தேள் அழகர் அப்புசாமி

0
கதையாசிரியர்: , ,
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 25, 2012
பார்வையிட்டோர்: 11,734 
 

கீழ் வானில் பெளர்ணமி சந்திரன் சோளா பட்டூரா மாதிரிப் பெரிசாகக் காட்சி தந்தது. நட்சத்திரங்களே சென்னா, நீலவானமே அவைகளை ஏந்தும் பிளேட். அழுக்கு மேகமே லாலா கடை சப்ளையர், ஆனால் அப்புசாமி காளிதாச மனோநிலையில் இல்லாததால் சந்திரனை ரசிக்காமல் மொட்டை மாடியிலிருந்து கீழே இறங்கி பாத்ரூம் போய் வந்தார்.

பாத்ரூம் போனாரே தவிர பாத்ரூம் போகவில்லை. அதாவது ஒன்று(ம்) செய்யவில்லை, ஒருகால் போனோமோ என்று குழம்பினார். அங்கே விளக்கை அணைக்காமல் வந்து விட்டோமோ? சீதேக் கிழவி எழுந்து பார்த்தால் ஏற்கனவே அஸ்ஸாம். இதில் பூகம்பம் வேறு சேரவேண்டுமா என்று எண்ணி. கீழே ஒவ்வொரு படியாகப் பார்த்துப் பார்த்து இறங்கி, பாத்ரூம் போவதாக நினைத்த, சமையல் அறைக்கப் போய் பாத்ரூம் விளக்கை அணைப்பதாக நினைத்துச் சமையல் அறை விளக்கையும் எரியவிட்டுவிட்டு, மொட்டை மாடிப்படி ஏறி, பாதையில் ஏறுகிறோமோ இறங்குகிறோமோ என்று குழம்பியவராகத் திரும்பி வந்து தன் அறையில் படுத்துத் தலையணைகளை நன்றாகத் தட்டி மூன்று தலையணைகளை உயரமாக அடுக்கி வைத்துக் கொண்டார். அப்புறம் தலைக்கு ஒன்றுகூட இல்லாமல் காலுக்குத் தலா இரண்டு தலையணைகளை வைத்துக்கொண்டு பார்த்தார். வெறும் கட்டிலில் படுத்தார். தரையில் படுத்தார் அப்புறம் தரையில் மெத்தை போட்டுப் படுத்தார் பிறகு வெறும் ஜமுக்காளத்தில் படுத்துக் காலை மட்டும் கட்டிலில் தூக்கிப் போட்டுப் படுத்தார். எத்தனையோ வகை ஸ்வர்ணமுகி போஸ்களை முயன்றும் எதிலும் அவருக்குத் தூக்கம் வரவில்லை. மொத்தத்தில் – கஷாயம் குடித்த கர்ப்பஸ்திரீ மாதிரி வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார். யாரிடமாவது யோசனை கேட்கா விட்டால் மண்டை வெடித்துவிடும் போலிருந்தது.

கடைசியில் ஒரு நிதானத்துக்கு வந்தார். சாட்சிக்காரன் காலில் விழுவதைவிடச் சண்டைக்காரன் காலிலேயே
விழுந்து விடுவது. பிரதம எதிரியான சீதேயிடமே யோசனை கேட்டு விடுவது. முக்கியமான பிரசினைகளில்
எதிர்க்கட்சித் தலைவர்களிடமே யோசனை கேட்பதில்லையா?

மெதுவாக எழுந்து சீதாப்பாட்டியின் அறைக்குச் சென்றார்.

சீதாப்பாட்டி அழகாக அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள்.

பா.மு.கா. தேர்தல் விஷயமாக அவளும் கடந்த ஒரு வார காலமாக அலைந்து கொண்டிருந்து தினமும் லேட்டாகத்தான் படுப்பது வழக்கமாயிருந்தது.

அப்புசாமிக்கு எங்கோ ஒரு வாசகசாலையில் ஓசியில் கறுப்பு சிவப்புமாகப் பத்திரிகையில் படித்த ஒரு வாசகம் நினைவுக்கு வந்தது.

‘தூங்கும் புலியை இடறாதே!”

மனைவியை இடறிவிடாதபடி ஜாக்கிரதையாகத் தாண்டித் தலைமாட்டில் நின்றுகொண்டார்.

சீதேயை எழுப்புவது விவேகமாகுமா? பகலில் விழித்துக் கொண்டிருக்கும்போது கூப்பிட்டாலே வள் என்று விழக்கூடிய வள். ஆர்ப்பாட்டம் செய்யக்கூடிய வள், இன்னும் எத்தனையோ வள் வள். அந்த அ’வள்’ளை எழுப்புவது நலம்தானா?

சீதாப்பாட்டி புரண்டு படுத்தாள். ‘ட்யூப் லைட் பல்லி மாதிரி என்ன தளதளப்பு’ என்று அப்புசாமி பல்லைக் கடித்துக் கொண்டார். மறுபடி புரண்டு படுத்தாள். அப்புசாமி போட்டிருந்த சமையலறை விளக்கு கண்ணைக் கூசியது. விழித்தாள்.

இருட்டுக்கு வந்த வெளிச்சம் மாதிரித் தலைமாட்டில் வெள்ளை ஜிப்பாவில் அப்புசாமி நின்று கொண்டிருக்கவும் ஒரு கணம் பயந்து போய்விட்டாள். விருட்டென்று எழுந்து உட்கார்ந்தாள்.

”வாட் த ஹெல் ஆர் யூ டூயிங் ஹியர்?” என்று சட்டென்று மூக்குக் கண்ணாடியை அணிந்து கொள்ளத் தேடினாள்.

அப்புசாமி டீபாயின் மேலிருந்த மூக்குக் கண்ணாடியை வினயமாக எடுத்துக் கொடுத்தார்.

”சீதே!” என்றார் பரிதாபமாக, ”வயிற்றிலே ஷோபா நடித்த படம் மூன்றாவது நாளாக வெற்றிகரமாக ஓடுதுமே!”

சீதாப்பாட்டி பல்லைக் கடித்துக்கொண்டாள். ”ஹண்ட்ரத் டே கொண்டாடட்டும். ஐ டோண்ட் கேர்…”

”சீதே…உன்கிட்டே கொஞ்சம் பேசணுமே.”

சீதாப்பாட்டி கடுகடுத்தாள்.

”உங்க பழைய பல்லவியைக் கேட்க நான் தயாராயில்லை. நீங்க செய்த காரியத்துக்கு அட்லீஸ்ட் இன்னும் ஒன் வீக்காவது நீங்க ஸ·பர் பண்ணினால்தான் ஸீரியஸ்னஸ் உங்களுக்குப் புரியும்…”

”சீதே!” என்றார் அப்புசாமி பரிதாபமாக. ”இப்போ முக்கியமான ஒரு பிரசினை… உன்கூட அவசரமா விவாதிக்கணும். அதாவது இந்த ரசகுண்டு இருக்கிறனோ இல்லையோ… அவனும் பீமாவும்… இல்லை நானும் பீமாவும்… இருக்குதில்லையா? தேளும் நானும்…” என்று தடுமாறினார்.

சீதாப்பாட்டி அவரைக் கோபமாக முறைத்தாள். ”ப்ளீஸ்… வெளியே போங்கள். ஐ ஸே கெட் அவுட்… என் தூக்கத்தைக் கெடுக்கணும்னே ஏதோ கலாட்டா பண்றீங்க? ஊம்? அப்புசாமியை வெளியே இழுத்துத் தள்ளாத குறையாக நகரச் சொல்லிக் கதவைத் தாளிட்டு விட்டாள்.

அப்புசாமி தன் அறைக்குப் போய்க் கட்டிலில் படுத்தார். மோவாயைத் தடவிக் கொண்டு யோசித்தார். பட்டென்று மோவாயிலிருந்து கையை எடுத்துக் கொண்டு விட்டார். மோவாயில் ஏதோ ஊர்வது போலிருந்தது. ”அய்யாவ்!” என்று துள்ளிக் குதித்தார். பிறகு முதுகில் ஏதோ உர்வது போல இருந்தது. காதுகிட்டே, தோள்
மேல், மார்பில், இடுப்பில்… தொடையில், காலில்… தொண்டைக்குள், எங்கு பார்த்தாலும் ஊர்கிற மாதிரி இருந்தது. என்ன ஊர்கிற மாதிரி?

தூக்கம் வருவேனா என்றது. வந்த அற்ப சொற்ப தூக்கத்திலும் கனவுகள்.

தேள் கனவுகள். சுத்தமான கலப்படமில்லாத பயங்கரத் தேள் கனவுகள்.

கைகோத்துக் கொண்டு சினிமா சைடு ஆர்ட்டிஸ்ட்கள் போலச் செந்தேள்… கருந்தேள்… நீலத்தேள்…
விப்கியார் தேள்கள். ஹம்மிங் என்ற பெயரில் வாயைக் கண்டபடி கோணிக் கொண்டு, கொடுக்குகளைக் காரே
பூரே என்று அசைத்தபடி எல்லாத் தேள்களும் அப்புசாமியை அலக்காகத் தூக்கிக் கொண்டு எங்கோ
செல்கின்றன.

அப்புசாமி கேட்கிறார்: ”குழந்தேளா? என்னை எங்கே கூட்டிச் செல்கிறீர்கள்?”

தேள் மகாராஜா கொடுக்கை முறுக்கிக்கொண்டு தேளாசனத்தில் எழுந்தருளி யிருக்கிறார்.

சில தேள்கள் அரைச் சிரிப்புச் சிரித்தபடி அவரை மகா ராஜாவிடம் தள்ளுகின்றன.

தேள் மகாராஜாவின் கொடுக்கு கோபத்தால் சிவசிவ என்று சிவந்திருந்தது. ஒரு மந்திரித் தேள் எழுந்து, ”இந்த ஆள் நம்மை வைத்துக் காசு சம்பாதிக்கப் பார்க்கிறான்.” என்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. தேள் மகாராஜாவின் கொடுக்கு துடிக்கிறது. ”இவனைக் கொட்டிப் போடுங்கள்,” என்று உத்தரவு போடுகிறார்.

அடுத்த வினாடி அனைத்துத் தேள்களும் அப்புசாமியை நோக்கிக் கொடுக்குகளைத் தூக்கிக் கொண்டு ஓடிவர அப்புசாமி, ”ஐயோ செத்தேன். வேண்டாண்டா ரசம்! அடே ரசகுண்டு! கூண்டு வேண்டாண்டா. அடே ரசகூண்டா… வேண்டாண்டா கூண்டு!” என்று கூவியவாறு கண்ணை விழித்தார்.

உடம்பு பூரா வியர்த்திருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *