அவள் ஒரு தெய்வம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 7, 2023
பார்வையிட்டோர்: 1,832 
 
 

(1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“நான் அந்தப் பொண்ணைப் பழி வாங்கப் போறேன். கேசவன்.”

“எந்தப் பொண்ணை, அசோக்?”

கேசவனின் பதில் கேள்வியில் ஒரு சாதாரணமான நிதானம் தெரிந்தது. ‘இன்னிக்கு மழை வருமா?’ என்று சிறிதும் சுவாரசியமின்றி, நிதானமாகக் கேட்கும் ஒரு அன்றாடக் கேள்விக்கும், ‘எந்தப் பொண்ணை அசோக்?’ என்று கேசவன் கேட்டதற்கும் அதிக வித்தியாசமிருக்க வில்லை.

“மேகலாவை.”

அசோக்கின் விழிகளுக்குக் கீழிருந்த நரம்புகள் துடித்தன. கையில் காத்துக் கொண்டிருந்த விஸ்கியை அவசரமாக விழுங்கினான். சிகரெட்டை அவசரமாகப் புகைத்தான். பத்து நாட்களுக்கு மேல் ப்ளேடு தலையிடாததால் சுதந்திரம் பெற்ற தாடி. ஒரே நாளில் இளமை முழுவதையும் இழந்தவன் போல இருந்தான்.

“ஹ்ஹோ… ஒன்னோட மாடல் கேர்ள் மேகலாவையா?”

“ஆமா கேசவன். அவளைப் பழி வாங்கியே தீரப் போறேன். என்னோட வாழ்க்கையை நாசம் பண்ணிட்டா. திடீர்னு எவனோ ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கப் போயிட்டா. ஒரு அழகான, பரிசு ஓவியத்தை நான் வரைஞ்சுட்டு இருக்கும் போதே, மேகலா அந்தக் கேன்வஸைக் கிழிச்சுட்டா.”

“அசோக், நீ இன்னிக்கு ஒரு பெரிய ஆர்டிஸ்ட். இந்தப் ‘பெரிய’ங்கற வார்த்தையிலே ஒன்னைப் பத்தி, ஒன்னோட ஓவியங்களைப் பத்தி ஒரு வரலாறே அடங்கியிருக்கு.”

”அதனாலே?”.

”அதனாலே அசோக், நீ மத்தவங்களை ஒரு அடி உயர்ந்தே இருக்கே. இருக்க வேண்டியிருக்கு. ஒன்னை ஒரு பீடத்துலே தூக்கி வச்சுருக்காங்க. இப்படி சினிமாலே பார்க்கற விரக்தி யடைஞ்ச கதாநாயகன் மாதிரி வசனம் பேசாதே. மனுஷனா இருக்கறது அவ்ளோ கஷ்டமானது இல்லே. இதை புரிஞ்சுக்கோ.”

”இல்லே கேசவன்.. என்னோட நிலைமையிலே யார் இருந்தாலும் சரி… மேகலாவைப் பழி வாங்கிட்டுத்தான் அடங்குவாங்க…”

”ஒன்னோட விவாதம் ஒதைக்கிறது அசோக்…மேகலாவோட எது ஒனக்குக் கெடைக்கலே?”

“மேகலா எனக்கு இல்லேன்னு ஆயிட்டா…”

“ஒரு மாடலா மேகலா ஒங்கிட்ட என்னிக்குமே இருக்க முடியும்…அவ ஸர்வீஸ் ஒனக்கு நிராகரிக்கப்படலே…நீ பழி வாங்கப் போறேன்னா என்ன தெரியுமா அர்த்தம்? மேகலாவோட ஓடம்பு ஒனக்கு இல்லேங்கற ஆத்திரம் ஒனக்கு… அதான் காரணம்…”

அசோக் எந்தப் பதிலும் சொல்ல வில்லை. அவன் கண்களில் தோல்வி தெரிந்தது. ஒன்றுமில்லாததைத் தரையில் துப்பினான். வேகமாக நடந்துபோய் ஓவியத்தில் பாதி பூர்த்திபெற்ற மேகலாவின் மீது விஸ்கியை ஊற்றினான்.

“மேகலாகிட்டே பேசினியா…? அவ என்ன சொல்லறா?”


“என்ன சொல்றே மேகலா…?”

“நீங்க என்னைப் புரிஞ்சுக்கணும்னு சொல்றேன் அசோக்…நான் கல்யாணம் பண்ணிக்கப் போகிறேன்…வேற ஒருத்தரை…”

“மேகலா” என்று தன் ஓவியக்கூடம் நடுங்கக் கத்திய அசோக் அவள் கன்னத்தில் அறைந்தான்.

“அசோக், இப்போ நீங்க ஒங்களோட கண்ட்ரோல்லே இல்லே… கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கங்க…நான் கூடத்தான் எவ்வளவோ பேசணும்…ஏன் இந்த முடிவு எடுத்தேன்னு சொல்லணும்னு நெனைக்கறேன். சட்டுன்னு என்னை வெளிப்படுத்திக்க முடியலே அசோக்… நிச்சயமா சொல்றேன் அசோக்… நீங்க ஒரு ஆர்ட்டிஸ்ட்.. நான் ஒங்களோட மாடல். இந்த உறவு முறைலே என்னிக்குமே தப்பு வராது… இந்தாங்க இன்விடேஷன்… கல்யாணத்துக்குக் கண்டிப்பா வாங்க… நீங்க எனக்குத் தர வேண்டிய பெரிய பரிசே ஒங்களோட நட்புதான்… அசோக். நட்போட ஆதார வேரே ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கறது தான், இல்லையா?”

மேகலா கன்னத்தில் வழியும் நீரைச் சுண்டியபடி வெளியேறினாள்.

அசோக் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தான். எழுந்து போய் பத்து தூக்க மாத்திரைகளின் உறை கிழித்து, அவற்றுள் இரண்டை மட்டும் விழுங்கினான்.

இருட்டில் ஒரு ஒளிவட்டம் தெரிந்தது. அதில் மேகலா தெரிந்தாள். பத்து வருடங்களுக்கு முன் இருந்த அசோக்கையும், இன்றைய அசோக்கையும் ஒப்பிட்டுப் பார்த்தான்.

“அசோக்…நீங்க வோர்ல்ட் ஃபேமஸ் ஆயிட்டீங்க… இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆர்ட் சிகாகோலேருந்து இன்விடேஷன் வந்துருக்கு…’டய்ம்’ பத்திரிகை ஒங்களைப் பத்தி எழுதியிருக்கு…இதோ பாருங்க..”

‘எதோ ஒரு அற்புதத்தாலே….அல்லது என் விதியோட கவனக் குறைவாலே நான் ஒரு ஆர்டிஸ்ட் ஆயிட்டேன்… எனக்குள்ள இருந்த ஆர்டிஸ்ட்டை வெளியே கொண்டாந்ததே நீதான் மேகலா…நான் பொய் சொல்லல..என் வாழ்க்கை யோட டிசைன்களையே நீ மாத்திட்டே…நீ இல்லாட்டா என்னோட ஓவியங்கள் வெறும் கலர் அவியல் மேகலா…’

‘வெறும் கலர் நதிகளின் சங்கமம், பெண்களின் உடல்கள் என்ற விலங்குகளிலிருந்து கலையை விடுவித்தவன். கோடுகளில் ஓர் ஆழத்தையும், வண்ணங்களில் மென்மையையும் அவன் தன் ஒளியங்களில் கொண்டு வந்தான். பெண் உடலின் கிளர்ச்சியைவிட, அதன் பவித்ரத்தைத் தன் ஓவியங்களில் காட்டியவன் அசோக்.

மேகலா இப்போது அவனுக்குப் பக்கத்தில் வந்தாள்.

“அதை எப்படிச் சொல்றதுன்னு தெரியலே டியர். ஒங்களுக்கு இதயம் வெளிலே இருக்கு. இங்கிருந்தபடியே என்னாலே அதைப் பார்க்க முடியறது… கண்ணடிலேசெஞ்சு வச்சுருக்காங்க ஒங்க இதயத்தை..அதுலே கருணை தெரியறது…அன்பு தெரியறது …வரவர காதல் அதிகமா தெரியறது…” என்றவள் அவனை அணுகித் தன் கரங்களால் அவன் கழுத்திற்கு வளையம் போட்டு, அவனை மெல்ல இழுத்து அவன் கண்களுக்கும் பார்த்தாள். ”நான் – சொல்றது சரிதானே?” பார்வை.

‘நான் ஒன்னை பழி வாங்கப் போறேன் மேகலா.’


மேகலாவை மாடலாக நிறுத்தி அசோக் வரைந்த ஓவியங்களில் மிகப் பிரசித்தி பெற்றது ‘வெள்ளைத் தாமரை’ என்ற ஓவியம். போர் வெறியில் சீரழியும் உலகில் அமைதிதான் அந்த வெள்ளைத் தாமரை. போர்க்களத்தில் வெட்டுப்பட்ட ஒரு கரம் வெள்ளைத் தாமரை ஏந்தி விழுந்து கிடக்கிறது. அந்தத் தாமரைப் பூவில் மேகலா.

இரண்டு நாட்கள் போனது. கேசவன் திரும்ப வந்தான்,

“அசோக், நாளைக்கு மேகலாவோட கல்யாணம். வந்துடு…ஒரு மனுஷனா நடந்துக்க ஒனக்கு ஒரு சான்ஸ்.”

“இல்லே கேசவன். நான் மேகலாவோட கல்யாணத்துக்கு வரமாட்டேன், ஆனா … கல்யாணம் முடிஞ்ச மறுநாளே அவளைப் பார்க்கப் போறேன். அந்த மொகத்தை இன்னெரு தரம் பார்க்கப் போறேன் கேசவன்.”


“வாங்க….வாங்க…அட…அசோக்… நீங்களா? என்னாலே நம்பவே முடியலே. ஆனா நீங்க வருவிங்கன்னு எதோ ஒன்னு மனகலே சொல்லிட்டே இருந்ததுங்க. கல்யாணத்துக்கு ஏன் வரலே அசோக்?”

“…”

“என்ன, பதிலே காணும்? அட கையே என்னது அது?ஹ்ஹோ ப்ரசன்டேஷனா?”

‘அமில பாட்டில் மேகலா…கெமிஸ்ட்ரீ படிச்சது இல்லை …. நைட்ரிக் ஆஸிட்… ஓம் முஞ்சிலே வீசப்போறேன்… கடவுன் ஒனக்குக் கொடுத்திருக்கிற பெரிய பரிசு ஒன்னோட மொகம்தாள்… அதை இப்போ நாசமாக்கப் போறேன்…’

“என்ன அசோக்? எதுவுமே பேச மாட்டீங்களா…?”

“கைலே இருக்கிற ஆலிட் பேசும் மேகலா,..முகங்களுக்கு போட்டின்னு வச்சா ஒன் முகத்துக்கு முதல் பரிசன்னு சொல்லுவேன்… இப்போ பாரேன்..”

“அம்மா… இவர்தான் அசோக் அங்கிளா?… அங்கிள் ஏன் நீங்க கல்யாணத்துக்கு வரலே…”

யார் இந்தக் குழந்தை?

“என்னங்க… மிஸ்டர் அசோக் வந்துருக்கார் …அவர் மொகத்துலே எவ்ளோ கோபம் பாருங்க…ஒங்களைப் பார்த்தா எல்லாம் சரியாப் போயிடும்… மதுமதி அப்பாவைக் கூட்டிட்டு வாம்மா…”

மதுமதியின் அப்பா- மேகலாவின் கணவர் இரண்டு கண்களையும் இழந்து சுறுப்புக் கண்ணாடி மறைக்க மெல்ல கடந்து வந்தார் … மதுமதியின் தோள் பிடித்தபடி, ”வாங்க மிஸ்டர் அசோக்…” என்று கை நீட்டிக் கரம் குலுக்க, அசோக்கின் கையைத் தேடினார்.

”அசோக் நான் அப்படியே ஒங்களைக் கூப்பிடலாம் இல்லையா? என்னால ஓங்களைப் பார்க்க முடியலே … ஆனா ஓங்களோட உள்ளத்தைப் பார்க்க முடியறது… ஓங்க உள்ளத்தை நெருங்க முடியுமான்னு தெரியலே… நீங்க அவ்ளோ ஒசந்திருக்கிங்க…”

மோலாவின் கணவர் அசோக்கை நெருங்கி அவன் கரத்தைப் பற்ற, அவன் அமில பாட்டிலை இன்னெரு கைக்கு மாற்றிக் கொண்டான்.

”எனக்கு ஒரு ஸ்கூட்டர் ஆக்ஸிடெண்டுலே இந்த மாதிரி ஆயிடுத்து. என்னோட முதல் மனைவி ஸ்பாட்லேயே போயிட்டா மதுமதிக்காக நான் உயிரோட இருக்க வேண்டி இருந்தது… அவளுக்கு ஒரு அம்மா வேண்டியிருந்தது. பேப்பர்லே விளம்பரம் கொடுத்தேன்… கடவுள், மேகலாவை அனுப்பியிருக்காரு. அவளை எங்களுக்காக விட்டுக் கொடுத்திருக்கற நீங்ககூட ஒரு கடவுள்தான் அசோக்…”

“என்னங்க கைலே அது ? பெரிய ஸஸ்பென்ஸா இருக்கு?” என்றாள் மேகலா.

“மிஸ்டர் அசோக்… இன்னொரு கோரிக்கை. மேகலாவை நீங்க மறுபடியும் இன்னொரு மாடலா எடுத்துக்கணும்… அவளை வெறும் ஓடம்பா பார்க்காம, ஒரு பெண்ணா பார்க்க ஒங்களால மட்டுந்தான் முடியும்… நீங்க மேகலாவுக்கு தரப்போற சம்பாத்யத்துலேதான் எங்க வண்டி ஓடணும், இல்லையா மேகலா?… வேடிக்கையைப் பாருங்க அசோக்… என்னோட மனைவியைக்கூட என்னாலே பார்க்க முடியலே…” என்று அவர் இதயம் வலிக்கச் சிரித்தார்.

“தெய்வங்களை நாம் கண்களாலே பார்க்க முடியறதில்லே ஸார்” என்றான் அசோக்.

– 08 ஜனவரி 1984

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *