சேதனன், விமலை மற்றும் கொஞ்சம் தனிமை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 2, 2024
பார்வையிட்டோர்: 459 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“வா. என் மடி மேலே வந்து மண்டியிட்டு உட்கார்” சேதனன் குரலில் கடுமை இல்லை. ஆனால் உறுதி இருந்தது. அவன் கண்கள் மூடிய நிலையிலேயே இருந்தது. மிச்சமிருந்த கொஞ்ச தயக்கத்தையும் கழற்றி விடலாமா என்ற யோசனை தோன்ற ஆரம்பித்து விட்டது விமலைக்கு.

“மன மயக்கத்தினால் வருவது தயக்கம். உனக்கென்று ஒரு யோசனையும் வேண்டாம், நான் சொல்வதை மட்டுமே உன் மனம் கேட்கட்டும்” சேதனனின் வசீகரக்குரலில் விமலை தன்னை மறந்து ஒரு மாய உலகத்துக்குள் நுழைய தயாரானாள்.

தான் இருக்கும் இடத்தை சுற்றிலும் ஒரு முறை பார்த்தாள். அது ஒரு சிறிய அறை, ரொம்ப சுத்தமாக வைக்கப்பட்டிருந்தது. மங்கலான வெளிச்சம், செயற்கையான குளிர். தரை முழுவதும் தடிமனான சிவப்பு நிற விரிப்பு ஒன்று பரவி இருந்தது. ஒரு சிறிய மெத்தை மேல் சேதனன் சம்மணமிட்டு அமர்ந்திருந்தான், இடுப்பில் ஒரு நான்கு முழ வேட்டி மடித்து கட்டிய நிலையில் இருந்தது. மேலே சட்டை எதுவும் அணியவில்லை, உடல் முழுவதும் சந்தனம் பூசப்பட்டிருந்தது. கண்கள் மூடிய நிலையில் அவன் முகம் எந்தவொரு சலனமும் இல்லாமல் தெளிவாய் இருந்தது. கழுத்திலே ஒரு மலர் மாலை அணிந்திருந்தான். அறையில் அவர்கள் இருவரைத் தவிர ஒரு சிறிய பொருள் கூட கிடையாது.

“எப்போதும் நீ தான் அதிகம் பேசுவாய், இன்று உன் குரலையே நான் இன்னும் கேட்கவில்லை” கண்கள் இன்னும் மூடிய நிலையிலேயே கேட்டான் சேதனன்.

“அதான் நீ பேசுறியே சேர்த்து” அவள் குரலில் லேசான கிண்டல் இருந்தது.

“பயமாயிருக்கா?”

“இல்லை. என் சம்மதம் இல்லாமல் இங்கே எதுவும் நடக்காது”

“நான் ஒன்றும் செய்யப் போவதில்லை”

“சரி. அப்போ நான் வரட்டுமா?”

“பொறு.ஒரு அனுபவம் உன்னைச் சந்திக்க காத்திருக்கிறது!”

”அது எனக்கு இப்போ தேவை இல்லை.”

“நீ நினைப்பது இல்லை இது. அதை விட இது பெரிய அனுபவம். என் விரல் உன்மேல் படாது”

“சரி சரி. அந்த அனுபவத்தை சீக்கிரம் வரச் சொல்லு.”

விமலை மெதுவாக நடந்து சேதனன் பக்கத்தில் வந்தாள். அவள் சேலை தரையில் உரசிய சத்தம் அவனிடம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தாதது அவளுக்கும் கொஞ்சம் சுவாரசியத்தையும் தைரியத்தையும் கொடுத்தது. லேசாக இருமிக் காட்டினாள்.

“அமரலாமே!” அவன் குரல் இன்னும் என்ன தயக்கம் என்பது போல் இருந்தது.

“உன் முன்னால தானே உட்காரணும்?”

“இல்லை. என் மடியில் வந்து மண்டியிடு. என் மடியை உயிரில்லாத ஒரு தலையணை போல நினைத்துக்கொள்.”

“அது சரி!” இந்த நேரம் சிரிப்பது அபத்தமாய் இருக்குமோ என்று கட்டுப்படுத்திக் கொண்டாள்.

அவள் சேலை நுனியை அவன் காலில் படச் செய்து அவன் முகத்தையே பார்த்தாள்.

“ஆற்றில் இறங்க ஆழம் பார்க்கிறாயா?” கண்களைத் திறக்காமலே கேட்டான்.

“பொம்பளைங்க எதுலயும் ஆழம் பார்த்துத் தான் இறங்குவோம்.”

மெதுவாக தன் கால் முட்டி இரண்டும் அவன் தொடையில் வைத்து அவன் மேல் தன் பாரத்தை ஏற்றினாள். அவன் மேல் பூசியிருந்த சந்தனத்தின் வாசம் அவளை கிறுகிறுக்கச் செய்தது.

இது கோவில் கடைகளில் விற்கப்படும் வாசனைப் பொருள் இல்லை. அரைக்கப்பட்ட அசல் சந்தனம். அப்புறம் ஒரு முக்கிய விஷயம். நீ நிலை தடுமாறும் போது கைத்தாங்கலுக்காக என்னைத் தொட்டு விடாதே.”

இப்போது தான் அவளுக்கு நிலை தடுமாறும் போல இருந்தது.

“நீ உன் சுட்டு விரலால் என் மேல் உள்ள மாலையை லேசாகத் தொட்டுப் பார். கவனம், ரொம்ப லேசாக மட்டும் தொடு.”

விமலை பயத்தோடு பட்டாசு பற்ற வைப்பது போல் லேசாக தொடப்போனாள். அரை விநாடி கூட தொட்டிருக்க மாட்டாள், விரல் சூடு தாங்காமல் பொத்து விட்டது. பயம் கூடினாலும் அவளுடைய வயது ஆர்வத்தையே வெகுவாகத் தூண்டியது.

“ஏன் இப்படி?”

“சொல்லுகிறேன். உன்னிடம் பதட்டம் தெரிகிறது. அது தேவையில்லாதது மட்டுமில்லை, நம்முடைய அனுபவத்துக்கும் இடைஞ்சலானது. உன் மூச்சை சீராக வைத்துக் கொள்ள முயற்சி செய்.”

அடுத்து ஒரு அரை மணி நேரம் அங்கே மௌனம் மட்டுமே நிலவியது. விமலை ஒரு பத்து நிமிடம் சிறுதுயிலில் ஆழ்ந்து கனவு கூட கண்டு விட்டாள். கனவில் உருவமேயில்லாத ஒருவன் அவள்

உடலெங்கும் தொடுவதை உணர்ந்தாள். பதிலுக்கு அவளால் அவனை தொட முடியவில்லை. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பாய்ந்த அந்த தொடுகை அவளுடைய பதில் உணர்வு எதையும் எதிர்பாராமல் தன் போக்கிலே சென்றது. கனவு கலைந்தவளுக்கு தான் அணிந்திருந்த உடைகள் அனைத்தும் இறுக்கமாக தோன்றியது. உடலின் பல பாகங்கள் விரிவடைந்து கடினமாக மாறி, உடைகளெல்லாம் தெறித்து விடும் போல் இருந்தது.

“இதனால உனக்கு என்ன கிடைக்கும்?” பேச்சு கொடுத்தாள்.

“காமத்தை கடந்து செல்வது ஒரு சாதனை. அது அனுபவிச்சா தான் தெரியும்.”

‘அதுக்கு ஏன் நான்?”

“அழகான பெண்ணிடம் ஜெயிப்பது தான் பெரிய சாதனை.”

“உன்னால் மனத்தை அடக்க முடிஞ்சதா?”

“அது அடங்கியே தான் உள்ளது. என் மனம் இப்போது மிகவும் ஆனந்தமாக உள்ளது.”

“பெரிய சாதனை தான் நீ செய்யுறது. எனக்கும் இது பிடிச்சிருக்கு. இன்னும் ஒரு பத்து நிமிஷம் தாங்குவோமே!”

“உனக்கும் இந்த முறை இன்பம் அளிப்பது எனக்கு மகிழ்ச்சி தான். உன் இஷ்டப்பட்ட நேரத்தை எடுத்துக்கொள்.”

விமலை மெதுவாக தன்னுடைய விரலால் அவன் அணிந்திருந்த அந்த மாலையை தொட்டாள்.

மார்பில் சூடு தாங்காமல் சேதனன் பதறினான்.

“என்ன செய்கிறாய் நீ?” கோபத்தை விட பயம் தான் அதிகம் இருந்தது அவன் குரலில். விமலை

விடவில்லை, மாலையை மேலும் வருட ஆரம்பித்தாள். வெப்பம் தாங்காமல் மாலையை கழற்றி வீசி எறிந்தான்.

“இவ்வளவு நேரம் நீ சொன்னதை நான் கேட்டேன். இப்போ நான் சொல்றதை நீ கேட்கணும்” அவன் காதின் பக்கம் குனிந்து கிசு கிசுத்தாள்.

மறுநாள் காலையில் யாரோ வந்து பார்க்கும் போது சேதனன் ரொம்பவே சேதமாகி செத்துப் போயிருந்தான்.

– சிறுநனி சிறுகதைத் தொகுப்பு, ஜூலை 2014, வெளியீடு: Freetamilebooks.com

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *