இரா வணக்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 7, 2023
பார்வையிட்டோர்: 1,858 
 

(1971 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கடை விறாந்தையின் இரும்புத் தூணிலே சாய்ந்த வாறு நிற்கின்ற காதரின் வதனத்தைக் களைப்புங் கவலையும் வளைத்துப் பிடித்துக்கொண்டன. தூணிலே சாய்வதும் பின் விறாந்தையிலும் தெருவிலும் உலாவுவதுமாக நீண்ட நெடும் பொழுதை அவன் போக்கிவிட்டான்.

“நேரம் பொன்போன்றது” என்பார்கள். இல்லை, அது சீனியையும் செத்தல் மிளகாயையும் போன்றது என்பது அவனது அனுபவம். நேரம் நகர நகர அவனது கவலையும் வளர் வளரென்று வளர்ந்தது.

பெட்டி மேசையின் பின்னால் கதிரையில் ஆரோகணித் திருக்கும் முதலாளி முத்துமரைக்காரைத் தனித்துக் கதைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கடுந் தவம்.

மரைக்காரின் வீட்டுக்குப்போய், அவர் ஆறுதலாக இருக்கிறபொழுது பார்த்துக் கதைக்கலாமே? அந்த ஆபத் தான பரீட்சையிலிறங்க அவன் ஆயத்தமாக இல்லை. முத்து மரைக்காரின் தர்ம பத்தினியின் முகதாவிலே பேசக்கூடியதல்ல தான் அவரிடம் பேசவந்திருக்கின்ற சமாச்சாரம் என் பது அவனது அறுதியான முடிவு.

காதர், முத்துமரைக்காரின் வீட்டில் மூன்று வருடங் களும், மூன்று மாதங்களும் மூன்று நாட்களும் நெய்திருக் கிறான். முத்து மரைக்கார் – ராஜகம்பீரத்துடன் ஆரோகணித் திருப்பதெல்லரம் இடையிலேதான். அரசியின் முன் கைகட் டிச் சேவிக்கும் சிற்றடிமைபோல மனைவியின் முன் அடங்கி யொடுங்கி அவமானப்படுவதைக் கண்டு அனுதாபப்பட்ட வன்; மனத்தளவிலேயே பொருமியவன்.

அரசியிடமிருந்து நெய்த கூலியை வாங்க அவனும் சக தொழிலாளர்களும் பட்டபாடு அற்பசொற்பமா?

வியாபாரமோ எக்கச்சக்கம். இந்தக் கடையிலே இவ் வளவு ஈடுமூச்சற்று வியாபாரம் நடைபெறுமென்று அவன் எண்ணிவரவில்லை, கடையென்னமோ மிகச் சாதாரணமானது தான்.

விற்க வருகிறவர்கள் கொண்டுவந்த கைத்தறிச்சாரம், வேட்டி, சால்வை ஆகிய தினுசுகளை வாங்கிப் பிரித்துப் பார்த்து அளந்து, நிறுத்து, மடித்து அலுமாரியிலே அடுக்கு வது; நூல் கேட்பவருக்கு நூலை நிறுத்துக்கட்டிக் கொடுப் பது, கொள்முதல் பண்ண வந்த வியாபாரிகளுக்குத் தேவை யான சரக்குகளைப் பொதிசெய்து கொடுப்பது போன்ற பணியை முதலாளியின் பத்து வயதே மதிக்கத்தக்க மகன் வெகு அனாயாசமாகச் செய்தான். அவனது ஒவ்வொரு அசைவிலும் துண்டுப்பாவிலே நாடா ஓடுகின்ற துரிதம் இழையோடி நின்றது. இருந்துஞ் சில சந்தர்ப்பங்களில் அவன் திணறிப்போனதுண்டு. முதலாளி குறிப்பறிந்து மெல்ல எழுந்து நூல் ‘பேல்’ போன்ற களத்த தன் உடலை அசைக்க முடியாமல் அசைந்து நடந்து உதவி புரியத் தவற வில்லை. மறுகணமே அவர் அலுத்துக் களைத்து இருக்கையிலே பொத்தென்று விழுந்தபோதெல்லாம் வந்த நகைப் பைக் காதர் நாசூக்காக அடக்கிக்கொண்டான், அப்பொழு தெல்லாம் காதர்,

‘ஏன் இவ்வளவு அவதி. குறைஞ்சது ஒரு பொடியனை யாவது கூலிக்கு வைக்கலாமே?… ம்… அதுகுஞ் செரிதான், அவனுக்குக் குடுக்கிற சம்பளமும் இருப்பைக் கனக்கவைக்குந்தானே’

என்று தனக்குள்ளே வினவி, விடையையும் கண்டு பிடித்துக்கொண்டான். கடைச் சுவர்க்க்டிகாரம் பன்னிரண்டு முறை ‘டாண்.. டாண்…’ என்றொலித்து ஓய்ந்தது. கூட்ட மும் ஒருபாடாகக் குறைந்தது. இருவர் மாத்திரம் கொள் வனவு செய்துகொண்டிருந்தார்கள். மேலும் ஒருவரும் வரா தது தூணிலே சாய்ந்தவண்ணம் நின்ற காதருக்குப் புதிய தெம்பை அளித்தது. வாயா asians

அந்த இருவரும் வெளியேறிவிட்டார்கள். காதர், தான் எதிர்பார்த்திருந்த அரிய வாய்ப்பு சித்தித்துவிட்ட மகிழ்ச்சியுடன் தூணைவிட்டு விலகிக் கடைப்பக்கமாக முன் னேறினான். முத்துமரைக்கார் தனது ஒட்டமளித்த தலை யிலும் நெற்றியிலும் அதைத்த கன்னங்களிலும் ஊற் றெடுத்து வழிந்த வியர்வையைக் கைக்குட்டையால் துடைத் துக்கொண்டே காதரை நிமிர்ந்து பார்த்தார்.

‘காதர் கனநேரங்கூடி நிற்கிறாப்போல முத்து மரைக்காரே அடியெடுத்துத் தந்த உற்சாகத்தால் தூண்டப் பட்ட காதர், மேசையை நெருங்கினான். கைகளைத் தொப்புளுக்கு மேலே வைத்துப்பிடித்துக்கொண்டே சாங்கோபாங்கமாக நின்றான்.

“மாமாவங்களுக்கிட்ட ஒரு உதவி கேட்டுப்பார்க்க லாம் எண்டுதான் வந்தன்”

“மகன் இரண்டு டீ வாங்கி வா”

மரைக்கார் லாச்சியைத் திறந்து இரு பத்துச் சதக் குத்திகளை எடுத்து மேசைமேல் வைத்தார். பையன் அவற்றை எடுத்துக்கொண்டு வெளியேறினான், காதர் குறிப்பிட்டது போல முத்து மரைக்கார் தூரத்து உறவில் அவனுக்கு மாமா தான். அவனது குடியின் பெரிய மரைக்காரே அவர்தான். அந்த உறவுகளையெல்லாம் பாராட்டிக்கொண்டிருக்க அவ ருக்கு நேரம் கிடைப்பதில்லை. தன் தொழில்களைக் கவனிக் கவே இந்த இருபத்தி நான்கு மணிகள் போதவில்லையே என்று அங்கலாய்ப்பவர் அவர்.

“உதவியெண்டா …?”

முதலாளி வேண்டாவெறுப்போடு பேச்சை ஆரம்பித்தார்.

“நான் தறியொண்டு வாங்கியிருக்கன்.”

“என்ன ? தறி வாங்கியிருக்கியா?”

மரைக்கார் காதரை ஆச்சரியத்தோடு பார்த்தார். அற்புதம் செய்தவனை உற்றுப்பார்ப்பதுபோல அவனை உற்று நோக்கினார்.

மரைக்கார் வியப்படைந்ததில் இயற்கைக்கு மாறா னது எதுவும் இல்லை. காலையிலே தறியிலே ஏறிக்குந்தி, உடலெல்லாம் ஓடி அலுக்க அடி அடியென்று அடித்துவிட்டு மாலையிலே இறங்குகின்ற போது ஐந்து ரூபாவுக்கு அல்லது ஆறு ரூபாவுக்கு நெசவு ஓடியிருக்கும். இந்த உழைப்பில் மனைவி மக்களோடு உண்டு. உடுத்து நோயைப் பரிகரித்து, மிச்சம் பிடித்து சொந்தத்தில் தறிவாங்குவதென்பது, அற் புதந்தான். ‘இவனைப்போன்ற பலர், பெண்ணைக் கொடுத்த வன் குந்தியிருக்கக் கொடுத்த வளவுத்துண்டை, அல்லது பொண்டாட்டியின் தாலியை அடவு வைத்துவிட்டு அல்லது வித்துப்போட்டு ரண்டொரு தறியப் போடுகிறானுகள் தான், அவனெல்லாம் பேராசை பிடிச்சவனுகள். இவன், தானுண்டு தன் பாடுண்டு எண்டு வாழுறவன். அடக்க ஒடுக்கமானவன். முட்டாள் தனமாக எதையுஞ் செய்யமாட்டான்’ என்ற எண் ணமே அவரை ஆச்சரியப்பட வைத்தது.

அதுவும் ஒரு கணந்தான், மறுகணம் அவரது வியா பார மூளை விழித்துக்கொண்டது. பொன் பீச்சும் வரால் ஒன்று வலையின் அழியிலே விழப்போகிறதே என்பதை நினைத்தபோது மகிழ்ச்சியாகவே இருந்தது.

“ஓம் மாமா. நெய்யக் கூலி நம்மளோட நூல் காசு போக ஒரு பாவுக்கு பத்து பதினைந்தாவது மிஞ்சத்தானே செய்யும். புள்ளையும் மக்களும் கட்டையும் தாரையும் சுத் துங்கள், நாம குமர் குட்டிக்காரனாகப் போனம், நாலப் பத்த கையிலவச்சிருந்தாத்தான் அதுகள ஒவ்வொருத்தண்ட கையில புடிச்சிக் கொடுக்கலாம்…”

மகன் பாற்தேனீர்க் கிளா சை மரைக்கார் முன் வைத்துவிட்டு மற்றக் கிளாஸோடு’ அவனது ஆசனத்தில் போய் அமர்ந்தான், மரைக்கார் வலது கையால் தேளீர்க் கிளாசை ஏந்தினார்.

“பிஸ்மில்லாகிர்ரகுமானிர்ரகீம்” என் மொழிந்து. தேனீரை மிடறு மிடறாகச் சுவைத்துப் பருக ஆரம்பித்தார்.

“தலப்புள்ள பொறந்த நேரம் குடும்பப் பாரமும் அவ்வளவாக இருக்கல்ல. பவுனும் அந்த நேரம் அறுபது உறுவா, ஒரு சீட்டுப்பிடிச்சி அதுர கழுத்தில் ஒரு சங்கிலிய வாங்கிப் போட்டன் எத்தனையோ பொறுப்பு வந்திச்சி, அதுல நான் கை வைகல்ல.

போன கெழம் அத வட்டிக்கடையில வச்சிட்டு இரு நூறு உறுவா எடுத்து ஒரு பழைய தறியும் பண்ணும் வாங்கினேன், தறி வாங்கினாப்போல முடிஞ்சுதா? அதுல பாவேத் திறதுக்கு நூல் வாங்க ஏண்டமட்டும் ஓடிப்பாத்தன், ஒரு எடமுமே கைதரல்ல. கடைசியாத்தான் ஒங்களுக்கிட்ட வந்து நிக்கன்” என்று தணிந்த குரலில் அடக்க ஒடுக்கத் தோடு கூறிவிட்டு, மரைக்காரின் பதில் என்னவாக இருக் குமோ என்ற ஆதங்கத்துடன் அவர் முகத்தைப் பார்த்தான், அவர் மேசையின் ஒரு மூலையில் மடித்துவைத்திருக்கும் வெள்ளைத் தொப்பியைத் தலையிலே போட்டுக்கொண்டே பேசத்தொடங்கினார். மகன் கிளாசுகளை எடுத்துக்கொண்டு வெளியே போனான்.

“முந்தியெல்லாம் பலருக்கு முன்னபின்னக் கொடுத் ததுதான், இப்ப அதுக்கெல்லாங் கட்டாது. கைக்காசுக்கு விக்கவே சரக்கில்லாம இருக்கு. நீ நெனக்கிறியா சொந்தத் தறிபோட்டு உழைச்சிக்கட்டலாமெண்டு, எவனாச்சும் உள்ள சீமாண்ட தறியில் ஏறி கூலிக்கு நெய்யிறது லாபம்!”

மரைக்காரின் பதில் அவனை ஒரு கணம் சிலையாக்கியது. பொங்கிவந்த சலிப்பை இயன்றவரை அடக்கிக் கொண்டு, சற்றுத் தைரியத்தையும் வரவழைத்துக்கொண்டு பேசினான்.

“நானும் பிராயமறிஞ்ச நாளையில இருந்து கூலிக்குத் தான் செய்யிறன். என்னமோ மாமா ஒரு முடிவுக்கு வந்திற்றன், அல்லாவுக்கும் றசூலுக்கும் அடுத்ததா உங்கள நம்பித்தான் வந்தன்…”

“ம்…. நீ கெஞ்சுற படியால என்ன செய்யிற…செர்ணக்காம கணக்க இறக்கிப் போட்டுறு”

இந்த வார்த்தைகள் மரைக்காரின் வாயிலே இருந்து வந்ததும் காதருக்குப் போன உயிர் திரும்பி வந்தது போல இருந்தது. மரைக்காரின் மகனும் வந்து அவனது ஆசனத்திலே அமர்ந்தான்.

“சாறன் பாவா? சாரிப் பாவா?”

“சாறன் பாதான்”

“வெள்ளையில் ஓடப் போறியா? கலரிலயா?”

“முன்பாட்டுக்கு வெள்ளையிலதான் ஓடுவம், வாட்டி யையும், கம்பத்தையும் பிறவுணிலே ஓடுவம்”

“தம்பி மனே! காதர் சொன்ன தினுசில ஒரு பாவுக் குத் தேவையான நூல் நிறுத்துக்கட்டு”

மரைக்கார் வெள்ளைக் கடுதாசியை எடுத்துக் கணக் குப்போடத் தொடங்கினார். மகன் அவன் பணியைத் தொடங்கினான். காதர் ஜீவன் முக்தி நிறைவேறிய திருப்தி யோடு கைகட்டி நின்றான்.

தறிக்கள்ளனுகள் தொந்தரவு நாளுக்குநாள் கூடிக் கிட்டுத்தானே வருகுது. தறிமால அச்சறுக்கையாக் கட்டிருக்கியா?

“தறிமாலில்ல ஊட்டுச் சாப்புக்குள்ள தான்.”

“சாப்பெண்டாப்போல, அடப்புக் கதவுள்ளதா? இல் a யே! கவனமாப் பாத்துக்க” பேச்சோடு பேச்சாக மரைக் கார் கணக்கை முடித்துவிட்டார். கணக்குத்துண்டை காத ரிடம் நீட்டினார். அவன், நன்றியுணர்வு தேகமெல்லாம் புல் லரிக்க இருகை நீட்டி அதை வாங்கினான். அதைப் படித்த போது அவன் நெஞ்சுக்குள்ளே எறிகுண்டு வெடித்ததுபோல இருந்தது.

“இதென்ன மாமா? றாத்தலுக்கு ஒரு உறுவா வீதம் கூட்டிப்போட்டிருக்கீங்க?”

“அத. அது அப்பிடித்தான். எனக்கிட்ட இருந்து றோல் பண்ணுற மொதல ஒரு ஆதாரமும் இல்லாமத்தானே ஒனக்குத்தாறன். அப்படியில்லாட்டி இந்த யாவாரஞ் செய் யிறதில பிரயோசனமில்ல. என்னத்துக்கு ஒளிச்சிப் பேசுவான், சரக்கையும் எனக்குத்தான் தரவேணும். உருப்படிக்குக் காலு றுவா பிடிச்சுத்தான் கணக்குப்போடுவன்.”

“அப்படியெண்டா , இந்தத் தொழில் செய்யிறதில பிரயோசனமில்ல மாமா”

“ஆர்ரா அப்படிச் சொன்னது? எப்படிப்போனாலும் பாவுக்கு அம்பது மிஞ்சாது போகாது. இன்னொண்டு, ஒண்ட தறியயும் எண்ட பேரிலதான் பதிவு செய்வன். எவனாவது சோதனைக்காரன் வந்து கேட்டா எண்ட தறியெண்டே சொல்லவேணும். ஒண்டயும் யோசிக்காதே பஜார் நேச்சரே இதுதான்.”

ஆமைபோல் அடங்கிக்கிடந்த காதரின் உணர்வுகள் அவனைக் கேட்காமலேயே விழித்தெழுந்தன. இவ்வளவு ஆவேசம் வாழ்நாளில் எப்போதுமே அவனுக்கு வந்ததில்லை.

இந்தத் தொழில செய்யாட்டித் தேவல்ல” காகி தத்தை மேசையிலே போட்டுவிட்டு வெளியேறினான்.

“நாய்க்கேண்டா தோல்த் தேங்காய்”

தெருவில் இறங்கிய காதரின் செவிகளில் மரைக் காரின் ஏளன வார்த்தைகள் நாராசம் வார்த்தது. அந்த வார்த்தைகள் மூலம் மரைக்கார் தனக்கு விட்ட சவாலை அவன் ஏற்றுக்கொண்டான். அதை நிறைவேற்றியாக வேண்டும் என்ற வைராக்கியம் அவன் கால்களுக்கு அசுர கதியை ஊட்டின.

“மகள்ள சங்கிலி தறியா மாறிச்சி, இப்ப என்ன, பெண்சாதிர கழுத்த வெறுங்கழுத்தாக்க வேண்டியது தான்’, என்ற வார்த்தைகளை உரக்க மொழிந்து கொண்டே நடந்தான். முன்பின் தெரியாத எவராவது அந்த நேரம் அவனைக் கண்டிருந்தால் நிச்சயமாகப் பைத்தியம் என்றுதான் நினைப் பார்கள்.

மரைக்கார் சுவர் மணிக்கூட்டைப் பார்த்தார். பன்னிரண்டரைக்கு இன்னும் ஐந்து நிமிடங்களிருந்தன. மதியத் தொழுகைக்கு நோமாகிவிட்டதை அறிந்து பதறிக் கொண்டு பள்ளிவாசலைநோக்கி நடந்தார்.

நள்ளிரவு, எங்கும் மையிருட்டு. முதலாளி முத்து மரைக்காரின் வீட்டுத் திண்ணையும் இருண்டே கிடக்கிறது. திண்ணையின் இடதுபக்கமாகக் கிடக்கும் மரக்கட்டிலில் மரைக்கார் நீட்டி நிமிர்ந்து மல்லாந்து படுத்தவண்ணம் விழித்துக்கிடக்கிறார். அவரது வலக்கை ‘தஸ்பீகு’ மணிக் கோவையின் மணிகளை ஒவ்வொன்றாக உருட்டுகின்றன. வாய் அல்லாஹ்வின் திருநாமங்களையும், அவனது கருணை யையும், இரட்சிப்பையும், புகழையும் அரபியில் உச்சாடனம் பண்ணுகிறது.

இன்று வெள்ளிக்கிழமை இரவு. மாலைத் தொழு கைக்குப்பின் பள்ளிவாசலில் ‘ராத்திபு மஜ்லிஸ்’ – கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. அந்த வைபவத்திலும் மரைக் கார் முக்கிய பங்காளியாகக் கலந்து இராத் தொழுகையை யும் முடித்துவிட்டுத்தான் வீட்டுக்கு வந்தார். நாளைப் பகல் முழுக்க அவரது கடை பூட்டியே கிடக்கும். வெள்ளிக் கிழமைகளில் கடை திறந்து வியாபாரஞ் செய்பவர்களைக் கண்டால் மரைக்காருக்கு வைக்கோலில் நெருப்புப் பிடித் ததுபோலக் கோபம் பொங்கும். போன வெள்ளிக்கிழமை பகல் ஒரு ஒழுங்கையால் மரைக்கார் போய்க்கொண்டிருந் தார். அந்த ஒழுங்கையிலிருந்த குச்சில் கடைக்காரன் கடை திறந்திருந்ததைக்கண்டு,

‘அடே! கீழ்சாதி, இண்டைக்கு நீ கடையைத் திறந்து ஹறாமான சம்பாத்தியம் சம்பாதிக்கத்தான் வேணுமா? பூட்டுறா கடய’ என்று கடிந்து பேசிக் கடையைப் பூட்ட வைத்துவிட்டுத்தான் போனார்.

வெள்ளிக்கிழமை இரவென்பதால் மாத்திரமல்ல, இரவில் கண்விழிக்கவேண்டிய அவசியம் நேருகிறபோதெல் லாம், நித்திரைக்கு விடைகொடுக்க இந்த ‘திக்ர்’ மார்க் கத்தைத்தான் வாலாயம்பண்ணி வைத்திருக்கிறார்.

மரைக்காரை நோக்கி ‘ருவச்’ வெளிச்சம் பாய்ந்து மறைந்தது. மரைக்கார் சுதாரித்து எழுந்தார்.

ஒருகையிலே செபமாலையும், மறுகையிலே ‘ருவச்சு’ மாகப் படலையை நோக்கி இருட்டிலே நடந்தார். கையிலே ‘ருவச்’ இருத்ததே ஒழிய அதன் பொத்தானை அழுத்த அவர் விரும்பவில்லை.

படலையை அண்மியதும், பொத்தானை மெல்ல அமிழ்த்தி, அந்த மங்கல் வெளிச்சத்தில் நாதாங்கியைக் கண்டுபிடித்துவிட்டு வெளிச்சத்துக்கு விடைகொடுத்துவிட் டார். கதவு சாடையாகத் திறக்கப்பட்டது. இரு கரிய உருவங்கள் மின்வேகத்தில் உள்ளே நுழைந்தன. மரைக்கார் நாதாங்கியை மாட்டிவிட்டு திண்ணையை நோக்கி நடந்தார். வந்தவர்களும் அவர் பின்னே சென்றனர்.

திண்ணைப்படியை அண்மியதும் மீண்டும் வெளிச் சத்தைப் பாய்ச்சினார் மரைக்கார். வந்த இருவம் வாட்ட சாட்டமான வாலிபர்கள், இருவரும் கரிய ஆடைகளும், முகமூடியும் தரித்திருந்தனர். இருவர் கைகளிலும் நீண்ட வாள்கள் ஆரோகணித்திருந்தன. அவர்களில் ஒருவன் தோளிலே சுமையாக இருந்த பாச்சுருளைக் கட்டிலின்மேல் வைத்தான்.

“தூ … ரெண்டுபேர் மெனக்கட்டு ஒரு பாவோடு தான் வந்திருக்கியள்!” மரைக்காரின் குரலில் ஏளனந் தொனித்தது.

பத்துப் பன்னிரண்டு தறிமாலில் போய் அசுப்புப் பார்த்தம், எல்லாரும் முளிச்சுக்கிட்டுத்தான் இருக்கானுகள். ஒன்டுஞ் செய்ய ஏலாமப்போச்சி. ஒருவன் ஆற்றாமையை வேதனையோடு வெளியிட்டான்,

“ம்… என்ன செய்யிற ! இண்டைக்கி அமைச்சது அவ்வளவுதான். அஞ்சி பாவுங் கொணந்துதானே இரிக்கம்”

“ம்….. எண்டாலும் பறுவாயில்ல. முழுப் பாவாத் தான் இருக்குது. கூடிப்போனா ரெண்டு சாம்புதான் நெஞ் சறுத்திருப்பானுகள்” என்கிறார் மரைக்கார், புருவத்தைச் சுருக்கி மகிழ்வு பிடிபட்டவராக.

“இதை எங்கடா அறுத்தயள்?” என்று கேட்டார்.

“கோணவாயன்ர காதர்ர சாப்புக்குள்ள” என்றான் சுமை இறக்கியவன்.

மரைக்கார் மனத்தால் துள்ளிக்குதித்தார்.

“காதர்! நீ பெரியாள் தாண்டா. எனக்கிட்ட, நீ றெக்கிளாசி பேசினாயென்ன! இனி றெக்கிளாசி பேசுவியா? அல்லா பெரியவன்ரா.”

– அஞ்சலி 1971

– மருதூர்க்கொத்தன் கதைகள், முதற் பதிப்பு: ஜனவரி 1985, இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம், சாய்ந்தமருது, கல்முனை (இலங்கை)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *