காலட்சேப பவன்

0
கதையாசிரியர்: , ,
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 24, 2012
பார்வையிட்டோர்: 12,347 
 

ஆவியில் மூன்று வகை – கெட்ட  ஆவி, நல்ல ஆவி, கொட்டாவி.

மூன்றாவது வகை ஆவி அப்புசாமியிடமிருந்து அடுத்தடுத்துப் பிரிந்துகொண்டிருந்தது. வளசரவாக்கத்தில் உற்சாகமான சில இளைஞர்களும், அவர்களைவிட அதிக உற்சாகமுள்ள சில வயசானவர்களும் சேர்ந்து ‘காலட்சேப பவன்’ என்னும் நவீன சபா ஒன்றை உருவாக்கியிருந்தார்கள்.

அதனுடைய முதலாவது ஆண்டு விழா பற்றிய விவரம் தினசரிப் பத்திரிகை ஒன்றில் ஓசி காலத்தில் கால் அங்குல இடத்தில் இரண்டு வரி பிரசுரமாகியிருந்தது.

சபாக்காரர்களுக்கு எதிலும் புதிய கண்ணோட்டம். ஆகவே விளம்பரத்தைக் கவர்ச்சிகரமாகச் செய்திருந்தார்கள்.

அசல் நெய்ப் போளி, சுண்டல், வெண் பொங்கல் தினசரி இலவசமாகக் கிடைக்குமிடம்: காலட்சேப பவன், வாஞ்சிநாதன் தெரு, வளசரவாக்கம்.

அப்புசாமியின் கண்களில் அந்த விளம்பரம் பட்டது. பவன் என்று போட்டிருந்ததால் ஏதாவது ஓட்டலாகத்தானிருக்கும் என்று அவருக்குத் தோன்றிது.

போளி அவருக்குப் பிடிக்கும். அதிலும் நெய்ப் போளி ரொம்பப் பிடிக்கும். அதிலும் அசல் நெய்ப் போளி, அதுவும் இலவசமாக, அதுவும் தினசரி, அதுவும் சுண்டல், வெண் பொங்கல் ஆகிய இணைப்புகளுடன் – இத்தனை அதுவுகளுடன் கூடியிருந்ததால் வளசரவாக்கத்துக்கு ஒரு நடை போய் வந்து விடுவது என்று அப்புசாமி தீர்மானித்தபொழுது, சீதாப்பாட்டி, “ப்ளீஸ் உங்களைத்தானே, கொஞ்சம் கேட்டைத் திறந்து விடறீங்களா? ஐயம் ஆல்ரடி லேட்!” என்று குரல் கொடுத்தாள்.

காலையில் கேட் திறப்பது என்பது மிகப்பெரிய வேலை. ‘தன் வினை தன்னைச் சுடும்’ என்பதுபோல ராத்திரி நீளமான இரும்புச் சங்கிலியை கேட்டில் சுற்றுச் சுற்றென்று சுற்றி, இரும்பு வளையத்தை மாட்டி ஒரு பெரிய பூட்டு, அதற்குக் கீழே சிறிய பூட்டு, அப்புறம் கேட்டில் ஏற்கனவே இருந்த வளையத்துக்கு ஒரு பூட்டு! சில பேர் தங்கள் நெற்றியை மேலே விபூதி, சந்தனம், அதன் கீழே குங்குமம், அதற்கும் கீழே ஒரு மைப்பொட்டு என்று அலங்கரித்துக் கொள்வதுபோல.

இப்படியாக பரம பத்திரமாகப் பூட்டுவது அப்புசாமிதான். கேட் அலவன்ஸ் என்று சீதாப்பாட்டி கொஞ்ச நாளாக அவருக்கு மாதா மாதம் இருநூறு ரூபாய் அதிகப்படி கொடுத்து வந்தாள்.

ஆகவே காரைப் பாதுகாக்க என்று இல்லாவிட்டாலும், தனது கேட் அலவன்ஸைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவாவது கேட்டை ரொம்ப வலுவாக இரவில் பூட்டி வைப்பார். 

“பீரமாதமாகப் பூட்டி வைக்கிறீர்களே! உங்களுக்குச் சீக்கிரமே ஒரு இன்ஸென்ட்டிவ் தரப்போகிறேன்” என்று சீதாப்பாட்டியும் கணவனின் கர்சேவாவைப் பாராட்டவும் பாராட்டினாள்.

நாய் சாதாரணமாகவே வாலை ஆட்டும். அதற்கு டீக்கடையிலிருந்து இரண்டு பொறை வாங்கி வந்து போட்டுத்  தடவியும் கொடுத்தால், வாலைப் பிரமாதமாக ஆட்டுமல்லவா?

அப்புசாமியும் அந்த மாதிரி ஓவர் குஷியாகி, ஓவராக அன்றைய தினம் பூட்டிவிட்டார். இருவேறு சங்கிலிகள், மூவேறு பூட்டுக்கள், நால்வேறு சிக்கல்கள்.

“சீக்கிரம்! க்விக்! டிரா·பிக் ஜாமில் நான் பாட்டி மன்றம் போய்ச் சேரணும்.” சீதாப்பாட்டி துடித்தாள்.

“அவசரப்படாதமே…” என்றார் அப்புசாமி. “அவுக்கத்தாவுல? நல்லாப் போய் பிகுந்துருச்சி.”

“சரி சரி. ஒழுங்கா ஒரு  பூட்டைத் திறக்கத் தெரிகிறதா? குட் ·பார் நத்திங். வாய்தான்.”

“ஒரு பூட்டு இல்லே சீதே! மூணு பூட்டு!”

“சரி சரி. பேசாமல் திறங்க.” மனைவியின் பதட்டம் அவருக்கு உற்சாக மூட்டியது.

“திறந்துக்கினே பேசிக்காலம்… பேசிக்கினே திறந்துக்கலாம். காத்தடிக்குது, காத்தடிக்குது, காசிமேட்டுக் காத்தடிக்குது. திறந்துக்கினே பேசிக்கலாம், பேசிக்கினே திறந்துக்கலாம்” என்று குஷியாகப் பாடியவாறே திறக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

சீதாப்பாட்டி பொறுமையின்னிற ஹாரனை அடித்தாள் – “லேட்! லேட்! என் நேரமெல்லாம் இங்கே வேஸ்ட் ஆகிறது. எயிட் ·பைவுக்கு நான் அங்கே இருக்கணும். டைம் இஸ் ப்பிரஷியஸ். பங்க்சுவாலிடி ஒரு பர்ஸனாலிடி. சரி சரி, நீங்கமெதுவாகத் திறந்து கொள்ளுங்கள். நான் ஒரு ஆட்டோ பிடிச்சிட்டுப் போய்ச் சேருகிறேன். ஆட்டோ ·பேரை ஒங்க கேட் அலவன்சிலே டெபிட் பண்ணிக்கிறேன்!” சீதாப்பாட்டி கைப்பையும் முக்கிய ·பைல்கள் சிலவற்றையும் எடுத்துக்கொண்டு, சின்ன கேட் வழியே வெளியேறி, சிறிது நடந்து தெருமுனை ஆட்டோ ஸ்டாண்டில் ஒரு ஆட்டோ பிடித்துக் கிளம்பியே விட்டாள்.

அப்புசாமி பல்லைக் கடித்துக் கொண்டார். ‘ஆ ஊன்னா அலவன்ஸ் கட்! எலெக்ட்ரிஸிடிகட்டுகளைச் சேர்த்துக் கொள்ளலாம் போலிருக்குதே!’ என்று பொறுமிக்கொண்டிருந்த சமயம், மெல்லிசாக, பலவீனமான டெலிபோன் மணி உள்ளிருந்து அழைத்தது.

ராத்திரியில் டெலிபோனின் வால்யூமைச் சிறியதாக்கிவிட்டுப் படுப்பாள் பாட்டி.

அகாலத்தில் யாராவது டெலிபோன் அடித்தாலும், வயிற்றைக் கலக்குவதுபோல் பயங்கரமாக சத்தம் எழும்பாதிருக்க வேண்டுமல்லவா? அந்த மாதிரி குறைந்த வால்யூமை, காலையில் பழையபடி பெரிசாகத் திருகி வைக்க வேண்டிய வேலையைக் கணவருக்குக் கொடுத்திருந்தாள். (அதற்கு டெலிபோன் மணி அலவன்ஸ் என்று வாரத்துக்கு இருபது ரூபாய்.)

அப்புசாமியிடம் ஒரு பத்திரிகை நிருபர்:  “நீங்கள் இப்படிக் கண்ட விஷயத்துக்கெல்லாம் மனைவியிடம் அலவன்ஸ் வாங்குகிறீர்களே, கூச்சமாயில்லையா?”

அப்புசாமி: “கூச்சப்பட என்ன இருக்கிறது. ஒட்டு மொத்தமாக மாசம் ஆயிரம் கொடுத்துடு என்றுதான் போராடிக் கொண்டிருக்கிறேன். அந்தப் பீடை குடுத்தால்தானே?”

நிருபர்: “உங்க பேரே அலவன்ஸ் சாமியாகிவிடும் போலிருக்கு?”

அப்பு: “அவரைக்காய் சாமின்னு வேணுமானாலும் கூப்பிட்டுக்கட்டும். அய்யாவுக்கு வேணுங்கறது டப்பு நைனா… டப்பு… (நீ கூட எனக்கு டப்பு வெட்டிட்டு டப்புசாமின்னு கூப்பிட்டுக்கோ… ஹஹஹ! யார் வேண்டாம்னுது?)

அப்புசாமி விரைந்துபோய் டெலிபோனை எடுத்தார்.

மறுமுனையில் ரசகுண்டு, “தாத்தா! எங்கே தாத்தா தாரவாந்து பூட்டிங்க! எவ்வளவு நேரமா மணி அடிக்குது… இன்னிக்கு பேப்பர் பார்த்தீங்களா?”

“அசல் நெய்ப் போளி ‘காலட்சேப பவன்’ தானே? பார்த்தாச்சு! வளசரவாக்கம்! சரியா?” என்றார் அப்புசாமி உற்சாகமாக. “தாத்தோவ்! நீங்க சாதாரண தாத்தா இல்லே, சூப்பர் தாத்தா! எப்படி தாத்தா இந்த விளம்பரத்தைப் பார்த்தீங்க? உங்க கண்ணில எப்படிப் பட்டுது?”

“அடே ரசம்! யார் யாருக்கு என்ன விஷயம் படணுமோ, அது அது  டகால்னு படும். அதுதான் அசல் நெய்ப் போளிங்கறதையும், தினசரி இலவசம்கறதையும் கொட்டை எழுத்துலே போட்டிருந்தானே.”

“போய்ப் பார்த்துடலாமா தாத்தா.”

“கட்டாயம் போறோம். பீமாராவையும் கூட்டிகிட்டு நீ உடனே வந்துடு. இங்கே ஒரு மெகா ஐடியா இப்போ தோணிக்கிட்டிருக்கு.”

“மெகா ஐடியாவா?”

“கிழவி இன்னிக்குக் காரை வுட்டுட்டுப் போயிருக்கா… நீ கொஞ்சம் கொஞ்சம் ஓட்டுவயில்லே…?”

“தாத்தா! நான் நல்லாவே ஓட்டுவேன் தாத்தா… லைஸ்ஸன்ஸ் எல்லாம் இருக்கு. நம்ம கேடரிங் வேன் இருந்தப்போ நானேதானே ஓட்டிகிட்டிருப்பேன்… அவ்வளவையும் வுட்டேன் பாருங்க ரேஸ்லே… நான் ஒரு முட்டாள் தாத்தா… துரதிருஷ்டக் கட்டை…”

“சரிடா… சரிடா… இழந்த அதிர்ஷ்டத்தை நினைச்சுப் புலம்பாதே. இப்போ அடிச்சுகினுக்கிற அதிர்ஷ்டத்தைப் பாரு! அசல் நெய்ப்போளி, சுண்டல், வெண்பொங்கல் தினசரி இலவசம்… காலட்சேப் பவன்…” அப்புசாமி உருகினார். “கிழவி வர்ரதுக்குள்ளே நாம காரியத்தை முடிச்சிக்கினு டகார்னு திரும்பிடணும்டா.”

ரசகுண்டு ஒரு ஆட்டோ பிடித்து திருவல்லிக்கேணிக்குப் பறந்து பீமாராவைக் கொத்திக்கொண்டு முக்கால் மணி நேரத்தில் ஆஜரானான்.

பீமாராவ் போளிப் பிரியன் என்றாலும் ஒரு பொருளாதாரக் கேள்வியைக் கிளப்பினான்: “ஏனு தாத்தா, வளசரவாக்க ஹோயி வாபஸாக பேகுன்னா, பெட்ரோல் நிறையசெலவாகுமே. வண்டியில் பெட்ரோல் இருக்குதா?”

“நேத்துத்தாண்டா ·புல்டேங்க் ரொப்பியிருக்கா. நீ கவலையே படாதே.”

“வண்டியைப் பாட்டி இல்லாதபோது எடுத்துட்டுப் போறமே, தப்பில்லையா? வழியில் பாட்டி பார்த்துட்டா?”

“அவ ஏண்டா பார்க்கறா? அவள் என்ன தெய்வமா? சாமியா? டெலிவிஷன் நெட்வொர்க்கா? கல்யாண வீட்டிலே தாலி கட்டற சீன் கம்பத்துக்குக் கம்பம் தொங்கற டி.வி. பெட்டிகளிலே தெரியுமே, அந்த மாதிரி நம்மளை அவள் எங்கிருந்தாலும் பார்த்துகிட்டு இருப்பாளா என்ன? சரியான தொடை நடுங்கியா இருக்கியே. யாம் பெற்ற இன்பம் பெறுக இந்த பீமாவும்னு கூட்டிட்டு வரச் சொன்னால் அபசகுனமாகவே பேசிகிட்டிருக்கியே? உனக்கு போளிவேணுமா வேணாமா?”

“பேக்கு தாத்தா பேக்கு! ஹத்து போளி, டப்பா நெய் பேக்கு! நெய்யில்லதரே போளி ஷோக்காயிருவதில்லா.”

“அப்போ வாயை மூடிட்டு எங்களோட வா. வழியிலே வண்டி நின்னுதானா, நான் ஒருத்தனே தள்ள முடியாதுன்னுதான் உன்னையும் கூட்டிவரச் சொன்னேன். புரியுதா.”

ரசகுண்டு தாத்தாவைப் பாராட்டினான். “தீர்க்க தரிசனம் தாத்தா உங்களுக்கு” – என்றவாறு காரை ஸ்டார்ட் செய்தான். சத்தமே கிளம்பவில்லை.

பீமாராவ் அக்கறை கலந்த கவலையோடு “காரினல்லி ஏனு தொந்தரே?” என்றான்.

“அதுதாண்டா தெரியலே” என்றான் ரசம்.

“ஏண்டா, காரையெல்லாம் ஓட்டத் தெரியும்னே… முழிக்கிறே?” என்றார் அப்புசாமி. “சீக்கிரம் போனாத்தாண்டா பிரசாதம் கிடைக்கும்.”

பீமாராவ் தனக்கும் கொஞ்சம் மெக்கானிஸம் தெரியும் என்று காட்டிக்கொள்ள ஸ்டார்ட்டரை அழுத்தினான்.

“ஸ்டார்ட்டரை ஒத்திதரு சப்தவே இல்லுவே” என்றான்.

“நீயும் சத்தம் போடாதிருடா தடிப் பயலே!” என்ற ரசம் இரண்டு மூன்று முயற்சியில் தானாக ஸ்டார்ட் செய்து விட்டான்.

“ஜெய் போளி! ஜெய் பொங்கல்! ஜெய் சுண்டல்!” என்று அப்புசாமி உற்சாக மிகுதியோடு கூவினார்.

கோடம்பாக்கம் சாலையின் சிரஞ்சீவித்தனமான டிரா·பிக் நெரிசலை ஒரு வழியாகக் கடந்து கார் வளசரவாக்கத்தில் கல்லும், செங்கல்லும், மண்ணும், புழுதியுமாய் இருந்த தெருவிலிருந்த காலட்சேப பவனை அடைந்தது. சிறு மண்டபம் போலிருந்தது மேற்படி பவன்.

போளி, சுண்டல், பொங்கல் போன்றவற்றின் வாசனை துளியும் காற்றில் கலந்திருக்கவில்லை.

ஆட்களும் ஏழெட்டுப் பேர்தான் சிந்தியிருந்தார்கள்.

“ஏன் தாத்தா பயப்படணும்… இறங்கி உள்ளே போவோம்…” என்று ரசகுண்டு தலைமை தாங்க மண்டபத்தில் நுழைந்தனர். மேடையில் ஒருத்தர் காலட்சேபம் செய்து கொண்டிருந்தார்.

வரவேற்பாளர் போன்றிருந்த தாடிக்காரர், ‘வாங்கோ வாங்கோ’ என்று மூவரையும் வரவேற்றுக்கொண்டு போய் பரந்த ஜமுக்காளத்தில் உட்கார வைத்தார். மேடையருகே கண்ணாடிக் கூண்டில் போளிகள், வெண் பொங்கல், சுண்டல், நெய்க் கிண்ணம் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன.

மேடையில் இருந்தவர் செக்கச் சிவந்த நிறமும் தளதள மேனியும் கைவிரல்களில் பலவகை மோதிரங்களும், கன்னாபின்னாவென்று கழுத்தில் தங்க செயின்களும், உத்திராட்சங்களும், கையில் கணுவுக்குக் கணு ஏதாவது ஒரு வகை ஆபரணமும் அணிந்திருந்தார். எது முக்கியமோ அதுதான் அவரிடம் இல்லை. ரொம்பத்தான் போரடித்துக் கொண்டிருந்தார்.

“…நூறு அசுவமேதயாகம் செய்தவனாக்கும் நகுஷன். அவனை சுவர்க்கத்தில் இந்திரனாக இருக்கும்படிக்கு அழைத்துப் போனார்கள்.

அவன் இந்திராணியை மனைவியாக அடைய விரும்பினான்.

இந்திராணி கதறினாள். ‘ஆ, ஐயோ, இப்படி இந்த நகுஷன் திடீர் மனைவியாக என்னை அடையப் பார்க்கிறானே.”

தேவகுருவிடம் வியர்க்க விறுவிறுக்கச் சென்றாள்.

அப்புசாமி ரசகுண்டுவிடம் கிசுகிசுவென்று, “ஏண்டா வெறும் குருவேன்னாளா, வேர்க்குருவேன்னாளா” என்று கேட்டுச் சிரித்தார். “போளி எப்போ சப்ளை ஆகும்? எழுந்துபோய் விசாரிடா. கிழவி அங்கே வந்துட்டாள்னா பிரசினை ஆயிடும்.”

“கதை நல்லாருக்கு. கொஞ்சம் கேட்டுட்டுப் போகலாம் தாத்தா.”

கதாகாலட்சேபம் அங்கே நடந்து கொண்டிருக்கும்போது இங்கே அதே வளசரவாக்கத்தில் இன்னொரு கோடியில் ஒரு சந்தின் மாடியிலிருந்த சிறிய ஹாலில் சுவையான பாட்டி மன்றம் ஒன்று நடந்து கொண்டிருந்தது.

சீதாப்பாட்டிதான் பாட்டி மன்றத்திற்கு நடுவர்.

வாசலில் கட்டியிருந்த பேனரில் பாட்டி மன்றத்தின் அன்றைய தின விவாதத்தின் தலைப்பு கொட்டை எழுத்தில் பிரகாசித்தது.

கணவனுக்கு மனைவி அடங்க வேண்டுமா?

மனைவிக்குக் கணவன் அடங்க வேண்டுமா?

அகல்யா சந்தானம் ஒரு கட்சியிலும் பொன்னம்மா டேவிட் இன்னொரு அணியிலுமிருந்து கொண்டு விவாதித்தனர்.

நடுவர் சீதாப்பாட்டி அடக்கமான புன்னகையுடன் விவாதங்களைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

அதே நேரம் காலட்சேப பவனில் யாதி சரித்திரம் கேட்டுக் கொண்டிருந்த அப்புசாமிக்கு கொட்டாவி மேல் கொட்டாவியாக வந்து கொண்டிருந்தது. காலட்சேபப் பெரியவர் சுவையாக (அவருக்குச் சுவையாக) விளக்கிக் கொண்டிருந்தார்.

“நகுஷனாகப்பட்டவன் இந்திராணி மீது காமமுற்று ‘உன்னை நான் திருமணம் பண்ணிக் கொண்டே தீருவேன்’ என்கிறான்.

அவளுக்கோ என்ன பண்றதுன்னு தெரியலை. தேவ குருகிட்டே சென்றாள். ‘குருவே, இந்த மாதிரி பலான நகுஷக் கடன்காரன் என்மேலே கண்ணை வெச்சுட்டான். என்ன பண்றதுன்னு தெரியலையே’ என்று தவித்தாள்.

இந்திராணிக்கு பாவம் ஒவ்வொரு இந்திரன் மாறும்போதும் இப்படிப்பட்ட சங்கடமும், பயமும் எறுபட்டுக் கொண்டேயிருக்கும்.

இந்தப் புது இந்திரனாகப்பட்ட நகுஷனை அவளுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. தப்பிக்க என்ன வழின்னு கேட்கிறாள்.

“யார்கிட்டேயிருந்து தப்பிக்க பெரியவரே? நீங்க சொல்லுங்கோ, யார்கிட்டேயிருந்து தப்பிக்க?” என்றார் காலட்சேபப் பெரியவர் அப்புசாமியிடம்.

அப்புசாமி எழுந்தார். “யார்கிட்டேயிருந்து? அந்த சீதேக் கிழவிகிட்டேயிருந்துதான். நாங்க பாட்டுக்கு அவளோட காரைக் கிளப்பிண்டு வந்துட்டோம். சீக்கிரம் போய்ச் சேராட்டால் காரைக் காணோம்னு போலீசுக்குக்கூட அந்தக் கடன்காரி பிராது கொடுத்துடுவாள். ஆகையாலே நானாகப் பட்டவன் என்ன கேட்கிறேன்னா, தயவு செய்து சீக்கிரம் காலட்சேபத்தை முடிச்சிட்டு போளி சுண்டல் பொங்கலை எங்களுக்குத் தர்ரது. நாங்க தொலை தூரத்திலிருந்து வந்து தொலைத்திருக்கோம்.”

அப்புசாமி இப்படிக் கூறியதும் பிரசங்கம் செய்து கொண்டிருந்த பாகவதர் அப்புசாமியை எரித்து விடுவதுபோலக் கண்களை உருட்டிப் பார்த்தார்:

“என்னய்யா கலாட்டா செய்யறதுக்குன்னு வந்திருக்கிறீரா? நான் யார் தெரியுமோ இல்லையோ?” என்றார் கோபமாக. அவரது பின்னணியில் சில முரட்டு உருவங்கள் தோன்றத் தொடங்கின.

 

பாட்டி மன்றத்தில் விவாதம் சூடுபிடித்து கொண்டிருந்தது.

கணவனுக்கு மனைவி அடங்க வேண்டுமா?

மனைவிக்குக் கணவன் அடங்க வேண்டுமா?

‘மனைவிதான் அடங்க வேண்டும், என்ற அணிக்குப் பொன்னம்மா டேவிட் தலைவி. தனது எதிரியான சீதாப்பாட்டியை இந்தச் சாக்கில் கிழி கிழியென்று கிழித்துக் கொண்டிருந்தாள்:

“சில பொம்பளைங்க பிடாரிகளாக இருந்துகிட்டு, சமுதாயத்தை ஏமாத்திகிட்டு வர்ராங்க. பெரிய சமூகசேவகின்னு சொல்லிப்பாங்க. அவளுக்கு ஜால்ரா போட ஆளைச் சேர்த்துக்கிட்டிருப்பாங்க. அம்மாஜி, ஆயாஜின்னு அவுங்க காக்கா பிடிப்பாங்க.

ஏதோ பெண்கள் சமுதாயம் ஆண்கள்கிட்டே சித்திரவதைப் படறதுபோலவும், இவள்தான் அவுங்க உரிமையை மீட்டுத்தர அவதாரம் பண்ணியிருக்கிறவள் மாதிரியும் ஷோ பண்ணிப்பாளுங்க.

அவள் வூட்டுலே போய்ப் பாருங்க. வண்டவாளம் தெரியும். புருஷனை அவள்தான் பலவகையிலே சித்திரவதை பண்ணிகிட்டிருக்கிறதைப் பார்க்கலாம்… நடுவர் அவர்களே, நான் சொல்வது சரிதானே…”

பொன்னம்மா கிண்டலாக நடுவரைப் பார்த்துப் பேசினாள்.

சீதாப்பாட்டி கஷ்டப்பட்டுப் புன்னகை செய்தவாறிருந்தாள்.

மகாபாரத கிருஷ்ணன் சிசுபாலனின் திட்டுக்களைப் பொறுமையாக எண்ணிக்கொண்டிருந்ததுபோல பொன்னம்மாவின் கிண்டல்களை சீதாப்பாட்டி பொறுத்துக்கொண்டிருந்தாள்.

பொன்னம்மாவுக்கு அது மேலும் உற்சாகமளித்தது: “எனக்கு, எனக்கு மட்டுமென்ன, உங்களுக்கும்கூட அந்தப் பொம்பிளையைத் தெரிந்திருக்கும். தன் புருஷனுக்கு ஒருநாள், ஒரே ஒருநாள்அவள் தன் கையாலே சோறு பரிமாறியிருப்பாளா?

சமூக சேவை செய்யறவங்க புருஷனுக்குப் பரிமாறக்கூடாதா? அவன் என்ன தீண்டத்தகாதவனா? அவன் உன் வீட்டு வேலைக்காரனா? உன் செருப்பை அலமாரியிலிருந்து எடுத்துக் கீழே அவன் போடணுமா? அப்படிப் போட்டால்தான் அது உன் காலிலே ஏறுவோம்னு சொல்லுதா வந்து உன்கிட்டே?

ஒரு டீ குடிக்க அவன் ஆசைப் பட முடியுமா? அஞ்சு ரூபாக் காசு வேணும்னாக்கூட அவன் உன்கிட்டே தலையைச் சொறியணும்… நடுவர் அவர்களே…”பேச்சின் இடையே திரும்பி சீதாப்பாட்டியைப் பார்த்தாள்: “நான் கேட்கிறேன் நடுவர் அவர்களே, பெண்சாதிகளுக்குப் பேய்சாதி என்ற இழுக்கை ஏற்படுத்தும் இத்தகைய விஷப்பூண்டுகளை – அவர்கள் என்னதான் நாகரீகப் பூச்சு பூசிக்கொண்டு, நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிக்கொண்டு வந்தாலும் – நாம் இனம் கண்டு கொண்டு ஒதுக்கவேண்டும்!

நடுவர் அவர்களே! உங்களை நேரடியாகவே கேட்கிறேன். உங்களை நான் எந்த ஆணுக்கும்
அடங்கிப் போகச் சொல்லவில்லை. அப்படிக் கேட்க நான் ஒன்றும் பழமைவாதி அல்ல. ஆனால்
கட்டின கணவரை ஒரு பிச்சைக்காரனைவிடக் கேவலமாக நீங்கள் நடத்துவதாக விஷயமறிந்த வட்டாரங்கள் எனக்கு அவ்வப் பொழுது தெரிவித்துக்கொண்டிருக்கின்றன.”

சீதாப்பாட்டி புன்னகை மாறாமல், “ப்ளீஸ்! நீங்கள் இஷ்யூவை ஒட்டிச் சபைமுன் பேசினால் போதும் என்று நினைக்கிறேன் பொன்னம்மா அவர்களே… சேர் பர்ஸனை அட்ரஸ் பண்ணத் தேவையில்லை என்று நினைக்கிறேன்…” என்றாள்.

பொன்னம்மா டேவிட் இப்படிப்பட்ட எதிர்ப்பைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். எகத்தாளமாகச் சிரித்தாள்:

“நடுவர் அவர்களே! தமிழில் ஒரு பழமொழி உண்டு. ‘உள்ளதைச் சொன்னால் உடம்பு எரியுதாம்’
என்பார்கள். உங்கள் கணவனை ஒரே ஒரு நிமிஷமாவது நீங்கள் கெளரவமாக நடத்தியிருக்கிறீர்களா? உங்கள் ஆயுளில் நல்ல மூளையும், செயல்பாடும், நற்குணங்களும், பண்பும் கொண்ட அவரைப் பைத்தியம் என்று எத்தனை தடவை மென்ட்டல் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறீர்கள். அவருக்கு மாசா மாசம் பிச்சை போடுவதுபோல நூறு இருநூறு மட்டும் தருகிறீர்கள்.

உங்களை அவர் எதிரியாக நினைக்கிறார்- உங்களை அவர் வெறுக்கிறார்- உங்கள் மீது ஏற்பட்டுள்ள வெறுப்பு – பெண்கள் சமுதாயத்தின் மீதே அவருக்கு ஏற்பட்டுவிட்டது.

அவர் செய்துவரும் பிரசாரத்தால் ஆண் சமுதாயம், என் போன்ற நல்ல பெண்களைக்கூட கிராதகி, ராட்சஸி என்று நினைக்கிறார்கள். எந்த கொடுமைக்காரி பட்டினத்தாரைப் பாழ்படுத்தினாளோ? அந்த மகான் பெண் சமுதாயத்தையே ‘பெண்ணென்ற மாயப்பிசாசு’ என்று ஒட்டு மொத்தமாகத் திட்டிவிட்டார்.”

சீதாப்பட்டி மேஜை மணியைத் தட்டினாள்: “மிஸஸ் டேவிட்! நீங்கள் உங்கள் சீட்டுக்குப் போய் அமருங்கள்.”

“ஏன் நான் உட்கார வேண்டும்? நான் இந்த அணியின் தலைவி…” என்று முறைத்தாள் பொன்னம்மா.

“தலைவியானாலும் பொறுப்பற்ற பேச்சுக்களை அனுமதிக்க நான் தயாராக இல்லை!” சீதாப்பாட்டி எச்சரித்தாள்.

“நீ அனுமதிக்காட்டி அனாவசியம்! இந்தா மேடம்! என் சுதந்திரத்தைப் பறிக்க, நசுக்க உனக்கு அதிகாரமில்லை. அப்படியே அதிகாரம் இருந்தாலும் நான் பணிந்து போகத் தயாரில்லை… நீ உன் புருஷனைச் சித்திரவதை செய்த பட்டியலை எடுத்துச் சொல்லாமல் நான் உட்காரப் போவதில்லை.”

“மிஸஸ் டேவிட்!” சீதாபாட்டி அதட்டினாள்: “உங்கள் பேச்சு ப்ரீ மெடிடேடிவா, திட்டமிட்டு என்னைத் திட்டுவதற்கு அமைத்தது போலிருக்கிறது. ‘ஆணுக்குத்தான் பெண் அடங்க வேண்டும்’ என்பதுதான் உங்கள் சப்ஜெக்ட் அதை ஒட்டிப் பேசுங்கள்- ஐ மீன், கெளரவமாகப் பேசுங்கள்- இல்லாவிட்டால் நீங்கள் வெளியேற வேண்டிய சிசுவேஷன் ஏற்படும்.”

“நடுவர் அவர்களே! நான் சப்ஜெக்டை ஒட்டித்தான் பேசுகிறேன். ஓர் ஆணை, ராட்சஸனாக ஆக்குவது உங்களைப் போன்ற பெண் பிசாசுகளின் அராஜக நடத்தைதான் என்பதை நிரூபிப்பது எனக்கு அவசியமாகிறது.

உங்களை மாதிரி சித்திரவதைச் சித்திராங்கிகள், அல்லி ராணிகள், ஆண்களைச் செருப்பால் அடித்தும், கன்னத்தில் அறைந்தும் அவர்களை முரடர்களாக மாற்றிவிட்டீர்கள். பெண்களை வெறுக்கும்படி செய்தீர்கள்.”

கூடியிருந்தவர்களில் பொன்னம்மாவின் ஆதரவாளர்கள் பலத்த கரவொலி எழுப்பி, பேச்சை ரசித்தனர்.

“நடுவர் அவர்களே… நான் ஒரு குட்டிக்கதை இவ்விடத்தில் சொல்ல விரும்புகிறேன்.

ஒரு பாம்பு ஒதுக்குப்புறமான புதரில் இருந்து கொண்டு அழுது கொண்டிருந்ததாம்.

அந்த வழியாகச் சென்ற சன்னியாசி ஒருத்தர், “ஏன் பாம்பே தனியாக அழுதுகொண்டிருக்கிறாய்?” என்று விசாரித்தாராம்.

“துறவியே! என்னை யாருமே நேசிக்க மாட்டேன் என்கிறார்கள். ஏன் என்னை யாரும் விரும்ப மாட்டேன் என்கிறார்கள் என்று புரியவில்லை” என்று அது பதில் சொன்னதாம்.

துறவி அதன் கேள்விக்கு விடை கூறினாராம்: “பாம்பே! நீ விஷமுள்ள பிராணி. நீ கடித்தால் மனிதர் இறந்தே போவார்கள். அதனால்தான் உன்னை அவர்கள் நேசிப்பதில்லை. நேசிப்பது மட்டுமல்ல; தடியால் அடிக்கவும் தயங்குவதில்லை. ஆகவே, உன் விஷம்தான் அவர்களைக் கொடியவர்களாக்கிவிட்டது” என்றாராம்.”

கதைக்கு பலத்த கைதட்டல் கிடைத்தது. பொன்னம்மா உற்சாக வெறி தலைக்கு ஏறிக் கூறினாள்:

“நடுவர் அவர்களே! நான் இந்த மேடையில், சபை நிரம்பிய இத்தனை பேரின் முன்னிலையில் உங்களை நேருக்கு நேராகக் கேட்கிறேன். உங்களிடம் கணவர் எப்போதாவது அக்கறைபட்டிருக்கிறாரா? எப்போதும் பயந்து கொண்டுதானே இருக்கிறார் நீங்கள் சமூக சேவை என்ற பெயரால் ஊரைச் சுற்றிவிட்டு ராத்திரி எட்டு மணியாகியும் வீடு திரும்பவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒரே ஒரு நாளாவது உங்கள் கணவர், ‘ஐயோ… இன்னும் நம் மனைவியைக் காணோமே என்று ஒரு விநாடியாவது, கவலைப்பட்டதுண்டா? ‘ஒழியட்டும் ராட்சஸி! என்றுதான் மகிழ்ச்சியோடிருப்பார்.

அந்த அயோத்யா ராமன், தன் மனைவி காணாமல் போனாள் என்றதும் தேடு தேடென்று தேடினான். ஏன் தேடினான்? அந்த சீதை அவனுடைய தர்ம பத்தினி – தர்மமே வடிவானவள். கணவனைத் தெய்வமாக நினைத்து அவனுக்கு அடங்கி நடப்பவள். ஆகவே அவனுக்குப் பிரியமானவள். ஆகவே அவளை அக்கறையாகத் தேடியலைந்தான்.

நடுவர் அவர்களே! நீங்கள் போனால் சத்தியமாக உங்கள் கணவர் உங்களைத் தேடமாட்டார். சொல்லப் போனால், பேரின்பப் பெருவிழாவாக அந்த நாளை அவர் கொண்டாடுவார்…”

மிகப்பெரிய அளவில் ஆதரவாளர்கள் கைதட்டி முழக்கினர்.

சீதாப்பாட்டி மிகுந்த பொறுமையாக யோசித்தாள் – பொன்னம்மாவுக்குப் பதிலளிக்க. வார்த்தைகளைத் தேடி பாலிஷ் செய்து கோர்வைப்படுத்த அவளுக்கு நேரமில்லை.

அதற்கென உணர்ச்சிவசப்பட்டுத் தன்னை மறந்து பொறுப்பற்றுப் பேசவும் தயாராக இல்லை.

ஆகவே மிகவும் பண்புடன், ஒரு சிரிப்புடன் பதிலளித்தாள்:

“மிஸஸ் டேவிட்டின் அம்புகள், உள் நோக்கத்துடன் என்மீது எய்ம் செய்யப்பட்டதாகவே எண்ணுகிறேன். நான் நுனி நாக்கு ஆங்கிலம் பேசுவதாகக் குறிப்பிட்டார்கள். சாரி, மொழி பேதம் எனக்கில்லை. மொழிகளும் தங்களிடம் ஒன்றுக்கொன்று பேதம் பாராட்டிக் கொள்வதில்லை. பொன்னம்மா டேவிட் என்மீது அம்புகளை எய்ம் செய்தாள் என்று குறிப்பிட்டேன். அம்புகளை எய்தாள் என்பது தமிழ். அம்புகளை ‘எய்ம்’ செய்தாள் என்றால் ஆங்கிலம். எய்ம் என்னும் ஆங்கில வார்த்தை எய்தல் என்ற தமிழ்ச் சொல்லின் அடிப்படையில் பிறந்ததாக இருக்கக்கூடும். ஆகவே நான் எய்ம் என்று சொன்னாலும், அது தமிழின் அடிப்படையையே கொண்டது. ‘தாய்க்கட்சி’ என்று பாலிடிக்சில் குறிப்பிடப்படுவதில்லையா…”

சீதாப்பாட்டி இப்படிச் சொன்னதும் “சபாஷ் சீதாஜி!” என்று சீதாப்பாட்டியின் ஆதரவாளர்கள் ஆர்ப்பரித்தனர்.

பொன்னம்மா கோபமாக மைக் அருகே வந்து கூவினாள்: “மொழி ஆராய்ச்சி நடத்த நாம் கூடவில்லை. நான் கேட்ட கேள்விக்கு நடுவர் பதிலைச் சொல்லாது சாமர்த்தியமாக நழுவுகிறார். அரசியலில் புகுந்திருந்தால் ஒரு அம்மாவாக உருவாகியிருப்பார். நடுவரே, மீண்டும் கேட்கிறேன், உங்களைப் பற்றி உங்கள் கணவர் ஒரே ஒருநாள் கவலைப்பட்டிருப்பாரா? என் கணவர் மிஸ்டர் டேவிட், சற்று முன்கூட இங்கே போன் செய்து ‘நான் பத்திரமாக வந்து சேர்ந்தேனா?’ என்று விசாரித்தார்.”

சீதாப்பாட்டி சுருக்கமாக, “காலம் பதில் சொல்லும். நான் பதில் சொல்லக் காலம் இல்லை. பட்டிமன்றத் தீர்ப்பை நான் ஒத்தி வைக்கிறேன்.”

டின்னருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக வளசரவாக்கம் சாப்டரின் காரியதரிசி மிஸ் பரிமள காந்தி தெரிவிக்கிறார். “இன்றைய டிபேட்டுக்கு எடுத்துக்கொண்ட விஷயம் ஏஜ் ஓல்ட் டாபிக். ஆகவே, தீர்ப்பை அவசரப்பட்டு நான் கூறத் தயாராக இல்லை. ஆகவே, இரு அணிகளுக்கும் சமமான மதிப்பெண் கொடுத்து அமைகிறேன்.”

பாட்டி மன்றம் முடிவடைந்து உறுப்பினர்கள் சாப்பிடத் தொடங்கினர். சீதாப்பாட்டியின் அருகே ஒரு சின்ன காரியர் இருந்தது.

“பிரசிடென்ட்ஜி!, அது என்ன காரியர்?” என்றால் அகல்யா சந்தானம்.

“ஓ! இது… வந்து… சர்க்கரைப் பொங்கல். பரிமளகாந்தியிடம் சொல்லி, அவருக்குக் கொஞ்சம் பார்சல் செய்யச் சொன்னேன். ஹி இஸ் மேட் ஆ·ப்டர் சர்க்கரைப் பொங்கல் யூ நோ?” – சீதாப்பாட்டி கூச்சத்துடன் கூறினாள்.

அருகிலேயே அழிச்சாட்டியமாக நின்றிருந்த பொன்னம்மா, சீதாப்பாட்டிக்கு அழகு காட்டினாள்: “சீதா, போதும் உன் நாடகம்! காரியரில் பொங்கல் எடுத்துப் போறதாலே உனக்குக் கணவன்மீது பிரியம்னு நாங்கள் நினைக்கணுமாக்கும்?

என்னமா நடிக்கிறேடி…? நான் சவால் விட்டது. உன் புருஷன் உன் மீது பிரியமாயிருக்கிறாரா, இருந்திருக்கிறாரா என்பதற்குத்தான்.”

சீதாப்பாட்டிக்கு, பொங்கல் கசந்தது: ‘இன்னிக்கி என்ன, பொன்னம்மாள் டேயா? இவளுக்கு நாம் சக்கம்ப் ஆகவேண்டியதுதானனா? பெரிய பெரிய தலைவர்களுக்கும், தேர்தலிலே அடி சறுக்குகிற மாதிரி எனக்கும் அடி சறுக்குகிறதா? நேரம்.’

சீதாப்பாட்டியை பொன்னம்மா டேவிட் முறைத்துக் கொண்டிருந்த அதே நேரம், அதே வளசரவாக்கத்தின் மறு கோடியிலிருந்த காலட்சேப பவனில் அப்புசாமியை காலட்சேப பெரியவர் முறைத்துக் கொண்டிருந்தார்.

“ஏய்யா, கலாட்டா செய்யறதுக்குன்னு வந்திருக்கீங்களா? நான் யார் தெரியுமோ இல்லையோ?” என்றார் காலட்சேபக்காரர் கோபமாக.

அப்புசாமி அலட்சியமாக, “நாங்க ஒண்ணும் காரைப் போட்டுக்கொண்டு கலாட்டா பண்ண வரலை. என்னவோ இலவசப் பிரசாதம், போளி, சுண்டல் அது இதுன்னு பேப்பரிலே
போட்டிருந்ததே.. அதான் வந்தோம்.”

“ஓ! அப்படீங்களா?” என்று காலட்சேபக்காரர் இளக்காரத்துடன் சிரித்தார்.

அந்தக் காலட்சேபக்காரரின் அசல் பெயர் என்னவோ யாருக்கும் தெரியாது. அவரை அந்த வட்டாரத்துல எல்லாரும் ‘காலட்சேபக் கிறுக்கு கனகசபேசம்’ என்று குறிப்பிடுவார்கள்.

அவர் நிலபுலன்களுடன் பெரிய பணக்காரர். படிப்பாளி. அவர் படித்த புராணங்களை, யாரிடம் பேசினாலும் எடுத்து எடுத்து எல்லாரிடமும் விட்டுக்கொண்டே இருப்பார். அதனால் அவரைக் கண்டாலே வட்டாரப் பொது மக்கள் ஓடி ஒளிவார்கள்.

பங்களா வராந்தாவில் அவர் இருப்பது தெரிந்தால் கீரைக்காரிகூட வேறு திசையில் ஓடிப் போவாள்.

கனகசகேசம் இதற்கெல்லாம் அஞ்சப்பட்ட ஆசாமி இல்லை. ஆகவே தனது சொந்தச் செலவில் ‘காலட்சேப பவன்’ என்றே ஒரு மண்டபம் கட்டிவிட்டார். அதில் அவரது காலட்சேபம் மட்டுமே நடைபெறும். முதல் வருட பூர்த்திக்கு கூட்டம் வரவழைக்க, நெய்ப் போளி, பொங்கல், சுண்டல் வினியோகம் செய்வதாக பத்திரிகையிலும் விளம்பரம் தந்துவிட்டார்.

அப்புசாமியிடம் கனகசபேசம் கேட்டார்: “ஏய்யா கெழவனாரே, நகுஷ சரித்திரத்தைத் தொண்டை வரை நான் சொல்லிக்கிட்டிருந்தேனே. நகுஷன் எந்தப் பதவிக்கு வந்தான்? அதையாவது சொல்லும்.”

“வெங்காயப் பதவிக்கு” என்றார் அப்புசாமி. “நேரமாச்சய்யா. கிழவி அங்கே காத்துக்கிட்டிருப்பாள்.”

“கிழவியா? யாருய்யா கிழவி? இந்திராணியா கிழவி? அவள் என்றும் இளமை மாறாத அழகியய்யா… இத்தனை வயசாச்சு இது தெரியலையே, முண்டம்…”

“டேய் காலட்சேபம்! முண்டம் கிண்டம்னு பேசினே, நடக்கிற சங்கதியே வேற. ஏண்டா ரசம், பீமா, எதுக்குடா நீங்க வந்திருக்கீங்க… தண்டங்களா… அந்த ஆள் என்னை முண்டம்கறாண்டா…”

“கோப பேடா தாத்தா… நாம அசலார் மனெகெ வந்திருக்கோம். உஷாரா இரு பேகு” என்றான் பீமா.

“உன் தலை பேகு!” என்ற அப்புசாமி “யோவ்! காலட்சேபம்! சுண்டல் தர முடியுமா, முடியாதா?”

பெரியவர் சிரித்தார்: “உங்களுக்கெல்லாம் தரத்தானே செய்து கண்ணாடி கேஸில் அடுக்கியிருக்கேன். ஆனால் நீங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டவுடன் பிரசாத வினியோகம்தான்.”

“ஒப்பந்தமா? என்ன பெரியவரே புது குண்டு?” என்று ரசகுண்டு காலட்சேபப் பெரியவரிடம் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, அடியாட்கள் போன்ற ஏழெட்டுத் தொண்டர்கள்
அப்புசாமியின் கோஷ்டியை பேனாவும் பேப்பருமாகச் சூழ்ந்து கொண்டனர்.

“ஏதாவது நிதி நிறுவனம் நடத்தித் தொலைக்கிறவரா, இத்தனை குண்டர்களை வைத்திருக்கிறாரே” என்று அப்புசாமி நடுங்கினார்.

“பயப்படாதீங்க” என்றார் காலட்சேப கனகசபேசம்: ‘இது காலட்சேப ஒப்பந்தம். கட்டணம், கிட்டணம் கிடையாது. ஓரொரு ஞாயித்துக்கிழமையும் என் காலட்சேபம் கேட்கிறதுக்கு வருகீறேன்’னு சொல்ற உறுதிமொழிப் பத்திரம். இப்படியே உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டுக்கிட்டு, எதிர்காலத்துலே ‘காலட்சேப பவன்’ என்கிற அரசியல் கட்சிகூட ஆரம்பிக்கலாம் என்கிற யோசனை நமக்கு உண்டு!”

“என்னய்யா, எங்கேருந்து எங்கே வந்து கேட்கறது உன் காலட்சேபத்தை… ஒப்பந்தமும் வேணாம், தீப்பந்தமும் வேணாம்” என்றார் அப்புசாமி கோபமாக. “செரியான பப்ளிசிட்டி ஆளா இருக்கீரே?”

“ஹிஹி! நம்ம ஆளுங்க உங்களை வுடமாட்டாங்களே… ஒப்பந்தத்திலே கையெழுத்துப் போட்டுத்தான் ஆகணும்.”

“முடியாதுய்யா.”

“தாத்தாவ்” என்றான் பீமாராவ். “ஜகடா பேடா தாத்தா. ஜகடா பேடா!”

ரசகுண்டு இடக்காக் கேட்டான்: “ஏய்யா காலட்சேபக் கிறுக்கு! நாங்க ஒப்பந்தத்திலே கையெழுத்து போட்டுட்டு வராம டேக்கா கொடுத்திட்டால் என்ன பண்ணுவீர்?”

“அட பசங்களா! அதுக்குத்தானே குண்டர் படை வெச்சிருக்கேன். ஒப்பந்தப் பாரத்திலிருக்கிற அட்ரசுக்கு வந்து உங்களை அப்படியே குண்டுக்கட்டாத் தூக்கி வந்துடுவாங்க. சரி, சரி, ஒழுங்கா ஒப்பந்தத்திலே போடுங்க கையெழுத்து.”

“நேரமாச்சு தாத்தா. போட்டுத் தொலைங்க. அப்புறம் பார்த்துக்கலாம்…”

கையெழுத்து வைபவம் வெற்றிகரமாக முடிந்தது.

“சரி, போளி! சுண்டல்…”

கண்ணாடிக் கூட்டைத் திறந்தார் கிறுக்கு: “எல்லாரும் பக்கத்துலே வந்து பார்த்துக்குங்க” என்றார்.

எல்லாமே குசப்பேட்டை வர்ணம் தீட்டப்பட்ட நவராத்திரிக் கொலு பொம்மைகள்.

“என்னய்யா, உலகத்திலே இப்படிக் கூட ஒரு மோசடியா?” அப்புசாமி அசந்து போனார்.

“அடே பொடியா! அரசியல்வாதிங்க வாக்காளப் பெருமக்களைக் கவர்ந்து இழுக்க எத்தனை வகை ஸ்டண்ட் அடிக்கிறாங்க. நான் நம்ம பக்த சிகாமணிகளைக் கவர இப்படியெல்லாம் ஸ்டண்ட் அடிக்கணுமாயிருக்குது. ரொம்ப நன்றி. அடுத்த வாரம் அவசியம். எல்லோரும் வந்துடுங்க… நீங்க இனிமேல் புறப்படலாம்.”

“சே! ஏனு தாத்தா, போளி! இல்லா, சுண்டல் இல்லா, ஒந்து டீயானும் அனுக்ரக மாடு தாத்தா…”

“டேய் ரசம்! தண்டமாப் போச்சேடா நம்ம நீண்ட நெடும் பயணம்!” அங்கலாய்த்தார்.

“வெறும் தண்டமில்லை தாத்தா. போளி, சுண்டல் ஆசையை மனசிலே காலட்சேபம் விதைச்சுட்டாரே… இப்ப நேரா மாம்பலம் போளி ஸ்டாலுக்குத்தான் போறோம்…!”

“அடேய்! சீதாக்கிழவின்னு ஒரு பெசாசு இருக்கறதை மறந்துட்டியே. காரைக் காணோம்னு அவள் இந்நேரம் அமர்க்களப்படுத்திக் கொண்டிருப்பாளே!” என்று சொல்லிக் கொண்டே இருந்தவர், தீண்டப்பட்டவர் மாதிரி அலறினார்: “ஐயோ!”

“என்ன தாத்தா?”

“சரியா பாருடா! ரசம்! பீமா! அங்கே பாருடா! கிழவி! நம்ம கிழவி! சீதாக்கிழவி! அந்தச் பிசாசு எங்கேடா இங்கே வந்துருக்குது! காரும் கையுமாக நல்லா மாட்டிக்கிட்டோமே.”

“தாத்தா! ஸ்டியரிங் எனக்கு உதறுது தாத்தா!”

கார் நேராக சீதாப்பாட்டி அருகே போய் நின்றது. வளசரவாக்கத்தின் பாட்டிமன்றக் கழகத்தினர் வழி அனுப்பக் கூடியிருந்தனர். தனது சொந்தக் காரில் ஏறிக்கொண்டிருந்த பொன்னம்மா, சர்வ அலட்சியமாக ஆட்டோ அருகிலிருந்த சீதாப்பாட்டியைப் பார்த்தாள்: “என்னாச்சு உன் காருக்கு? வித்துட்டியா என்ன?” என்றாள்: “வர்ரயா, டிராப் பண்ணறேன்.”

“நோ, தாங்க்ஸ். அதோ என் கணவரே வண்டியை எடுத்துக்கிட்டு வந்துட்டார். உன்னுடைய சாலஞ்சுக் ஆன்சர் கிடைச்சுட்டுதுன்னு நினைக்கிறேன். ராமர் வந்துட்டார் சீதையைத் தேடிக்கொண்டு” என்று கூறிவிட்டு காரில் ஏறி அமர்ந்தாள் – எதுவுமே நடந்திராதது போல.

அப்புசாமி பயந்து செத்துக் கொண்டிருந்தார், சீதாக்கிழவி எப்படித் தன்னைச் சதாய்க்கப் போகிறாளோ என்று.

ஆனால் சீதாப்பாட்டியின் மனசோ, ‘முண்டகக்கண்ணியம்மா, உன் ப்ளெஸ்ஸிங்கே ப்ளெஸ்ஸிங். எனக்கு ஏற்பட்ட அவமானத்தை எப்படித் துடைத்துக் கொள்றதுன்னு தெரியாம தவித்தேன். நான் என் புருஷனை மனசார விரும்புகிறவளாயிருந்தால், என்ன மிரகிளாவது நடத்தி என் மரியாதையைக் காப்பாத்திக் குடுன்னு ப்ரே பண்ணிக் கொண்டேன். மிரகில்ஸ் டூ ஹேப்பன்!”

“உங்களைத்தானே?” என்றாள். சீதாப்பாட்டி, அப்புசாமியிடம்: “நான் வர லேட்டாயிடுத்துன்னு வண்டியை எடுத்துண்டு வந்துட்டீங்களா… தாங்க்யூ ஸோ மச். போறப்போ மயிலாப்பூர் போய் முண்டகக்கண்ணி அம்மனுக்கு ஒரு அர்ச்சனை பண்ணிக்கொண்டு போகலாம்.”

“எனக்கு அர்ச்சனை பண்ணாமலிருந்தால் போதும்” என்றார் அப்புசாமி நிம்மதியாக.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *