நீங்களும் சொல்லுங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 14, 2024
பார்வையிட்டோர்: 2,882 
 

(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அது சிங்கப்பூரில் பிரபலமான தங்கும் விடுதி. முப்பது மாடிகளைக் கொண்டது. ஒவ்வொரு மாடியிலும் எத்தனையோ அறைகள், உணவுக் கடைகள், கேளிக்கை அறைகள் என்று எத்தனையோ அறைகள் இருக்கின்றன. அந்தத் தங்கும் விடுதிக்குள் நுழைந்துவிட்டால் உலகமே அதனுள் அடங்கி இருப்பதாகத் தோன்றுகிறது.

ஆம்; ஆடல், பாடலுக்கு என்று பெரிய பெரிய அறைகள் இருக்கின்றன. விருந்து நிகழ்ச்சிக்கு என்று பல பெரிய அறைகள் இருக்கின்றன. உலகத்தின் பல பாகங்களிலிருந்து நாடு சுற்றிப் பார்க்க வருகின்ற சுற்றுப் பயணிகள் தங்குவதற்கு என்று ஏகப்பட்ட அறைகள் நிறைந்திருக்கின்றன. அந்தத் தங்கும் விடு திக்கு வருபவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தால் அதுவே பெரிய காட்சியாகத் தோன்றுகிறது.

அப்படிப்பட்ட அந்தப் பெரிய தங்கும் விடுதியில் ஐந்தாவது மாடியில் ”கிங்ஸ் ரூம்” என்ற இடத்தில் திருவள்ளுவர் நிறுவனத்தின் 30ஆம் ஆண்டு விருந்து நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. சுமார் ஐந்நூறு விருந்தினர்கள் கலந்து கொண்ட முப்பதாம் ஆண்டு நிறைவு விழாவில் சீன, மலாய், தமிழ் உணவு எனப்பல வகைப்பட்ட உணவுகள் மாறி மாறி வழங்கப்பட்டன. உண்டு மகிழ்ந்தி ருந்த வேளையில் திருவள்ளுவர் நிறுவனத்தின் பொறுப்பாளர் திரு. நச்சினார்க் கினியார் எல்லோருக்கும் முன் இருந்த ஒலி வாங்கியின் முன் நின்றார். உணவி லும், உரையாடலிலும் திளைத்திருந்த ஊழியர்கள் அமைதியடைந்தனர்.

அன்புக்கினிய சகோதர, சகோதரிகளே உங்கள் எல்லோருக்கும் என் பணிவான வணக்கம். ‘திருவள்ளுவர் நிறுவனம்’ நமது உழைப்பால் பெரும் ‘வெற்றியைப் பெற்றிருக்கிறது. நாம் தயாரித்த சூரிய சக்தியைக் கொண்டு மணிக்கு அறுபது கிலோ மீட்டர் ஓடும் வாகனம் உலகமெல்லாம் வேகமாக விற்பனை ஆகிறது. அவ்வாகனத்தில் உறுதியும், மலிவும் உலக மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. நம் வாகனம் காற்றுக்குக் கேட்டை ஏற்படுத்தாத தால் எல்லா அரசாங்கங்களும் நம் வாகனத்தை விற்க உடனே அனுமதி கொடுத்து வருகின்றன.

நமது அரசுக்கு செலுத்திய வரி போக ஐந்து பில்லியன் வெள்ளி மீதப்பட் டுள்ளது. இதில் மூன்று பில்லியனை திருவள்ளுவர் நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் போட்டுள்ளேன். ஒரு பில்லியனை நம் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு ஒதுக்கியுள்ளேன். எஞ்சியுள்ள ஒரு பில்லியனை நம் எல்லோருக்கும் திருவள் ளுவர் கருத்துப்படி

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”

என்ற கூற்றுக்கு ஏற்ப ஊதிய உயர்வா கக் கொடுக்க முடிவெடுத்துள்ளேன்; நன்றி’ என்று கூறிய போது ஏற்பட்ட கையொலி நிற்க பத்து நிமிடங்களாயிற்று.

நச்சினார்க்கினியர் எவ்வளவு பெரிய மனிதர் தன்னை ஒரு முதலாளியா கவே கருதாமல் ஊழியர்களில் ஒருவராக விளங்குகிறார். நமக்குக் கிடைக்கும் ஊதிய உயர்வைப் போலவே அவரும் எடுத்துக் கொள்கிறார். எத்துணை உயர்ந்த பண்பு. இவர் மனிதரல்ல ‘தெய்வம்’ என்று பலரும் பலவாறாகப் பேசிக்கொண்டே விருந்து முடிந்தபோது வெளியே வந்தனர்.

அப்போது ஆடம்பரமாக உடையணிந்து கொண்டு கம்பீரமாக வந்த ஒரு வன் திடீரென்று முல்லையின் முகத்தில் ஓங்கி அறைந்தான். முல்லை அம்மா என்று கத்திக் கொண்டு விழுந்தாள். அவன் கையில் பட்ட தங்க நகைகளை அறுத்துக் கொண்டு பஞ்சாய்ப் பறந்தான்.

சத்தம் கேட்டு ஓடி வந்த பாண்டியன் பக்கத்தில் கிடந்த கல்லை எடுத்துச் சுழற்றிக் கயவனை நோக்கி வீசினான். அது திருடனின் புறடியைத் தாக்கியதும் ‘அய்யோ’ என்று கத்திக் கொண்டு சாய்ந்தான். பாண்டியன் பறந்தோடிப் போய்க் கயவனின் கைகளைப் பின்புறமாக மடக்கிக் கட்டினான். சற்று நேரத்தில் அங்கு வந்த காவலர்கள் விபரம் கேட்டுக் குறித்துக் கொண்டவுடன் கயவனுக்கு கைவிலங்கிட்டு மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றனர்.

“மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங் கண்டது இல்”

என்ற வள்ளுவனின் கூற்றைப் போல் நாகரீகமாக வந்து எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து விட்டான் என்று பலரும் பேசிக் கொண்டு சென்றனர்.

‘முல்லை, அடி பலமாக விழுந்ததா? அதிகமாக வலிக்கிறதா? மருத்துவ ரைப் பார்க்க வேண்டுமா? என்ற கேள்வி மேல் கேள்விகளைக் கேட்டு முல்லையைத் தடுமாற வைத்தான் பாண்டியன். அப்படி ஒன்றும் இல்லை; வீட்டுக்குப் போய்விடலாம் என்று கூறிக் கொண்டே புறப்பட்ட முல்லை வீடு வரை துணைக்கு வர முடியுமா? என்று கேட்டாள். அந்த நிலையில் முல்லையைத் தனியே அனுப்ப விரும்பாத பாண்டியன் சம்மதம் தெரிவித்தான்.

இருவரும் வாகனத்தை நோக்கி நடந்தபோது ‘இந்த நிலையில் நீங்கள் வாகனத்தை ஓட்டுவது நல்லதல்ல. அதனால் நான் ஓட்டலாமா? என்றான் பாண்டியன். பரவாயில்லிங்க; நானே ஓட்டுகிறேன் என்று கூறிக் கொண்டே முல்லை வண்டியை ஓட்டினாள். வண்டி சென்று கொண்டிருந்த வேளையில் ‘காலமெல்லாம் துணையாக இருக்கிறேன் என்று கைப்பிடிக்க விரும்பிய…..’ பாண்டியன் முடிப்பதற்குள் ‘அதைப்பற்றிப் பேசி வெந்த புண்ணில் வேல் பாய்ந்ததைப் போல மேலும் என்னைத் துன்புறுத்தாதீர்கள்’ என்று கூறிய முல் லையின் கண்களில் இருந்து நீர் சொட்டுச் சொட்டாக விழுந்தன.

என்ன முல்லை? உங்கள் மனம் வருந்தும்படி ஏதாவது பேசி விட்டேனா? என்று பாண்டியன் வேதனையுடன் கேட்டான். அப்படி ஒன்றும் இல்லை பாண்டியன். என் வேதனைக்கும், வருத்தத்திற்கும் நானும் என் பெற்றோர்களும்தான் காரணம் என்றாள் முல்லை.

எனக்கு ஒன்றும் புரியவில்லையே முல்லை. சற்ற விளக்கமாக் கூறுங்களே என்றான் பாண்டியன். கூறுகிறேன் பாண்டியன்; கூறுகிறேன்.

நான் படித்துப் பட்டம் பெற்ற பின்னர் உங்களைப் போன்ற நல்லவர்கள் வந்து பெண் கேட்டார்கள். அப்போதெல்லாம் என் பெற்றோர்கள் சாதி, சம்பிரதாயங்களைப் பார்த்தார்கள்; கேட்டார்கள் இல்லாத மூடப் பழக்க வழக்கங்க ளுக்கு அடிமையாகி பகுத்தறிவை இழந்து விட்டார்கள். அன்றைய நிலையில் நானும் என் பெற்றோர் சொல்வதே வேதவாக்க என்று இருந்தேன். அதன் முடிவு நான் இன்னும் தனிமரமாக இருக்கிறேன்.

ஆண்டு விழாவிற்கு தனியாக வந்த நான் இவ்வளவு நகைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு வந்திருக்கக் கூடாதுதான். அது எனக்கு நன்றாகத் தெரிகி றது. தெரிந்தும் ஏன் போட்டுக் கொண்டு வந்தேன்.?

ஓர் ஆண் என்னுடன் வந்திருந்தால் திருடனுக்கு அவ்வளவு துணிச்சல் வந்திருக்குமா? கைநீட்டி அடித்திருப்பானா? என் நகைமீது கை வைத்திருப்பானா? அல்லது நான்தான் இவ்வளவு நகைகளை அணிந்து கொண்டு வந்திருப். பேனா? என்ன செய்வது எல்லாம் நம் தமிழர்களின் அறியாமையே காரணம்.

நானும் அறியாமை என்னும் இருளில் மூழ்கியிருந்தேன். இப்போது வெளி உலகத்தைக் கூர்ந்து நோக்குகிறேன். பகுத்தறிவு என்னும் அறிவுப் பெட்டகத்தைத் தூண்டி விட்டேன். ஒன்றா? இரண்டா? பல ஆண்டுகள் தொடர்ந்து சிந்தித்து வருகிறேன். அச்சிந்தனை என் அறிவுக் கண்களை திறந்தது. ஆம். என்னதான் சாஸ்திர சம்பிரதாயங்களைச் செய்து வந்தாலும் பிறப்பைத் தடுக்க முடிந்த அளவு இறப்பைத் தடுக்கவோ, நிறுத்தவோ முடிகிறதா? நடப்பது நடந்தே தீரும். இதுதான் நியதி. அப்படி என்றால் சாதி, மதம், சம்பிரதாயம் ஏன்? அதன் நன்மைதான் என்ன?

அதற்காகப் பண்பாட்டை இழக்கவோ, கட்டுப்பாட்டை மீறி கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று கும்மாளமிடவோ விரும்பவில்லை. எது சரி? எது தவறு? என்று சிந்தித்ததுப் பகுத்தறிவுக்கு நல்லது என்று பட்டதைக் கொள்கையாகக் கொண்டு வாழ்வதே நல்லது என்பதே எனது கருத்தாகும்.

பெற்றோர் படிக்க வைத்தனர். கருத்துடன் கற்றேன். பட்டமும் பெற்றேன். நல்ல வேலையிலும் சேர்ந்து கை நிறைய சம்பாதிக்கிறேன். என்ன பயன்? வாழ்க்கையில் மகிழ்ச்சி மனத்தில் நிம்மதி இருக்கிறதா?

ஆரம்பத்தில் சாதி, மதம், சம்பிரதாயம் பார்த்த பெற்றோர் இப்போது யாராவது நல்லவர் கிடைத்தால் போதும், திருமணம் செய்து கொடுக்கலாம் என்று தினமும் ஏங்கிக் கொண்டு இருக்கிறார்கள். என்னைத் திருமணம் செய்து கொடுக்க முடியவில்லையே என்று அவர்கள் படும் வேதனையையம், துன்பத் தையம் பார்க்கும்போது வாழ்க்கையில் பயங்கர வெறுப்பு என்னை ஆட் கொள்கிறது. அப்போது இப்படிப்பட்ட போராட்ட வாழ்க்கை தேவையா? தினம் கொஞ்சம் கொஞ்சமாகச் சாக வேண்டுமா? ஏன் ஒரேயடியாக…. முல்லை முடிப்பதற்குள், அப்படியெல்லாம் நினைக்கக் கூடாது. பிறந்து நாம் வாழ்ந்து காட்ட வேண்டும். அழாதே முல்லை. நீ உன் பெற்றோர்களை நினைத்துப் பார்த்தாயா? என்றான் பாண்டியன்.

ஆம்! பாண்டியன் என் பெற்றோர்களின் நினைப்பு என் கண் முன் தோன்றும். நான் மறைந்து விட்டால் வயதான என் தாய், தந்தையரைப் பார்ப்பவர்கள் யார்? அவர்கள் வயதானோர் இல்லத்தில் இருந்து அணு அணுவாகச் சாக வேண்டுமா? அதற்காகவா என்னைப் பெற்று ‘ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு’ என்று வளர்த்தார்கள்? நான் பிள்ளையாகப் பிறந்த கடன் அவர்களைக் காப்பாற்ற வேண்டாமா? என்றெல்லாம் எண்ணிப் பார்க்கின்ற நேரத்தில் மின்னல் வேகத்தில் ஓர் எண்ணம் தோன்றி மறையும்.

என் பெற்றோர்கள் தங்கள் பெயரைச் சொல்ல, ஒரு பிள்ளை இருந்தால் போதும் என்ற சிக்கனத்தில், என்னை மட்டும் பெற்று வளர்த்தார்கள். வயதான காலத்தில் அவர்களைக் காப்பாற்ற நான் இருக்கிறேன். என் பெயரைச் சொல்ல. வயதான காலத்தில் என்னைக் காப்பாற்ற, எனக்கு வேண்டியதைச் செய்ய முடியாத போது என்ன செய்கிறது என்று கேட்க, மனதிற்கு ஆறுதலாக ஒரு வார்த்தை சொல்ல எனக்கொரு பிள்ளை வேண்டாமா?

“ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்”

என்ற குறளின் மூலம் அறிவு நிறைந்த நல்மக்களைப் பெறுவது ஒரு பெண்ணின் கடமை என்றல்லாவா வள்ளுவர் கட்ட ளையிடுகிறார். அந்தத் தெய்வ புலவரின் கட்டளையை நிறைவேற்றாதவர்கள் பெண் பிறவி எடுத்ததின் பலனை நிறைவேற்றாதவர்களாகிறார்களே!

அது மட்டுமல்ல மக்கள் பிறவி எடுத்தவர்கள் ‘பதினாறு பேறுகளையும் பெற்ற பெருவாழ்வு வாழ்க’ என்று வாழ்த்துவார்களே, அந்தப் பதினாறு பேறுகளில் மக்கள் பேறு மிகச் சிறந்த பேறாகுமே. அந்த மக்கள் பேற்றில் தானே உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது. அத்துணைச் சிறப்பும், பெருமையும், அவசியமும் மிக்க அந்த மக்கள் போற்றை இழந்து விடுவதா? அவர்களில் நானும் ஒருத்தியாக இருக்க வேண்டுமா?

அதுவரை வாய் பேசாது மௌனமாகச் சிலைபோல் அமர்ந்திருந்த பாண்டி யன் ‘முல்லை, நீங்கள் பெரிய தத்துவவாதியைப் போல் பல கூறுகளைத் தொட்டுப் பேசிக் கொண்டு வந்ததைக் கவனித்தேன். அப்போதே உங்கள் குழப்பம் எனக்குப் புரிந்தது. புரிந்து என்ன செய்ய முடியம்? திருமணம் செய்யாத இருக்கின்றவர்களைப் பார்த்து ஏன் இன்னும் திருமணம் செய்யாது இருக்கிறீர்கள்? என்ற கேட்டால் அவர்கள் தத்துவம் பேசத் தொடங்கி விடுகிறார்கள்.

பிறந்தது ஒரு முறை. அந்த வாழ்க்கையை நன்றாக அனுபவிக்க வேண் டும். மனைவி, மக்கள் என்ற சிறைக்குள் அகப்பட்டு வேதனைப்படக் கூடாது என்று சிலரும்; அக்காள் தங்கைக்கு இன்னும் திருமணம் நடக்க வில்லை. அவர்களுக்குத் திருமணம் நடக்க வில்லை. அவர்களுக்குத் திருமணம் முடிந்த பின் பார்த்துக் கொள்ளலாம் என்று பலரும்; திருமணம் செய்வோம்; இப்போது என்ன அவசரம் என்று கிட்டத்தட்ட நாற்பது வயதை எட்டிப் பிடிக்கின்றவர்க ளும் சொல்லித் தப்பிக்கிறார்கள். இவ்வாறு திருமணம் ஆகாதிருப்பவர்கள் மழுப்புகின்ற போது திருமணம் செய்து கொண்ட நாங்கள் உங்களைப் போன் றோரின் நிலையை எண்ணி வருந்த வேண்டியுள்ளது. ஆயினும் நீங்கள் குழப்ப மடையாமல் தைரியத்துடனிருங்கள். உங்களுக்கு என்று ஒருத்தன் பிறந்திருப்பான்; என்ற போது…..

பாண்டியன், ஒரு சில மாதங்களுக்கு முன் குழப்பமடைந்திருந்தது உண் மைதான். ஆனால் இப்போது குழப்பம் நீங்கி தெளிந்த நிலையில் இருக்கிறேன். சற்று முன் சொன்னீர்களே தத்துவவாதி என்று அது உண்மையல்ல. உண்மையில் நான் ஒரு புரட்சிப் பெண்ணாக வாழப் போகிறேன். சாதி, மதம், சம்பிரதாயம் என்ற கட்டுப்பாடுகளை தகர்த்து எறிந்து விட்டேன். என்னுடைய முடிவை யாரும் மாற்ற முடியாது. இனிமேல் நான் யாருக்கும் பயப்படப் போவது மில்லை. என் தாய் தந்தையாரும் என் முடிவுக்குக் குறுக்கே நிற்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன். அப்படியே தடுத்தாலும் நான் கேட்கப்போவதில்லை. வள்ளுவன் சொன்னதைப் போல எண்ணித் துணிந்து விட்டேன். ஆனால்…. ஆனால் என்ன முல்லை? பாண்டியன்தான் கேட்டான்.

நீங்கள் உதவி செய்ய வேண்டும். உங்கள் உதவிதான் எனக்கு ஊன்று கோல். நீங்கள் மட்டும் உதவ மறுத்தால் என்னால் எதையுமே செய்ய இயலாது. மறுக்காமல் உதவுவீர்களா பாண்டியன்? என்றாள் முல்லை.

பாண்டியன் ஒரு கணம் திக்குமுக்காடிப் போனான். என்ன உதவி கேட்கப் போகிறாள்? என்னப் பதில் சொல்வது? என்று பலவாறு எண்ணிக் குழம்பிப் போனான். ஒருவாறு சமாளித்துக் கொண்டு ‘முல்லை, என்னால் என்ன உதவி செய்ய முடியும்?’ என்று அமைதியாகக் கேட்டான்.

என்னடா ஒரு பெண் இப்படிப் பேசுகிறாளே என்று என்னைத் தப்பாக நினைத்து விடாதீர்கள். வள்ளுவன் மீது ஆணையாகச் சொல்கிறேன். இன்று வரை எந்த ஆடவரையும் தொடாமல் வாழ்ந்துவிட்டேன். அதை நீங்கள் நம்புவீர்களா?

முல்லை உன்னைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். உன் அன்பு, அடக்கந்தானே என்னைக் கவர்ந்தது. நீ மிக அழகாக இருக்கிறாய். இருந்தும் உன் அழகிற்காக மட்டும் உன்னை விரும்பவில்லை. உன் அறிவு, ஆற்றல், எல்லாவற்றிற்கும் மேலாக உனது உயர்ந்த பண்பாடு என்னை மிகவும் கவர்ந்தது. இருந்தும் என்ன செய்வது? அதெல்லாம் கடந்து போன செயல்.

இல்லை பாண்டியன்! இல்லை!! என்னைப் பற்றி எவ்வளவு உயர்வாகக் கூறினீர்களோ அதைவிட உயர்ந்தவர் நீங்கள். ஒரு பெண் கற்போடு வாழ்வது இயற்கை. ஏனெனில் கற்புதான் அவளின் அணிகலன். அதனால்தான் பெண் பெருமையும் புகழும் பெறுகிறாள். அப்பெண்ணின் நிறைந்த வாழ்வு பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும், சமுதாயத்திற்கும் சிறப்பை நல்குகிறது. ஆனால் ஓர் ஆண் ஒருத்தியோடு மட்டும் வாழ்கிறார் என்றால் அது எளிதான செயலல்ல. அவர் தான் கற்புள்ளவர். அந்த வகையில் நீங்கள் பத்தரை மாற்றுத் தங்கம் என்றே நம்புகிறேன்.

என்னைப் புகழ்ந்ததுபோதும் முல்லை. நான் உதவி செய்ய வேண்டும் என்று கூறினாயே அது என்ன உதவி என்று சொல்லவில்லையே என்றான் பாண்டியன்.

நான் புரட்சிப் பெண் என்று வீரம் பேசினேன். ஆனால் உள்ளத்தில் உள்ளதை என்னால் வெளியே சொல்ல முடியவில்லையே. நான் என் செய்வது? நான் சுற்றிச் சுற்றிப் பேசுகிறேன். அது உங்களுக்கு விளங்கவில்லையே. இனி நான் எப்படி விளக்கப் போகிறேன்? என்று முல்லை இழுத்தாள்.

அப்போதுதான் பாண்டியனுக்கு இருந்த ஐயம் அகன்றது. அதே வேளையில் அவன் தலையில் சம்மட்டி கொண்டு அடிப்பது போல் ஓர் உணர்வு எழுந்தது. ‘அம்மா’ என்று அவனையும் அறியாமல் கத்தினான். முல்லை பதிறிப் போய் என்ன? என்னங்க செய்யுது என்று அவசர அவசரமாகக் கேட்டான். உன் முடிவு கொடுத்த அதிர்ச்சியே என்னை ஆட்டிப்படைத்து விட்டது என்றான்.

பாண்டியன் என் முடிவு உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் என்னை மன்னித்துவிடுங்கள். ஆனால் நான் சொன்னதைச் சொல்வதைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். இனிமேல் என்னை ஒருவர் விரும்பித் திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா? அப்படியே ஒருவர் விரும்பினால் என் மீது உண்மையான அன்போடு விரும்புகிறாரா? அல்லது என் சொத்து மீது பற்றுக் கொண்டு வருகிறாரா? அவர் நல்லவரா? குடிகாரரா? முரடரா? சூதாடியா? என்று எப்போது? எப்படிக் கண்டு கொள்ளப் போகிறேன்?

நான் மீண்டும் ஒன்றை நினைவு படுத்துகிறேன். வருத்தப்படாதீர்கள். சிற்றின்பத்திற்கு ஆசைப்பட்டுக் கேட்பதாகத் தயவு செய்து நினைக்காதீர்கள். பின், நான் ஏன் இப்படியெல்லாம் பேசுகிறேன்? என்ற நீங்கள் நினைக்கக் கூடும். நான் எப்போதும் இப்படி இளமையோடு இருக்க முடியாது. நடக்க, எடுக்க முடியாத வயதான காலத்தில் தாகத்திற்குத் தண்ணீர் கொடுக்க ஒரு பிள்ளை வேண்டாமா? இறந்த நேரத்தில், அம்மா என்று உண்மையாக அழுது ஒரு சொட்டு கண்ணீர் விட ஒரு மகவு வேண்டாமா? யாரும் இல்லாத அனாதை யாகப் போக வேண்டுமா? இப்போதே உதவி செய்ய நீங்கள் பயப்படுகிறீர்கள். எனக்கு முடியாத நேரத்தில் நீங்களோ அல்லது உங்கள் மனைவி வயிற்றில் பிறந்த பிள்ளைகளோ வந்து உதவுவார்கள் என்று எதிர்பார்க்கலாமா? இருக்கவே இருக்கிறது முதியோர் இல்லம் என்று சொல்லுங்கள் பாண்டியன். அது தான் உங்கள் முடிவா?

நீங்கள் என் வீட்டிற்கு வருவதன் மூலம் எனக்குக் குழந்தை பிறக்குமே என்றால் அந்தக் குழந்தைக்காக நீங்கள் ஒரு காசு செலவிட வேண்டாம். அந்தக் குழந்தைக்கு ஆகும் செலவு அனைத்தையம் நான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால் அந்தக் குழந்தைக்கு நீங்கள்தான் தந்தை என்ற உண்மையை மட்டும் சொல்ல அனுமதியுங்கள். அந்தப் பிள்ளை உங்களை அப்பா என்று அழைக்க உரிமை கொடுங்கள். ஊர்ப் பேர் தெரியாத யாரோ ஒருவருக்குப் பிறந்த பிள்ளை என்ற சொல் ஏற்படக் கூடாது. அந்தச் சொல்லைத் தாங்கிக் கொண்டு என்னால் வாழ முடியாது. வாழவும் மாட்டேன். உங்களால் எனக்கு ஒரு குழந்தை பிறக்குமே என்றால் அந்தக் குழந்தையோடு என் வாழ் நாளைக் கழித்து விடுவேன். அதன்பின் ஏற்படுகின்ற இன்ப துன்பங்களைத் தாங்கிக் கொள்கிறேன். பாண்டியன் எனக்கு வாழ்வு கொடுப்பீர்களா? என் வேண்டு கோளை ஏற்றுக் கொள்வீர்களா? என்று அன்போடு கேட்டாள்.

பாண்டியன் பேச முடியாத ஊமையானான். பிரம்மை பிடித்தவனைப் போல் இருந்தான். அதற்குள் வாகனம் வீட்டின் முன் வந்து நின்றது. முல்லையின் தாயும் தந்தையும் மண்டபத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். முல்லை வண்டியினின்றும் இறங்கி பாண்டியனை அழைத்தாள். அதுவரை மரம் போலிருந்தவன் சுய உணர்வு பெற்று வண்டியிலிருந்து இறங்கி வந்தான். முல்லை பாண்டியனை அழைத்துக் கொண்டு வீட்டினுள் சென்றாள்.

குலம், கோத்திரம் என்ற பழமையில் மூழ்கிய முல்லையின் பெற்றோர் பாண்டியனைப் பார்த்து திரு… திரு… என விழித்தனர். பாண்டியனும் என்ன செய்வது? ஏது பேசுவது என்று தெரியாது திகைத்துப் போய் நின்றான்.

அப்பா, இவர் பெயர் பாண்டியன். நான் வேலை செய்யும் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவருக்குத் திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றன. இவரை நான் விரும்புகின்றேன். இவருக்கோ, இவரின் மனைவிக்கோ அல்லது இவரின் பிள்ளைகளுக்கோ எவ்விதக் தொல்லையும் கொடுக்க மாட்டேன் என்று உறுதி கூறி எனக்கு வாழ்வு தருமாறு கெஞ்சிக் கேட்டிருக்கிறேன். உங்களின் முடிவு தெரிந்த பின்னரே அவர் பதில் சொல்லக் காத்திருக்கிறார். அம்மா! என்னைப் பெற்ற தாயே! மௌனமாக நில்லாமல் நீங்களும் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்று முல்லை கூறிய போது அங்கு அமைதி நிலவியது.


அலுவலகத்திலிருந்து முல்லையின் வாகனம் இல்லத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. அப்போது முல்லையின் எண்ணங்கள் சிறகடித்து எங்கெங்கெல்லாமோ பறந்து திரிந்தன. ஒரு காலத்தில் ஏக்கமும் சோகமும் கொண்ட சிந்தனைகளாகவே இருந்தன. ஆனால் இன்றோ வாழ்க்கையில் ஒரு பிடிப்பும் தெளிவும் நிறைந்த எண்ணங்களே சுற்றிச் சுழன்றன. அதற்கான காரணங்கள் என்ன? முல்லையின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றந்தான் என்ன?

வண்டி வீட்டின் முன் நின்றபோது முல்லையின் தந்தை தன் மூன்று பேரப் பிள்ளைகளுடன் தோட்டத்தில் ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தார். பேரப்பிள்ளைகள் தேனிக்களைப் போல அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண் டும் தாத்தா சொல்வதைக் கேட்டுக் கொண்டும் இருந்தனர். அப்போது அங்கே நிலவிய அன்பையும் குதுகலமான சூழ்நிலையையும் கவனித்த முல்லை மகிழ்ச் சியுடன் வண்டியிலிருந்து இறங்கி வந்தாள்.

‘ஆ’வைக் கண்டதும் கன்று துள்ளிக் குதித்து ஓடி வருவதைப் போல் அம்மா என்று அழைத்துக் கொண்டு குழந்தைகள் ஓடிந்தன. அள்ளி அணைத் துக் கொண்டு வீட்டிற்குள் சென்றாள். அப்போது அவள் பெற்ற இன்பத்தை எதற்கு எப்படித்தான் ஒப்பிடுவது?

அன்னையைக் கண்டதும் பிள்ளைகள் அடைந்த மகிழ்ச்சியையும் பிள்ளை களைக் கட்டிப் பிடித்துக் கொண்டு பெற்றவள் உற்ற சுகத்தையும் முல்லையின் தந்தை பார்த்துப் பேரின்ப முற்றார். அந்த வேளையில் அவரின் உள்ளம் பின்னோக்கிச் சென்றது.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் எத்தனையோ இளைஞர்கள் பெண் கேட்டு வந்தனர். அவர்களில் இந்தப் பாண்டியனும் ஒருவன். அப்போதே சம்மதம் தெரிவித்திருந்தால் இப்போது அம்மா என்று அழைத்த பிள்ளைகள் அப்பாவையும் சேர்த்து அழைத்திருப்பார்களே. தனியாக வந்த மகள் தன் கணவனுடன் இணையாக வந்திருப்பாளே. அக்காட்சி எவ்வளவு இன்பத்தைக் கொடுத்திருக்கும்.

அதற்குத் தடையாகத் தானும் மனைவியும் இருந்துவிட்டோமே என்று எண்ணி வேதனைப்பட்டார். காலம் மாறுகின்ற போது நாமும் சேர்ந்து மாறாமல் மூடப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்துவிட்டோமே என்று கண் கலங்கினார். தன்னைப் போல் இன்னும் எத்தனை பெற்றோர்கள் சாதி, சம்பிரதாயங்களுக்குக் கட்டுப்பட்டுத் தம் பிள்ளைகளின் நல்வாழ்விற்கு இடையூறாக இருக்கிறார் களோ என்று நினைத்த போது தாங்க முடியாத வருத்தத்திற்கு ஆளானார்.

திருமணம் செய்து பல பிள்ளைக்குத் தந்தையான பாண்டியனுக்குத் தான் இரண்டாம் மனைவியாக வாழப் போகிறேன் என் தன் மகள் அழுத்தம் திருத்தமாகச் சொல்லியபோது தலையைப் பிடித்துக் கிள்ளிப் போட்டு விடுவோமா என்ற அளவிற்குக் கோபம் ஏற்பட்டது. ஆனால் அவள் அடுத்தடுத்துக் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத போது தலை குனியவே நேரிட்டது. அது மட்டுமின்றி அவள் பேச்சில் அடங்கிக் கிடந்த நியாயமும் உண்மையும் என்னைப் பெட்டிப்பாம்பாக அடக்கி வைத்துவிட்டது.

எந்த நாளும் ஏக்கமும் தூக்கமுமாக இருந்த எனக்கும் என் மனைவிக்கும் அமைதியைக் கொடுத்தாள். அமைதி ஆட்சிபுரிந்த இந்த வீட்டில் மூன்று பிள் ளைகளின் மூலம் ஆரவாரத்தையும் அளவற்ற ஆனந்தத்தையும் கொடுத்திருக்கி றாள். அவளும் புது மிடுக்குடனும் தெளிவுடனும் வாழ்க்கையில் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் வாழ்கிறாள். தகப்பன் மகளுக்கு அமைத்துக் கொடுக்க வேண்டிய வாழ்க்கையை, மகளே தேடிக் கொண்டதையும் தடுக்க நினைத்தது எவ்வளவு பெரிய தவறு? என்ற கேள்வி எழுந்த போது பேரன் அம்மா வாங்கிவந்த கேசரியைத் தாத்தாவின் வாயில் வைத்தான். பேரனைக் கட்டிப் பிடித்துத் தூக்கிய போது அவருக்கு உடலெல்லாம் இனிப்பது போலிருந் தது.

அன்று முல்லை தன் வாகனத்தின் சாவியை இப்பாண்டியனிடம் கொடுத்து மணியாகிவிட்டது வண்டியில் செல்லுங்கள் என்றபோது தடுக்க நினைத்தான். தடுத்தாலும் அது வீண் முயற்சியே என்பதை உணர்ந்து பாண்டியன் சாவியை வாங்கிக் கொண்டு வண்டியில் புறப்பட்டான். முல்லை சாலை வரை வந்து வழியனுப்பி வைத்தாள்.

பாண்டியன் வண்டியை வேகமாகத் தான் செலுத்தினான். ஆனால் பாண்டி யனின் எண்ணங்கள் வண்டியை விட மின்னல் வேகத்தில் சுழன்றன.

கிட்டே போனால் எட்டிப் போகும்; எட்டிப் போனால் கிட்டே வரும் என்பார்களே அலைமாகாத நாளில் முல்லை எட்டாக் கனியாக இருந்தாள். ஆனால் அதே முல்லை குடும்பத்துடன் வாழ்கின்ற இப்போது நான் கணவனாக வேண்டும் என்று அன்போடு கெஞ்சுகிறாள்.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்கிறார்கள். அது உண் மையோ பொய்யோ எனக்குத் தெரியாது. ஆனால் என் மனைவி என் மீது உயிரையே வைத்திருக்கிறாள். தலையை வலிக்கிறது என்று சொன்னால் போதும். துடிதுடித்து மருந்தைத் தடவத் தொடங்கி விடுவாள். கை, காலில் எங்கேயாவது இடித்துக் கொண்டால் உடனே மருந்து வைத்துக் கட்டுப்போட்டு விட்டுக் கவனமாக நடந்து செல்ல வேண்டாமா? என்று செல்லமாகக் கண்டிக்கிறாள்.

வேலை முடித்து வீட்டிற்குள் நுழைந்ததும் அன்போடு வரவேற்று அருகில் அமர்ந்து அமுது படைக்கிறாள். சின்னக் குழந்தைக்குக் கதை கூறி ஊட்டுவதைப் போல பக்கத்திலிருந்து ஏதேதோ நிகழ்ச்சிகளைச் சொல்லுவாள். என்னையும் அறியாமல் அவளின் பேச்சைக் கேட்டுக் கொண்டே வயிறு புடைக்க உண்டு விடுகிறேன்.

பள்ளி அறையில் நல்ல மனைவியாகவும் இல்லத்திற்கு ஏற்ற தலைவியாக வும் கலந்து உரையாடும் போது மதி மந்திரியாகவும் குழந்தைகளை வளர்ப்பதில் அன்புத் தாயாகவும் திகழ்கிறாள். இல்லறத்தை நல்லறமாக நடத்தி வருகின்ற அன்புத் துணைவி இருக்கும்போது முல்லைக்கு எப்படி வாழ்வளிக்க முடியும்?

மனம் புரிந்த நாளிலிருந்து இன்றுவரை எந்தவொரு ஒளிவு மறைவுமின்றி என் கனிமொழியுடன் வாழ்ந்து வருகிறேன். இன்று நடைபெற்ற நிகழ்ச்சியை மறைப்பதா? அல்லது உள்ளது உள்ளபடியே சொல்வதா? அலை அலையாக எழுந்த வினாக்களுக்கு விடை காண முடியாது தடுமாறிக் கொண்டே சென்றான்.

நள்ளிரவைக் கடந்து விட்டபோதிலும் சன்னல் திறந்திருக்க கனிமொழி வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தாள். பாண்டியனைக் கண்டதும் எழுந்து சென்று கதவைத் திறந்து புன்னகையுடன் வரவேற்றாள். பதிலுக்குப் பாண்டிய னின் இதழ்கள் மலர்ந்தன. ஆனால் அவன் முகம் ஏதோ ஒரு மாதிரியாக இருந்தது.

கனிமொழி சாப்பிட்டு விட்டாயா? பிள்ளைகள் சாப்பிட்டார்களா? என்று கேள்விகளைக் கேட்டான். பிள்ளைகள் சாப்பிட்டுவிட்டுப் பாதித் தூக்கம் தூங்கி விட்டார்கள் என்றாள் முல்லை. அப்படி என்றால் நீ இன்னும் சாப்பிடவில் லையா? சரி வா. வந்து சாப்பிடு என்று சாப்பாட்டு மேசையின் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

கனிமொழி உணவை அள்ளி பாண்டியனுக்கு ஊட்டினாள். வேண்டாம் என்று தடுத்துக் கொண்டே வாங்கிக் கொண்டான்; அவளும் உண்டாள். சாப்பிட் டுக் கொண்டே உங்கள் முகம் சற்று மாற்றமாக இருக்கிறது என்றாள் கனிமொழி. ”என்ன? சற்று மாற்றமாக இருக்கிறதா? நன்றாகக் கவனித்துப் பார்; பெரிய மாற்றமாக இருக்கும்” என்றான் பாண்டியன்.

சிரித்துக் கொண்டே, ஏங்க என்ன நடந்தது? ஏன் இவ்வளவு நேரம் கழித்து வந்திருக்கிறீர்கள்? என்று எவ்வித சலனமும் இல்லாமல் இன்முகத்தோடு வின வினாள். ‘உனக்கு ஒரு சக்களத்தி வரப்போகிறாள்’ என்று சற்றுக் கடுகடுப்பாகக் கூறினான். கனிமொழி கலகல என்று சிரித்துக் கொண்டே ‘அப்படி என்றால் இனி எனக்கு நல்ல ஓய்வுதான்’ என்றாள்.

கனிமொழியின் கலங்கமற்ற மனத்தையும் அவள் தன் மீது வைத்திருக்கும் அளவற்ற நம்பிக்கையையும் நினைத்தபோது முல்லையின் பேச்சு வேதனை யைக் கொடுத்தது.

கனிமொழி நான் வேடிக்கையாகவோ விளையாட்டாகவோ சொல்லவில்லை; உண்மையாகவே சொல்கிறேன் என்று நடைபெற்ற எல்லா நிகழ்ச்சிகளையும் ஒன்று விடாமல் அப்படியே சொல்லி முடித்தாள்.

வேடிக்கையாகக் கருதிய கனிமொழி, கணவரின் பேச்சை கேட்கக் கேட்க அது உண்மை என்பதை உணர்ந்து மிகக் கூர்ந்துக் கேட்டுக் கொண்டே வந்தாள். போகப் போகக் கனிமொழியின் கண்களில் கண்ணீர் கசிந்தது. கண்ணீரைக் கண்டதும் பாண்டியன் பெரும் வேதனையுடன் ‘கனிமொழி நான் ஏதேனும் தவறாகச் சொல்லியிருந்தால், தப்பாக நடந்திருந்தால் என்னை மன்னி…’ அவன் வார்த்தையை முடிக்கவில்லை. அதற்குள் கனிமொழி தடுத்துவிட்டாள்.

ஒரு பெண்ணின் வேதனையை மற்றொரு பெண்ணால் மட்டுமே உணர முடியும். உணர்ந்தாலும் எந்தப் பெண்ணும் விட்டுக் கொடுக்க முடியாத செயலாகும். என்றாலும் உங்களை நான் நன்றாக அறிவேன். நம் பிள்ளைகளையும் என்னையும் விட்டுப் பிரிய மாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். உங்களுடன் பத்தாண்டுகளுக்குக் குறையாமல் வாழ்ந்து வருகிறேன். இந்தப் பத்தாண்டுகளில் நான் பெற்ற இன்பமும், மகிழ்ச்சியும், நிறைவும் அடுத்த பிறவியில் கூட மறக்க முடியாது.

முல்லை என் சகோதரியாக இருந்து இவ்வளவு வேதனைப்படுவாளே என்றால் என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? உங்களோடு வாழும் பாக்கியத்தை ஒரு வழியில் முல்லை எனக்குத் தந்திருப்பதாகவே கருதுகிறேன். ‘யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதைப் போல முல்லையும் இன்பம் பெற்று வாழட்டும். ஆகவே வாழத் துடிக்கின்ற முல்லைக்கு வாழ்வளியுங்கள். நான் அவசரப்பட்டோ, உணர்ச்சிவசப்பட்டோ பேசுவதாக நினைக்க வேண்டாம். நீங்கள் கூறிய எல்லாக் கருத்துக்களையும் கூர்ந்து நோக்கிய பின் னர்தான் இந்த முடிவுக்கு வந்தேன். தவிர முல்லையின் பேச்சும் கருத்தும் மிகச் சரியானவை. அப்படிப்பட்ட பெண்ணுக்கு வாழ்வளிக்கத்தான் வேண்டும். உயி ரோடு இருக்கும்வரை உங்கள் மீது ஐயமோ, அவ நம்பிக்கையோ கொள்ள மாட்டேன். உண்மையாக, சுய உணர்வுடன் சொல்கிறேன் என்றவள்; புதுசு வந்ததும் பழசைப் பிடிக்குமா? என்று கேட்ட கனிமொழி சிரித்தாள்.

தான் கேட்பதும் காண்பதும் கனவல்ல, உண்மைதான் என்பதை உணர்ந்தா லும் அவன் நெஞ்சம் ஒரு நிலையில் இல்லை. ஏதோ ஒரு சிக்கலில் அகப்படப் போகிறோம் என்ற தயக்கத்தோடு கட்டிலில் சாய்ந்தான். கனிமொழி கட்டிப் பிடித்து முத்தமிட்டு இன்ப மூட்டினாள். அந்த இன்ப நினைவோடு பாண்டியன் கண்ணயர்ந்தான்.

பாண்டியன் குடும்பத்துடன் முல்லையின் வீட்டிற்குச் சென்றபோது முல்லையின் பெற்றோர் ‘வாங்க மாப்பிள்ளை’ என்று வரவேற்றனர். கனிமொழி தன் எண்ணத்தை முல்லையிடம் சொல்லிய போது முல்லை கனிமொழியின் காலில் விழுந்து வாழ்த்துப் பெற்றாள். அக்கணம் முதல் கனிமொழியைத் தனக்கு வாழ்வு கொடுத்த தெய்வமாக முடிவெடுத்தாள். கண்ணீர் சிந்திக் கொண்டு காலில் கிடந்த முல்லையை அன்போடு தூக்கி ஆறுதல் கூறியதோடு முல்லைதான் உங்கள் சிந்தி என்று தன் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்.

அருகில் நின்ற முல்லையின் பெற்றோரை கனிமொழி அப்பா, அம்மா என்று அழைத்தாள். கனிமொழியின் அன்பையும் பரந்த எண்ணத்தையும் கண்டு உள்ளம் உருகி கனிமொழியை மகளே என்று வாய்நிறைய அழைத்தனர்.

‘உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியாது’ என்பார்கள். அதைப் போல பலரும் பலவிதமாகப் பேசினார்கள். இழித்தும் பழித்தும் கூறினார்கள். ஆனால் அவர்களின் ஏச்சும் பேச்சும் நீண்டநாள் நீடிக்கவில்லை. கனிமொழியும் முல்லையும் உடன்பிறந்த சகோதரிகளைப் போல மிக அன்பாகப் பழகியதையும் பல ஆண்டுகளுக்குப் பிறகும் எவ்வித சண்டை சச்சரவு மின்றி மகிழ்ச்சியாக வாழ்வதையும் பார்த்துத் தூற்றிய வாய்கள் போற்றின. வெட்கமும் வேதனையும் உற்ற உறவினர்கள் நின்று மகிழ்ச்சியும் மனநிறைவும் பெறுகின்றனர். துக்கத்தாலும் துயரத்தாலும் சீக்கிரம் இறந்துவிடுவோம் என்று எதிர்பார்த்த முல்லையின் பெற்றோர் இன்று புதிய தெம்புடனும் தெளிவுடனும் வாழ்கின்றனர். அக்கம்பக்கத்தினர் ஆச்சரியப்படுகின்றனர்.

அதோ கனிமொழியும் முல்லையும் அன்புச் சகோதரிகளாக பிள்ளைகளுடன் தோட்டத்தில் ஓடி விளையாடுகிறார்கள். அவர்கள் இரு வேறு இல்லங்களில் இருக்கிறார்களே ஒழிய இணைந்த உள்ளத்தோடு வாழ்கிறார்கள். புரிந்துணர்வோடு வாழ்கின்ற அந்த உடன்பிறவா சகோதரிகளின் முடிவை போற்றுவதா? அல்லது தூற்றுவதா? வாசகர்களே நீங்களும் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

– தனிமரம் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: ஏப்ரல் 1990, இந்தியர் பண்பாட்டு நிகழ்ச்சி ஏற்பட்டுக் குழு, சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *