விழுதுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 9, 2023
பார்வையிட்டோர்: 1,749 
 

வசந்தி மாமி குருபுரத்தில் குடியில்லை. மாமியின் பழைய வீடு மட்டும் அக்கிரகாரத்தில் இன்னும் இருக்கிறது. பள்ளிக்கூட ஆசிரியராய்ப்பணியாற்றி ரிடையர் ஆன மாமா எப்போதோ அந்த பகவானிடம் போய்ச்சேர்ந்தாயிற்று. ஒரேபிள்ளை. அவனும் எங்கோ வெகு தூரத்தில். பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ளான்.திரைகடல் ஓடித் திரவியம் தேடும் கூட்டத்தில் அவனும் ஒருவன். எப்போதேனும் இந்தப்பக்கம் வருவான். ஊர்ச் சுற்றிச் சுற்றி எல்லாம் பார்த்துவிட்டுப் புறப்படுவான். மாமிக்கு எது எல்லாம் வேண்டுமோ அதுகள் செய்து கொடுப்பான். மாமிக்குக்காசு பணத்திற்குக் கஷ்டம் ஏதுமில்லை. குடும்ப ஓய்வூதியம் வருகிறது. அது போதும். பையனும் அவ்வப்போது தேவையானதை அனுப்பியே வைக்கிறான்.

ஏன்தான் அவன் திருமணம் செய்து கொள்ளாமல் இப்படியே இன்னும் இருக்கிறானோ மாமி விசாரப்படுவாள். மாமி விசாரப்பட்டு ஒன்றும் ஆகப்போவது இல்லை. வசந்தி மாமி தன் தங்கையின் வீட்டில் தங்கியிருக்கிறாள். குருபுரத்துக்கு அருகில் தங்கையின் வீடு அதுவும் இந்த வெண்காட்டில்தான் இருக்கிறது. வெண்காடு கோவில் நிரவாகத்துக்கு ஒரு பெரிய பள்ளி. அதனில் மாமியின் தங்கைக்கு இசை ஆசிரியை உத்யோகம். யார் இப்போது பள்ளியில் பாடங்கள் படித்துக்கொண்டே இசையை எல்லாம் கற்றுக்கொள்கிறார்கள். மதிப்பெண்கள்தானே வாழ்க்கை. பள்ளி நிர்வாகங்கள் இசை ஆசிரியருக்கு, ஓவிய ஆசிரியருக்கு என்று வேறு ஆயிரம் வேலைகள் வைத்திருக்கும். இசைப் பற்றி பள்ளி நிர்வாகிகளுக்கு அக்கறை புதிதாக என்ன வந்துவிடப்போகிறது.

மாதம் ஒரு நடை வசந்தி மாமி குருபுரம் அக்கிரகாரம் வருவாள். குருபுரம் மாமி வீட்டில் காவலுக்கு என்று ஒரு ஆசாமி. அவன் இரவில் படுக்க ஏற்பாடு ஆகியிருந்தது.. அந்த ஆசாமிக்கு மாத சம்பளம். அதனைக்கொடுத்துவிட்டு தன் வீட்டருகே இருக்கும் சண்டோத் சண்ட விநாயகரைப்பார்த்து மாமி ஒரு கும்பிடு போட்டுவிட்டுத்தான் வழக்கமாய் அந்த வெண்காடு திரும்புவாள். மாமிக்கு வாடிக்கையாய் வருபவன் ஒரு ஆட்டோக்காரன். அவன் வசந்தி மாமியை பத்திரமாய்க் குருபுரம் அழைத்துப்போய் வருவான்.

வசந்திமாமி தன் குருபுரம் வீட்டில் வேலை எதாவது இருந்தால் பார்ப்பாள். ஆட்டோக்காரன் குருபுரம் மாமி வீட்டின் தோட்டத்தில் விளைந்த எலுமிச்சம்பழம் தென்னை மரங்களிருந்து கீழே விழுந்து கிடக்கும் நெற்றுத்தேங்காய்கள், வாழைக்காய் வாழை இலை கறி வேப்பிலை பெரண்டை இன்னுமேதும் இருந்தாலும் சேகரித்து ஆட்டோவில் எடுத்து வைப்பான். இதில் பாதி அவனுக்கு வந்துவிடும்.


‘யார் இது புதுசா ரெண்டுபேரு.’

ஆணு பொண்ணும் வயசானவங்கதான் இருந்தாலும் வசந்திமாமி மனசுக்குள்ளே சொல்லிக்கொண்டாள்.

‘அம்மா நாங்க இதே தெருவுதான். உங்களுக்கு எங்கள தெரியாது. பழக்கமில்லில்ல. அவ்வளவுதான் கிழவன் சொன்னான்.

‘நா ஏற்பாடு பண்ணுன ஆளு ராத்திரில காவலுக்கு இங்க படுத்துக்குல’

‘நாலு நாளா நாங்கதான் படுத்துக்கறம். அவரு அவுரு வீட்டுலயேதான் படுத்து இருக்காரு.’

‘அதுதான் ஏன்னு கேக்குறன்’ என்றாள் வசந்தி மாமி.

கிழவி ஆரம்பித்தாள்.

‘இந்த அக்கிரகாரத்து கடைசி வீடு எங்க வீடு. கூரை வீடு. எம்மொவனுக்கு சமீபமா கல்யாணம் கட்டுனம். நாங்க கெழவன் கெழவி ரெண்டு பேரும் எங்க பழைய கூரை வீட்டுக்கு பக்கத்துல ஒரு சின்ன சாளயா போட்டுகிட்டு தனியாதான் குடி இருந்தம். எம்மொவனுக்கும் என்ன கவருமெண்டு வேலயா. கூலி வேலக்கி அங்கங்க போவான் வருவான். அவனும் அவன் பொண்டாட்டியும் புதுசா கல்யாணம் கட்டிகிட்டவங்க ஆக நாம தனியா இருந்துதுருவம்னுட்டு அந்த கூர கொட்டாயிலதான் குடி இருந்தம். ஊர்ல நாலு நாளா நல்ல மழயாச்சா. இந்த மழ வெங்காட்டுலயும் பெஞ்சி இருக்கும்ல. பேஞ்ச மழத் தண்ணி வெள்ளமாயி தெருவுல ஓடி எங்க சாள வூட்டுல பூந்துட்டுது. வீடு பூரா சேறும் சகதியுமா போச்சி. எம்மவன் இருக்குற வூட்டுல போய் கட்டுன துணியோட மொடங்கிகதான் ரவ எடம் கேட்டம். சரி படுத்துகன்னு மவனும் மருமவளும் சொன்னாங்க. நாங்க ரெண்டு பேரும் அந்த வூட்டுலயே அண்ணிக்கி ராத்திரி மொடங்கிகினம். ராவுல இந்த கெழவரு நாலு தரம் கதவ தொறந்துகிட்டு ஒண்ணுக்கு இருக்குணும்னு போயிட்டு போயிட்டு வந்தாரு. எம் மருமொவ இப்பிடி ஆரம்பிச்சாளே பாக்குணும்.. ‘ ரா முச்சூடும் பெரிசு லொட்டு லொட்டுன்னு தெருக்கதவு தொறக்குது, மூடுது. இது எல்லாம் என்னா ஈனத்தனமான வேல கெழவருக்கு. ராவுல செத்த தூங்க முடியுதா மனுசாளால. பெரிய இமுசை. எப்பிடி மாமி இந்தக்கத தெனம் நடக்குறது தானா, இது பெரிய புடுங்கலுதான் எம்மா’ இப்பிடி எங்கிட்ட ரப்பா ராங்கியா நீட்டிப் பேசுனா. கெழவர்ன்னா ராத்திரில ரெண்டு தரம் மூணு தரம் எழுஞ்சி போயி வரமாட்டாங்களா அதுக்குன்னு இப்பிடி மரிமவ பேசுனா நெயாயமா. இனிமேலுக்கு மவன் வூட்டுல நாம படுக்கறது தப்புன்னூ முடிவு பண்ணினேன். கெழவன இட்டுகினு ரவ எடம் தேடிகிட்டே உங்க வூட்டுக்கு வந்தம். உங்க வூட்ட அந்தக் காவலுக்கு படுத்துகிறவருகிட்ட கேட்டன். அவுருதான் நா எம்பொண்டாட்டி புள்ளிவள வுட்டுல வுட்டு புட்டு நாலு காசு கெடக்குமே, அது கெடச்சா அந்த புள்ளிவுளுக்கு ஒரு செலவுக்கு ஆவுமேன்னு இந்த மாமி வூட்டயே மொடங்கிகிறேன்னு சொன்னாரு. நாங்க மாமி வூட்ட பாத்துகறம் அந்த மாமி மாசா மாசம் குடுக்குற சம்பள காச நீயே வாங்கிக. எங்களுக்கு காசு வேணாம். நாங்க இந்த பெரிய திண்ணையில ராவுல ரவ மொடங்கிகறம். மாமி வூட்டயும் நல்லா பாத்துகறம்னுட்டு சொன்னன்’

‘நீங்க ரெண்டு பேரும் இப்ப என் வீட்டுக்கு காவலு. அந்த ஆசாமி நா காவலுக்குன்னு என் வூட்டுக்கு வச்ச ஆளு அவுரு வூட்டுல பொண்டாட்டி புள்ளிங்களோட இருக்காரு அதான் நீ சொல்ற சேதி’

‘அதான் மாமி வேற ஒண்ணும் இல்ல’

கிழவனும் கிழவியும் வசந்தி மாமியை வணங்கிக்கொண்டே நின்றார்கள்.

‘வேணாம் நீங்க வயசுல பெரியவங்க இப்பிடி எல்லாம் செய்யவேணாம்’ மாமி அழுத்தமாய்ச்சொன்னாள்.

வேக வேக மாக நடந்து தூரத்தில் வந்துகொண்டிருந்தான் வசந்தி மாமி தன் வீட்டுக்குக்காவலுக்கு ஏற்பாடு செய்த அதே ஆசாமி.

‘மாமி கும்புடறன்’

‘என்ன காவல்காரரே எங்க போயிட்டீரு’

‘ஒரு தப்பு உங்க கையில இப்பவே சொல்லுணும். ஒரு நா ராவுல இந்த பெரியவங்க படுத்துக ரவ எடம் வேனும்னாங்க. அவுங்க இருந்த குச்சி வூடு பெருசா பேஞ்ச இந்த மழல்ல மாட்டிகினு சேரும் சகதியுமா நாறி புடுச்சி. இவுங்க இந்த ஊருதான். இதே தெருவுதான். நல்ல மனுஷாளு. வயசுங்கறது ஆருக்கும் ஆவும்தான. இதே தெருவு கடைசி கூர வூடு அவுங்களது. பெத்த மவன் மருமவ பேசுன பேச்சி பொறுக்கமாட்டாத தான் என்கிட்ட வந்து என் கைய புடிச்சிகினு ரொம்ப கேட்டுகினாங்க. உடம் பொறப்பா நினச்சி ஒதவுன்னாங்க. எம்மனசு கேக்குல. சரின்னுட்டேன். அது தப்புதான். அதனபிரசங்கி நா. ஒங்க கையில இந்த சேதிய ஒடனே சொல்லுணும்னு பாத்தன். முடியல. இந்த மழலு வேற ஒயல’

‘இப்ப எப்பிடி வீட்டுக்கு வந்தீரு நா வந்தது உனக்கு தெரியுமா’

மாமி பெரியவரிடம் கேட்டாள்.

‘நல்லா கேட்டிங்க. இந்த பெரியவங்களோட அதே மருமவ ஓட்டமும் நடையுமா எங்க வூட்டுக்கு வந்துது. மாமி வந்துருக்காங்க சட்டுன்னு வான்னு சொல்லிச்சி’

‘நல்ல விஷயம்தானே இது’ மாமி சொல்லிக் கொண்டாள்.

’அப்பிடி போவுலயே சேதி. மாமி குடுக்குற வூட்டுக்காவல் சம்பளத்த உங்கிட்டல்ல அவுங்க தரணும். அத எம் மாமியாரும் மாமனாரும் உன்ன ஏமாத்தி வாங்கிகிட்டா என்னா செய்யிறது. அது பெசகுல்லன்னுட்டு அது ரைட்டா பேசிச்சி.’

‘இதுக்குதான் உன் வீட்டுக்கு வந்துதா’

‘ஆமாங்க மாமி. காச அவுங்க வாங்கிகினா நீ என்ன செய்யிறதுன்னு ரொம்ப அக்கறையா எங்கிட்ட பேசுனாங்க’

மாமி சற்று யோசித்தாள். டக்கென்று முடிவு செய்தாள்.

‘தேவலாம் கத. உன்கிட்ட நா பேசுன படி காவலுக்கு மாச சம்பளம் ஆயிரம் இந்தா அத நீ வச்சுக’

‘நா இங்க படுக்குல. அவுங்கதான வூட்ட பாத்துகினாங்க’

மாமி வீட்டில் படுக்கைக்கு வந்திருந்த கிழவரும் கிழவியும்’ அவுருகிட்டயே காசு குடுத்துடுங்க, அப்பிடித்தான் நாங்க பேசி இருக்குறம் அந்தப்படிக்குதான் நாங்க படுக்கறதும்’ என்றனர்.

‘ஆயிரம் ரூவாய தரன் ஆளுக்குப்பாதியா ஐநூறு ஐநூறுன்னு பிரிச்சிகுங்க’. மாமி சொன்னாள்.

புதிதாக படுக்கைக்கு வந்த அந்த நாதியற்ற பெரியவர்கள் இருவரும் ’காசு மொத்தமும் அவரண்ட குடுத்துடுங்க மாமி, மொடங்கிக ரவ எடம் குடுத்ததே போதும்’ எகோபித்துச்சொன்னார்கள்.

காவலுக்கு மாமியே ஏற்பாடு செய்தப் பெரியவரோ’ அவுங்கதான படுத்துகிறாங்க அவுங்க கிட்ட சம்பளம் முழு காசும் குடுத்துடுங்க’ என்றார்.

வசந்திமாமி இரண்டாயிரத்தை கையில் எடுத்து இரண்டு பெரியவரிடமும் தலா ஒரு ஆயிரமாகக் கொடுத்து முடித்தார். இருவரும் வாங்கிக்கொண்டார்கள்.

இரண்டு பெரியவர்களும் மாமியை வணங்கி நின்றார்கள்.

‘வூட்ட பாத்துகுங்க. பெரியவரும் அந்த பெரியம்மாவும் படுத்துகறவரைக்கும் இங்க படுத்துகட்டும். காவலு பாக்குற நீ அப்ப அப்ப வந்து தோட்டம் தொறவ பாத்துக. நா கெளம்புறன்’ என்றாள் மாமி.

பெரியவர்களை விரட்டிய அந்த மருமகள் எட்டி நின்று அனைத்தையும் வேடிக்க்கை பார்த்துக்கொண்டே இருந்தாள். வசந்தி மாமி அந்த மருமகளையும் கவனித்துக்கொண்டாள்..

‘இதென்னாடி இங்க நடக்குறது எல்லாம் ஒரே அதிஷயமா இருக்கு’ அந்த மருமகள் சொல்லிக்கொண்டாள்.

ஆட்டோக்காரன் வண்டியை கிளப்பினான் வசந்தி மாமி ஆட்டோவில் ஏறி அமர்ந்தாள். வண்டி வெண்காட்டிற்குப்புறப்பட்டது.. வசந்தி மாமி அந்த மருமகளைப்பார்த்து ‘ பெரியங்கள நீ நல்லாவே பாத்துகற சந்தோஷம்’என்றாள்.

‘கூர வூட்ட மொடங்கின கெழம் இண்ணக்கி இந்த மாமி மச்சு வூட்டுக்கு வந்து படுக்குதுன்னா. அது எல்லாம் யாரால’ அந்த மருமகள் மாமிக்குப்பதில் சொன்னாள். வசந்தி மாமிக்கு இது கேட்டும் இருக்கலாம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *