பொறுப்பில்லாக் குடும்பம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 24, 2022
பார்வையிட்டோர்: 3,114 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல – ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பம். அந்தக் குடும்பத்ல, ஒன்னப் பாரு, என்னப் பாருண்டு மூணு பொண்ணுக. ரொம்ப ஏழ்மயான வாழ்க்க. வாழ்ந்துக் கெட்டுப் போனா அப்டித்தான இருக்கும். ஒண்ணுக்கொண்ணு ஆளாகி வாக்கப்படுற வயசுக்கு வந்து இருக்குதுக. அப்ப, ஒரு பெரிய பணக்கார ராசா, பொண்ணு கேட்டு வாராரு. வரயில ; இந்த வாந்து கெட்டவ சொல்றா, என்னா ராசாவே! நாங்க இந்த மாதிரி ஒரு காலத்ல நல்லாப் பொளச்சோம். இப்ப, கெட்டுப் போயி இருக்கோம். எங்களால, பொண்ணுக்கு, சீரு- செனத்து எதுவும் செய்ய முடியாது. பொண்ணத் தவிர எங்ககிட்ட வேற ஒண்ணுமில்லண்டு சொல்றா.

அதுக்கு ராசா, சீரு ஒண்ணும் வேண்டாம். பொண்ண மட்டும் குடுத்தா போதும். மத்ததெல்லாம் நாங்கள் போட்டுக்றோம்ண்டு சொன்னாரு. சொல்லவும் -; ஒத்துக்கிட்டுக் கல்யாணஞ் செஞ்சு வச்சிறுராங்க. அப்ப, புருச வீட்டுக்குப் போயிரா.

அதே மாதிரி எளய மகள, இன்னொரு ராசா வந்து கேக்குராரு. கேக்கவும், அந்தப் பிள்ளயயும் புடுச்சுக் குடுத்துடுராங்க. அவளும் புருச வீட்டுக்குப் போயிருரா.

அதே மாதிரி மூணாவது பிள்ளய, அதக்காட்டிலும் – பெரிய ராசா வந்து கேக்குராரு. கேக்கவும், அவளயுங் குடுத்துட்டா. அவளும் புருசங் கூடப் போயிருரா.

போகவும், இவங்க புருசனும் பொண்டாட்டியும்தா மிச்சம். ஒருநாத் தேதில. ரெண்டு பேரும் ஒக்காந்து, மொதல்ல நல்லாப் பொழச்சதப் பத்திப் பேசுறாங்க. பேசயில், உளுந்த வட (வடை) சுடணும்ண்டு பேசிக்கிறாங்க.

அப்ப: ரெண்டு மூணு வீட்ல, உளுந்து வாங்கிட்டு வந்து, அத ஆட்டிப் பெறக்கி, உளுந்த வட சுடுறா. சுடயில, ஒண்ண எடுத்துத் திண்டு பாத்தா. நல்லா இருந்திச்சு. இருக்கவும், நல்லா இருக்கு – நல்லா இருக்குண்ட்டு , பூராத்தயும் திண்டுபிடுறா.

புருச வந்து, என்னா ? உளுந்த வட சுட்டயே, எனக்கு வச்சிருக்கயாண்டு கேட்டா. ஆமா! சுட்டே. நல்லா இருந்திச்சு. பூராத்தயும் திண்டுபிட்டேண்டு சொன்னா. சரி! திண்டா – திண்டுட்டுப் போறாண்ட்டு, பேசாம இருந்துகிட்டா.

அப்டி இருக்கயில, ஒருநாத் தேதியில – மூணுபேரும், தாயி வீட்டுக்கு வந்திட்டாங்க. வரவும், என்னா மகளே? நீ வந்தது, நீ வந்தது, நீ வந்ததுண்டு மூணு மகள்களயும் வரிசயாக் கேட்டா

அப்ப: மூத்த மக, இல்லம்மா! என்னய கெட்டிட்டுப் போன மறுநா, ரெண்டுபேருங் காத்து வாங்கப் பூஞ்சோலக்கிப் போனோம். அங்க மரத்தடியில படுத்து ஒரங்கிட்டோம். அப்ப, அந்த மரத்ல இருந்த, பூவெல்லாம் எங்க மேல விழுந்து கெடந்துச்சு. எந்திருச்சுப் பாத்தா, மேலெல்லாம் புவ்வு. என்னாடி! இவ்வளவு புவ்வு மேல விழுந்திச்சே, மேலு வலுச்சுச்சா? வலிக்கலயாண்டு எம்புருச கேக்கலமா. அதுனால, நா வந்துட்டேண்ட்டு சொன்னா. tal

ரெண்டாவது மகளப் பாத்து, நீ என்னம்மா வந்ததுண்டு கேட்டா. கேக்கவும், யம்மா! நானும் – வருசமெல்லாம் வயக்ககாட்ல வேல செய்யுறவங்களுக்குக் கஞ்சி செமந்து கிட்டுப் போவே. ஒரு நா கூட – எம்புருச என்னயப் பாத்துட்டு, இவ்வளவு நாளாக் கஞ்சிய செமக்குறயே! ஒனக்கு கனக்குதா! கனக்கலியாண்டு என்னயக் கேக்கலயே, அவங்கிட்ட இருந்து வாழ மாட்டேண்ட்டு வந்துட்டேமாண்டு, ரெண்டாவது மக சொல்லிட்டா.

கட்சி மகளப் பாத்து, நீ என்னம்மா வந்ததுண்டு தாயி கேட்டா. கேக்கவும், யம்மா! கல்யாணம் முடுஞ்ச நாளையிலி ருந்து இவ்வளவு சங்கிலியச் செமந்துகிட்டு இருக்கே. ஏண்டி! இவ்வளவு சங்கிலியச் செமந்துகிட்டு இருக்கியே. ஓ…ங் கழுத்து வலிக்குதா? வலிக்கலியாண்டு ஒரு தடவ கூட எம்புருச கேக்கலமா. அதா வந்திட்டேண்டு, கடசி மகளுஞ் சொல்லிட்டா.

சொல்லவும், அப்டித்தாண்டி மக்கா! ஒங்கப்பாவும் ரெண்டு வீட்ல போயி, ரெண்டுபடி உளுந்து வாங்கிட்டு வந்தாரு. அத ஆட்டிப் பெறக்கி, வட சுட்டே. சுட்டதில், ஒண்ண எடுத்துத் திண்டு பாத்தே. ருசியா இருந்திச்சு. பூராத்தயும் திண்டுபிட்டே. அவ்வளவயும் திண்டயே, ஒனக்கு வயிறு வலிச் சுச்சா? வலிக்கலியாண்டு ஒங்கப்ப கேக்கலியே! இவங்ககிட்ட இருந்து வாழப்பிடாது, வாங்க மக்கா, எங்கிட்டாச்சும் போயிரலாம்ண்ட்டு , வனாந்தரத்துப் பக்கம் போனாங்களாம். போயி, காஞ்சு கெடந்திச்சுகளாம். திண்டு கொழுத்தா நண்டு செலவுல இருக்குமா?

இருக்காதுல்ல. அதுனால, நாலுபேரும் காட்ல, ஆளுக்கொரு பக்கம் திரியிராங்க. திரியயில், பார்வதி – பரமசிவன் ரெண்டுபேரும், பறக்கப்பட்ட பன்னீராயிரத்துக்கும் எரக்கப்பட்ட எண்ணாயிரத்துக்கும் படியளந்து வாராக.

வரயில, இவங்க தாயி – மக்க நாலு பேரும், காத்துல வாடி, வெயில்ல காஞ்சு, மழயில நனஞ்சு திரியிராளுக.

இவங்களப் பாத்திட்டு, பார்வதி மனசுல எரக்கம் உண்டாகி, அங்க பாருங்க நாதா! நாலு பொண்ணுக, இந்தக் காட்டுக்குள்ள திரியுரதண்டு சொல்லுச்சு. கிட்டப் போயி, என்னாண்டு கேட்டுட்டு வாங்கண்டு பார்வதி சொல்லுது. பிரியநாயகி சொல்லத் தட்டமாட்டாம, அவங்க கிட்டப் போறாரு.

போயி -, என்னாங்கம்மா, ஒத்தயில இந்தக் காட்டுக்குள்ள திரியுரிங்கண்டு கேட்டாரு. கேக்கவும், அதுக ஒண்ணொண்ணும் – அததுக கதைகளச் சொல்லுதுக. சொல்லவும் பரமசிவனுக்குக் கோவம் வந்து, அவங்களச் சபிக்கிறாரு.

எப்டிச் சபிக்கிராருண்டா, எப்டிண்டா! மூட்டப்பூச்சிகளாப் படைக்கிறாரு. படச்சு, கட்டுல்ல, நாலு மூலைக்கு ஒருத்தர நிக்க வச்சுறுராரு. அதா நம்மள இந்தப் புடுங்கு புடுங்குது. மூட்ட கடுச்சா நம்மளால தாங்கா முடியுதா? அதா, பொறுப்பில்லாட்டி – புடுங்கு பெத்து அலைய வேண்டியதா. பொம்பள! எண்ணக்கிம் பொறுப்பா இருக்கணும்.

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், பண்பு விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *