கிறிஸ்துமஸ் நெகிழ்ச்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 25, 2023
பார்வையிட்டோர்: 1,888 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

விக்டர் எழுந்து சோம்பல் முறித்து விட்டு கடிகாரத்தைப் பார்த்த போது ஒரு கணம் திணறிப் போனான்.எட்டு மணிக்கு விமான நிலையத்தில் இருந்தாக வேண்டும். புறப்பட்டு ரயில் பிடித்து, அப்புறம் ஆட்டோ பிடித்து போய்ச் சேர ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் ஆகிவிடும்.

திகைப்பில் ஒரு கணம் கண்களை மூடி இறைவனிடம் செபித்துக் கொண்டான். என் அன்பு இயேசுவே! எத்தனை வருடங்கள் முயற்சி செய்து எனக்கு துபாயில் வேலை கிடைத்துள்ளது. இத்தனை நாளும் என் மனைவி ஜெசிந்தா துபாயிலும் நான் சென்னையிலும் பிரிந்திருந்து வாழ்க்கையில் ஒரு விரக்தி கூட உருவாகி விட்டது. தற்போது நீ வாங்கித் தந்த இந்த அழகான சந்தர்ப்பத்தை நான் நழுவ விட்டு விடுவேனோ என்ற பயம் ஏற்பட்டு விட்டது.

அன்புத் தேவனே! என்னுடைய இந்த ஏழு வருட திருமண வாழ்வில் என் ஜெசிந்தாவும் நானும் உம்முடைய கிறிஸ்துமஸ் பிறந்த நாளை இணைந்து கொண்டாடியதில்லை. இந்த வருடத்திலேயாவது நாங்கள் இருவரும் இணைந்து நாளை வரப் போகின்ற கிறிஸ்துமஸ் திருநாளை இணைந்து கொண்டாடிட உதவி செய்யும் தேவனே!

மனதிற்குள் செபித்துக் கொண்டே புறப்பட்டான். திடீரென தொலை பேசி மணி அலற எடுத்தால் நேரமாகும் என்று யோசித்துக் கொண்டே, தொலை பேசியை எடுத்து பேசினான்.

ஜெசிந்தா துபாயிலிருந்து பேசுகிறேன். நீங்கள் இன்னும் கிளம்பவில்லையா? விமானத்திற்கு நேரமாகி விட்டது தெரியுமா? ஏக்கத்தோடு கேட்டது எதிர்முனை.

ஸாரி ஜெசி, நேற்று நண்பர்களோடு சேர்ந்து பேசி விட்டு தூங்கியதில் நேரமாகி விட்டது. எப்படியும் விமானத்தை பிடித்து விடுவேன்.

நேற்றும் தண்ணிப் பார்ட்டியா? எப்போதான் திருந்தப் போகிறீர்களோ? இந்தப் பாலைவன பிரதேசத்திற்கு வந்த பிறகுதான் உங்கள் வாழ்க்கை முறைகள் எல்லாம் மாறும் என்று நம்புகிறேன்.

சரியான நேரத்திற்கு சென்று விமானத்தைப் பிடித்து துபாய் வந்து சேருங்கள்.

விமான நிலையத்தில் எங்கள் துணைக் மருத்துவமனையின் கம்பெனியான ஊசிப் பொருட்கள் தயாரிக்கும் கம்பெனியின் துணை மேலாளர் கார் கொண்டு வந்து உங்களை அழைத்துச் செல்வார்.

நாம் கிறிஸ்துமஸ் இரவு திருப்பலி போவதற்கு முன் சந்தித்து நடுநிசி திருப்பலிக்கு இணைந்தே செல்லலாம்.

துபாயிலிருக்கும் புனித ஜார்ஜியார் ஆலயம் மிகவும் பிரசித்து பெற்றது. இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும். திருமணமாகி எத்தனை வருடங்களுக்குப் பிறகு முதன் முதலாக கிறிஸ்துமஸ் கொண்டாடப் போகிறோம் என்று நினைக்கும் போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா?

ஜெசி நான் ஏர்ப் போர்ட்டுக்குப் போக வேண்டும் நேரமாகி விட்டது.

“ஓ! ஆமாம் மறந்தே போய்விட்டேன், நீங்கள் இந்த விமானத்தில் வராவிட்டால் வேலையை கேன்சல் பண்ணிவிடலாம் என்று ஒரு கர்நாடக நண்பர் தன் மருமகனுக்கு வேலை போட்டுக் கொடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார். நீங்கள் இந்த. விமானத்தை பிடிக்கத் தவறினால் திரும்பவும் நீங்கள் சென்னையிலும் நான் துபாயிலும் தான் தொடர வேண்டும். நாம் கிறிஸ்துமஸூம் கொண்டாட முடியாது ” ஜெசியின் குரல் பிசிறடித்தது.

ஏய்! வீணாக ஏன் அழுகிறாய். ஏற்கனவே விமானத்திற்கு நேரமாகி விட்டது என்று நான் பரபரத்துக் கொண்டிருக்கிறேன், அப்புறம் சந்திக்கலாம்.

சீக்கிரமாக போய் விமானத்தைப் பிடித்து விடுங்கள்.துபாயில் இறங்கியதும் போன் பண்ணுங்கள். வேகமாக செல்லுங்கள். இந்த விமானத்தை தவற விட்டால் கண்டிப்பாக துபாய் வேலை கிடையாது என்பதை மறந்து விடாதீர்கள்.

சும்மா சும்மா சொன்னதையேச் சொல்லிக் கொண்டு என்னை பயப்படுத்தி எரிச்சலுக்குள்ளாகிறாய். எப்போது விமான நிலையம் போய்ச் சேர்வேன், இப்போதே நடுக்கம் வந்துவிட்டது. போனை வை என்று சொல்லிவிட்டு வேகமாக பையைத் தூக்கிக் கொண்டு ரயில்வே நிலையம் கிளம்பினான்.

ரயில் ஓட்டுநர்கள் ஸ்டிரைக் என்பதால் ரயில்கள் ஓடவில்லை என்று தெரிந்ததும் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான். டாக்ஸி பிடித்துக் கிளம்பினாலும் சுற்றிப் போவதற்குள் விமானம் கிளம்பிப் போய்விடும். துபாய் கனவுகளும் ஜெசியோடு சேர்ந்து வாழப் போகும் ஆசைகளும் தவிடு பொடியாகி விட, பையைத்தூக்கி கொண்டு ஒரு டாக்ஸியை பிடித்து இந்த விமானத்தை நான் பதினோரு மணிக்குள் பிடித்தாக வேண்டும். நீங்கள் என்னை எவ்வளவு விரைவாக கொண்டுவிட முடியுமோ.. அத்தனை விரைவாகக் கொண்டு விட்டால் நீங்கள் கேட்கும் பணத்தை தருகிறேன் என்று காரில் ஏறிக் கொண்டான்.

என் அன்பு இயேசுவே! உம் பிறப்பை கொண்டாடும் நாளில் நானும் என் மனைவி ஜெசியும் உம்மை இணைந்து தரிசிக்க விரும்புகிறோம். கண்டிப்பாக எமக்கு உதவி செய்தருளும். மனதிற்குள் தியானித்துக் கொண்டு வரும் போது கார் திடீரென்று நின்று விட என்னாச்சு என்றான்.

சார் பெட்ரோல் தீர்ந்து போச்சு. பக்கத்தில் பெட்ரோல் பங்க் எதுவுமில்லை என்று ஓட்டுநர் கையை விரித்து விட “என் தேவனே இது என்ன சோதனை?” என்று அயர்ந்து போய் நின்று கொண்டு ரோட்டின் இரு கரையிலும் ஏதாவது கார்கள் வருகிறதா என்று தேடிப் பார்த்தான்.

வேகமாக கார்கள் அங்குமிங்கும் சென்று கொண்டிருக்க விக்டரின் கையசைப்பிற்கு எந்தக்காரும் நிற்கவில்லை. சரி என் தேவனுக்கு நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ்வதில் விருப்பமில்லை என்று விரக்தியாக எண்ணிக் கொண்டிருக்கும் போது அருகில் வந்து நின்ற காரிலிருந்தவர் என்ன சார் ஏதாவது பிரச்சினையா? உங்களுக்கு எங்கே செல்ல வேண்டும். துபாய் விமானத்தை பிடிப்பதற்காக நான் விமான நிலையம் போய்க் கொண்டிருக்கிறேன். உங்களை வழியில் இறக்கி விடட்டுமா? என்றார்.

என் தேவன் அனுப்பிய தூதுவன் சார் நீங்கள். நானும் துபாய் விமானத்தைப் பிடிக்க விமானம் நிலையத்திற்கு தான் போய்க் கொண்டிருக்கிறேன். நானும் வருகிறேன் என்று காரில் ஏறிக் கொண்டு டாக்ஸி காரனுக்கு பணம் கொடுத்து விட்டு கடிகாரத்தைப் பார்க்க மணி பதினொன்று என்றது.

இந்த நேரத்திற்குள் துபாய் விமானம் கிளம்பிப் போயிருக்கும் என்று அழாத குறையாக சொன்னான் விக்டர்.

முயற்சி செய்வோம் என்று காரில் வந்தவர் சொல்லி விட்டு வேகமாக காரை ஓட்டினார்.

விமான நிலையத்திற்குள் ஓடி வந்த போது, விமானம் ஒரு மணி நேரம் பிந்திக் கிளம்புவதை உணர்ந்த போது மண்டியிட்டு தேவனுக்கு நன்றி சொன்னான் விக்டர்.

துபாய் வந்து இரவு நடு நிச திருப்பலிக்கு போகும் போது ஆலயத்தில் சந்தித்த மனைவியை பாசத்தோடு அணைத்துக் கொண்டு “இறை யேசு தம்முடைய பிறந்த நாளில் நம்மை இணைய விடாமல் தடுத்து விடுவாரோ என்று பயந்து போனேன். அவர் என்றுமே கைவிடமாட்டார் ” என்று கண்ணீர் மல்க தேவனை நோக்கி செபிக்க ஆரம்பித்தான் விக்டர்.

– 5-12-2004 தமிழ் போஸ்ட் இதழில் வெளிவந்தது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *