதி எப்படி இருக்குன்னு பார்த்து செல்லலாம்.”என்றார்.

‘நல்ல பொறுப்பான அப்பா !’ எனக்குப் பட்டது. நடந்தோம்.

” தம்பி! முதலாமாண்டு மாணவர்கள் விடுதி எங்கே இருக்கு ? ” அவர் எதிரில் வந்தவனைக் கேட்டார்.

அவன் கை நீட்டி தூரத்து கட்டிடத்தைக் காட்டினான். அது அரைக் கிலோ மீட்டருக்கும் அப்பாலிருந்தது. கல்லூரி தொடங்கி ஐந்து வருடங்கள் என்பதால் இன்னும் கட்டிடங்கள் கட்டிக்கொண்டிருந்தார்கள். சரியான சாலை வசதி இல்லை. கால்களில் சரளைக் கற்கள் குத்தியது. சென்றோம். அந்த கட்டிடத்தின் மாடி அறைகளிலிருந்து நிறைய மாணவர்கள் எங்களை வேடிக்கைப் பார்த்தார்கள். அவர்களெல்லாம் பணம் கொடுத்து சீட்டு வாங்கி வந்தவர்கள் போல.

சீருடை அணிந்த காவலாளி விடுதி வாசலிலேயே மடக்கி, ” யாரைப் பார்க்கப் போறீங்க ? ” கேட்டான்.

” இந்த ரெண்டு பையன்களும் இங்கே தங்கனும். அறை வசதி பார்க்கனும். ” என்றேன்.

அவன் ஒரு பெரிய சாவிக் கொத்தை எடுத்து வந்து முதல் மாடியில் ஒரு அறையைத் திறந்து காட்டினான்.

“இப்படித்தான் சார் இந்த கட்டிடத்தில் உள்ள அறைகளும் இருக்கும்.” சொன்னான்.

அறை இருவர் தங்க நல்ல வசதியாக இருந்தது. கட்டிடத்தின் இரு மூலைகளிலும் குளியலறை கழிப்பிடங்கள் சுத்தமாக இருந்தன.

ஆனாலும் சோமுவிற்குத் திருப்பதி இல்லை. “சமையலறை, சாப்பாட்டு இடம் பார்க்கனும்.” என்றார்.

” ஏன் சார் ? ” ஏறிட்டேன்.

” அதெல்லாம் சுத்தமாக இருந்தால்தான் சார் பசங்க நோய்நொடி இல்லாம இருப்பாங்க. நமக்கும் கவலை இல்லே. ” சொன்னார்.

‘மனுசர் எப்படி எப்படியெல்லாம் யோசிக்கிறார் !’ நினைத்து, ” சார். இந்த கல்லூரியில் ரெண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கிறாங்க. பணத்தைக் கொட்டிக் கொடுத்துப் பணக்காரப் புள்ளைகiளும் அதிகம் தங்கி படிக்கிறாங்க. எல்லாம் சுத்தமாவும் ஆரோக்கியமாவும் இல்லாம எப்படி சார் இருக்கும் ? ” என்றேன்.

” நீங்க சொல்றது சரி. பார்த்தா எனக்குத் திருப்தி! ” நடந்தார்.

அது அங்கிருந்து அரை கிலோ மீட்டர். இரு பக்கமும் வயல்கள். ஏன்..? கல்லூரியே மலிவு விலையில் வாங்கிப் போட்ட வயல்வெளிகளில் எழும்பிய கட்டிடங்கள்தான். அதனால் வாகனங்கள் செல்கிறாப் போல் வரப்பை அகலப்படுத்திய சாலை. அதில் கட்டுமானப் பணிகளில் வீணாண செங்கல், காரைகள், உடைந்த டைல்ஸ்கள் போட்டு நிரப்பி இருந்தார்கள்.

நடக்கும்போதே கவனித்திருப்பார் போல. ” சார்! இடையில் மின்சார கம்பம் இல்லை பாருங்க. இரவு சாப்பாட்டுக்கு ராத்திரியில் பசங்க வரும்போது பாம்பு, பூரான், நட்டுவாக்கலி கடிக்க வாய்ப்பிருக்கு. ” சொன்னார்.

எங்கள் அருகில் வந்த சீனியர் மாணவனொருவன், “ரெண்டு கட்டத்துத் தலையிலும் அதிக வெளிச்சமான விளக்கு இருக்கு சார். வெளிச்சத்துக்குக் குறை இல்லை. ஆனாலும் நிர்வாகம் இந்தக் குறையை சரி செய்து தர்றேன்னு சொல்லி இருக்கு.” சொல்லிக் கடந்தான்.

“தமிழ் பேசுறீயே நீ எந்த ஊருப்பா ? ” சோமு அவனை ஆவலாய் விசாரித்தார்.

“புதுச்சேரி சார். இங்கே தெலுங்கு தாய் மொழியாய் இருந்தாலும் புதுச்சேரி கலப்பினால் இங்கே எல்லாரும் தமிழ் பேசுவாங்க.” சொல்லி நடந்தான்.

சமையலறை, அதை ஒட்டி சாப்பாட்டு இடமெல்லாம் ரொம்ப சுத்தம், சுகாதாரம், நவீனமாகவும் இருந்தது. சோமு சமையல்காரரைச் சந்தித்து எந்தெநத் நாட்களில் என்னன்ன வகை சாப்பாடு, காய்கறி, சைவம், அசைவத்தையெல்லாம் அக்கறையாய்ப் கேட்டு தெரிந்து கொண்டார்.

வெளியே வந்து அங்குள்ள காவலாளியிடம் சாப்பாட்டு நேரம், காலம் எல்லாம் விசாரித்தவர், “சீனியர், ஜீனியர் எல்லாம் ஒன்னா உட்கார்ந்துதான் சாப்பிடுவாங்களா ? ” கேட்டார்.

” நேரம் எல்லாம் ஒன்னுதான். முதலாமாண்டு கீழே தரைதளம். ரெண்டு, மூனு, நாலுக்கெல்லாம் ஒவ்வொரு மாடி ஏன் கேட்டீங்க.? ” அவன் திருப்பிக் கேட்டான்.

“சீனியர் ஜீனியர் கலாட்டா……” இழுத்தார்.

“அதெல்லாம் இங்கே கெடையாது.” அவன்.

“அப்படித்தான் சொல்லுவீங்க. வர்ற வழியில கலாட்டா எப்படித்தெரியும் ? ” என்றார்.

“பையன்கள் சமாளிச்சுப்பாங்க. வாங்க.” வெளியே இழுத்து நடந்தேன்.

“சகாய விலைக்கு வயல்வெளிகளை வாங்கி, திக்காலுக்கு நாலு கட்டிடங்களைக் கட்டி பொறியியல் கல்லூரின்னு ஒரு பேரை வைச்சு எப்படியொல்லாம் சம்பாதிக்கிறாங்க பாருங்க.” முணகிக் கொண்டே வந்தார். அதோடு விடாமல் என் பையனுக்கும் அவர் மகனுக்கும் நடுவில் வந்து, “தம்பிகளா ! மொழி தெரியாத இடத்துல வந்து தங்கபோறீங்க. இங்கே எந்த வம்பு தும்பு நடந்தாலும் தலையிடாதீங்க. கேட்க நாதி இல்லே. ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டின்னு பின்னிடுவாங்க.” என்று சும்மா வந்தவர்களுக்குள் கிலியை ஏற்படுத்தினார்.

‘அடப் பாவி ! எதுவா இருந்தாலும் தைரியமா எதிர்கொள்ளுங்கன்னு துணிச்சல் சொல்லாம கோழையாகிப் பதுங்குன்னு பயமுறுத்துறீயே!’ அவரை மனசுக்குள் சபித்தேன்.

“ஒரு நிமிசம். நான் இதுக்குப் போய் வர்றேன்.” ஒற்றை விரலைக் காட்டி பின் தங்கினார்.

நான் அதுதான் சாக்கென்று அவர்களுடன் நடந்து, “தம்பி ! அப்பா என்ன பண்றார்?” கோபுவைக் கேட்டேன்.

“தொடக்கப்பள்ளி அஞ்சாம் வகுப்பு வாத்தியார் சார்.” என்றான்.

‘ பள்ளியில் சிறுவர்களுடன் பழகி அவர்களுக்குப் பார்த்துப் பார்த்து சொல்லிக் கொடுத்த தொழில் பழக்கம் பெற்ற பிள்ளைகளையும் பற்றி இருக்கிறது! ” புரிந்தது.

” நீ இவருக்கு செல்லமா ? ” அடுத்துக் கேட்டேன்.

” நானும் அண்ணன்களுமே செல்லம். ” என்றான் அவன்.

” நீங்க அண்ணன் தம்பிகள் மூணு பேரா ?! ”

” ஆமாம் சார்.”

” ஆனா.. இவர் பெத்தப்பா இல்லே. பெரியப்பா.! ” என் மகன் ஒரு குண்டைப் போட்;டான்.

“என்னப்பா சொல்றே ?!” அதிர்வாய் அவர்களைப் பார்த்தேன்.

“ஆமாம். இவருக்குக் குழந்தைங்க இல்லாதததினால கூட்டுக் குடும்பமாய் இருந்து தம்பி புள்ளைங்களைத் தன் குழந்தைகளாய் வளர்க்கிறார். அதனால்தான் புள்ளைங்க மேல் இவ்வளவு அன்பு, அக்கரை!” என்றான் சேகர்.

நான் சட்டென்று உடைய…..புரிய…..அவர் மேல் அன்பு, அனுதாபம் பிறந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *