கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 27, 2014
பார்வையிட்டோர்: 10,267 
 

“ஹையா..ஜாலி ஜாலி…எனக்குதான் நெக்ஸ்ட் வீக் புல்லா லீவே…ஹேய்ய்ய்ய்…” என்று கூவிக்கொண்டே ஆர்ப்பாட்டத்தோடு உள்ளே வந்தாள் அந்த வீட்டின் குட்டி தேவதை திவ்யா.

“பாத்து வாடா..விழுந்திடாத..என்ன திவிக்குட்டிக்கு இவ்வளவு சந்தோஷம்”என்றவாறே தன் காலைக் கட்டிக்கொண்ட பேத்தியைப் பார்த்துக் கேள்வி எழுப்பினார்.

“ஹய்யோ பாட்டி, எனக்கு இன்னும் டூ டேஸ் மட்டும் தான் ஸ்கூல்..அப்புறம் ஒன் வீக்…செவென் டேஸ் ஹாலிடே..ஜாலி டே பாட்டி”என்றவாறே பாட்டியையும் சேர்த்து தட்டாமாலை சுற்றத் தொடங்கினாள் திவ்யா.

“ஏய்..குட்டி என்ன இது..இப்படிப் பண்ணினா உன் பாட்டி கீழ விழுந்திடுவா..தலை சுத்தும்மா…விடு..விடுடா கண்ணு..”தாத்தாவின் குரல் கேட்டதும் திவ்யா பாட்டியை விட்டு தாத்தாவிடம் வந்தவள், “தாத்தா, எனக்கு ரொம்ப நாள் லீவ் விட்டா உங்க ஊருக்குப் போலாம்னு சொன்னீங்களே..அப்ப போலாம் தாத்தா..ப்ளீஸ் ப்ளீஸ்..” என்று கெஞ்சத் தொடங்கினாள்.

அவளைத்தூக்கி மடியில் இருத்திக்கொண்ட தாத்தா, “ போலாண்டா கண்ணு, போலாம்..ஆனா அதுக்கு முன்னாடி நீங்க ஹோம் வொர்க் முடிக்கணும்..அம்மாகிட்ட சொல்லணும்..அப்பா கிட்ட போறதுக்கு பெர்மிஷன் கேக்கணும்..எவ்ளோ வேலை இருக்கு..செய்வோம் சரியா?” என்று மனைவியைப் பார்த்தவாறே சொன்னார் பெரியவர்.

அவரின் பார்வையை சரியாய்ப் புரிந்து கொண்ட பாட்டியும், பேத்தியிடம், “ஆமாண்டா கண்ணா,,ஊருக்குப் போறதுக்கு அம்மா கிட்ட, அப்பாகிட்ட எல்லாம் கேட்டுக்கிட்டுப் போகலாம்..இப்பதானே நீ ஸ்கூல்ல இருந்து வந்த..போய் கை கால் கழுவிட்டு டிபன் சாப்பிட்டு வா..அப்புறமா நாம பேசலாம்..சரியா? என்று சொல்லவும் உள்ளிருந்து அனைத்தையும் கேட்டவாறே திவ்யாவின் அன்னை,பெரியவர்களின் மருமகள் பிருந்தா வெளிவரவும் சரியாய் இருந்தது.

“ஏய்..திவ்யா..எத்தனை தடவை சொல்றது உனக்கு..ஸ்கூல்ல இருந்து வந்ததும், அழுக்கோட இருக்கக் கூடாதுன்னு..வந்ததும் வராததுமா என்ன அரட்டை வேண்டியிருக்கு..போ போயி ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வா” என்றவள், பெரியவர்களைப் பார்த்து,”அவளுக்குத்தான் தெரியாது..நீங்களாவது உடனே கழுவ அனுப்பி விடலாம்ல..எவ்வளவோ கிருமிங்க வெளில இருக்கு..அதோட குழந்தை இருந்தா என்ன ஆகும்னு அறிவு வேண்டாம்..இதுல வேற ஊருக்குக் கூட்டிப்போறிங்களாக்கும்..எப்பப் பாத்தாலும் ஊரு ஊருன்னு பட்டிக்காட்டுப் பழக்கத்த என் புள்ளைக்குத் திணிக்கப் பார்க்கறீங்களா?இதோ பாருங்க..என் பொண்ணு இந்த லீவுக்கு எங்க அம்மா வீட்டுக்குப் பங்களூருக்குத் தான் போவா..நாங்க போறோம்.முடிவு பண்ணியாச்சு..இதைக் கலைக்கப் பாத்திங்கன்னா நிரந்தரமா உங்க கிராமத்தையேக் கட்டிக்கிட்டு அழ வேண்டியதாயிருக்கும..பாத்துக்கோங்க” என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட, பெரியவர்கள் இருவரும் அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்து விட்டனர்.

பெரியவர்கள் இருவரும் தஞ்சைப் பக்கம் ஒரு சிறு கிராமத்தில் இருந்து தன் மகன் ரமேஷின் மேற்படிப்பிற்காக, இருந்த நஞ்சை புஞ்சைகளை, அசையாச் சொத்துக்களை விற்று விட்டு நகரத்திற்குக் குடி பெயர்ந்தவர்கள்.தங்களிடம் இருந்த அனைத்தையும் மகனிற்காக இழந்தவர்கள், மகனை மருமகளிடம் முழுதுமாக இழந்துவிட்டதுதான் நிஜம்.அவர்களின் ஒரே ஆறுதல் பேத்தி திவ்யா மட்டுமே..அவளுக்கு இவர்களிடம் அலாதிப்பிரியம்..ஏழு வயதான போதும் வயதிற்கு மீறிய பக்குவமும் முதிர்ச்சியும் இயல்பாகவே இருந்தது.வார இறுதி விடுமுறை முடிந்து திரும்ப பள்ளி தொடங்கும் முதல் நாள் மட்டும் சற்றே அடம் பிடித்து, முகத்தில் சுணக்கம் காண்பிக்கும் அவள் அப்புறம் வரும் நாட்களில் இறக்கை கட்டிய பட்டாம்பூச்சியாய் வலம் வருவாள். பிருந்தாவும் வேலைக்குச் செல்வதால், தாத்தா பாட்டியின் செல்லம் அவள்..ஆறுதலும் அவளே..

பிருந்தாவைப் பொறுத்தவரை, பெரியவர்களுக்கு ஏதோ இரண்டு வாய் உணவிடுவதை மட்டும் கடமையாக நினைப்பவள்.அவளும் வேலைக்குச் செல்வதால் வீட்டில் எல்லா வேலையும் அவர்களிடம் வாங்கிவிடுவாள்.வயதானால் தள்ளாமையும் வரும்.அவர்களுக்கென்று சிறு சிறு விருப்பங்களும் உண்டு என்று நினைக்கமறந்துவிட்ட மருமகள் அவள்..

பெரியவர்களுக்கு சொத்து சுகம் இல்லையென்றாலும் கிராமத்து ஏழை இதயங்கள் அவர்களுக்குப் பட்டுக்கம்பளம் விரித்து அரவணைக்கக் காத்துக் கிடக்கின்றன.தாங்கள் வாழ்ந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்று அவர்கள் விரும்புவது தெரிந்தும் ஏதாவது முட்டுக்கட்டை போட்டு வீட்டுக்குக் காவலாக வைத்து விடுவாள் பிருந்தா.

பெரியவர்கள் தங்கள் விருப்பம் இந்த முறையும் நிறைவேறப்போவது இல்லை என்ற கவலையில் ஆழ்ந்திருக்க, பிரெஷ் ஆகி வந்து அமர்ந்தாள் அவர்களின் செல்லப் பேத்தி.

பள்ளிக்கதைகளை சொல்லிக்கொண்டே வந்தவள், “தாத்தா, எனக்கு இந்த தடவை நிறைய கரும்பு வேணும் தாத்தா..என் பிரெண்ட் வீட்டுல இப்பவே வாங்கிட்டாங்களாம்.நாம எப்போ வாங்குவோம்..உங்க ஊரில கரும்பு நிறைய கிடைக்குமா தாத்தா? என,

“அது..கிடைக்கும் ம்மா…அப்பா வந்ததும் நாமளும் போய் வாங்கலாம் சரியா?

“ஐயோ தாத்தா, அப்பா வந்ததும் இங்க வாங்கலாம்..ஆனா நாமதான் ஊருக்குப் போறோமே..அங்க கிடைக்குமா? நான் என் பிரெண்ட் கிட்ட சொல்லணும் தாத்தா” என்று அதிலேயே குறியாய் இருந்தாள் திவ்யா.

“என்ன உன் பிரெண்ட் கிட்ட சொல்லணும் குட்டி” என்று கேட்டவாறே ரமேஷ் வரவும், “ஹை அப்பா..வாங்க வாங்க நாம எப்போப்பா கரும்பு வாங்கப் போறோம்”என்று அவனைப் பிடித்துக் கொண்டாள்.

“ம்ம்..போலாம் போலாம்..நாளைக்கு நீ ஸ்கூல்கு போயிட்டு வந்ததும் போய்வாங்கலாம் ஓகே வா”

“சரிப்பா..அப்ப எப்ப ஊருக்குப் போலாம்?

“ஊருக்கா? எந்த ஊருக்கு? அம்மா ஊருக்கா? இங்க பாரு டிக்கெட்..நாம எல்லாரும் சண்டே கிளம்பறோம் ஓகே வா?”

“ம்ஹ்ம்..அங்க இல்லைப்பா…தாத்தா பாட்டி ஊருக்கு…அவங்க அங்க கூட்டிப் போறேன்னு சொல்லிருக்காங்களே..ரொம்ப நல்லா இருக்குமாம்ப்பா..சூப்பரா பச்சைப் புல்வெளி, பழத்தோட்டம், பிரெஷ் வெஜிடபிள்ஸ்..பிரெஷ் காத்து அப்புறம்..ம்ம்..தாத்தா இன்னும் ஏதோ சொல்வீங்களே..ஹான்..நல்ல நல்ல மனசு..இதெல்லாம் எனக்குக் காமிக்கேன்னு சொல்லிருக்காங்கப்பா தாத்தா..நீங்க இதெல்லாம் பாத்திருக்கீங்களாப்பா?

பேத்தி பேச ஆரம்பித்தவுடனேயே பெரியவர்களின் முகம் மாறத்தொடங்கி மகன் என்ன சொல்லப் போகிறானோ என்று நினைத்தபடி இருக்க, அவனோ இருவரையும் பார்த்தவன் ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்று விட்டதும் இருவரிடமிருந்தும் நிம்மதிப் பெருமூச்சுக் கிளம்பியது.தொடர்ந்து அப்பா என்றபடி உள்ளே செல்ல முயன்ற திவ்யாவைத் தடுத்து, “அப்பா காபி குடிச்சிட்டு வரட்டும்டா..அப்புறம் பேசலாம்” என்று தன்னிடம் இருத்திக்கொண்டார் பாட்டி.

மெதுவாக அவளிடம், “திவிக்குட்டி, அப்பா இந்தத் தடவை லீவுக்கு அம்மா ஊருக்கு டிக்கெட் எடுத்திட்டாங்கள்ள,,அதனால நாம பெரிய லீவுக்கு கிராமத்துக்குப் போலாம்..அங்க போகணும்னு அடம் பண்ணக்கூடாது சரியா? என,

பாட்டியின் முகத்தைப் பார்த்துவிட்டு “ஹ்ம்..எப்பாப் பார்த்தாலும் இப்படியே சொல்றீங்க பாட்டி என்று மறுப்பாகத் தலையை ஆட்டினாள் திவ்யா

“அதில்லைடா…எதையுமே வீணாக்கக் கூடாதுன்னு மிஸ் சொன்னாங்கள்ல,அப்ப டிக்கெட் வீணாகக் கூடாதுன்னு தான் டா பாட்டி அப்படி சொல்றாங்க” என தாத்தா கூற,

“சரி..பட் நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா போனும் ஓகே வா என்று பேரம் பேசினாள் திவ்யா.

சரி என்று ஒத்துக்கொண்ட தாத்தா, “ போடா போய் ஹோம் வொர்க் பண்ணிட்டு வா..சீக்கிரமா முடிச்சா நாம விளையாடலாம்” என்று அவளை உள்ளே அனுப்பினார்

ஹோம் வொர்க் செய்யும் போதே, திடீரென்று ஞாபகம் வந்தவளாக, “அம்மா..இன்னிக்குப் பொங்கல், போகி பத்தி மிஸ் சொல்லிக்குடுத்தாங்கம்மா”என்றாள் திவ்யா

“அப்படியா..என்ன சொன்னாங்க பொங்கல் பத்தி”என பிருந்தா கேட்க,”சூரிய பகவானுக்கு நன்றி சொல்லத்தான் கொண்டாடறோம் னு சொன்னாங்கம்மா..அப்புறமா நாம சாப்பிட புட் குடுத்து, மில்க் குடுத்து நமக்கு ஹெல்ப் பண்ணற எல்லாருக்கும் தாங்க்ஸ் பண்றதுக்குதான் கொண்டாடறோம்னு சொன்னாங்க”

“ம்ம்..திவ்யாக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கே..வெரி குட்..அப்ப போகி பத்தி ஏதும் சொல்லலையா”என்றான் இதைக் கேட்டுக்கொண்டிருந்த ரமேஷ்.

“போகின்னா நம்ம வீட்டுல இருக்கற வேஸ்ட் திங்க்ஸ், குப்பை எல்லாத்தையும் கிளீன் பண்ணனும்னு சொன்னாங்க..அப்போ நம்ம வீட்டுலயும் கிளீன் பன்னுவோமாப்பா”

“ஆமா டா..நாமளும் பண்ணுவோம்..அதுக்குத்தான் தாத்தா பாட்டியை ஊருக்குப் போகக்கூடாதுன்னு சொன்னேன்.நாம நம்ம பாட்டி வீட்டுக்குப் போயிட்டு வரதுக்குள்ள தாத்தாவும் பாட்டியும் இங்க சுத்தமா எல்லாத்தையும் செய்ஞ்சு வச்சிடுவாங்க..அதனால கிராமத்துக்குபோக முடியாதுன்னு சொன்னேன்” என்றாள் பிருந்தா

கேட்டுக்கொண்டிருந்த ரமேஷ் க்கும் சுருக்கென்றது..வெளியில் இருந்த பெரியவர்களுக்கும் மனம் வலித்தது.

தன் தாய் சொன்னதைக் கேட்ட திவ்யா ஏதும் சொல்லாமல் எழுதத் தொடங்கினாள்.சிறிது நேரம் கழித்து, “எங்க மிஸ் இன்னொன்னும் சொன்னாங்கம்மா,எங்க கிளாஸ்ல படிக்கற ராஜு மிஸ்கிட்ட, எங்க வீட்டுல குப்பையே இல்ல, கௌ கூட இல்ல அப்ப எப்படி கிளீன் பண்றது? எப்படி தாங்க்ஸ் பண்றதுன்னு கேட்டான்மா?

“என்ன சொன்னாங்க உங்க மிஸ்? என ரமேஷ் கேட்க,

“போகின்னா வீட்டைச் சுத்தப் படுத்தறது மட்டுமில்லை..நம்ம மனசுல இருக்கற கெட்ட எண்னங்களைச் சுத்தப் படுத்தறது தான்..நீங்கல்லாம் யாருக்காச்சும் தப்பு பண்ணிருந்தா சாரி கேட்கலாம்.யாராச்சும் சின்னதா உதவி பண்ணினா கூட தேங்க்ஸ் பண்ணலாம்..வீட்டுல நம்மைப் பாத்துக்கற பெரியவங்களுக்குத் தொல்லை இல்லாம இருக்கலாம்..அப்படின்னு சொன்னாங்கப்பா” என்றவள்

“ஏம்ப்பா…நம்ம வீட்டுலயும் குப்பை இல்லை, கௌ இல்லை..என்னைப் பாத்துக்கறது, எல்லா வேலையும் செய்றது பாட்டியும் தாத்தாவும் தானே..அப்ப நாம அவங்களுக்குத்தானே தேங்க் பண்ணனும்..அவங்கள விட்டுட்டு நாம மட்டும் ஊருக்குப் போறது தப்பில்லையாப்பா? என்றவள்,ஏதோ யோசித்து விட்டு

“அவங்க ஊருக்குக் கூட நீங்க அனுப்ப மாட்டேண்றீங்கப்பா..நான்வேணா உங்க கூட வரேன்..தாத்தா பாட்டி அவங்க ஊருக்குப் போகட்டும் பா..நாம வந்து எல்லாம் கிளீன் பண்ணிக்கலாம்..ப்ளீஸ் பா.”எனவும்,

சுரீரென்று அறைபட்டாற்போல் நிமிர்ந்தான் ரமேஷ்.

சின்னக் குழந்தைக்கு இருக்கும் அறிவு தனக்கில்லையே..தன் வாழ்வு, தன் சந்தோஷம் என்றே வாழ்ந்த ஜீவன்களின் சின்ன ஆசையைக்கூட நிறைவேற்றாமல் இருக்கும் தான், பொங்கலும் போகியும் கொண்டாட தேவையே இல்லை என நினைத்தவன் மனைவியை நோக்க, அவளும் திவ்யாவின் பேச்சில் திகைத்திருக்கக் கண்டான்.

கணவனை ஒரு பார்வைப் பார்த்த பிருந்தா, “ ஆமா திவ்யாக்குட்டி,நீ சொல்றது தான் கரெக்ட்..ஆனா நாம எல்லாரும் தாத்தா பாட்டி ஊருக்கேப் போலாம்.நீ கேட்டமாதிரி எல்லாத்தையும் பாக்கலாம்..ஓகே வா”என்றவள் எழுந்து தன் மாமனார் மாமியாரிடம் வந்து,

“சாரி மாமா, சாரி அத்தை..நான் உங்களுக்குன்னு மனசு இருக்கும்னு யோசிக்கல, வேலை வாங்கறத தப்பாவும் நினைக்கல..ஆனா திவ்யா சொல்லும்போது தான் வேலைக்கு மட்டுமே பயன்படுத்தியிருக்கேன்னு தோணுச்சு. இந்த தடவை பொங்கல் உங்க ஊருல தான்..சாரி சாரி நம்ம ஊருல தான்..ஓகே வா” என்று கூற,

பெரியவர்கள் இருவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தத் தொடங்க, நிம்மதியான மனதோடு தன் மகளை முத்தமிட்டாள் பிருந்தா..அவளோடு ரமேஷும் இனைந்து கொண்டான்.

இவர்கள் வாழ்வில் போகிப் பண்டிகை கூட பொங்கலாகி விட்டது நிஜம்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *