கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 25, 2018
பார்வையிட்டோர்: 5,236 
 

நரசிம்மனுக்கு முப்பத்தைந்து வயது.

ரொம்பவும் வெகுளி. மிகவும் அமைதியானவர். முனைப்புடன் நேர்கோட்டில் வாழ்பவர். பக்தி அதிகம். காலையில் குளித்துவிட்டு, பூஜாரூமில் அரைமணிநேரம் மந்திரங்கள் சொல்லி இறைவனை வழிபட்ட பிறகுதான் ஆபீஸ் கிளம்புவார்.

ஆபீஸிலும் அவருக்கு மிக நல்ல பெயர். தன் வேலைகளை திறம்படச் செய்வார். அடுத்தவர்களின் வேலையையும் இழுத்துப் போட்டுக்கொண்டு உதவி செய்வார். ஏகத்துக்கும் அப்பாவி. பாவம் மூக்கைப் பிடித்தால், வாயினால் சுவாசிக்கத் தெரியாது. தினமும் சரியான நேரத்துக்கு ஆபீஸ் சென்று விடுவார்.

அன்று காலை தன் ஸ்கூட்டரில் ஆபீஸுக்கு கிளம்பும்வரை நரசிம்மனுக்கு வயிற்றில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல்தான் இருந்தது. ஆனால் ஆபீஸில் பணிகளைப் பார்க்கத் தொடங்கிய சற்று நேரத்தில் வயிற்றை வலித்தது. அதன்பிறகு வயிற்றுப்போக்கு ஆரம்பமானது. பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை டாய்லெட் போனார். ஒவ்வொரு முறையும் பீச்சியடித்தது. அடுத்த ஒருமணி நேரத்தில் உடம்பு சோர்ந்துபோய் வெலவெலத்து விட்டது. தொடர்ந்து ஆபீஸில் இருக்க முடியாது என்பது புரிந்தது.

மனைவி நிர்மலாவுக்கு போன் பண்ணி தயிரில் வெந்தயம் போட்டு ஊற வைக்கச் சொல்லலாம் என நினைத்து, அவளை மூன்று முறைகள் மொபைல் போனில் தொடர்புகொள்ள முயன்றார். மொபைலில் அவள் யாருடனோ தொடர்ந்து பேசிக்கொண்டிருந்ததால் அவளிடம் பேச முடியவில்லை.

மணி பத்தரை. அவருடைய வீட்டுத் தெருவில் இருக்கும் டாக்டர், மாலை ஆறு மணிக்குதான் வருவார். அதுவரைக்கும் எந்த மருந்தும் சாப்பிடாமல் இருக்க முடியாது.

முதலில் ஜெனரல் மேனேஜரிடம் சென்று அன்று மட்டும் லீவு சொன்னார். ஆபீஸ் வாசலில் நின்று சற்று யோசித்தார். அவசரத்திற்கு தெருவை மெதுவாகக் கடந்து எதிரில் இருக்கும் மருந்துக் கடையில் இரண்டு எல்டோபர் மாத்திரைகளைக் கேட்டு வாங்கினார். அதில் ஒரு மாத்திரையை மருந்துக் கடையிலேயே தண்ணீர் வாங்கி உடனே முழுங்கினார்.

மறுபடியும் ஆபீஸ் சென்று ஸ்கூட்டரை கிளப்பி கவனமாக வீடு வந்து சேர்ந்தார். வீடு உள்பக்கம் பூட்டப் பட்டிருந்தது. காலிங்பெல் அடித்ததும். மனைவி நிர்மலா வந்து கதவைத் திறந்தாள். கணவனைக் கொஞ்சமும் எதிர்பாராததால் ஆச்சர்யத்தோடும் அதிரிச்சியோடும் பார்த்தாள்.

“என்னங்க திரும்பி வந்துட்டீங்க?”

“ஆமா நிம்மி. எனக்கு வயிறு அப்செட்… ஆபீஸ்ல போய் உட்கார்ந்த நிமிஷத்திலிருந்து ஒரே பேதி. இருக்கவே முடியல… அதான் லீவு போட்டுட்டு வந்திட்டேன்.”

“நேத்திக்கி சாயங்காலம் எங்கேயோ பரோட்டா சாப்பிட்டீங்களே – அதுதான் உங்களுக்கு ஒத்துக்கல…”

“சரி…முதல்ல வாசக்கதவை சாத்து. நான் கொஞ்ச நேரம் படுத்தா சரியாயிடும்…”

நிர்மலா கதவைச் சாத்தினாள்.

“ஏதாவது மாத்திரை சாப்பிட்டீங்களா, இல்லை நான் போய் வாங்கிவரவா?”

“ரெண்டு எல்டோபர் வாங்கி ஒண்ணு உடனே போட்டுக்கிட்டேன். இப்ப கொஞ்சம் பரவாயில்லை…”

“நல்லது… படுத்துக்குங்க.”

“உனக்கு போன் பண்ணேன். கன்டினுயுவஸா எங்கேஜ்டாவே இருந்திச்சி… ஆமா நீ எங்கேயும் ஷாப்பிங் கிளம்பிட்டியா என்ன? குளிச்சி முடிச்சி ஜம்முன்னு ட்ரெஸ் மாத்தி பவுடர் போட்டு மணக்கற?”

“ஷாப்பிங் போகிற நேரமா இது? நீங்க ஆபீஸ் போகாம வீட்ல இருக்கிற நாள்ளேதான் மத்யானம் வரைக்கும் எனக்கு வேலை இருக்கும்… அதுக்கு அப்புறமா குளிச்சி புடவை மாத்துவேன். நீங்க ஆபீஸ் போயிட்டீங்கன்னா உடனே வேலை முடிஞ்சுடுமே..! அதான் குளிச்சி இப்பதான் வேற புடவையை எடுத்துக் கட்டினேன்… நீங்க வந்து காலிங்பெல் அடிச்சீங்க…”

“அப்பாடா… மாத்திரை சாப்பிட்டு அரை மணிநேரம் ஆயிடிச்சி. ஒண்ணையும் காணோம். இப்படியே சரியாயிடுச்சின்னா நல்லது…”

“சாயந்திரம் நாலு மணிக்கு அந்த இன்னொரு மாத்திரையும் போடுங்க. அதிலேயும் கண்ட்ரோல் ஆகலைன்னா டாக்டர் கிட்ட போகலாம்.”

“அதெல்லாம் சரியாயிடும்… இப்பத்தான் ஒண்ணும் இல்லியே. இப்படித் தெரிஞ்சிருந்தா பேசாமே ஆபீஸ்லேயே இருந்திருப்பேன்.”

“படுத்துக்கொண்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க… மத்தியானம் லங்கணம் போடுங்க… நான் ஒரு அஞ்சு நிமிஷம் பக்கத்து வீடு வரையும் போய்ட்டு உடனே வந்துடறேன்.”

“ஒரேயடியா போய் உட்கார்ந்திடாதே… உடனே வா.”

“அஞ்சே நிமிஷத்தில வந்துடுவேன்.”

வால் க்ளாக்கில் மணி பன்னிரண்டு அடித்தது.

கிளம்பும்முன் நிர்மலா உள்ளேபோய் ஒருதடவை தன்னை கண்ணாடியில் பார்த்துக்கொண்டாள். அப்போது காலிங்பெல் அடித்தது. நரசிம்மன் போய்க் கதவைத் திறந்தார். அழகான உடையில் ஜெயராமன் நின்று கொண்டிருந்தான்.

“அடடே ! வாங்க ஜெயராமன். நான் இப்பத்தான் கொஞ்சம் உடம்பு சரியில்லைன்னு ஆபீஸுக்கு லீவு போட்டுட்டு வந்து நிக்கறேன்… நீங்களும் கரெக்டா வர்றீங்க…”

ஜெயராமன் புன்னகைத்தபடி “நீங்க லீவு போட்டுட்டு வீட்டுக்குப் போயாச்சுன்னு தெரிஞ்சுதானே, நானே வரேன்.” என்றான்.

“அட அப்படியா… உங்களுக்கு எப்படித் தெரியும் நான் லீவ் போட்டுட்டு வீட்டுக்கு வந்துட்டேன்னு?”

அப்போது நிர்மலா அங்கு வந்து ஜெயராமனிடம் “வாங்க உட்காருங்க” என்றாள். ஜெயராமன் வரவேற்பறையில் அமர்ந்தான்.

“நான் ஒருவாரம் லீவில் இருக்கேன் மிஸ்டர் நரசிம்மன். இன்னிக்கி ஒரு வேலையா உங்க ஆபீஸ் பக்கம் போக வேண்டியிருந்தது. என்னோட வேலை சீக்கிரம் முடிஞ்சிடுச்சி.. அப்படியே உங்களையும் அஞ்சு நிமிஷம் பார்த்துடலாமேன்னு தோணிச்சி. உங்க ஆபீஸ் போனேன். நீங்க வந்துட்டு உடம்பு சரியில்லைன்னு சொல்லி வீட்டுக்கு போயிட்டதா சொன்னாங்க. சரி உங்களையும் பார்த்து ரொம்ப நாளாச்சே; உடம்பு வேற சரியில்லைன்னு சொல்றாங்களே – வீட்ல போயே பார்க்கலாம்னு நேர இங்க வந்துட்டேன். என்ன உங்க உடம்புக்கு?”

“பெரிசா ஒண்ணுமில்லை. டயரியா மாதிரி இருந்தது. அதான் கிளம்பி வந்துட்டேன்…. நிம்மி ஜெயராமனுக்கு காபி கொண்டாயேன்.”

நிர்மலா வேகமாக உள்ளே போனாள்.

“ஏதாவது மாத்திரை சாப்பிட்டீங்களா மிஸ்டர் நரசிம்மன்?”

“மெடிகல் ஷாப்ல எல்டோபர் வாங்கி ஒண்ணு சாப்பிட்டேன். இப்ப பரவாயில்லை.”

“ஆபீசெல்லாம் எப்படி இருக்கு?”

“ஏதோ இருக்கு…”

“ப்ரமோஷன் ஏதாவது வந்ததா?”

“பிரமோஷனுக்கு இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு.”

“பத்து வருஷ சர்வீஸ் போட்டிருப்பீங்களே?”

“கரெக்டா சொல்றீங்களே, இந்த ஜூலைல பத்து வருஷ சர்வீஸ் முடியுது.”

நிர்மலா காபி கொண்டுவந்தாள்.

ஜெயராமன் காபியை மெதுவாக உறிஞ்சினான்.

“எப்ப உங்க கல்யாணம் ஜெயராமன்?”

“இப்பதான் வீட்ல பாக்க ஆரம்பிச்சிருக்காங்க… வயசும் முப்பது ஆயிடிச்சி.. சீக்கிரம் பண்ணிக்கணும்.”

காபி குடித்ததும், “அப்ப நான் கிளம்பறேன். உடம்ப பாத்துக்குங்க மிஸ்டர் நரசிம்மன்..” ஜெயராமன் எழுந்துகொண்டான்.

நிர்மலா, “கல்யாணத்துக்கு எங்களையெல்லாம் கூப்பிடுங்க.” என்றாள்.

“கண்டிப்பா, நீங்க இல்லாமலேயா?”

ஜெயராமன் கிளம்பிச் சென்றான். நிர்மலா கதவைச் சாத்திவிட்டு வந்தாள்.

“நல்ல பையன்… உடம்பு சரியில்லைன்னு தெரிஞ்சதும் உடனே என்னைப் பாக்கிறதுக்கு ஓடி வந்துட்டான் பார்…”

“ஜெயராமனுக்கு எப்பவுமே உங்ககிட்டே ஒரு மரியாதை உண்டு.”

“நீ ஏதோ பக்கத்து வீட்டுக்கு போகணும்னு சொல்லிக் கிளம்புனியே, போறதுன்னா இப்பவே போயிட்டு வந்துடேன்.”

“வேணாங்க…இப்ப அவங்க வீட்ல ரெஸ்ட் எடுத்துகிட்டு இருப்பாங்க, அப்புறமா போயிக்கிறேன்.”

“நல்லவேள என்னோட வயிற்றுப்போக்கு ஒரு மாத்திரைலே நின்னிருச்சி..நாளைக்கு எப்பவும் போல ஆபீஸ் போகலாம்.”

நரசிம்மன் கட்டிலில் படுத்துக்கொண்டார்.

மறுநாள் நரசிம்மன் எப்போதும்போல ஆபீஸ் போனார்.

அவர் இருக்கையில் அமர்ந்த அடுத்த சில நிமிடங்களில், ரிசப்ஷன் மல்லிகா நரசிம்மனை இன்டர்காமில் அழைத்து, “சார் நேத்திக்கி நீங்க வீட்டுக்கு போனப்புறம் மிஸ்டர் ஜெயராமன்னு ஒரு விசிட்டர் உங்களைப் பார்ப்பதற்கு மதியம் மூன்றரை மணிக்கு வந்திருந்தார்” என்றாள்.

“யெஸ் யெஸ்… அவரு என் வீட்டுக்கும் வந்தாரு. ஆனால் நீ சொல்ற மாதிரி அவர் ஆபீஸ் வந்தது மூன்றரை மணிக்கு இல்ல. மதியம் பன்னிரண்டு மணிக்கே அவர் என்னை வந்து பார்த்துட்டுப் போயாச்சு. அதனால அவர் என்னைத்தேடி அனேகமாக இங்கே பதினொன்னரை மணி வாக்கில் வந்திருக்கலாம். மூன்றரைக்கு வந்தார்னு தப்பா சொல்ற நீ…”

“இல்லை சார், நான் கரெக்டாகத்தான் சொல்றேன்.”

“இருக்கவே இருக்காது மல்லிகா. சர்டன்லி யு ஆர் ராங்…”

“ப்ளீஸ் சார்… நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க… நேத்திக்கு நம்ம எம்டி மத்தியானம் மூன்று மணிக்குத்தான் கிளம்பிப் போனார். அதுக்கு அப்புறம்தான் நான் சாப்பிட்டேன். நான் சாப்பிட்டுட்டு வந்து ரிசப்ஷன்ல உட்கார்ந்த அஞ்சு நிமிஷத்துல அந்த ஜெயராமன் வந்தார். அதனாலதான் எனக்கு அவர் மூன்றரைக்கு வந்தது நல்லா ஞாபகத்ல இருக்கு.”

“சரி மல்லிகா…தேங்க்யூ வெரி மச்.”

நரசிம்மன் ரிசீவரை வைத்து விட்டார். சில நிமிடங்கள் அவருக்கு குழப்பமாக இருந்தது.

பிறகு ‘ஜெயராமன் பதினொன்னரை மணிக்குத்தான் வந்திருப்பான். மல்லிகா ஒரு சின்னக் குழந்தை…. அவள்தான் எதோ ஒரு நினைப்பில் அவன் மூன்றரைக்கு வந்ததாக தப்பாகச் சொல்கிறாள்’ என்ற துரதிர்ஷ்டமான தீர்மானத்துடன் அவருடைய அன்றைய வேலைகளில் ஆழ்ந்து விட்டார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *