கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 10, 2023
பார்வையிட்டோர்: 3,137 
 
 

விடிந்தால் போகி.

எங்கெங்குக் காணினும் வரிசை வைப்பு வைபவம் தொடங்கித் தொடர்ந்துக் கொண்டிருந்தது.

‘தேஜ் அப்பார்ட்மெண்ட்’டும் அதற்கு விதிவிலக்கல்ல.

அப்பார்ட்மெண்ட் அட்மின் செல்விக்கு இதுத் தலைப் பொங்கல்


‘எதையும், எவரையும் நொந்து என்ன ஆவப்போவுது?, நமக்குக் கொடுப்பின அவ்ளோதான்.!’

விரக்தியோடுப் பொங்கல் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள் செல்வி.

வண்ணமயமான, காஸ்ட்லியான செல்லுலாய்டு பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் பணக்காரச் சிறுவர்களைப் பார்த்து, ஏங்கி, இளைத்து, ‘நம் வசதிக்கு எட்டாக் கனியென்ற யதார்த்தம் உணர்ந்து’ ஆசை அடக்கி, மனசு மரத்து, கொட்டாங்கச்சிகள், தென்னங்குரும்பைகள், சைபால் டப்பா, சைக்கிள் டயர், சோடா மூடிகள்…எனக் கிடைத்ததையெல்லாம் வைத்து விளையாடுமே, ஏழைக் குழந்தை, அந்த மனநிலையில்தான் இருந்தாள் செல்வி.

வரிசை வைக்கத், தாய்-தந்தையர்கள், அண்ணன்-அண்ணி, அத்தை-மாமா எனத், தம்பதியராகவோ, தனியாகவோ.. சந்தோஷமாகப், ஃப்ளாட்டுக்குள் வருபவர்களையும்;
இங்கிருந்து வரிசை வைக்க சீர்வரிசையோடுப் புறப்பட்டுச் செல்பவர்களையும் ஏக்கத்தோடுப் பார்த்தாள் செல்வி.


நகரத்தின் இதயப் பகுதியில் இருக்கும் பிரும்மாண்டமான ‘தேஜ்’அபார்ட்மெண்ட்”டின் ‘அட்மின்’-செயலர் திருமதி செல்வி.

நாற்பதுக் குடும்பங்கள் உள்ள அந்தக் குடியிருப்பின் ‘கம்யூனிட்டி ஹால்’ களைக் கட்டியிருந்தது.

சமத்துவப் பொங்கல் கொண்டாடுவதற்கான அலங்காரங்கள் விமரிசையாகச் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

பொங்கல் மட்டுமல்ல; மற்ற மதப் பண்டிகைகளும் இந்த ‘ஹால்’ ல் சமத்துவமாகக் கொண்டாடப் படுவதே இந்த ‘அபார்ட்மெண்ட்’ன் சிறப்பு.

இந்த அப்பார்ட்மெண்டை ‘பாரத விலாஸ்’ என்று கூட பெருமையாகச் சிலாகித்தும் சொல்லிக் கொள்வார்கள்.


‘சோஷியாலஜி’யில் ‘டாக்டர்’ப் பட்டம் பெற்றச், செல்வி மனித உறவுகளை மதிக்கத் தெரிந்தவள். பொது வாழ்வில் பலரால் போற்றத் தகுந்த அளவுக்கு வாழும் செல்வி தன் குடும்ப உறவுகளை அலட்சியப்படுத்துவாளா என்ன..?

‘யானைக்கும் அடி சறுக்கும்’ என்பார்களே..?

அது போல ஆகிவிட்டது..செல்வியின் கதி;

சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அவளை இப்படிச் சூழ்நிலைக் கைதியாய் நிறுத்தி விட்டது;

உட்கார்ந்துப் பேசினால் ‘அட இவ்வளவுதானா..?!’ எனச் ‘சப்’ பெனப் போய்விடும் விஷயம்தான்.

அவளின் போதாத காலம், நேருக்கு நேர்ப் பேச வாய்ப்பேத் தராமல் அண்ணன் தலைமறைவாகி விட்டாரே!.

‘காலம் ஒரு நாள் மாறும். கவலைகள் எல்லாம் தீரும்!’ என்று திடமாய்க் காத்திருந்தாலும், இது போல நாள் கிழமைகளின் உடன் பிறந்தவனின் நினைவு அவளை அறியாமல் வந்துதான் விடுகின்றது.


தன் ஒரே சகோதரியின், ‘பதிவுத் திருமண நாளை ‘ரிஜிஸ்டர் ஆபீசில்’ பணி புரியும் நண்பன் மூலம் அறிந்துகொண்டான் ராஜாராமன்.

திருமணம் செய்துகொள்ளப் போகும் பையனைப் பற்றியும் விசாரித்துத் தெரிந்து கொண்டான். மனதுக்குத் திருப்தியாகவே இருந்தது ராஜாராமனுக்கு.

தாமாகச் சென்று தங்கையிடம் கேட்கக் கூச்சமாக இருந்தது.

‘இன்று நம்மிடம் சொல்வாள், நாளை நம்மை அழைப்பாள்,’ என்று ஒவ்வொரு நாளும் அழைப்பை எதிர் பார்த்துக் கொண்டிருந்தான் ராஜாராமன்.

தங்கைச் செல்வி எதுவும் சொல்லாமல் அழுத்தமாக இருக்கவே, ராஜாராமன் ஒரு முடிவுக்கு வந்தான்.

செல்வியின் திருமணத்திற்கெனச் சேர்த்து வைத்திருந்த 20 லட்சத்திற்கான FD பத்திரத்தையும், தாலி உட்பட அனைத்து நகைகளையும் சப்-ரிஜிஸ்ட்ராரிடம் கொடுத்து வைத்துத், தங்கையின் பதிவுத் திருமணத்தன்று, செல்வியிடம் ஒப்படைத்தார்;

கண் காணாது எங்கோச் சென்றுவிட்டார்;

‘கடமை தவறாதத் தன் ஒரே அண்ணன் எங்கே எப்படி இருக்கிறாரோ?’ செல்வியின் மனசு ஏங்கியது


‘சிறு வயது முதலேத் தாயும் தந்தையுமாய் இருந்து வளர்த்து ஆளாக்கிப் படிக்க வைத்துப் பதவியும் பெற்றத் தந்த தன் ஒரே அண்ணன் ராஜாரானிடம், பதிவுத் திருமணத்தை முன்கூட்டியே முறையாகச் சொல்லாமல் மறைத்தது தவறுதானே..!’

கழிவிரக்கம் வந்தது செல்விக்கு.

சொல்லக் கூடாது என்று நினைபவளா செல்வி?’;

போதாத நேரம். சந்தர்ப்பம், அப்படிச் சதிச் செய்துவிட்டது.

‘சர்ப்ரைஸ் கொடுக்கிறேன் பேர்வழி!’ என்றுக் கமுக்கமாக முன்னேற்பாடுகளையெல்லாம் செய்துவிட்டுக், காதலன் ரகு அவளைக் கடைசீ நேரத்தில் கட்டியப் புடவையோடு கொண்டு போய் ரிஜிஸ்டர் ஆபீசில் நிறுத்திய விஷயத்தைச் சொன்னால் நிச்சயமாக அண்ணன் அதை நம்புவார்தான்;

அவள் போதாத காலம் அதற்கு வாய்ப்பேத் தராமல், செல்வி மேல் வருத்தப்பட்டுக் கண்காணாமல் போய்விட்டாரே ராஜாராமன்.


மாலை 7 மணிச் சுமாருக்குச் செல்வியின் எதிரில்

வந்து நின்றார்.. அப்பார்ட்மெண்ட் செக்யூரிட்டிகளில் ஒருவரான வேணு. சென்ற மாதம்தான் அவரை செக்யூரிடியாக நியமித்திருந்தாள் செல்வி.

“அண்ணே.. ! சகோதரிக்கு வரிசை வைக்கப் போகணும்..! லீவுவேணும் அதானே..?”

புன்னகைத்துக் கொண்டே கேட்டாள் செல்வி.

“வேணுவின் கண்களில் கண்ணீர் துளிர்த்து விட்டது..”

“அண்ணே..ஏன் கண் கலங்கறீங்க..?”

பாசத்துடன் கேட்டாள் செல்வி.

“தங்கச்சி..”

வாய் நிறைய அழைத்தார் வேணு.

“சொல்லுங்கண்ணே..”

நான் வேலைக்கு வந்து ஒரு மாசம்தான் ஆகுது. நான் விவரம் சொல்லாமலே புரிஞ்சிக்கிட்டு லீவு கொடுத்து அனுப்பற உங்கப் பெரிய மனசை நினைச்சேன்.. அதான் கண் கலங்கிடுச்சு.!.”

சொல்லி விட்டுச் சென்றார் வேணு.


மறுநாள்.

விடிகாலை 6 மணிக்கெல்லாம் செல்வியின் வீட்டு காலிங் பெல் ஒலித்தது.

‘இந்த நேரத்துல யாரா இருக்கும்,,!’

எண்ணியப்படியே கதவில் பொருத்தப்பட்ட ‘டோர் விவூவர்’ மூலம் வாசலில் யாரென’ உற்றுப் பார்த்தாள்.

செக்யூரிட்டி வேணுதான், ஒரு கையில் கரும்பும், சீர் வரிசைப் பையுமாக நின்றிருந்தார்.

கதவை விரியத் திறந்தாள் செல்வி.

“ஏண்ணே..! நேத்தே நான் தான் உங்களுக்கு அனுமதி கொடுத்துட்டனே.. ஏன் இன்னும் நீங்க போவலை…?”

“நான் எங்கே போகப் பேறேன் ஸிஸ்டர். யாருமில்லாத அனாதை நான்;

எனக்குச் செக்யூரிட்டி வேலையும் போட்டுக் கொடுத்து வாய்க்கு வாய் அண்ணே! அண்ணே! னு பாசத்தோட கூப்பிடற உங்களுக்குதான் வரிசை வைக்க வந்தேன்..” என்றார் வேணு.

வேணுவின் பாசத்தில் செல்வி நெகிழ்ந்தாள்..

செல்வி விலகி வழிவிட உள்ளே கொண்டு போய் சீர் வைத்து விட்டு வந்தார் வேணு.

தன் கூடப் பிறந்த சகோதரன் ராஜாராமனை நினைத்து மனச் சஞ்சலம் வந்தது. இருக்கிற இடம் கூடச் சொல்லாமல் இப்படி ஓர் அஞ்ஞாத வாசம் செய்கிறாரே..!

ஆதங்கம் வந்தது.

‘எங்கிருந்தாலும் வாழ்க!’ என்று மனதார வாழ்த்தினாள்.

அதே சமயம் உடன் பிறவாச் சகோதரனாய் வேணு கொடுத்த சீர் வரிசை அவளை நெகிழ வைத்தது.

பையைப் பிரித்து முறையாய் வாங்கி வந்திருந்த அனைத்து மங்கலப் பொருட்களையும் எடுத்து ஸ்வாமி அறையில் வைத்தாள்.

பூஜை தொடங்கும் முன் வாசல் அருகாலுக்கு மஞ்சள் பூசி குங்குமம் இட்டு பூ வைத்து வணங்கினாள்.

“ஹாப்பீ பொங்கல் மேடம்…”

லிஃப்ட் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த மற்றொரு செக்யூரிட்டி ஜேம்ஸ் குரல் கொடுத்தார்.

“ஹாய்…! ஜேம்ஸ்…! யார் வீட்டுக்கு ஜேம்ஸ் இதெல்லாம்…!”

“உங்களுக்குத்தான் மேடம்..

“……”

செல்விக்கு ஒன்றும் புரியவில்லை.

“எ..ன..க்கா..?”

குரலில் அதிர்ச்சி தெரிந்தது.

“ஆமாம் மேடம். அவசர அவசரமா ஒருத்தர் வந்து இதையெல்லாம் செல்விகிட்டே ஒப்படைச்சிடு’ ங்கனு சொல்லி என் கைல திணிச்சிட்டு, ஓட்டமும் நடையுமா திரும்பிட்டாரு..”

“……”

தொரத்திக்கிட்டே போனேன். நீங்க யாருனு சொல்லாம இதைத் தரமாட்டேன் சார்னு சொன்னேன்.

“நான் செல்வியோட அண்ணன். பேரு ராஜாராமன் தலைப் பொங்கலுக்கு அண்ணனோட வரிசைனு சொல்லிச் சேத்துரு”னு சொன்னாரும்மா!”
“……”

“இவ்வளவு தூரம் வந்த நீங்க ஒரு எட்டு உள்ளே வந்து உங்க கையாலயே கொடுத்துட்டுப் போகலாமேனு கேட்டேன்..”

“அதுக்கு என்ன சொன்னாரு..?”

பரபரப்பாகக் கேட்டாள் செல்வி

“வராம இருப்பேனா! ஒரு நாள் நிச்சயம் வருவேன்!” னு சொல்லிட்டு ‘சரக்’ ன்னு போயிட்டாரும்மா..!”

இப்படிச் செய்த அண்ணனை நினைத்து முதலில் கோபம் வந்தது.

செல்வியின் சினம் கணத்தில் மகிழ்ச்சியாக உருமாறியது.

‘சீராகப் போய்க் கொண்டிருந்த ரயில், ட்ராக் மாறும்போது கடகடவென்று சீர்குலைக்கும் சத்தம் தண்டவாளத்தில் எழுந்து ஓய்வதுப் போலத், தன் வாழ்க்கையில் டிராக் மாறும்போது எழுந்த சத்தம் என்று ஓயுமோ?’ என்ற கவலை தீர்ந்தது செல்விக்கு.

‘நிச்சயம் ஒரு நாள் வருவேன்’

என்ற அண்ணனின் வருகை இன்றே இருக்கக் கூடாதா?

ஏக்கத்தோடும்;

விரைவில் அண்ணன் வருவார் என்ற எதிர்பார்ப்போடும்;

பழைய கசப்பான அனுபவங்கைளையெல்லாம் கழித்தெறிந்தாள்.

விரளி மஞ்சள், குங்குமம், வெற்றிலை, சீவல், களிப்பாக்கு, போன்ற மங்கலப் பொருட்கள்;

கரும்பு, இஞ்சி, மஞ்சள் கொத்துகள், தேன், நெய் என பொங்கல் ஸ்பெஷல்;

அரிசி, பருப்பு என மளிகைகள்;

அச்சு வெல்லம், மண்டை வெல்லம், ஜீனி, நாட்டுச் சர்க்கரை என இனிப்பு வகைகள்;

முந்திரி,திராட்சை, பாதாம், பிஸ்தா, ஏலாக்காய்ப் போன்றச் சுவையூட்டிகள்;

மா, பலா, வாழை, ஆப்பிள் ……….

இப்படி நானாவிதப் பழ வகைகளோடுப் பார்த்துப் பார்த்து வரிசை வைத்துவிட்டுப் போன உடன் பிறந்த, உடன் பிறவா சகோதர்களின் பாசத்தில் கரைந்தாள்.

புத்தம் புதுச் சிந்தனைகளுடன் போகிப் பண்டிகையைக் கொண்டாடினாள் செல்வி ‘இரட்டைப் – பொங்கல் வரிசை’க் கிடைத்த மகிழ்ச்சியில்.


‘நீர் அடித்து நீர் விலகுமா என்ன?’

‘நாளைக்கு சர்ப்ரைஸா தங்கச்சியோட தலைப் பொங்கலுக்குப் போயி அவளை அசத்தணும்!’

மனசுக்குள் திட்டம் போட்டார்.

செக்யூரிட்டி மூலம் செல்விக்குப் பொங்கல் சீர் கொடுத்துவிட்டு வந்த ராஜாராமன்.

– விகடன் 13.01.2023

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *