ஜெய் கார்கில்!

0
கதையாசிரியர்: , ,
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 24, 2012
பார்வையிட்டோர்: 12,352 
 

இரவு ஒண்ணரை மணிக்கு அப்புசாமியின் படுக்கை காலியாயிருந்தது. அவரது அறையிலிருந்த கொசுக்கள் பின்வருமாறு பேசிக் கொண்டன:

எருமைக் கொசு: எங்கே தொலைஞ்சான் ஆசாமி? நான் சரியாவே இன்னும் கடிக்கலை? செரியான சாவு கிராக்கி.

குஞ்சுக் கொசு: திட்டாதீங்க பெரீயப்பா. நாங்களெல்லாம் வாய்க்குள்ளே புகுந்து வெளையாடினாக்கூட ஒண்ணும் செய்யமாட்டார். பொளந்த வாய் பொளந்தபடி தூங்குவார்.

செடிக் கொசு: கொசு மருந்து, கொசு மேட் அது இதுன்னு வெச்சுகிட்டு அவரோட சம்சாரம் நம்மை விரட்டறா. ஆனால் இந்த ஆசாமியின் ரூமுலே அந்த உபத்திரவமெல்லாம் இல்லே. ஜாலி. நல்லாப் புடுங்கலாம்.

அரிப்புக் கொசு: நான் கடிச்சேன்னா, நல்லா வரக்கு வரக்குன்னு சொறிஞ்சிக்குவாரே கண்டி கைநீட்டி அடிக்க மாட்டாரு.

எருமைக் கொசு: அதெல்லாம் உத்தமன்தான். ஆனால் ராத்திரி ஒரு மணிக்கு நைஸா இப்படி நழுவிடறாரே கொஞ்ச நாளா.

செடிக் கொசு: எங்கே போறாரோ தெரியலே. நம்ம டூட்டி நேரத்துலே அவர் இப்படிப் போறது ரொம்பக் கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்.

குஞ்சுக் கொசு: பாவம் நல்ல மனுஷன் அண்ணே. அவரு எங்கே போனா என்ன? எல்லாப் பேட்டையிலும் நம்ம சாதி சனங்க இருக்காங்க. இங்கே நமக்கு ரத்தம் தராட்டி, இன்னொரு இடத்திலேயிருக்கிற நம்ம ஆளுங்களுக்குத் தரப் போறாரு. அவ்வளவுதானே.

அரிப்புக் கொசு: உஸ்ஸ்! அவரோட சம்சாரம் வர்றாங்க.காலு கையெல்லாம் ஆயின்ட்மென்ட் பூசிகிட்டு: சீக்கிரம் பறந்து போய் ஸீலிங்கைப் புடிச்சுக்குங்க டோவ்!

சீதாப்பாட்டி விளக்கைப் போட்டுத் தேடினாள். மொட்டைக் கடுதாசி பொய் சொல்லவில்லை.

கடந்த மூன்று நாளாகத் தினமும் ஒரு இன்லண்ட் லெட்டர் சீதாப்பாட்டிக்கு வந்து கொண்டிருந்தது.

முகவரியே எரிச்சல் தந்தது.

சீதேக் கெளவியம்மா அவுங்களுக்கு…

கடிதத்திலிருந்த செய்தியை அலட்சியம் செய்வதா ஆராய்ச்சி செய்வதா என்று அவளுக்குப் புரியவில்லை.

கடித வாசகம் வருமாறு:-

அம்மா தாயி,

உங்க புருஷன் நடத்தை சரியில்லே. பலான வூட்டுக்கு வந்து பலான பொம்பளையோட ராத்திரி ரெண்டு மணிக்கு ஜல்ஸா! தேவைதானா இத்தினி வயசுலே. இவுரு இன்னா அப்படியினாச்சும் ஜெமினி கணேசன், கிணேசனா…

இப்படிக்கி

—————-

“ஸில்லி!” என்று முதல்நாள் கடிதத்தை அலட்சியமாகக் கிழித்துப் போட்டாள்.

ஆனால் மறுதினமும் மொட்டை வளர்ந்தது. இப்போது கொஞ்சம் மிரட்டலும்.

இன்னா கெய்வியம்மா,

அலுத்துப் போச்சா புருசன் ஒனக்கு; மேயற மாட்டைக் கட்டி வைமே. இல்லாட்டி சொரக்கா சீவற மாதிரி சீவிடுவேன்.

இப்படிக்கி

————-

கடிதத்தைப் பாதி கிழித்த விரல்கள் நின்றன. இருக்கட்டும். போலீஸ் எவிடென்ஸ் கேட்டாங்கன்னா காட்டணுமில்லியா? மேஜை டிராயரில் போட்டு வைத்தாள்.

மூன்றாவது கடிதமும் வந்தது:

உன் களுத்துலே தாலி இருக்கணும்னா உன் புருசன் தலை, கண்ணகி காலனியாண்டை இனிமே தெரியக்கூடாது. தெரிஞ்சா ஒன் தாலி காலி! கட்டுக்கிளத்தியா கீறே! பாள் நெத்தியோட பாளாப் போகாதே. எச்சரிக்காய்! எச்சரிக்காய்! எச்சரிக்காய்!

இப்படிக்கி

————-

“மை குட்னஸ்” என்று கழுத்திலிருந்த தாலிச் சரட்டை ஒரு தரம் அவசரமாக எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டாள்.

கார்கிலில் எதிரி கால் வைப்பதும், அவள் கழுத்துச் சரட்டில் யாரோ கை வைப்பதும் அவளைப் பொறுத்தவரை ஒன்றே.

அந்த எதிரி யார்?

சீதாப்பாட்டி என்னதான் நாகரிகக் கிழவியானாலும் தாலிச் சரட்டுக்கு ஒரு சோதனை என்றால் எதிரியைக் கண்டுபிடித்து, வேரோடும், வேரடி மண்ணோடும் தொலைத்து விடுவாள்.

இப்போது இரண்டு விஷயங்களைஅவள் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.

இரவு ஒரு மணிக்கு மேல் கணவர் அப்புசாமி எழுந்து எங்கே போகிறார்?

“கண்ணகி காலனியாண்டை’ இவர் தலை தெரியக் காரணம், அதுவும் இரவு நேரத்தில் தெரியக் காரணம் என்ன? அதனால் யார், எப்படிப் பாதிக்கப்பட்டார்கள்? பொம்பளையோடு ஜல்ஸா… சே!

அர்த்த ராத்திரியில் அகதா கிறிஸ்டியாகி மண்டையைக் குடைந்து கொண்டாள் சீதாப்பாட்டி.

நாலாவது நாள் வாசலில் ஒரு பூசணிக்காய் உடைந்து கிடந்தது. ஐந்தாம் நாள் ஒரு கோழி பரிதாபமாகக் கழுத்தறுபட்டு இறந்திருந்தது.

போலீஸ் கமிஷனருக்குப் போன் போட்டு விடலாமா?

போலீஸ்! அவர்களுக்கும் அவர்களது மீசைகளுக்கும் வீரப்பன் மாதிரியான கொள்ளையனைப் பிடிப்பதுதான்அழகு. கொசு அடிக்க கடப்பாறையா? லெட் மி நாட் டிஸ்டர்ப் தெம். என் புருஷனுடைய பர்சனல் அ·பேர் இதிலே இன்வால்வ் ஆகியிருக்கிறது.

அப்புசாமி இரவு ஒண்ணரை மணிக்குத் தலையில் முண்டாசுடனும், கையில் ஒரு குறுந்தடியுடனும் விசுக் விசுக்கென நடந்து கொண்டிருந்தார்.

நடையில் ஒரு மிடுக்கு. தெம்பு. வாயில் சீட்டி சத்தம். ஏதாவது வயாகரா கியாகரா மாத்திரைசாப்பிட்டிருப்பாரா என்ன?

தெரு நாய்கள் அவரது வீர நடையில்எழுந்த காற்று பட்டு ஒதுங்கி விலகின.

‘லெப்ட், ரைட், லெப்ட், ரைட்’ என்று அவர் வாயிலிருந்து சத்தம்.

‘அபெளட் டர்ன்’ என்று திரும்பியிருந்தாரானால் சீதாப்பாட்டியில் நீலநிற ஜென் அவரை ஓசைப்படாமல் தொடர்வதைப் பார்த்திருப்பார்.

டொக்! டொக்! டொக்!

அப்புசாமி மூன்று முறை அந்த வீட்டின் கதவைத் தட்டினார்.

தெருவும் அந்தக் கதவிலக்கமும் சீதாப்பாட்டியின் கம்ப்யூட்டர் மூளையில் நொடியில் பதிவாகின. மெளஸை நகர்த்தினாள். அப்புசாமி ·பைலுக்குக் குறி வைத்தாள். டபுள் க்ளிக்!

மடமடவென்ற தகவல்கள் வரிசையாக.

‘அப்புசாமியின் ·ப்ரண்ட்ஸ்!’ என்ற தலைப்பை க்ளிக் செய்தாள்.

ரசகுண்டு

பீமாராவ்

அரைபிளேடு அருணாசலம்…

ரசகுண்டுவைக் கிளிக்கினாள். அவன் வீட்டு முகவரி என்ன? கரெக்ட், அவனுடைய வீடேதான்.

ரசகுண்டுவின் வீட்டுக்குத் தினமும் ராத்திரி இரண்டு மணிக்கு அவர் செல்ல வேண்டிய அவசியம் என்ன? ஸம்திங் ·பிஷ்ஷி அல்ல. ஹோல் திங் ·பிஷ்ஷி.

அவர் அந்த மாதிரி வருவது எந்த முரடனுக்கோ பிடிக்கவில்லை. மொட்டைக் கடுதாசி எழுதி மிரட்டுகிறான்.

யார்அந்த முரடன்?

சட்டென்று ‘முரடன்’ என்று டிஸைட் பண்ணிடாதே… என்றது சீதாப்பாட்டி துப்பறியும் இலாகா.

ஸஸ்பெக்ட் எவரிபடி! ஈவன் உன்னைக்கூடச் சந்தேகி.

யார் கண்டது? தூக்கத்தில் நடக்கிற வியாதியுடைய துப்பறியும் ஆபீசர், தானே தூக்கத்தில் நடந்து சென்று கொலையைச் செய்து விட்டு, பிறகு பகலில் தானே ¦

சீதே, அந்த மொட்டைக் கடிதத்தை எழுதியது முரடனாயிருக்கலாம், கோழையாயிருக்கலாம், அப்புசாமியாயிருக்கலாம், நீயாக இருக்கலாம், ரசகுண்டாக இருக்கலாம். சீதே! கண்டுபிடி சீதே! கண்டுபிடி! ஹியர் இஸ் எ சாலஞ்ச் ·பர் யூ.

நேரே ரசகுண்டு, வீட்டுக்குப் போய்… அந்தப் பயலை விசாரித்தால் தீர்ந்தது விஷயம், ஒய், தலையைச் சுற்றி மூக்கைத் தொடணும்? ஐ ஹாவ் பெட்டர் திங்ஸ் டு திங்க் அண்ட் அடெண்ட்:

‘கார்கில் ராணுவ வீரர்களுக்கான பெனி·பிட் பண்ட் நிகழ்ச்சிக்கு பா.மு.கழகத்தினர் தீவிரமாக வேலை செய்துகொண்டிருக்கும்போது, அதனுடைய பிரசிடெண்ட், தன் புருஷன் ராத்திரி எங்கே எழுந்து போறான், என்ன செய்யறான் என்பதையா துப்பறிந்து கொண்டிருப்பது,

தன் டிக்னிடிக்கு இது ரொம்பக் கேவலம் என்று தோன்றியது. கிரேட் மென் நெவர் திங்க் அ·ப் டூயிங் லோயர் திங்க்ஸ்.

ஆனாலும் வாசலில் கழுத்து அறுபட்டு ரத்ததில் கிடந்த கோழி, உடைந்த பூசணிக்காயிலிருந்து கொட்டிய சிவப்பு சாயம்… அவளை மறு சிந்தனை சிந்திக்க வைத்தது.

அரசியல் கட்சி மாதிரி, ‘நான் செயற்குழுவைக் கூட்டி முடிவு சொல்கிறேன்’ என்று பிரசினையிலிருந்து தப்பிக்க முடியாது. இது அவளுடைய சொந்த ப்ராப்ளம். ஹண்ட்ரட் பர்சண்ட் அவளுடைய சொந்தப் பிரசினை. அவள்தான் முடிவெடுக்க வேண்டும்.

டமால் என்ற பயங்கர சத்தம். அவள் காரின் பின் கண்ணாடியைத் தாக்கியது ஒரு பயங்கரக் கல்.

நல்ல வேளையாக காரின் முன்புற ஸீட்டின் முதுகுப் பக்கம் உயரமாக இருந்ததால் அவள் தலை பிழைத்தது.

கல்லில் முரட்டுத் தனமான கயிற்றால் ஒரு காகிதம் கட்டப்பட்டிருந்தது.

சீதாப்பாட்டி நிதானமாக அந்த மிரட்டல் கடிதத்தைப் படித்தாள்:

எச்சரிக்காய்! எச்சரிக்காய் ! எச்சரிக்காய்!

கிளவியம்மா! மூணு வாட்டி எச்சரிக்காய் வுட்டாச்சு! நீ உன் புருசனைத் திருத்தலை.

அந்தப் பொடலங்காயை இனி ஒரே சீவுதான். இதான் கடோசி எச்சரிக்காய்!

இப்படிக்கி

————-

பா.மு.கழகத்தின் கிழவிகள் ஒவ்வொருத்தியும் படு சுறுசுறுப்பாக கார்கில் ராணுவ நிதி திரட்டிக் கொண்டிருந்தனர். ஒவ்வொருத்தருக்கும் ரூபாய் இருபத்தையாயிரம் டார்கெட் நிர்ணயித்திருந்தாள் பிரசிடெண்ட்ஜி சீதாப்பாட்டி.

காரியதரிசி அகல்யா சந்தானம் போன் செய்தாள்: “பிரெசிடெண்ட்ஜி! உங்கள் கலெக்ஷன் புக் இங்கே ஆபீசிலேயே இருக்கிறது. நீங்கள் இன்னும் தொடங்கவே இல்லையா? நீங்களே சொந்தமாகக் கொடுத்துடலாம்னு இருக்கீங்களா?”

“நோ… நோ…” என்றாள் அவசரமாக சீதாப்பாட்டி: “நம்ம கண்ட்ரிக்காக உயிர் நீத்தவர்களுக்கும், பாதுகாக்கிறவங்களுக்கும் நிதி திரட்டறது, வெறும் நிதி திரட்டல் இல்லே. அது ஒரு அவேர்னஸ் ஏற்படுத்துற நிகழ்ச்சி. கலெக்ஷனில் அமெளண்ட் முக்கியமில்லை. புவர் ·பீடிங்குக்குச் செய்கிற கலெக்ஷன் மாதிரி இல்லே இது. வாலண்டரி ப்ளட் டொனேஷன் மாதிரி ஸம்திங் நோபிளர்… கவர்மெண்ட ஆ·ப் இந்தியாகிட்டே ·பண்ட்ஸ் இல்லாமல் நம்மளை நிதி திரட்டச் சொல்லலை… ஐ அண்டர்ஸ்டாண்ட். நாம சிந்தவேண்டிய ரத்தத்தை நமக்காக ஒருத்தர் சிந்திக்கொண்டு நம்மை ப்ரொடெக்ட் பண்றார். கண்ட்ரியை ப்ரொடெக்ட் பண்றார்.”

“ஸாரி பிரசிடெண்ட்ஜி, உங்களை ரொம்ப உணர்ச்சிவசப்பட வெச்சுட்டேன்…”

சீதாப்பாட்டியின் மனச்சாட்சி உண்மையில் குறுகுறுத்தது.

கம் வாட்மே. கொழுப்புப் பிடித்து இரவு ஒரு மணிக்கு எழுந்து சுற்றினால் லெட் ஹிம் ச·பர் என்று மறுநாள் வெகு சீக்கிரமாகவே கழகத்துக்குக் கிளம்ப நினைத்து கதவைத் திறந்தாள். திறந்தால்…

வாசலில், துண்டித்த ஒரு ஆட்டுத் தலை கடாசப்பட்டிருந்து. ஆட்டின் நிலைத்த கண்களும் சீதாப்பாட்டியின் கண்களும் கண நேரமே சந்தித்தன. அதற்குமேல் அதைச் சந்திக்க அவளுக்குத் தைரியமில்லை. டமாலென்று கதவைச் சாத்திவிட்டாள். தைரியத்தை வரவழைத்துக் கொள்ள நீண்ட நேரமாயிற்று.

உண்டியல் தயார். சீதாப்பாட்டி காரை ·புல் டாங்க் செய்துகொண்டு கார்கில் கலெக்ஷனுக்குக் கிளம்பினாள்.

முதலில் தான் ஏதாவது போட வேண்டும் என்று இரண்டு ஐநூறு ரூபாய்நோட்டை மடித்து உண்டியலில் செலுத்திக் கொண்டிருந்தாள்.

அப்புசாமியின் கனைப்புச் சத்தம் அழைத்தது.

“இன்னாம்மே சீதே! கெழவனைக் கெவுனிச்சு ரொம்ப நாளாகுது!”

சீதாப்பாட்டி அவரைத் தீய்த்து விடுவதுபோலப் பார்த்தாலும், அவரது கால், கை, தலை எல்லாம் ‘இன்டாக்ட்’ ஆக இருக்கிறதா என்று ஒரு அவசர சர்வே எடுத்துக் கொண்டாள். அது அது அதனது இடத்தில் இருந்தது.

“உங்களோடு பேச எனக்கு டைம் இல்லை. சாயந்தரம் வரும்போது இன்ஷா அல்லா… இ·ப் காட் வில்லிங்… பிராப்தம்னு ஒண்ணு இருந்தால்… கடவுள் விருப்பம் அதுவானால்… நாம் சந்தித்துப் பேசலாம்.”

“ஏய்… ஏய்… ஏய்…! இன்னாமே அடுக்கிக்கினே போறே… ஒன்னியெச் சந்திக்கிறது அம்மாங் கஷ்டமா?” என்றார் அப்புசாமி.

சீதாப்பாட்டி தன் ஹாண்ட்பேக்கைத் திறந்தாள். மொட்டைக் கடிதங்களைத் தூக்கி அவர் பக்கம் விசிறினாள்: “கோ த்ரூ இட் லெஷர்லி… வாட் இஸ் ஆல் திஸ்… சீ! வெட்கமாயிருக்கு! வேதனையாயிருக்கு. அவனவன் அங்கே எல்லையிலே உசிரை விட்டுண்டு ·பைட் பண்ணிட்டிருக்கான்… ஆர் யு நாட் அஷேம்ட்? உங்களுடைய கிழட்டு ரோமியோ விளையாட்டுக்கு நல்ல டைம் ஸ்லாட் பார்த்தீங்க… சீ!”

அப்புசாமி கடிதங்களைச் சிறிது நேரம் ஆழ்ந்துபார்த்தார்: “ஹ ஹ ஹ” என்று பெரிதாகச் சிரித்தார்.

சீதாப்பாட்டி கடுகடுத்தாள். “ஏன் கிரேக் தனமாகச் சிரிக்கிறீங்க… யு ஆர் அண்டர் ·பயர்… தெரியுமா? கண்ணகி காலனியிலே உங்களுக்கு ராத்திரியிலே என்ன அ·பேர்? முதல்நாள் கோழி, ரெண்டாம் நாள் ஆடு, மூணாம் நாள் நீங்க? நாட்டுக்காக உயிரை விடலாம். இது மாதிரி கேவலமான விஷயத்துக்கு உங்கள் தலையை ஒருத்தன் வாங்கறதுன்னா… அது ஷேம்…ஷேம்… அட்டர் ஷேம்…”

குரல் கரகரக்கத் தாலியை அவசரமாக எடுத்துக் கண்ணில் ஒத்திக்கொண்டாள்.

அப்புசாமி மொட்டைக் கடிதங்களை மீண்டும் நிதானமாகப் படித்தார். கவனித்துப் படித்தார்.

“சீதே! சீதே! எழுதியது யார்னு தெரிஞ்சுபோச்! நீ தாராளமாய் போலீசுக்கே சொல்லலாம்! ஹய்யா! அய்யா கண்டுபுடிச்சிட்டார்! புடிச்சே புடிச்சிட்டார்” குதூகலித்தார்.

“யார்? நிச்சயம் உங்களுடையது ஏதாவது ராங் ஐடென்டிடியாகத்தான் இருக்கும்.”

“காய்க்கடைக்கார காத்தமுத்துதான் கைது செய்யப்பட வேண்டிய கடன்காரன்!”

“காய்க் கடைக்கார காத்தமுத்துவா? தட் இன்னஸண்ட் வெஜிடயிள் வெண்டரா? பரம சாதுவாச்சே” என்றாள் சீதாப்பாட்டி.

“ஹ ஹ ஹ! பரம சாதுவானதாலேதான் இப்படி மொட்டைக் கடுதாசி எழுதியிருக்கான். பிரியாணிக் கோழியை அறுத்துப் போட்டிருக்கான். ஆட்டுத் தலையை வீசியிருக்கான். தைரியமிருந்தால் ஐயா மேலே கையை வெச்சிருப்பானே? தினம் தினம் ராத்திரி ரெண்டு மணிக்குத் தனியாத்தானே ரோடிலே ஐயா வீரநடை போட்டுகிட்டு நடந்தாரு…”
சீதாப்பாட்டி எரிச்சலுடன், “ஒய் த ஹெல் நீங்க ரசகுண்டு வீட்டுக்கு அந்த நேரத்துக்கு போனீங்க? அது ஒரு கேவலமான விஷயமாக உங்களுக்குத் தெரியலே? அந்த கீதாக்கிழவி காம்ப் அடிச்சிருக்காள்னு நான் நினைக்கிறேன்.

“மொதல்லே உன் திருவாயைப் போய் பினாயிலோ, புளியங் கொட்டைப் பவுடரோ போட்டுக் கழுவுமே! என்னோட புனிதப் பணியைக் களங்கப்படுத்தறியேடி கடன்காரி! இங்கே பாத்தியா?”

ஒரு டப்பாவைக் கொண்டு வந்து கவிழ்த்தார். ஏராளமான சில்லறையும் ரூபாய் நோட்டுகளும் கலகலவெனக் கீழே கொட்டின. “நான் சேர்த்த கார்கில் நிதிடி! தெரிஞ்சுக்கோ.”

“ஐ காண்ட் அண்டர்ஸ்டாண்ட்” என்றாள்.

“ஸ்டாண்டிண்டு இருக்காதே. ஸிட்டிக்கோ. விவரமாச் சொல்றேன்” என்ற அப்புசாமி தன் பிரதாபத்தை நீளமாகச் சொன்னதன் சுருக்கமாவது:

அப்புசாமி தானும் கார்கில் ராணுவ நிதிக்காக ஏதாவது பெரிதாகச் செய்ய வேண்டுமென்று துடித்தார். நண்பன் ரசகுண்டுவிடம் கலந்தாலோசித்தார். “தாத்தா! கோயம்பேட்டுக்குப் போறோம். ஹோல் ஸேல்லே காய் வாங்கறோம். சுத்தம் பண்ணி, எடைபோட்டு பிளாஸ்டிக் பைகளிலே அழகாகப் போடறோம். ஒவ்வொரு காலனியா, அபார்ட்மென்ட்டாகப் போய், காலையிலே ஏழாவது மணிக்கு டாண்ணு டோர் டெலிவரி… வர்ற லாபம் பூரா கார்கில் நிதிக்கு! ஆனால் தினமும் ஒரு மணிக்கெல்லாம் நீங்க எழுந்திருச்சி என் வீட்டுக்கு வந்துடணும். காயையெல்லாம் கழுவிக் கிழுவி, ஸார்ட் அவுட் பண்ணி, எடைபோட்டு, பாக் பண்றதுக்கும் டெலிவரி பண்றதுக்கும் நீங்க உதவணும்.”

“அடேய்! இந்த உடம்பிலே ஓடற ரத்தம் சதா சீதாக் கெழவியோடு சண்டை போறடதுக்கு ஒதவிட்டிருந்தது. இப்போ ஒரு நல்ல காரியத்துக்குப் பயன்படட்டுமேடா! ஜெய் ஹிந்த்!” என்றார் உணர்ச்சி வசப்பட்டு.

ஏற்கனவே கண்ணகி காலனியில் (அ)நியாயவிலைக் கறிகாய்க்கடை போட்டிருந்த காத்தமுத்துவுக்கு வியாபாரம் படுத்துவிட்டது. மொட்டை மிரட்டல் கடிதங்கள் மூலம் அப்புசாமிக்கு கணைபோட முயற்சி செய்திருக்கிறான்.

“மை காட்! உங்களுக்கும் இத்தனை தேசப்பற்றா? நான் உங்களை ரொம்ப ஸிம்பிள் டன் உதவாக்கரைன்னு நெனச்சேன். இப்போ ஐ ·பீல் வெரி ப்ரெளட் ஆ·ப் யூ… பைத வே… வந்து… கறிகாய்க்காரன்தான் மொட்டைக்கடுதாசி எழுதினான்என்கிறதை எப்படிக் கண்டுபிடிச்சீங்க மிஸ்டர் ஹோம்ஸ்?”

“கடுதாசிகளைப் படிச்சிப் பார் நல்லா. எச்சரிக்கை என்று வருகிற இடமெல்லாம் எச்சரிக்காய், எச்சரிக்காய்னு எழுதியிருக்கான். சொரக்காய் மாதிரி புடலங்காய் மாதிரி சீவிடுவானாம். நேரிலே பார்க்கறப்போ கெஞ்சற குரலில், ‘என் யாபாரத்துல மண்ணடிக்கிறியே சாமி’ என்பான். மொட்டைக் கடுதாசியிலே சீவறான்!” என்ற அப்புசாமி, “உண்டியலை இப்படிக் கொண்டாமே அய்யாகிட்டே,” என்று கட்டளையிட்டார்.

சீதாப்பாட்டி கணவனைப் பற்றிய பெருமையுடன் உண்டியலை அப்புசாமியின் திருமுன்னர் வைத்தாள்.

அப்புசாமி தான் சேகரித்த அவ்வளவு ரூபாயையும் நோட்டையும், “ஜெய் ஜவான்! ஜெய் கார்கில்! ஜெய் பாரத்” என்று சொல்லியவாறு உண்டியலில் போட்டு நிரப்பினார்.

“ஜெய் அப்புசாமி” என்று சீதாப்பாட்டி கணவனின் கையைக் குலுக்கினாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *