மாஸ்டர் உமைபாலன்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 31, 2021
பார்வையிட்டோர்: 4,352 
 

1

உமைபாலன் அந்தப் புதிய இடத்துக்கு வந்து சேர்ந்ததும், மறந்துவிடாமல் பெருமூச்சை வெளியேற்றிவிட்டான். அதே சூட்டோடு, உள்ளத்திலே பரவிக் கிடந்த சூட்டையும் தணித்துக் கொள்ள எண்ணினான். ஆகவே, தன் பிஞ்சு நெஞ்சில் எழுதி, மனப்பாடம் செய்து வைத்திருந்த அந்த மூதுரையை மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்திக் கொண்டான். பிறகுதான், அவனுக்குத் தன்னுடைய உடற்சூடும் நினைவுக்கு வந்தது. உடனே, அரைக் கைச் சட்டையின் பொத்தான்களைக் கழற்றினான்; பூந்தென்றலை உள்ளே புகச் செய்தான். ஒரு சில வினாடிகள் வரை கண்களை

மூடிக்கொண்டு அப்படியே நின்றான்!

இப்பொழுதுதான் அவனுக்குத் தன் நினைவு மீண்டது. விழிகளைத் திறந்தான், ஈரத்துளிகள் இரண்டு சிந்தின. அவற்றைக் கண்டதும், அவன் ஒரு முறை தனக்குத் தானே சிரித்துக் கொண்டான்.

இடுக்கண் வரும்போது சிரிக்க வேண்டும் என்பதற்காகத் தான் அவன் சிரித்தானோ?….

இரண்டு நாள் பட்ட கஷ்டங்களை அவனால் மறப்பது சாத்தியமா?

காலாற சிறுபொழுது நின்றான்; பின்னர் புறப்பட்டான்; சுற்றுமுற்றும் பார்த்தான்; மணிக்கூண்டு பளிச்சிட்டது. அந்தி வெயிலில் எவ்வளவு அழகு கொண்டு விளங்கியது அந்த மணிக் கூண்டு !

பஸ் நிலையத்தின் பரபரப்பைக் கடந்து ராமநாதன் செட்டி யால் ஹால் வாசலில் நின்று, முச்சந்தியில் வழி வகைகளை வெகு சிறப்புடன் காண்பித்துக் கொண்டிருந்த போலீஸ்காரரின் திறனை வியந்தபடி திரும்பினான். விண்முட்டிய கோபுரக் கலசம் தெரிந்தது. ஆஹா! பாடப் புத்தகத்திலே படிச்சது கனகச்சிதமாக இருக் குதே… கலசத்தின் நிழல் படியாத அதிசயத்தையும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருக்கும் நந்தியையும் நேரில் பார்த்து ரசித்து, அதே ரசனையுடன் ராஜராஜ சோழனின் கலாபிமானப்புகழையும் போற்ற வேணும்!… என்று இளம் மனத்தில் நினைவுகள் விளையாட லாயின. சோழர் மண் அவனை மெய்மறக்கச் செய்தது போலும்!

காந்திஜி வீதியில் வந்து மிதித்து, குறுக்கிட்ட வளைவுப் பகுதியையும் கடந்து, பூங்காவின் கீழ் முனையில் ஒதுங்கி நின்றான் உமைபாலன். லேசாகத் துளிர்த்திருந்த வேர்வையைத் தன்னுடைய சட்டையின் நுனியினால் துடைத்தான். கிழிசல் சடக்’ கென்று முத்தமிட்டது ; கிழிசலின் அளவு சற்றே விரிந்துவிட்டது.

அவனது பிஞ்சு மனமும் விரியத்தான் செய்தது. மிஞ்சிக் கிடந்த அந்த ஒரு பைசாக் காசையும் பிச்சை இட்ட மனம் விரியாமல் என்ன செய்யும்…..

“ரொம்பப் புண்ணியம், அண்ணா !” என்றாள் ஏழைச்சிறுமி.

“நீ என்ன தங்கச்சி, என்னமோ புண்ணியத்தைக் கண்ட தாட்டம் பேசுறே?…. எனக்குப் புண்ணியம் வேண்டாம்; உன்னோட பசியைப் போக்குறதுக்குத் துளியளவு உதவி செய்ய முடிஞ்ச வரைக்கும் நான் சந்தோஷப்படுகிறேன். இன்னமும் நிரம்பச் செய்யத்தான் ஆசை. ஆனா, ஆண்டவன் என்னைச் சோதிக்கத் தொடங்கியிருக்கிற நேரம் கெட்ட நேரமம்மா இது!…. நான் என்ன செஞ்சிட்டேன் !…ம் !….”

“நீ ரொம்ப ரொம்ப நல்ல அண்ணன் !…”

“ம்… உனக்காச்சும் நான் நல்லவனாத் தோணுறேனே, அது போதும் !” அவன் கண் இமைகள் நனைந்தன. அவன் கேட்டான் : “தங்கச்சி, உம் பேர் என்ன?”

அச்சிறுமி சொன்னாள் : “பூவழகி!”

உமைபாலனின் வயிறு கெஞ்சியது; சிறுகுடலைப் பெருங் குடல் கவ்வியது. எதிர்ப்புறம் இருந்த ஓட்டலும் அதன் முகப்பு வாசலில் கூடியிருந்த பிச்சைக்காரக் கும்பலும் அவனுள் ஒரு தத்துவமாகத் தெரிந்தது. அந்த ஒரு தத்துவமே வாழ்க்கையாகவும் அவனுக்குத் தோன்றத் தொடங்கியது. ஊம்!’ என்று மீண்டும் பெருமூச்செறிந்தான் !

பாவம், பொழுது விடிந்ததிலிருந்து அவன் எவ்வளவு பாடுபட்டு விட்டான் !

“ஏ, தம்பி!”

அழைப்புக் குரல் கேட்டுத் திரும்பினான். ஒளிவிளக்கின் பாதத்தில் இரட்டை நாடி ஆசாமி ஒருவர் காலடியில் சாய்த்து வைத்திருந்த பெட்டியுடன் நின்றார். இதை பஸ் ஸ்டாண்டுக்குக் கொண்டு வா; இருபத்தஞ்சு காசு கூலி தர்றேன்!” என்றார்.

‘சரி’ என்று பையன் பெட்டியைத் தலையில் தூக்கிக் கொண்டு நடந்தான். விழிமூடி விழி திறப்பதற்குள் அவன் கடமை நிறைவேறி விட்டது.

பெரிய மனிதர் சொன்ன சொல்படி காசுகளை நீட்டினார்.

என்ன ஆச்சரியம்!

உமைபாலன் பதின்மூன்று காசை மட்டிலும் எடுத்துக் கொண்டு, மிகுதியை உரியவரிடமே திருப்பிக் கொடுத்தான். “என் உழைப்புக்கு இது கூட அதிகம்னு தோணுதுங்க, பெரியவரே!” என்று மிடுக்குடன் பதில் கூறியபடி, வணக்கம் சொல்லி நடந்தான்.

ஓர் இட்டிலியும் ஒரு சாயாவும் அந்த சிறிய கும்பிக்குப் போதும் போலும்!

அடுத்தது ஓட்டல் வந்தது. ஆம்; ஓட்டல் வரவில்லை ; அவன் ஓட்டலுக்கு வந்தான். நுழைவாசலில் வைத்திருந்த படங்களைக் கண்டதும் அவன் கரங்குவித்தான். கல்லாவில் இருந்த முதலாளியிடம் பணிவுடன் நெருங்கி ஏதாவது வேலை கிடைக்குமா என்று கேட்டான்; கடையின் சொந்தக்காரர் கேட்ட கேள்வி களுக்குப் பதில் சொன்னான்.

“காலையிலே வா தம்பி! யோசிச்சுச் சொல்லுறேன்!”

” நல்லதுங்க, ஏழை பாழைங்களோட நல்ல வாழ்வுக்காகவே அல்லும் பகலும் உழைச்சுக்கிட்டு வர்ற அந்தத் தமிழ்த் தலைவரை நீங்க பூசிக்கிறதிலேருந்து, இந்த ஏழைச் சிறுவனுக்கும் நல்ல வழி கெடைக்குமிங்கிற நம்பிக்கையோட நான் விடிஞ்சதும் உங்களை வந்து சந்திக்கிறேனுங்க, ஐயா!’

உரிமையாளர் புன்னகையுடன் தலையை அசைத்து அவனுக்கு விடை கொடுத்தனுப்பினார்.

தெருவில் அன்றைய மாலைப் பதிப்புப் பத்திரிகையைப் படித்துக்கொண்டிருந்தவரிடம் உமைபாலன் மெல்ல அண்டிப் பார்த்தான். பார்த்த சடுதியில் அவனது முகம் கலவரம் அடையத் தொடங்கிவிட்டது.

2

புன்னகை சிந்தப் பழகுகின்ற பாப்பாவைப் போன்று இளஞ் சூரியன் அப்போதுதான் பூவுலகைத் திரும்பிப் பார்த்துப் புன்னகை சொரியத் தொடங்கியிருந்தான்.

கீழ்வாசல், மிகுந்த அழகுடனும் நிறைந்த சுறுசுறுப்புடனும் விளங்கிக்கொண்டிருந்தது.

உமைபாலன் துவைத்து உலர்த்திய உடுப்புகள் துலாம் பரமாகப் பளிச்சிடவும், நெற்றியில் பூசப்பட்ட திருநீறு பக்திபூர்வ மாக மின்னவும் நடந்து வந்து, நேற்று வரச்சொன்ன அந்த ஓட்டலுக்குள் பிரவேசித்தான். அவன் தன்னையும் அறியாமல், கைகளைக் குவித்து வணங்க எத்தனம் செய்தான்.

ஆனால், என்ன ஏமாற்றம்! கல்லாவில் தடிமனான மனிதர் ஒருவர் அல்லவோ வீற்றிருந்

தார்….

பின்வாங்கினான். உணவுக் கடையின் பெயரை மீண்டும் படித்தான். அட்டியில்லை ; லக்ஷ்மி விலாஸ் ‘ ஓட்டல் தான் !

சிறுவன் அறிந்த துண்டு – கும்பிடு சொடுத்துத்தான் கும்பிடு வாங்க வேண்டும் என்பது! ஆகவே, கும்பிட்டான். ஆனால் பாவம், அவன் பதிலுக்குக் கும்பிடு வாங்கவில்லை. நேற்றுப் பார்த்த அந்த ஆள் எங்கே? என்று மனம் மறுகினான். இவர் இப்படி அழுத்தமாக இருக்கிறாரே?…..

ம்… வாஸ்தவந்தான். நானோ வேலைக்கு வந்தவன். இவரோ முதலாளி. பெரிய முதலாளி…. பெரிய உடம்புள்ளவர் பெரியவர் இல்லையா , பின்னே?… அவரும் எனக்குச் சமதையாய் கும்பிட்டு விட்டால், அப்பால், கும்பிடு என்கிறதற்கு அர்த்தம் இருக்காதே…. வேடிக்கையான சிந்தனைகளை வினயமாகப் பின்னினான் அவன்.

கல்லா மனிதரை ஒரு முறை உன்னிப்பாக நோக்கினான் உமைபாலன். இரட்டை நாடியான உருவம். யானைக்குட்டியை அதுவும் அவன் டிராயிங் வரைந்த யானைக்குட்டியை அதே சமயத்தில் எண்ணிப்பார்க்காமல் இருக்க முடியவில்லை. திரு நீற்றுப்பட்டைகளின் நடுவே சந்தனப் பொட்டு திகழ்ந்தது. உச்சியில் நாலைந்து மயிரிழைகள். விசிறிக்காற்றில் அவை பறந்தன.

“தம்பி, எங்கேருந்து வந்தே?”

“வடக்கேயிருந்துங்க!”

“அடடே, வடக்கேயிருந்தா?….”

“சீனாக்காரன் எப்படி இருக்கான்?”

“அவன் தான் நம்ப மூஞ்சியிலே கரியைப் பூச நெனைச்சு, இப்ப தம் மூஞ்சியிலேயே கரியைப் பூசிக்கிட்டு, ஓட்டம் பிடிக்கத் தலைப்பட்டிட்டானே!…. அந்தச் சீனாக்காரனுங்க பட்ட கஷ்டங்களை இப்ப நெனைச்சாலும் எனக்கு ரொம்பக் குஷியா யிருக்குதுங்க!”

வெகு மிடுக்குடனும் கம்பீரத்துடனும் பேசினான். “நான் வடக்கே லடாக் பகுதியிலே இருந்தவரைக்கும் ஒரு சீனன் மூச்சுக் காட்ட வேணுமே!…. நம்ப மண்ணிலே ஒரு துளி எடுக்கிறதுக்கு அவன் யாருங்க?” மேஜையில் ஓங்கிக் குத்தினான்.

இரண்டு பில்கள் அவனுக்குப் பயந்துகொண்டு ஓடி னவோ?- அவனா விட்டுவிடுபவன்?

“பலே பாண்டியா!” என்ற குரல் கேட்டுத் திரும்பினான் உமைபாலன்.

நேற்று கல்லாவில் காட்சியளித்த இளைஞன் நின்றான். முகத்தில் சிரிப்பு. கண்களிலே கனிவு. “உன் மாதிரிச் சிறுவர் களைத்தான் நம் நேருஜி எப்போதுமே நேசிப்பார். நேருஜி இருக்கும் வரை இந்தச் சீனன் நம் பக்கம் தலைவைத்துக்கூட படுக்க மாட்டான், தம்பி…. உன்னுடைய தாய்நாட்டுப் பற்று ரொம்பவும் உயர்வு…” என்று போற்றினான்.

பையனுக்குப் போன உயிர் திரும்பியது.

பிறகு, பெரியவருடன் அவ்விளைஞன் ஏதோ பேசினான். “நீ சொன்னாச் சரிடா கோபு!” என்று முடிவு வெளியிட்டார் அவர்.

கோபு குதூகலத்துடன் திரும்பினான் “தம்பி! உள்ளே வா!” என்று அழைத்துச் சென்றான். தம்பி என்ற அச்சொல் அவனைப் புல்லரிக்கச் செய்தது.

இருபுறமும் அற்புதமாக அலங்காரம் செய்து போடப்பட்டிருந்த நாற்காலிகளும், அவற்றின் உச்சியில் அலங்காரம் செய்த வண்ணம் இருந்த சுவாமி படங்களும் சிறுவனின் பிஞ்சு மனத்தைக் கவரலாயின.

“தம்பி!”

உள்ளே எட்டிப் பார்த்தான்.

அது ஒரு கிட்டங்கி.

மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. டின்கள் வேறு. வேறு சின்னப்பையன் ஒருவன் குந்தியபடி அரிசி அளந்து கொண்டிருந்தான். அவன் வேர்வையை வழித்துவிட்டுக்கொண்டு ஒயிலாகத் தன்னுடைய சட்டைக் காலரைத் தூக்கிவிட்டபடி, உமைபாலனை ஜாடையாகப் பார்த்துச் சிரித்தான் ,

சிறுவர் பட்டாளத்துக்குப் பொழுதுபோக்குவதற்குக் கூட இன்னொரு புள்ளி கிடைத்துவிட்டது என்கிற மனோபாவத்தில் விளைந்த சிரிப்புப் போலும் ! ஆனாலும், அவனுக்கென்று இப்படி ஒரு கர்வமா?

உமைபாலன் நடந்தான்.

அடுத்த அறையில் சரக்குப் போட்டுக்கொண்டிருந்தார்கள்.

கோபு ஒரு போண்டாவை எடுத்து ஊதி, அதை உமை பாலனிடம் நீட்டினான்.

உமைபாலன் ரொம்பவும் யோசித்தான்; பிறகு தயங்கினான். “எனக்கு உங்க அன்புதான் இப்ப வேணுமுங்க. என்னாலே உங்களுக்கு ஒரு பத்து பைசா நஷ்டம் ஏற்பட மனசு வரலீங்க!” என்று நாசூக்காகச் சொன்னான்.

கோபு வியப்பில் விரிந்த விழிகளுடன் அவனையே இமை மூடாமல் பார்த்தான். ஏனோ , புராண புருஷர்கள் சின்னஞ் சிறார்களாக இருக்கையில் செய்து காட்டிய திருவிளையாடல் களின் நிழல்கள் அவன் உள்ளத் திரையில் ஓடிக் காண்பித்தன.

“தம்பி !”

“அண்ணா !”

பாசத்தின் குரல்கள் தழுவின.

“உனக்கு ஊர்?” “ராமநாதபுரம் சீமைங்க !”

“அப்பா அம்மா?”

“நான் அனாதைங்க!”

“உனக்கு என்ன வேலை தெரியும்?”

“இன்ன வேலை தெரியும்னு சொல்றதுக்கு எனக்கு முன் அனுபவம் ஏதுமில்லீங்க. இப்பத்தான் முழுவருடப் பரீட்சை எழுதினேன். ஒன்றுவிட்ட மாமாவோடே கொஞ்சம் மனத்தாங்கல். பிரிஞ்சு வந்திட்டேன். ஆனதாலே, எந்த வேலையையும் பெருமை சிறுமை பார்க்காமல் பார்க்க வேணுமிங்கிற நினைப்பு எனக்கு இருக்குதுங்க!”

ஒவ்வொரு பேச்சையும் எவ்வளவு தூரம் சிந்தனை பண்ணிப் பேசுகிறான் இச்சிறுவன்!’ கோபுவுக்கு அதிசயம் அடங்க வில்லை.

தம்பி! இப்போதைக்கு நீ எடுபிடி வேலை செய்துக்கிட்டு இரு . போகப் போக, பின்னாடி வேறே நல்லதா ஏற்பாடு செய்யிறேன்!”

“ரொம்பப் புண்ணியமுங்க!”

“சம்பளம், சாப்பாடு போட்டு அஞ்சு ரூபாதான் தரமுடியும்!”

“சரிங்க! எல்லாம் உங்க தயவுங்க!”

கோபு வாசலுக்கு விரைந்தான்.

உமைபாலன் அவனைப் பின்தொடர்ந்து திரும்பிய நேரத்தில், கிட்டங்கிப் பையன் விரல்களை இணைத்துத் தட்டி அழைத்தான். “அண்ணாச்சி புதுசு போல!” என்று மெல்லப் பேச்சுக் கொடுத்தான். அவன் கழுத்தில் சிலுவைச் சின்னம் அழகு காட்டிக் கிடந்தது.

உமைபாலன் ம் கொட்டிவிட்டு, ரவை நேரமும் தாமதிக்காமல் தன்னுடைய கடமைகளைச் செய்யவேண்டிப் புறப்பட்டான்.

ஹாலில் ஒரு முடுக்கில் கிடந்த அழுக்குத் துணியை எடுத்துக் கொண்டு மேஜைகளைச் சுத்தம் செய்யலானான், உமைபாலன்.

வேலை முடிந்த கையுடன், அவனுக்குக் காலைச் சிற்றுண்டி கிடைத்தது. கலங்கி வந்த கண்களை மூன்றாம் பேருக்குத் தெரி யாமல் துடைத்துக் கொண்டான். இட்டிலிகளைச் சாப்பிட்டான். தொண்டையை அடைத்தது. சமாளித்துக் கொண்டான். தண்ணீர் குடித்தான். சாப்பிட்டு முடித்ததும், தன்னுடைய ட்ரவுசர் பை யிலிருந்த அந்தச் செய்தித்தாளை மீண்டும் ஒரு தரம் பார்க்க வேண்டுமென்கிற துடிப்பு வலுவடைந்தது!

3

புதன்கிழமை! அன்றுதான் அந்த ஓட்டலுக்கு விடுமுறை நாள். உமைபாலன் வழக்கம் போலவே சூரிய உதயத்துக்கு முன் பாகவே படுக்கையை விட்டு எழுந்துவிட்டான். படுக்கை என்றால் என்ன தெரியுமா? உடைந்த செங்கல்தான் தலையணை. கிழிசல் துணிதான் பாய். படுக்கையை ஒரு புறமாக மறைத்துவிட்டுப் பல் துலக்கிவிட்டு வந்தான். மலரும் கதிரவனைக் கண்டதும் மலர்ந்தது அவன் உள்ளம். கைகூப்பி அஞ்சலி செய்துவிட்டு வந்தான்… பசியின் உணர்வு எழுந்தது. அரை நிமிஷம் அவன் எதையோ நினைத்துக் கொண்டவனாக – எதற்கோ ஏங்குபவன் போலத் தோன்றினான். ஆனால் மறுவினாடியே, எதையும் நினைக் காதவன் போலவும் எதற்குமே ஏங்காதவன் மாதிரியும் மாறினான்.

பிஞ்சு மனத்தில் விதைக்கப்படும் தன்னம்பிக்கை, பக்தி, அறிவு, அன்பு போன்ற குண நலன்கள் நாளடைவில் பண்பட்டு வந்தால், அவை ஒவ்வொன்றுமே பிற்காலத்தில் அவனுக்குப் பக்கபலமாக அமையவல்லது!” – நேருஜி அடிக்கடி சொல்லி வந்த இவ்வாசகத்தை அவன் மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்திக் கொண்டான். அவனையும் அறியாமல், அவனுக்குத் தெம்பு ஊறியது; தன்னம்பிக்கையும் ஊறியது. ஏதோ ஓர் இலட்சியத்தைத் தன் சித்தத்தில் ஏற்றியவனாக, அவன் கண்களைத் துடைத்துக் கொண்டான்.

அவனுடைய தோழர்கள் இன்னமும் கும்பகர்ண சேவையில் லயித்திருந்தார்கள்.

உமைபாலன் அவர்களை எழுப்பினான்.

அவர்களுக்கு எப்படிக் கோபம் வந்து விட்டது!

அந்தப் பையன் ஜெயராஜ் மட்டும் முகத்தைச் சுளித்துக் கொண்டே எழுந்தான். மூக்கின் நுனியில் கோபம் இருந்தாலும், விரல் நுனியில் சுறுசுறுப்பு இருந்ததே!- இல்லாவிட்டால் இவனைக் கிட்டங்கிப் பொறுப்புக்கு வைத்திருப்பார்களா?

“பாலா!” “என்னப்பா, ராஜ்?” “இன்னிக்கு என்ன ப்ரோக்ராம்?”

“ப்ரோக்ராமா?…. நாம் என்ன பெரிய மனிதர்களா, நாளைக்கு ஒரு நிகழ்ச்சியும் வேளைக்கொரு விழாவும் நமக்காகக் காத் திருக்க….”

“ப்பூ… இவ்வளவுதானா நீ?…. என்னைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது போலிருக்குது! ம்…”

“ஊஹும், தெரியாது!”

“சரி, சரி…இன்னிக்கு லீவு. அதாவது ஒனக்குத் தெரியு மில்லையா?”

“ஓ, தெரியுமே!”

“அதாகப்பட்டது, இன்றைக்கு நமக்கு சம்பளத்தோடு ஒருநாள் சட்டப்படி லீவு என்பது உனக்குத் தெரியும்!”

“அப்படியென்றால், இன்று நமக்கு லீவு. அதாவது, நம் உழைப்புக்கு விடுமுறை. இல்லையா, பிரதர்?”

“வாஸ்தவம்!”

“இதுக்கு முந்தி உழைச்சதுக்காகவும் இதுக்குப் பிந்தி உழைக்க வேண்டியதுக்காகவும் நாம், நம்ம உடம்பைத் தயார்ப்படுத்துறதுக்காகக் கொடுக்கப்பட்ட ஒரு சந்தர்ப்பம் இன்னிக்கு!”

“மெய்தான்!” உமைபாலன் சிரிப்பைக் காட்டிக்கொள்ளத் தவறவில்லை.

“ஆகவே…”

“ஆகவே… இன்றைக்கு நம்ம இஷ்டப்படி ஜாலியாக இருக்க வேணும்! என்ன, பாலா?”

உமைபாலன் பதில் எதையும் வெளியிடக்காணோம்!

அதற்குள் ரேடியோவை யார் வைத்தார்கள்? துதிப்பாடலின் பக்தி ஒலி மிதந்து வந்தது.

ஜெயராஜ் மறுபடி கேட்டான். கழுத்தில் ஊசலாடியது சிலுவைக் கயிறு.

உமைபாலன் திரும்பவும் சிரித்தான். “ராஜ்! ஜாலியாக இருப்பது என்றால் முதலிலே அதற்கு விளக்கம் சொல்லு, கேட்கலாம்!”

“ஜாலியாக இருப்பதுன்னா , மூக்குப் பிடிக்கச் சாப்பிடுவது, ஊர் சுற்றுவது, சாயந்திரம் இரண்டு ஆட்டம் சினிமா பார்ப்பது, அரட்டை அடிப்பதுன்னு அர்த்தம்!”

“பேஷ்…”

“ம்… நீ ரெடியா?”

“உன் திட்டத்துக்கு வசதி….?”

“நான் என் செலவுக்கு ரெண்டு ரூவா வச்சிருக்கேன்!”

“என்கிட்டே பைசா கூட இல்லியேப்பா!”

“நான் தர்றேன்!”

“உனக்கு ஏது உபரிப்பணம்?”

“ஏய்! அதைப்பத்தியெல்லாம் உனக்கு ஏன் வம்பு?…உனக்கு என்னைப்பத்தி முதலிலே சொல்லியாக வேணும்… சரி, நீ குளிச் சிட்டுப் புறப்படு… நானும் ரெடியாகிடுறேன்!….”

அப்போது “அப்துல்லா!” என்று அழைத்தான் ஜெயராஜ். சிறுவன் ஒருவன் வந்தான்.

அப்துல்லாவையே மாறாமல் பார்த்தான் உமைபாலன். தொப்பியோ, கைலியோ இல்லாமல், கிராப்புத் தலையுடன் இந்துப் பையன் போலவே இருந்தான் அவன். இம்மாதிரி வேலைக் கெல்லாம் இந்தப் பக்கத்தில் இம்மாதிரி வேஷம்தான் லாயக்கு என்கிற விவரம் தெரிந்ததும் உமைபாலனுக்கு ஆத்திரம் வந்து விட்டது; பாவம்!’……

கடிகாரம் ஓடியது.

ஜெயராஜ் புறப்பட்டுவிட்டான் ! நேர்த்தியான சில்க் ஷர்ட்’ மேனியில் மின்னியது. அவன் துள்ளிக் குதித்து உள்ளே ஆளோடியை அடைந்தான். “பாலா…..” என்று குரல் கொடுத்தான்.

அங்கே ஒரு மூலையில் உமைபாலன் குந்தி பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவன் முன் மண்டியிட்டு உட்கார்ந்த ஜெயராஜ், “நான் தான் உனக்குக் காசு தர்றதாச் சொன்னேனே, பின்னே நீ எதுக்கு இன்னிக்கும் இதைச் சாப்பிடணும்?” என்று பரிவுடன் வினவினான்.

கடைசிக் கவளத்தை வழித்துப் போட்டுக் கொண்டான் உமை பாலன். சுண்டல் குழம்பைத் தொட்டுச் சுவைத்தபடி இலையைச் சுருட்டி வீசிக் கை கழுவித் திரும்பியதும் அவன் சொன்னான்: ”கடன் வாங்கி இட்டிலி சாப்பிடுறதைக் காட்டிலும் இதுதான் எனக்கு நிம்மதி ராஜ்! எங்க மாதிரி எழை பாழைங்களுக்கு வயிறும் ஆசையும் சுருங்கித்தான் இருக்க வேணுமாக்கும்! உனக்கென்ன, ராஜா! நிஜமாகவே நீ ராஜாதான் என்கிற விஷயத்தை இப்பத்தான் அறியமுடிஞ்சுது!…. உன்னோட பட்டுச் சொக்காயே சொல்லுதே நீ பெரிய இடத்துப் பிள்ளை என்கிறதை…..”

ஜெயராஜ் முகம் திடுதிடுப்பென்று கறுத்தது. “சரி, புறப்படு!” என்று தூண்டினான்.

இருவரும் கை கோத்துக் கொண்டு கிளம்பி விட்டார்கள்!

பிரகதீஸ்வரர் ஆலயம், சரபோஜி மன்னர் அரண்மனை, கலைக்கூடம் போன்றவற்றைப் பார்த்துக் களித்துவிட்டார்கள் அவர்கள். ஆகவே, அடுத்ததாக எங்கே போவது என்று மட்டுப் படவில்லை. முதலில் ஜெயராஜ் வயிற்றுப்பாட்டைக் கவனித்தான். உமைபாலன் வெளியே நின்றான். அப்போது, முன்பொரு சமயம் பார்த்த பிச்சைக்காரத் தங்கச்சி பூவழகியைக் கண்டான். விடு முறைச் செலவுக்கென்று கிடைத்த நாலணாச் சில்லறையில் ஒரு பத்துக்காசை எடுத்து அவளிடம் நீட்டிவிட்டு, ஆர்ச்சுக்கு நெருங்கி ஒரு பக்கம் ஒதுங்கினான். நிஜார்ப்பையில் கையை நுழைத்துப் பழைய பத்திரிகைத்தாளைப் பிரித்தான். காணவில்லை!’ என்ற தலைப்பில் செய்யப்பட்டிருந்த விளம்பர வரிகளைப் படித்தான். அவனுடைய கண்கள் ஏன் இப்படிக் கலங்குகின்றன?… அவன் என் அப்படிப் பெருமூச்சு விடவேண்டும்?…..

கண்களைத் துடைத்தபடி, மனத்திற்குள் ஒன்று… இரண்டு…. என்று சொல்லி நாட்களைக் கணக்கிட்டான். காலடி அரவம். கேட்டது. சடக்கென்று பத்திரிகைத்தாளைக் குறுக்கு வசமாக மடித்தான். விளம்பரத்தில் காணவில்லை’ பகுதியில் இருந்த அந்தப் படத்தில் பென்சிலால் ஏதோ கிறுக்கினான். அவசரமாக அதை மடித்து வைத்தான். “பாலா!” என்று கூப்பிட்டு அவன் தோளைப் பற்றினான் ஜெயராஜ்.

வெள்ளைப் பிள்ளையார் கோயிலைக் கடக்கும் வரை ஜெயராஜ், உமைபாலன் இருவரும் மெள்ள நடந்தனர். அப்போது நேருஜியின் உடல் நலம் கெட்டது பற்றி யாரோ பேசிக்கொண்டு போனது உமைபாலனின் செவிகளில் விழுந்தது. அதல பாதாளத்தில் விழுந்துவிட்டதைப் போல் அவன் பதைப்புற்றான்.

அதற்குள், “பாலா, உன்னைப் பற்றிச் சொல்லேன் !” என்றான் ஜெயராஜ்.

கொஞ்சமும் சுவாரஸ்யம் இல்லாமல், உமைபாலன் சொன் னான் : “நான் அனாதை . ராமநாத புரச்சீமைப் பக்கம் எனக்கு. உழைச்சால்தான் வயிற்றுக்கு வழிபிறக்கும்….. அவன் இப்போது ஜெயராஜை நோக்கி “உன்னைப் பற்றியும் நான் தெரிந்து கொள்ள வேணாமா?” என்றான்.

“தாராளமாக!” என்று தொடங்கினான் ஜெயராஜ். “எனக்கு மெட்ராஸ் ஊர். என் தகப்பனார் பெரிய வியாபாரி. பெரிய பங்களா, கார் எல்லாம் உண்டு. ஒருநாள் கோபித்துக்கொண்டார் என் அப்பா . அதைப் பொறுக்காது ஓடி வந்துவிட்டேன். பத்திரிகையிலே விளம் பரம் கூட போட்டுவிட்டார். எனக்கு சுயகவுரவம்தான் ஓசத்தி!”

ஓரு சந்து வந்தது.

ஜெயராஜ் தன் நண்பனை நிறுத்தி, அவன் கால் சட்டை யிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து அவனிடம் நீட்டினான் “டே! பிடிடா”

உமைபாலன் மறுத்தான். என்ன சொல்லி மன்றாடியும் மறுதளித்தான்.

ஆகவே, ஜெயராஜ் வெகு குதூகலத்தோடு சிகரெட் பிடித் தான். “எங்க வீட்டிலே – ஊஹும், பங்களாவிலே சிகரெட் எடுத்துக் குடுக்கிறதுக்குன்னே ஒரு பையன் உண்டு !” என்றான்.

“சிகரெட்டை உனக்கு எடுத்துக் கொடுக்கவா?….”

“நீ சுத்த கண்ட்ரியாக இருக்கியே? நான் அவ்வளவு தைரிய மாக அங்கே பிடிக்க முடியுமாடா?”

“உஸ்… டா’ போடாதே… இதுதான் உனக்கு மாப்பு!..உன்னைப் போல எனக்கும் சுயகவுரவம் உண்டு! உஷார்!” என்று கம்பீரமாக மொழிந்தான் உமைபாலன். சென்னையைப் பார்க்கவேண்டு மென்ற தன் ஆசையை வெளியிடவே, உடனேயே நிறைவேற்றுவ தாக வாக்களித்தான் ஜெயராஜ்.

இருவரும் ஓட்டலை அடைந்தபோது மணி இரண்டு அடிக்கச் சில வினாடிகள் இருந்தன.

சாப்பாட்டு இலைகள் அவர்களை அழைத்தன.

ஜெயராஜ் உட்கார்ந்து வாயில் அள்ளிக் கொட்டத் தொடங் கினான்.

கை கழுவி வந்த உமைபாலன் இலையில் குந்தினான். சோற்றைப் பிசைந்தான்.

அப்போது, ரேடியோ பயங்கரமான விதி போல அலறியது.

குந்திய உமைபாலன் குபீரென்று எழுந்து விட்டான் : தெய்வ மாகி வந்த நேருஜியே…. இவ்வளவு சீக்கிரமாக நீங்கள் தெய்வ மாகி விட்டீர்களே!….

அவனது பிஞ்சு மனம் வெந்து உருகியது.

4

அந்த ஓட்டலிலே மிகவும் பரபரப்பான பொழுதல்லவா அது!

கல்லாவில் ‘கனபாடி’ கங்காதரம்- அதாவது, கோபுவின் தகப்பனார் வீற்றிருந்தார். உச்சியில் சுற்றிய காற்று அவருக்குப் போதுமா…. போதாது. ஆகவே, கையிலும் ஒரு விசிறி மட்டையை வைத்திருந்தார். பில்களைப் பார்த்துப் பணம் வாங்கிப் போட்ட நேரம் போக, ஒழிந்த வேளையில் அவரது கை அவ்விசிறியை நாடும்; முதுகு அரித்தாலும் விசிறி அவருக்குக் கை கொடுப்பது உண்டு.

“வைரக் கடுக்கன் அறுபது காசு!” என்ற குரல் உள்ளே யிருந்து கேட்டது.

குரல் ஈந்தவன் மாஸ்டர் மணி.

ரொம்ப துடி!

இல்லையென்றால் புளித்துப்போன ஒரு பழைய ஹாஸ்யத்தை இத்தனை தைரியமாகச் சொல்லி ஒப்பிடக்கூடுமா?

ஹோட்டல் அதிபர் வைரக்கடுக்கனை எடை போட்டாரே, அதைப் போட்டிருந்த நபரை எடை போட்டாரோ?…. அவர் கொடுத்த காசுகளை எண்ணிப் பெட்டியில் போட்டுக்கொண்டார். பிறகு, காற்றில் புறம் மாறிவிட்ட அந்த அட்டையை வாகாய்த் திருப்பி விட்டார்.

அதில் :

“இன்று முதல் சாப்பாடு ஆரம்பம்!” என்ற அறிவிப்பு இருந்தது. அளவுச் சாப்பாடு, எடுப்புச் சாப்பாடு, முழுச் சாப்பாடு, டிக்கட் சாப்பாடு என்ற பாகுபாடுகளின் விலை விவரங்களும் இருந்தன.

அது தருணம், முதலாளி கூப்பிட்டார்: “டேய் பாலா!”

உமைபாலன், பாலாவாக வடிவம் பெற்று ஓடி வந்தான். கையில் துடைக்கும் நீலத் துணி காட்சியளித்தது. பணிவுடன் நின்றான்.

“எங்கேடா ஜெயராஜ்!”

அவன் உள்ளே சென்றான். “பாலா, நம்ம ராஜ், சர்பத் சாப்பிடக் கொல்லைப் பக்கமாய்ப் போயிருக்கான். நீ கண்டுக்காதே, பெரிய பணக்காரப்பிள்ளை அவன். அவன் தயவு நமக்கு எப்பவும் வேணும். அவன் இங்கே இனி இருக்கப் போறது நாள் கணக்குத் தாண்டா!… உன்னையும் என்னையும் கூட அவன் பட்டணத்துக்கு அழைச்சுக்கிட்டுப்போய்த் தன்னோட பங்களாவிலே வச்சுக்கிடப் போறதாச் சொல்லியிருக்கானே!…..” என்றான் அப்துல்லா.

இவர்களின் சம்பாஷணை முடிவதற்கும் ஜெயராஜ் அங்கு வருவதற்கும் கனகச்சிதமாக இருந்தது.

“முதலாளி அய்யர் கூப்பிடுகிறார் உன்னை !” என்றான் உமைபாலன், ஜெயராஜிடம்.

அவனோ வெகு அலட்சிய பாவத்தோடு, ” ம்….சரிடா நீ போ!” என்றான்.

உடனே இதைக் கேட்டதும் உமைபாலனுக்குக் கோபம் வந்துவிட்டது. “டே பட்டம் போடறியா?… ரொம்பத் திமிர்தான்! உன் பணக்கொழுப்பை எங்கிட்டவா காட்டறே?….” என்று முஷ்டியை

ஓங்கினான்.

ஜெயராஜ் அதற்குள் அசந்துவிட்டான். “வீட்டிலே கூப்பிட்டு கூப்பிட்டுப் பழக்கமாகப் போச்சுப்பா! கோபிக்காதே!” என்று பவ்யமாகக் கெஞ்சினான்.

உமைபாலன் கோபம் ஆறினான். இருவரும் வெளிப்புறம் வந்து நின்றார்கள்.

“சாப்பாட்டுக்கு நேரமாயிடுத்து… உள்ளே டேபிள், நாற் காலியையெல்லாம் செட்டிலாப் போட்டாச்சாடா?… ஆத்திலேருந்து வந்ததுக்களையும் உள்ளவே போட்டுடணும்டா!” என்றார் முதலாளி.

“ஆத்திலேருந்து மேஜை-நாற்காலி கூடவா வரும்?” என்று ஜெயராஜ் ஜோக்’ அடிக்க, மற்றவன் ரசித்தான்.

இருவரும் ஒருவரையொருவர் பொருளுடன் பார்த்தனர். பேச்சுக்குப் பேச்சு டா’ போட்டுப் பேசினாரே, அதற்காகவா?

காரியம் என்றால் உமைபாலனுக்கு எப்போதுமே கண். அவன் உள்ளே போய்த் திரும்பி வந்து சரியாக எல்லாம் போடப் பட்டிருப்பதாகச் சொன்னான்.

“நானும் பார்க்கிறேன், அந்தப் பயல் ஜெயராஜ் என்னவோ பெரிய குபேரர் வீட்டுப் பிள்ளையாண்டான் மாதிரிதான். கொஞ்சம் கூடப் பொறுப்பில்லாமத் திரியறான்!” என்றார் பெரியவர்.

உமைபாலன் முன்வந்து, தன் நண்பன் ஜெயராஜின் உண்மைக் கதையைச் சொல்லிவிட வேண்டுமென்று துடித்தான்.

ஆனால், அதற்குள்ளாக கார் ஒன்று வாசலில் வந்து நிற்பதைக் கண்டதும், ஏனோ உமைபாலன் சலனம் அடைந்த வனாக வாய் மூடி மௌனியானான்.

ஐயரோ அவரையும் அறியாமல் மேஜையிலிருந்த அழைப்பு மணியை அழுத்திவிட்டு, ‘ம்… போங்களேண்டா பசங்களா… யாரோ பெரியவா வர்றா!….. போய் டேபிளைச் சுத்தம் பண்ணுங் களேண்டா !…. என்றார். பதட்டம் குரலில் பேசியது.

சிறார்கள் இருவரும் உள்ளே விசையுடன் விரைந்தனர்.

வெளியே கார் நின்றதும், அதிலிருந்து பட்டுச் சொக்காய் போட்ட ஆசாமி ஒருவர் இறங்கி வந்து, கல்லாவை அணுகினார். தம் பையன் ஒருவன் காணாமல் போய்விட்டதாயும் பேப்பரிலே விளம்பரம் செய்தும் பயனில்லை என்றும், பையன் பெயர் கருணா கரன் என்றும், தமக்குக் காரைக்கால் சொந்த ஊர் என்றும், பெரிய ஜவுளி வியாபாரி எனவும் விவரித்தார் அவர்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட பின் “உங்க நேம்?” என்று கேட்டார் ஓட்டல்காரர்.

“செங்காளியப்பன் !” என்று சொல்லி, சாண் அகல ஜரிகை கரையைத் தரையில் படாமல் கொய்து ஒதுக்கினார்.

அப்படிப்பட்ட பையன் வந்தால் தெரிவிப்பதாகக் கூறி, காரைக்கால் புள்ளியின் முகவரியைக் கேட்டார். அதற்கு, அவர் தமது விலாசம் எழுதி தபால் தலை ஒட்டப்பட்ட வெள்ளைக்கூடு ஒன்றையும் கொடுத்தார். “இருங்கோ ….. ஒரு கப் டிக்ரி காப்பி சாப்பிட்டுப் போங்கோ… தஞ்சாவூர் ஸ்பெஷல் இது!… உங்க ஊரிலே காப்பி நல்லதாக் கிடைக்காதில்லே!”…என்று கூறி, உமைபாலன் – ஜெயராஜ் இருவரது பெயர்களையும் அழைத்தார்.

இருவருமே வரவில்லை .

மேஜையைச் சுத்தம் பண்ண அப்துல்லாதான் வந்தான்.

“காப்பி எனக்கு ஒத்துக்காதுங்க!” என்று தீர்ப்பளித்தார் காரைக்கால் செங்காளியப்பன்.

“போச்சு, இருபத்தஞ்சு காக’ என்ற ஏமாற்றத்தில், வந்தவரை வழியனுப்பக்கூட ஒப்பாமல், வியாபாரத்தில் கவனம் செலுத்த லானார் ஐயர்.

சாப்பாட்டு டிக்கட்டுகள் கேட்டு, ஆட்கள் வந்தனர்.

ஐயர் தம் உடம்பை வெகு சிரமத்துடன் சுமந்துகொண்டு நடந்து உள்ளே சென்றார். ” அம்பி கோபுவுக்கு உடம்பு நன்னா இல்லாததாலே இத்தனை கஷ்டம்…. ஈஸ்வரப் பிரபோ..” என்று வாய்விட்டு அலுத்துக்கொள்ள வேண்டியவர் ஆனார்.

டிக்கட்டுகள் வியாபாரம் ஆயின. உள்ளே முதற்பந்தி ஆரம்பமாயிற்று. கல்லாப் பெட்டி மூடிக்கொண்டது.

தலைக்கு மேலே தொங்கிய இங்குள்ள பலகாரங்கள் அசல் நெய்யில் செய்தவையல்ல!’ என்ற எச்சரிக்கைப் பலகையினை இடது கையால் லேசாகத் துடைத்தார். பிறகு வலம் வந்தார்.

கீழ்ப்பகுதியில் உமைபாலன் டபரா – தம்ளர் முதலியவை களைச் சுத்தம் செய்து கழுவிக்கொண்டிருந்தான். காலடியில் ஒட்டி உறவாடிய சூட்டைச் சட்டை செய்தால் முடியுமா? சட்டையை உதறி

வேர்வையைத் துடைத்தபடி கைவேலையில் முனைந்தான். மகாத்மா காந்தி வீட்டுப் பாத்திரங்களைக் கழுவிய நிகழ்ச்சியையும்

அவன் அப்போது எண்ணிப் பார்த்தான்.

‘இங்கே எச்சில் துப்பு’ என்ற பலகை இருந்த இடத்தை நெருங்கினார். எச்சில் துப்பினார். அப்புறம், தூங்கி வழிந்த ஜெயராஜை முதுகில் தட்டி, சாக்குக்கட்டி வாங்கி வரச் சொல்லி, துப்பு ‘ – என்கிற இடத்தில் ங்கள்’ – என்று சேர்த்துவிட்டு நகர்ந்தார்.

கல்லாச் சாவியை எடுத்துத் திறந்தார்.

அவ்வேளையில் :

“சாமி ! தண்டனுங்க… என் பையன் காத்தான்… நல்ல செகப் புங்க… இங்காலே வந்தானுங்களா?” என்று பரிதாபமாகக் கேட்டான். அவனுக்கு அறந்தாங்கிப் பகுதியாம்! பெயர், சாம்பான்!

கடைக்காரருக்குப் பைசா லாபம் வருகிறது என்றால் கூட, வாய்ச் சோம்பல் படமாட்டார். ஆனால் வந்த ஆள் வாசலிலேயே நின்றதைக் கண்டதும் ஐயருக்கு விஷயம் விளங்கிவிட்டது. உடனே முகம் கோணியது. திரும்பியபடி, “யாரும் அப்படி இங்கே இல்லேப்பா… போ…. ஜல்தி!” என்று பதட்டத்துடன் மொழிந்தார் ரேடியோவை டியூன்’ பண்ணினார்.

“ஜாதிகள் இல்லையடி பாப்பா – குலத் தாழ்ச்சி உயர்வு சொல்லல் பாவம்!”

என்று பாடியது ரேடியோ.

அலுப்புக்கொண்டு தலையை வடபுறம் திரும்பினார்.

அங்கே, தேசத்தலைவர்கள் விஷமப் புன்னகையை வேதனை யுடன் சிந்தியபடி காட்சி தந்தார்கள்.

இப்போது அதிபருக்கு மனத்தை என்னவோ செய்தது. திரும்பிப் பார்த்தார். வந்த ஏழை இன்னமும் தயங்கி நின்றான். ஒரு பொட்டலம் பக்கோடாவை எடுத்து, அவன் கை தொட்டுக் கொடுத்து, உள்ளே கையைப் பிடித்து அழைத்து வந்து ஸ்டூலில் குந்தச் செய்து காப்பியும் கொடுத்து அனுப்பினார். காணாமற் போன அந்த ஏழையின் குமாரனின் விவரங் களையும் முன் போலவே வாங்கிக் கொண்டு அனுப் பினார்.

இப்போது ஐயர் நிம்மதியாகப் பெருமூச்சு விடலானார்.

முதற் பந்தி முடிந்தது, ஐயர் எட்டிப் பார்த்தார். எச்சில் இலைகள் அப்படி அப்படியே இருந்தன. “டேய் பசங்களா!” என்றார்.

ஜெயராஜ் மட்டுமே ஐயரின் பார்வையில் தென்பட்டான். அடுத்து உமைபாலனும் ஓடி வந்தான்.

“இலைகளை எடுங்கடா!” என்று பணித்தார் அவர்.

உமைபாலன், ஜெயராஜை நோக்கினான்.

ஜெயராஜோ ”எவண்டா எச்சில் இலையை எடுப்பான் !… சே!” என்றான் கம்பீரத்தொனியுடன். “சே! கேவலம்”

ஆனால் உமைபாலன் அங்கிருந்து நகர்ந்தான். மேல் வரிசையிலிருந்த முதல் எச்சில் இலையை எடுத்துக் கொண்டிருந் தான். ‘திருடறது கேவலம்: பொய் பேசறது கேவலம்! இது கடமை!’

அப்போது “அடகடவுளே!” என்று விம்மியபடி அங்கே தோன்றிய காரைக்கால் செங்காளியப்பன், அந்த எச்சில் இலையைப் பிடுங்கி மடித்து, அதை எச்சில் இலைத் தொட்டியில் போட்டுவிட்டு அந்த மேல் வரிசை இலைகளையும் எடுத்து சுத்தம் செய்யலானார்!

உமைபாலனைப் பேய் அறைந்துவிட்டதா என்ன?

5

ஆம்; உமைபாலன் பேயறை பட்டவனாக வாய்ச் சொல் ஏதுமின்றி, வாய்ச் சொல்லுக்கு ஏது எதுவுமின்றி அப்படியே நிலைகலங்கி நின்று விட்டான் !

உமைபாலன் தன் கடமையின் பேரில் அந்த எச்சில் இலை களை எடுத்துத் துப்புரவு செய்ய வேண்டியிருக்க, அவனுக்குப் பதிலாக, அந்தப் பணக்காரப் பெரிய மனிதர் அந்த எச்சில் இலைகளை அவ்வளவு அவசரமாக எடுத்துப் போட்டுச் சுத்தம் செய்த நிகழ்வு அங்கே ஒரு பெரும் பரபரப்பையும் அதிசயத்தையும் விளைவித்தது.

இச் செய்தியைச் சரக்கு மாஸ்டரும் சர்வர் மணியும் சொல்லக் கேட்டு, வேகமாக வந்தார் பெரிய ஐயர். தற்செயலாக, கோபுவும் வந்துவிட்டான்.

அற்பம் என எண்ண ப்படும் சிறிய சம்பவம், ஒருவனது வாழ்க்கையில் மகத்தான திருப்பத்தை உண்டாக்கக்கூடும். இதற்கு உதாரணமாக, எத்தனையோ பெரிய மனிதர்களின் வாழ்வு ஏடுகளிலே இடம் பெறவில்லையா?

இதை மனத்தில் கொண்டு, அச்சிறுவனையும் அப்பெரிய வரையும் மாறி மாறிப் பார்த்தான் கோபு. சரிதான்; இந்தச் சீமானுக்குப் பிள்ளை இருக்காது. துடியானகளை சொட்டும் நம்ம உமைபாலனை சுவீகாரம் எடுத்துக்கப் போறார் போலிருக்கு! என்ற முடிவுதான் அவன் நெஞ்சில் மேலோங்கியிருந்தது.

“தம்பி…”

“…”

“கருணாகரா!…”

“…”

“மகனே!…. கருணாகரா!…”

உமைபாலன் சீற்றத்துடன் தலையை உயர்த்தினான். “யார் உமது மகன்?” என்று ஆங்காரமாகக் கேட்டான்.

“நீ!… நீதான் என் மகன்!….” என்று நெஞ்சு வெடிக்க விம்மினார் காரைக்கால் மனிதர் !

“நானாவது உம் மகனாவது..உமக்குப் பைத்தியமா ஐயா?” சிரித்தான் சிறுவன்!

என்ன அதிசயம் இது….

சுற்றி நின்றவர்கள் மூக்கில் விரலை வைத்தனர்; குழப்பம் அடைந்தனர்.

சிறுவர்கள் ஜெயராஜ், அப்துல்லா, காளி முதலியவர்கள் உமைபாலனையே இமை வலிக்கப் பார்த்தார்கள். “உங்க அப்பாகூட இப்படி ஒரு நாள் வந்து உன்னை அழைச்சுக்கிட்டுப் பறந்திடுவார் ! நீ கொடுத்து வச்சவனப்பா!” என்று ஏக்கப் பெருமூச்சுடன் செப்ப, ”நீ போடா!…. என் கதையே தனியடா!….. நான் ராஜா! டே, அப்துல்லா!… இப்ப நடக்கிற நாடகத்திலே கட்டாயம் ஏதோ ஒரு ரகசியம் இருக்கணும்டா!” என்று பேச்சுக்குப் பேச்சு , ஆளை அறிந்து டா’ போட்டு, அந்த வெற்றியிலேயே கர்வம் கொண்டு நின்றான் ஜெயராஜ்.

அப்போது, வாசலில் யாரோ சிலர் சாப்பாட்டு டிக்கட் கேட் பதறிந்து விரைந்து , மேஜை மீதிருந்த டிக்கட்டுகளைக் கிழித்துக் கொடுத்தான். கொடுக்கப்பட்ட சில்லறைகளை எண்ணி வாங் கினான். அவன் யதேச்சையாகத் திரும்பிய பொழுது, ஏன் அவன் முகம் அப்படி வேர்த்துக் கொட்ட வேண்டும்?

கத்தரி வெயிலுக்கென்று இப்படியொரு மகிமையா?

ஜெயராஜ் ரொம்பவும் சுருக்காகவே திரும்பிவிட்டான். நாடகத்தின் முழுவிவரத்தையும் அறிய வேண்டாமா? வந்ததும், டிக்கட்டுக்கள் விற்ற பணத்தை முதலாளியிடம் சமர்ப்பித்தான். அவன் போய்த் திரும்புவதற்குள் எந்த ரகசியமும் இடம் பெற்றுவிடவில்லை என்பதையும் தன் சேக்காளிகள் மூலம் புரிந்து கொண்டான்.

கைக்குட்டையில் முகத்தைப் புதைத்த வண்ணம் அப்படியே நின்றிருந்தார் காரைக்கால் ஆசாமி.

உமைபாலனோ அங்கிருந்து நகர்ந்துவிட்டான், கிராப்பை ஒதுக்கியபடி!

இந்தப் புதிர்க் குழப்பத்திற்கு ஏற்ற நேரம் இதுவல்லவென்றும், இப்படியே இந்நிலை நீடித்தால், பிஸினஸ்’ கெட்டுவிடுமென்றும் அறிந்துணர்ந்த முதலாளியும் அவர் பிள்ளையும், இரவு கடை அடைக்கும் நேரத்துக்கு வரும்படியும் காரைக்கால் அன்பரிடம் சொல்லி அனுப்பினார்கள்.

உடம்பு சரியில்லையென்று அரை நாள் லீவு வாங்கிக் கொண்டு போனான் ஜெயராஜ்.

காலம் கரைந்தது. இரவு மணி ஒன்பது . விளக்குகள் பிரகாசமாக எரிந்தன.

உமைபாலனை அனுப்பிவிட்டு, கோபு கல்லாவில் அமர்ந் தான். மேஜை இழுப்பைத் திறந்து சில்லறைகளையும் ரூபாய்த் தாள்களையும் இனம் பகுத்து மேஜையின் மீது வைத்தான். அருகில் உட்கார்ந்திருந்த கனபாடி’ பொடிமட்டையைப் பிரித்து மூக்கின் துவாரங்களிலே பொடியைச் செலுத்திவிட்டு, குத்துக் கம்பியில் செருகப்பட்டிருந்த பில்களையும் சாப்பாட்டு டிக்கட்டு களையும் எண்ணிக் கணக்கிட்டார்.

அப்போது, வாசல் பெட்டிக்கடையில் ஏதோ கசமுசவென்று பேச்சுக் கேட்டது. தம் கடையில் அலுவல் பார்க்கும் ஜெயராஜ் என்பவனும் பெரிய இடத்துப் பிள்ளை என்ற அங்கு பேச்சு அடிப்பட்டது. “டே அம்பி! கேட்டியாடா சங்கதியை! நம்ம ஓட்டல் பேர் பேப்பரிலே வரப்போகுதுடா!” என்று குஷி’யுடன் பேசி, ஜெயராஜ் பற்றிக் காதில் விழுந்ததையும் கொட்டினார். மத்தியானம் நடந்த கூத்தின் போது, டிக்கட் விற்ற பணத்தை ஜெயராஜ் தம்மிடம் கொடுத்ததையும் அவர் நினைத்தார்.

ஆனால், கோபு ஏனோ உதடுகளைப் பிதுக்கினான். முதற் பந்தி முந்ததும், எச்சில் இலைகளை எடுக்க மறுத்த ஜெயராஜைப் பற்றி யாரோ சொன்ன விவரத்தை அப்பாவிடம் எடுத்துக் காட்டினான். “ம்… விதின்னு ஒண்ணு இருக்கத்தாண்டா இருக்கு!’…. நம்ம வேலையைக் கவனிப்போம்டா!” என்றார், பெரியவர் சின்னக் குரலிலே!

டிக்கட்டுகளின் வரிசை எண்களைச் சரிபார்த்து வந்த பெரியவர் சடக்கென்று திகைப்புற்றார். இடையில் விற்கப்பட்ட டிக்கட்டுகளிலே இரண்டின் எண்கள் அடுத்தடுத்து விடுபட்டிருப் பதைக் கண்டார். உடனே அவருக்கு ஜெயராஜின் ஞாபகம் வந்தது. நாலு டிக்கட்டுக்கு மாத்திரமே பணம் தந்தான். இரண்டைச் சாப் பிட்டுவிட்டான் பயல்!’ என்று சிந்தித்தபடி, அந்தப் பையனுக்கு ஆள் அனுப்பினார். லீவு எடுத்துச் சென்றவன் இன்னமும் மீள வில்லை என்று தாக்கல் சொல்லப்பட்டது.

அப்போது ஜெயராஜைத் தேடி, அவனது கழுத்தில் தொங்கிய சிலுவைச் சின்னத்தை அடையாளம் கூறி, யாரோ ஒருவர் வந்தார். தாம் யாரென்று சொல்லாமல், அவர் வேகமாகத் திரும்பிவிட்டார், சைக்கிளிலே!

ஒன்பதரை மணி.

காரைக்கால் செங்காளியப்பன் கையில் ஒரு துணி முடிச் சுடன் உள்ளே பிரவேசம் செய்தார். பெரிய செவர்லே ‘ கார் வாசலில் நின்றது. வந்தவர் குந்தினார். பட்டு ஜிப்பா பளபளத்தது.

“பையனை எவ்வளவோ கேட்டுப் பார்த்துட்டேன்னா!… ஒன்றும் பலிக்கல்லே! உம்மைத் தெரியவே தெரியாதுன்னு சாதிக் கிறான் !” என்று விளக்கினார் பெரியவர்.

“அப்படியா?….” அதற்கு மேல் காரைக்கால் நபர் பேச முடிய வில்லை . விழிகள் சிவப்பு ஏறின. பிறகு பேசலானார். “என்னோட மானத்தைப் பறிக்கிற அளவுக்கு அவன் – என் மகன் பொய் பேசறான், சார்… பெற்ற தகப்பன் ஐயா நான் …. எனக்கு இவன் முதல் தாரத்துப் பையன். இவனோட தாய் காலராவிலே இறந்த தால், நான் இரண்டாந்தாரம் பண்ணிக்கிட்டேன். அதுக்கு ஒரு பெண் குழந்தை மட்டுந்தான். ஒரு நாள் இவனோட சின்னம்மா என்னவோ சொல்ல, இவன் அவளை எதிர்த்துப் பேச…. புத்தி தப்பியிருந்த நான் இவனை அடிக்கப் போக . ஐயையோ , இப்ப நான் நிலைகுலைஞ்சு , என் மகனே எனக்கு இல்லைன்னு ஆயிடுமோ என்கிற துர்ப்பாக்கிய நிலையிலே நிற்கிறேனுங்க.. பகவான் என்னை ஏன்தான் இப்படிச் சோதிக்கிறானோ?… இவனுக்குள்ள சொத்து நாலு தலைமுறைக்குக் காணும், இவன் வந்து இங்கே பெயரை மாற்றிக்கிட்டு, தன்னையும் மாற்றிக்கிட்டு, அடிமை வேலை செய்யணுமா?… சரி… ரொம்பக் கெட்டிக்காரப் பிள்ளை. என் பேரைச் சொல்ல வைப்பான்னு கனவு கண்டேன். ஆனா இப்படி என்னை ஏமாத்துகிறானே!… தெய்வமே!.. இதோ பாருங்க, இதுங்களை!.”

மூச்சு இரைத்தது. அவர் கொணர்ந்த முடிச்சை அவிழ்த்தார்.

“எல்லாம் தங்க நகைகள் ! எல்லாம் இவனுடையது… இது தேதி வச்ச கடிகாரம்”

ஒவ்வொன்றாகக் காட்டினார். அவன் காணாமல் போன வுடன் அவன் புகைப்படத்தைப் போட்டு விளம்பரம் செய்த தாளையும் காண்பித்தார்.

“தெய்வத்தின் மீது பாரத்தைப் போட்டு விட்டு நீங்க ஊருக்குப் போங்க… உங்க பையன் தான் இவன். எனக்குப் புரியுது. வரட்டும்… பாசத்துக்கு மகிமை ஜாஸ்தி. நான் உங்க மகனை ஜாக்கிரதையாப் பார்த்துக்கறேன். கவலைப்படாமல் நீங்க போங்க ஊருக்கு… அவன் மனம் சட்டென மாறிவிடும். உம்மோட கண்ணீ ரைப் பகவான் சீக்கிரமே துடைச்சுடுவார். அவரோட விளையாட்டு வேலையும் அதுவேதானாக்கும்!

கனபாடி கங்காதரம் பாசத்தின் அற்புதம் அறிந்தவராக, உணர்ந்து, மனம்விட்டுப் பேசினார்.

காரைக்கால் நபர் விடைபெறும் பொழுது, நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து ஐயரிடம் நீட்டினார். ”என் உயிர் இங்கேயேதானுங்க இருக்கும்!… இதை வச்சக்கங்க!…”

ஓட்டல் உரிமையாளர் ஏற்க மறத்துவிட்டார். “உம் பையன் இனி எம் பையனாட்டம் ! பணத்தை நீங்களே வச்சுக்கங்க… பத்திரம்… நிம்மதியாய்ப் போயிட்டு வாங்கோ !…. என்று வழியனுப்பி வைத்தார்.

அன்றிரவு எல்லோரும் உறங்கி விட்டார்கள்.

ஆனால் சிறுவன் உமைபாலன் மட்டும் சிலை போல் உட்கார்ந்திருந்தான். சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, நேருஜி போன்ற மனிதத் தெய்வங்களின் முன்னே மண்டியிட்டு வணங்கிக் கண்ணீர் சொரிந்துகொண்டிருந்தான்!

தரையிலே விரிந்து கிடந்த பத்திரிகை விளம்பரத்தில் அச்சிடப்பட்டிருந்த சிறுவன் கருணாகரனின் கிறுக்கப்பட்ட முகத்திலே, உமைபாலனின் கண்ணீர்த்துளிகள் சிதறிச் சிந்தின…

6

காலை இளங்காற்றிலே பறந்த. அந்த அழகிய பட்டம் காற்றை எதிர்த்து மேலே விண்ணிலே செல்ல எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. கீழே மண்ணை நோக்கிச் சாய ஆரம்பித்தது.

ஓட்டல் ஆரம்பமாகி மூன்று மணி நேரமாகியுங்கூட, இன்னமும் ஜெயராஜ் திரும்பாதது கண்டு, ஓட்டல் முதலாளி மகன் கோபுவுக்கு ஐயம் தட்டத் தொடங்கியது. பெரியவர் மாதிரியே

அவனுக்கும் சந்தேகம் ஏற்பட்டது.

நேற்று வந்து தேடிய ஏழைக்கிழவன் சாம்பான் இன்றும் வந்தான். மகனைப் பற்றித் தடயம் ஏதாவது கிடைத்ததா என்று ஆவல் பொங்கக் கேட்டான்.

ஐயர் கையை விரித்தார்.

சாம்பான் போய்விட்டான்.

இருந்திருந்தாற்போல என்னவோ நினைத்தவராக, விசுக் கென்று எழுந்த கனபாடி கங்காதரம் ஐயர், பொடிமட்டையுடன் உள்ளே சென்றார். கொல்லைப்புறம் இருந்த பெட்டிகளில் ஜெயராஜின் பெட்டியைக் கேட்டு, அதன் பூட்டை உடைத்தார்.

நல்ல, அழகிய, உயர்ந்த சட்டைகள், ட்ரவுசர்கள் இருந்தன. அடியில் ரூபாய் நோட்டுகள் சில இருந்தன. மொத்தம் இருபது ரூபாய்!- சில்லறைகள் வேறு! எல்லாவற்றையும் பார்த்ததும், நிஜமாகவே இவன் பெரிய இடத்துப்பிள்ளைதானோ?’ என்ற குழப்பம் அவரை உலுக்கியது. இன்னும் நன்றாகப் பெட்டியை அலசினார்.

ஒரு முகமூடி காணப்பட்டது.

அடியில் ஒரு சீசா இருந்தது. மூடியைத் திறந்தார். ‘குப்’ பென்று அடித்தது வாசனை – நாற்றம்! அதில் இருந்த எழுத்து களைப் படித்தார். ஏதோ ஒரு வகை பிராந்தி வைக்கப்பட்டிருந்த வெறும் சீசா போலும்! “சே, சுத்த ரௌடிப்பயல்…. காலிப்பயல்!” அவரது பற்கள் சத்தம் பரப்பின. இவனுக்கு இந்தச் சனியன் எல்லாம் ஏது?… நம்ம கடைப் பேரையே கெடுத்துடுவான் போலிருக்கே! என்று வருந்தினார்.

உள்ளே எட்டிப் பார்த்துத் தலையை நீட்டிய அப்துல்லாவுக்கு நல்ல அடி கிடைத்தது.

உமைபாலன் வெளியே தன் கடமைகளை ஆற்றிக் கொண்டி ருந்தான்.

இன்னமும் பிரிந்தார் பெரியவர். சிகரட்டுகள் சில கிடந்தன. கிழிக்கப்பட்டுப் பெட்டிக்கடியில் போடப்பட்டிருந்த நோட்டுத் தாள் களை எடுத்தபோது, ஒன்றில் எஸ். காத்தான்’ என்ற பெயர் இருந்தது. காத்தான் !…

சடக்கென்று ஐயர் குடுமியைத் தட்டி முடிந்தார். சாம்பான் கிழவன் சொன்ன பேர் காத்தான் என்பதுதானே!….. ஒரு வேளை இவன் அவனோட மகனாயிருக்குமோ?…. பேரையும் ஜாதியையும் மாற்றிக்கிட்டு வேஷம் போட்டிருப்பானோ? சே ! எனக்கு மண்டைன்னா கனக்குது… பாவன், அப்துல்லாதான் நல்ல

பையன். எதையும் மறைக்கலே!’

கனபாடி கிளம்பினார்.

அப்துல்லாவுக்குப் புதிதாகப் போட்ட ஜாங்கிரியை எடுத்துக் கொடுத்தார். இதைத் தூரத்தேயிருந்து பார்த்துக்கொண்டிருந் தான் உமைபாலன் என்பதை உணர்ந்து, இன்னொரு ஜாங்கிரியை எடுத்து, அவனை நெருங்கி, அவனிடம் கொடுத்தார்.

உமைபாலன், ” இது வேண்டாமுங்க! உங்க அன்புதானுங்க வேணும்!” என்று சொல்லி விட்டான்.

இவனைப் படிக்கிறதுக்கு எனக்கு வயசு பத்தாது போல!’ என்று எண்ணமிட்டார் கங்காதரம்.

அவரவர் பலகாரங்களை உண்டனர்.

கடிகாரமோ காலத்தை உண்டது.

வெயில் எரித்தது.

அப்போது மிகவும் ‘ஸ்டைலாக’ அங்கு வந்தான் சிறுவன் ஜெயராஜ்.

உள்ளே அடியெடுத்து வைத்துதும், அவனை அழைத்து, உன் அப்பா சாம்பான் வந்திருக்காரப்பா” என்றார் கனபாடி

உடனே ஜெயராஜின் சிவந்த முகம் மாறிவிட்டது. சுதாரித்துக் கொண்டான். ” என் அப்பா உயிருடன் இல்லீங்களே!” என்று பதிலளித்தான்.

“ஏய்!” என்று அதட்டியபடி அங்கு தோன்றினார் அம்மனிதர். இரவு இவனைத் தேடி வந்தாரே அவர்தான் ! அவர் இப்போது போலீஸ் உடுப்புகளோடு நின்றார். அவர், அவன் கன்னங்களிலே அறைந்தார்.

“பெற்ற அப்பனைப் பற்றிக் கூடவா உனக்கு இளக்காரம் வந்துவிட்டது!” என்று அதட்டினார் போலீஸ்காரர்.

அருகில் ஒதுங்கி நின்ற உமைபாலன் ஏன் அப்படித் துடித்தான்?

செருமியபடி நின்றான் ஜெயராஜ்.
“ம்…. நடந்ததையெல்லாம் சொல்லு.. இந்த ஐயரும் கேட்கட்டும்…”

ஜெயராஜ் சொன்னான். அவனுடைய பெயர் காத்தான் ; சேரிச் சாம்பான் அவன் தகப்பன். சாப்பாட்டு டிக்கட்டுகள் இரண்டை அவன் விற்றுப் பணம் திருடினான். இப்போது சில நாளாக, ஒருவனுக்குப் பிராந்தி பாட்டில்களைப் பெரிய மனிதர்களிடம் ரகசியமாக விற்க உதவினான். பணம் கிடைத்தது அதில். அதன் காரணமாக, இப்போது போலீஸ்காரரிடம் வசமாக அகப்பட்டுக்கொண்டான். போலீஸ்காரரோ, அவனை ஐயருக் காக ஒரு முறை இப்போது மன்னித்துள்ளார்.

“இந்த நாளிலே பிள்ளைகள் வரவரக் கெட்டுப் போயிடுச்சு, கான்ஸ்டபிள் சார்… வரவர லோகத்திலே நடிப்பும் வேஷமும் தான் மலிஞ்சுடுத்து. பாருங்களேன் இவனை!… முளைச்சு மூணு இலை விடலே, அதற்குள்ளாற சட்டத்தையே ஏமாத்த ஆரம்பிச் சுட்டானே!… என்னமோ, உங்க இரக்கத்துக்கு ரொம்ப நன்றிங்க! இவனை இவன் அப்பன்கிட்ட ஒப்படைச்சுட்டா, நம்ம தண்டா விட்டுது…”

மனம் நொந்து பேசினார் பெரியவர். வந்த சினத்தை அடக்கிக்கொண்டார்.

ஜெயராஜ் கூனிக் குறுகி நின்றான்!…. உமைபாலன் டபரா – டம்ளர்களை எடுத்துச் சேகரம் செய்து கொண்டிருந்தான்.

அப்போது –

வாசலில் ஒரு கூச்சல் கேட்டது.

எல்லோரும் வெளியே ஓடி வந்தார்கள்.

பிச்சைக்காரச் சிறுமி பூவழகி பதற்றத்துடன் கதறினாள்: “ஐயையோ , ஓடியாங்க…. ஓடியாங்க ! திருடன் இந்தக் குழந்தையோட நகைகளைக் கழற்றுகிறானே?”

எல்லோரையும் முந்திக்கொண்டு உமைபாலன் ஓடினான்.

அழகான அப்பெண் குழந்தையின் கழுத்துச் சங்கிலியைக் கழற்றிக்கொண்டிருந்தான் ஒரு திருடன்!

யார் அவன்?

கிழவன் சாம்பானல்லவா அவன்?

ஓடிச் சென்ற உமைபாலன் குழந்தையைக் கண்டு பதறி, “ஆ!” என்று அலறினான். கழுத்துச் சங்கிலியைக் கழற்ற முனைந்த கிழவனைக் கீழே பிடித்துத் தள்ளினான்.

பூவழகி கதறினாள்.

கனபாடி கங்காதரமும் அவர் பிள்ளை கோபுவும் ஓடி வந்தார்கள். கிழவன் சாம்பானைக் கண்டதும் ஐயர் திகைப்புற்றார். ”சரிதான்… இந்த அப்பன் புத்திதான் மகனுக்கும் வந்திருக்குது….” என்று பற்களைக் கடித்தார். பற்கள் சில எப்படியோ, யார் செய்த பூஜாபலன் மூலமோ அவர் வசம் எஞ்சின.

கிழவன் சாம்பான் தலைமுடியை முடிந்தான்; “டேய்…. நீ யாருடா என்னைத் தடுக்க… இது யார் குழந்தையோ! இதிலே நீ ஏண்டா தலையிடுறே…? போடா!…” என்று சீறினான் அவன்.

உமைபாலனின் உடல் முழுவதும் நடுங்கியது; ரத்தம் கொதித்தது. துடிதுடிப்பு வளர்ந்தது. “ஏ கிழவா, நான் யாருன்னா கேக்கிற?… இது என் தங்கச்சிடா!… இது இங்கே எப்படி வந்துச்சு அப்படின்னுதான் புரியலே….! எங்க சின்னம்மா இதை விட்டுப்புட்டு ஒரு செகண்ட் கூட இருக்க மாட்டாங்களே!…” என்று விம்மினான்.

கிழவன் தலையை உயர்த்தி, “தம்பி, நீ யாரு…? அதை முதலிலே சொல்லு… ஓட்டலிலே மேஜை துடைக்கிற உனக்கு இவ்வளவு பணக்காரத் தங்கச்சி எப்படி இருக்க முடியும்?…” என்று அமத்தலாகக் கேட்டான்.

உமைபாலன் தடுமாறிப் போனான். காற்சட்டையிலிருந்த தாளை பிரித்தான். அதில் பிரசுரமாகியிருந்த காணவில்லை விளம்பரப் பகுதியைக் காட்டினான்.

“இந்தாப் பாரய்யா. இதுதான் நான் …. படம் சரியாத் தெரியாது… இதுதான் என் அப்பா…. பெயர் …. செங்காளியப்பன்… ஊர், காரைக்கால்!” மீண்டும் செருமினான் பையன்.

“இதுக்கெல்லாம் என்ன ஆதாரம்?”

“ஐயோ, கடவுளே !” புரண்டான் உமைபாலன்.

“போடா தள்ளி!” என்று ஆத்திரத்துடன் நெருங்கிய ஐயர், அக்கிழவனை ஒதுக்கித் தள்ளினார். அருகில் ஓடி வந்த ஜெய ராஜைக் கன்னத்தில் அறைந்து நெட்டித் தள்ளினார். கிழவனை மீண்டும் அடிக்கக் கழி ஒன்றை எடுத்தார்.

அப்பொழுது, ஒரு கை வந்து அதைத் தடுத்தது. திரும்பினார் கனபாடி.

அங்கு காரைக்கால் செங்காளியப்பன் கண்ணீர் வழிய நின்றார்!

“ஐயா! இந்தக் கிழவரை ஒண்ணும் செய்யாதீங்க….. என் மகன் எனக்குக் கிடைச்சிட்டதுக்கு உண்டான புண்ணியத்திலே இவருக்கும் இந்தப் பெண் பூவழகிக்கும் பங்கு ரொம்ப உண்டு. எல்லாம் நான் நடத்திய நாடகம்….. தெய்வம்…. என் தெய்வம் மன மிரங்கிட்டுது!” உணர்ச்சி வசப்பட்டு நின்றார் அவர்.

உமைபாலன் தன் தங்கையை வாரியெடுத்து முத்தமிட்டுக் கொண்டிருந்தான். பிறகு, குழந்தையைத் தன் தந்தையிடம் கொடுத்துவிட்டு, அவர் பாதங்களிலே விழுந்து விம்மினான். “நான் பாவி.. உங்க மனசைப் புண்படுத்திட்டேன்……! பொய்யும் சொல்லிப்பிட்டேன்…” என்று தலையில் அடித்துக் கொண்டான்.

பதறினார் செங்காளியப்பன். “நீ எங்களுக்குக் கிடைச்சதே பெரிய பாக்கியம் அப்பா! உனக்காக நாங்கள் பட்ட கஷ்டம் உனக்குத் தெரியாதப்பா…. நடந்ததையெல்லாம் மறந்திடு. இனி நான் உன் மனசு கோணாம நடப்பேன், தம்பி…” என்று பாசத்துடன் சொன்னாள் அவனது சின்னம்மா.

“அம்மா!” என்று விம்மினான் உமைபாலன். அவன் தன்னுடைய அன்புச் சிற்றன்னையின் பாசப்பிடிப்பில் கட்டுண்டு கிடந்தான்.

ஏழைச் சாம்பானிடம் மன்னிப்பு வேண்டினார் கனபாடி. “உம் பையனைப் புதுப் பையனாகத் திருத்திக் கொண்டு வந்து சேரும்!” என்றார் கண்டிப்புடன்!

மகனுடன் ஊருக்குப் புறப்படுவதற்கு உத்தரவு கோரினார் செங்காளியப்பன். ஆஹா, அவரது முகத்தில் தான் எத்துணைக் களிப்பு! எத்துணை நிறைவு!

உடனே, உமைபாலன் வேலை செய்த நாட்களைக் கணக் கிட்டு, அதற்குரிய சம்பளத்தை உறையிலிட்டு நீட்டினார் ஐயர்.

“பணம் இருக்கட்டும். நான் இந்தப் புதிய உலகத்திலேருந்து படிச்சுக்கிட வேண்டியது ரொம்ப இருக்கு. நான் இங்கேயேதான் இருப்பேன்!” என்றான் உமைபாலன். வெறுங்கையுடன் வீட்டைத் துறந்து புறப்பட்ட அவனுக்கு நடந்த சம்பவங்கள் மீண்டும் மனத்தில் தோன்றின.

காரைக்கால் அன்பர் மீண்டும் கலவரம் அடைந்தார். அவர் ஐயரைப் பரிதாபமாய்ப் பார்த்தார்.

“தம்பி! இத்தனை வயசிலே நான் இதுவரை அறிஞ்சிராத இரண்டு அதிசயங்களை இங்கே கண்டேன். பணக்காரப் பிள்ளை யான நீ அனாதை ஏழைப் பிள்ளையாய் நடிச்சே. ஆனா, அந்தப் பையன் ஜெயராஜோ ஏழையாய் இருந்து, மனசைப் பெருக்காமல் ஆசைகளை மட்டும் பெருக்கிக்கிட்டு, பணக்காரப் பிள்ளையாய் நடிச்சான் ! இரண்டுக்கும் எத்தனை எத்தனையோ வித்தியாசம் இல்லையா?…. தம்பி! நீ ஊருக்குப் போயி உங்க அப்பா அம்மா இஷ்டப்படி அங்கேயே தங்கி நல்லாப் படி. அப்புறம் இன்னும் தெளி வாயும் சுலபமாயும் இந்த லோகத்தைக் கத்துக்கலாமே! பின்னே நீ இஷ்டப்பட்டாலும் இங்கே வரலாம். இது உன் சொந்த ஓட்டல்.

கனபாடி ஐயர் சிரித்தபடி நிறுத்தினார். சிறுவன் உமை பாலனை ஆசீர்வாதம் செய்தார். புறப்பட வழியனுப்பினார். அவன் சம்பளம், அவன் சட்டைப்பையில் இருந்தது.

நகைகள் பளிச்சிட ஜம்மென்று புறப்பட்டான் உமைபாலன். பிச்சைக்காரத் தங்கை பூவழகியும் அவனுடன் புறப்பட்டாள்!

அந்த ஓட்டல் தொழிலாளத் தோழர்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடி வழியனுப்பினார்கள்.

“உமைபாலனுக்கு ஜே!” என்ற கோஷங்கள் வானைப் பிளந்தன.

முத்துப் பல்லக்கு மாதிரி ஆடி அசைந்து புறப்பட்டது அந்த நீலநிற கார்.

உமைபாலனின் அழகான விழிகளிலிருந்து கண்ணீரின் துளிகள் வழிந்து கொண்டே இருந்தன.

அவனது பிஞ்சுக் கரங்கள் குவித்தது குவித்தபடியே இருந்தன.

மீண்டும் “ஜே!” முழக்கங்கள் புறப்பட்டன!

– அந்த நாய்க்குட்டி எங்கே? (சிறுவர் குறுநாவல்கள்), முதற் பதிப்பு: 1996, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *