ஒரு குருவிடம் சீடர், “”யாருக்கும் கிடைக்காத அமிர்தம் எனக்கு வேண்டும்” என்று கேட்டார்.
சீடனின் பேராசையைப் பார்த்த குரு, இவனிடம் அமிர்தம் கொடுத்தாலும் இவனால் அதை அனுபவிக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்டு, ஒரு குடத்தில் அமிர்தம் கொடுத்து, இதை எங்கும் தரையில் வைக்காமல் தூக்கிச் சென்று, வீட்டில் போய் அருந்து என்றார்.
சீடர், அந்தக் குடத்தை எடுத்துக் கொண்டு செல்லும் வழியில் தாகம் எடுத்தது. தண்ணீர் குடிக்க விரும்பினார். என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியே ஒருவர் வந்தார்.
அவரிடம், “”இந்தக் குடத்தில் விஷம் உள்ளது.. கொஞ்ச நேரம் பத்திரமாக வைத்திரு. தரையில் வைக்கக் கூடாது. நான் போய் நீர் அருந்திவிட்டு வந்து வாங்கிக் கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
அருகிலிருந்த குளத்துக்குச் சென்று நீர் அருந்திவிட்டுத் திரும்பி வந்தார்.
திரும்பி வந்து குடத்தை வாங்கிப் பார்த்தபோது குடம் காலியாக இருந்தது.
அதிர்ச்சியடைந்தவர் அந்த மனிதரிடம் அதுபற்றி விசாரித்தார்.
அந்த மனிதருக்கு தீராத வயிற்று வலியாம். ஆகவே தற்கொலை செய்துகொள்வதற்காகப் போய்க்கொண்டிருந்தபோது விஷக்குடம் கிடைத்ததால், குடத்திலிருந்த விஷம் முழுவதையும் குடித்துவிட்டதாகக் கூறினார். இதனால் அவர் வயிற்றுக்குள் சென்ற அமிர்தம் அவரது வயிற்று வலியைக் குணப்படுத்தி விட்டது. சீடருக்கு அந்த மனிதர் நன்றி கூறிவிட்டுச் சென்றார்.
சீடர் வருத்தத்துடன் வீடு திரும்பினார். அமிர்தம் கிடைத்தும் அதை அனுபவிக்க அவருக்கு யோகம் இல்லை!
– எஸ்.ஆறுமுகம், கழுகுமலை. (மே 2012)