நிகாவுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.பள்ளியில் சக மாணவர்கள் முன் ஆசிரியை திட்டியதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.ஓடிச்சென்று கழிவறையில் புகுந்து தாழிட்டுக்கொண்டு தேம்பி தேம்பி அழுதாள்.பின் தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக்கொண்டு முகத்தை கழுவி கைக்குட்டையால் துடைத்துக்கொண்டு வெளியே வந்தவளை பள்ளித்தோழி மேகா கட்டியணைத்து ஆறுதல் சொன்னாள்.
“நான் என்ன படிக்காம பசங்களோட ஊர் சுத்தனம்னா நினைக்கிறேன்?எப்போதும் புத்தகமும் கையுமாத்தானே இருக்கேன்.எனக்கு பிடிக்காத,புரியாத மண்டைக்குள்ளே ஏறாத பாடத்தை படிக்கச்சொன்னா எப்படிடீ படிக்க முடியும்?என்னோட அம்மாவுக்கு சின்ன வயசிலிருந்து டாக்டர் ஆகனம்னு ஆசையாம்.
அதனால என் மூலமா அதை நிறைவேத்தனம்னு நினைக்கறாங்க.ஆசைப்படறது எல்லாமே நிறைவேறாதுங்கிற புரிதல் கூட இல்லாம போனதால தான் எனக்கு இந்த நிலைமை.மாமரத்துல பழாப்பழத்தை காய்க்க வைக்க முடியாதது எப்படியோ அப்படித்தான் புரியாத பாடத்தை படிக்கிறது?”என கூறிய போது நிகாவின் கண்களில் மீண்டும் கண்ணீர் துளி முத்து போல் வெளிவந்ததை தன் ஆட்காட்டி விரலால் சுண்டி விட்டாள் தோழி மேகா.
“என் அப்பா அம்மாவும் எனக்கு பிடிக்காத பாடத்தை எடுக்கச்சொன்ன போது நான் பிடிவாதமா மறுத்துட்டேன்.மாவோட மூலப்பொருள் ஒன்னா இருந்தாலும் இட்லி,தோசை,பணியாரம்,ஆப்பம்னு நமக்கு பிடிச்சதா செஞ்சு சாப்பிட நமக்கு கொடுக்கிற அம்மா படிப்புல மட்டும் அவங்களுக்கோ,இல்ல பலபேரு படிக்கிறாங்கங்கிதாலயோ,உறவுக்காரங்க படிக்கிறாங்கறதாலயோ நமக்குள்ள அந்த படிப்பை திணிக்க பார்க்கிறாங்க.அவங்களுக்கு தம்பொண்ணு சிறப்பா வரோனுங்கிற வெகுளித்தனமான எதிர்பார்ப்பு தான் காரணம்.இந்த படிப்பு முறை,படிக்கிற முறை மட்டுமில்லை இந்த மொத்த சமுதாய அமைப்பு முறையே சரியில்லை.படிக்கிறவங்களுக்கும் சிரமம்,படிப்பை சொல்லிக்கொடுக்கிறவங்களுக்கும் சிரமம்,பெற்றோருக்கும் சிரமம்,படிச்சுட்டு வேலைக்கு போகிறவங்களுக்கும் சிரமம்னு இப்படியே வாழ்நாள் முழுவதும் நம்மை சிரமப்படுத்துற இந்த படிப்பே தேவையில்லைன்னு தோணுது”.என்றாள் மூச்சிரைக்க மேகா.
தொண்டைக்கம்மலை இருமி சரி செய்தவள் “எனக்கு இதையெல்லாம் பார்க்கும் போது சில சமயம் சிலரைப்போல செத்துப்போகனம்னு தோனறதை விட மிருகங்களைப்போல,பறவைகளைப்போல பசியமட்டும் தீர்க்கிற பழங்களை சாப்பிட்டு காலத்தைப்போக்கி வாழ்ந்து முடிச்சிடலான்னு தோணும்!பள்ளி மாடியிலிருந்து வீழ்ந்து மாணவி தற்கொலை.அதனால மற்ற மாணவர்களோட சான்றிதழ்களை எரிக்கிற,மொத்த பள்ளியையே சூறையாடுகிற வன்முறை இப்படி உலகம் போற போக்கால நாம எங்கே போயிட்டிருக்கோம்?இதையெல்லாம் எங்கே கத்துகிட்டோம்? இப்படி காட்டு மிராண்டித்தனமா செயல்படறதுக்கா இவ்வளவு சிரமப்பட்டு படிக்கிறோம்?பெற்றோரும் விரும்பியதை விரும்பியபடி செய்யாம,சாப்பிடாம சிக்கனமா இருந்து நம்மை படிக்வைக்கிறாங்க?”என தனது ஆதங்கத்தை ஆத்திரத்துடன் கொட்டித்தீர்த்த மேகாவை ஆச்சர்யமாக பார்த்தாள் நிகா.தோழி மேகாவின் ஆற்றல் மிக்க பேச்சு தனக்குள் தன்னைப்பற்றிய உறுதி நிலையை எடுக்க வைத்திருப்பதை உணர்ந்தாள்!
நிகா தம்மைப்பற்றிய நிலையை உறுதிப்படுத்தியவளாய் பெற்றோரிடம் தனது விருப்பநிலையை பேசி புரிய வைத்தவள் அடுத்தநாளே தமக்கு பிடித்த புரியும் பாடத்தை தேர்வு செய்து தேர்வில் வெற்றி பெற சிரமமின்றி படிக்கத்தொடங்கினாள்!