போட்டார்களே ஒரு போடு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: June 14, 2023
பார்வையிட்டோர்: 8,798 
 
 

(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஜப்பானியர் இந்நாட்டை ஆக்கிரமித்திருந்த காலத்தில் இங்கு இல்லாதவர்கள் கதை கேட்பதற்கென்றே கடவுளால் படைக்கப்பட்டவர்கள்!

அப்போது இங்கு இருந்தவர்கள் கதை சொல்லப் பிறந்தவர்கள்!

ஜப்பான் காலத்திலே அவர்கள் பட்ட அவதிகள், அடைந்த இன்னல்கள், அனுபவித்த தொல்லைகள், சுமந்த துன்பங்கள்……

ஜப்பான்காரன் படுத்திய பாடுகள், சித்திர வதைகள், படுகொலைகள், பயங்கர கொடுமைகள்……. எல்லாவற்றையும் கதை கதையாக அவர்கள் இன்னமும் சொல்கிறார்களே!

நம் விழிகளில் நீர் கசியவைக்கும் சோகம் நிரம்பிய அக்கதைகளையெல்லாம் தொகுத்துப் பிறகு ஒரு பெருங் கதையாக்கலாமே என்று எனக்கு நீண்டகால நினைப்பு.

சமீபத்தில் தான் என் நினைப்பைச் செயலாக்கத் துணிந்து காரியத்தில் இறங்கினேன்.

ஒரு முரட்டு நோட்டுப் புத்தகமும் பேனாவும் எடுத்துக் கொண்டு கதை திரட்டப் புறப்பட்டேன்,

ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களாக இந்நாட்டில் வெகுகாலம் இருப்பவர்களாகப் பலபேரிடம் கதை கேட்பது என் திட்டம்.

நான் அணுகிய ஒவ்வொருவரும் மிகவும் ஆர்வத்துடன் ‘ஜப்பான் காலத்துக் கதைகளை’ விவரித்து முடித்தார்கள் -நான் எதிர்பார்த்தபடியே.

ஆனால், கதையை முடிக்கும்போது அவர்கள் ஒவ் வொருவரும் ‘போட்டார்களே ஒரு போடு’ அதுதான் நான் சற்றும் எதிர்பார்க்காததாயிருந்தது!

கதைகளைக் காட்டிலும் மிக மிகச் சுவையான விஷயமும் அதுதான்!

என்ன ‘போடு’ அது என்கிறீர்களா? இதோ, கதைகளைக் கேளுங்கள்.


முதலாம் ஆசாமி ஒரு படகுத் தொழிலாளி. முப்பது வருசங்களுக்கு முன் இந்நாட்டுக்கு வந்ததிலிருந்து அவருக்கு இதே தொழில் தானாம். அவர் சொல்கிறார்:

‘ஜப்பான் காலத்துக் கதையை ஏனய்யா கேட்கிறே? கஷ்டம்னா அப்போ நாங்க அனுபவிச்சதுதான் கஷ்டம். உடுத்துறதுக்குத் துணி கிடைக்காதய்யா. சாக்குகளைத் தான் கட்டிக்கிட்டிருந்தோம். அந்தச் சாக்குகள் எங்கேயிருந்து கிடைச்சதுன்னு ஜப்பான்காரன் விசாரிப்பான். ‘பட் பட்’டுனு பதில் சொல்லணும். இல்லாட்டிம். அந்த அநியாயத்தை ஏன்யா கேட்கிறே? ஓங்கிக் கன்னத்திலெ அறைவான் பாரு…அறைன்னா எப்பேர்ப்பட்ட அறை? கன்னம் பிச்சுக்கிட்டு போயிடும்! அப்பேர்ப்பட்ட அறையை வாங்கிச்கிட்டு அசையாமெ நிக்கணும், அழக்கூடாது. அலறக்கூடாது. இது ஜப்பான்காரன் சட்டம். மீறினால்…தொலைஞ்சோம். என் கூட்டாளி ஒருத்தன் செத்தே போயிட்டான் அய்யா, அறை தாங்க முடியாமல்!”

ஜப்பான்காரனின் ‘அறை மகிமை’யை அதற்கு மேல் நீட்ட விடாமல் இடைமறித்தேன்; ‘அப்போ துணிக்குப் பதிலாக நீங்களும் சாக்கைத்தான் உடுத்தினீர்களா?

‘இல்லைங்க’ என்றார்.

“எப்போதாவது ஜப்பான்காரனிடம் அறை வாங்கினீர்களா?”

‘அதுவுமில்லைங்க’ என்று மறுத்த அவர் தொடர்ந்து சொன்னார்: ‘நான் வேலை செய்கிற படகிலே அப்போது கப்பல்களிலிருந்து துணி ‘பேல்’களை இறக்கிக் கரைக்கு இழுத்து வருவோம். அந்தச்சமயம் எனக்கு வேணும்கிற துணிமணிகளை அதிலேயிருந்து எடுத்துக் கொள்வேன், அதனாலே எனக்கு மட்டும் துணிக் கஷ்டம் ஏற்பட்டதில்லை!’

‘நீங்க அப்படி எடுத்தது ஜப்பான்காரனுக்குத் தெரிஞ்சாத் தொலைச்சிருப்பானே?’ என்றேன்.

‘எங்களுக்கு மேலதிகாரியாயிருந்த ஜப்பான்காரன் எனக்கு ரொம்பச் சிநேகம். நான் என்ன செய்தாலும் எதைத் திருடினாலும் சிரிச்சுக்கிட்டே போயிடுவான்’ என்றார் பெருமையோடு!

‘ம்…நாட்டிலே மற்றவர்கள் எல்லாரும் கட்டத் துணியில்லாமல் கஷ்டப்பட்டபோது நீங்கள்மட்டும்..’ என்று நான் கேட்டு முடிப்பதற்குள் அவர் முந்திக் கொண்டு பதில் கூறினார். ‘என்னுடைய நல்லநேரம், நான் மட்டும் துணிக்குக் கஷ்டப்படவில்லை!’


உத்தியோகத்திலிருந்து-மன்னிக்கவும். ‘அடிக்கடி உத்தியோகம் என்பார். அதை அலுவல் என் றுரைத்திடு தம்பி’ என்கிறார் பாரதிதாசன். ஆகவே, ‘அலுவலிலிருந்து ஓய்வு பெற்ற ஒருவரிடம் அடுத்துக் கதை கேட்டேன். அவர் சொல்கிறார்:

‘ஜப்பான் காலத்துக் கஷ்டங்களில் ‘தலைசிறந்த’ கஷ்டம் சாப்பாட்டுக்குப்பட்ட கஷ்டம்தான். கோது மையோ அரிசியோ கிடைப்பது குதிரைக் கொம்பு தான். நவதானியங்களையோ, புளி, மிளகாய், எண் ணெய் முதலிய சாமான்களையோ கண்ணால் காணவும் முடியாது. ரொட்டிகள், பழங்கள் எல்லாம் சொப்ப னத்தில் கூடத் தென்படமாட்டா. அப்புறம் ஜனங்கள் எதைச் சாப்பிடுவார்கள்? என்ன செய்வார்கள்?

“மரவள்ளிக் கிழங்குதான் கிடைக்கும். பசி தாங் காமல் அதை அவித்துத் தின்றவர்ககளுக்குக் கால், கையெல்லாம் வீங்கி விறைத்துப்போகும். அந்த வீக்கம் அப்போது ஒரு வியாதியாகவே பரவிவிட்டது. எங்கே பார்த்தாலும் கால், கை வீங்கிய மனி தர்கள் சுருண்டு விழுந்து கிடப்பார்கள். ஒரு மாதிரியான துர் நாற்றம் வேறு மூக்கைத் துளைக்கும்.

“இந்த வியாதியாலும், பசியாலும், பட்டினியாலும் அலைந்து திரிந்து தவித்துத் துடித்துச் செத்தவர்கள் எத்தனையோ ஆயிரம் பேர்……”

கொடும் பசியின் கோரக் கதையை இதற்குமேல் செவி மடுக்க எனக்குப் பொறுமையில்லை. மனம் உரு கியது. ‘அத்தகைய பயங்கரப் பஞ்சத்தில் நீங்கள் தப்பிப் பிழைத்தது கடவுள் செயல்தான். இல்லையா?’ என்று உண்மையான பரிவுடன் கேட்டேன். அதற்கு அவர் கூறிய மறுமொழி என்னைத் தூக்கி வாரிப் போட்டது!

“என்னுடைய குடும்பத்தை மாத்திரம் அப்போது பஞ்சம் நெருங்கவில்லை. பசியின் நிழலோ, பட்டினியின் சாயலோ படவில்லை.”

“அப்படியா? ஜப்பான் காலத்தில் நீங்கள் ‘மாத்திரம்’ சகல வசதிகளுடனும் வாழ்ந்தீர்களா?” என்று வியப்புடன் கேட்டேன், என் கேள்வியில் ‘மாத்திரம்’ என்ற வார்த்தையை அழுத்தமாக உச்சரித்தேன். ‘ஆமாம்’ என்று பதிலுக்கு அவரும் அழுத்தமாகவே சொல்லிக் கதையை மேலும் தொடர்ந்தார்:

‘அந்தச் சமயத்திலே நான் ஸ்டோர் கீப்பரா’க வேலை பார்த்தேன். என்னுடைய ஸ்டோரில்தான் உணவுப் பொருள்கள் எல்லாம் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். அரிசி என்ன, பருப்பு என்ன, தானிய வகையறாக்களென்ன, ரொட்டிகளென்ன, டின்னில் அடைத்த இறைச்சிகளென்ன, பழங்கள் என்ன, இன்னும் என்னென்னவோ எல்லாம் இருக்கும்.

“எனக்கு மேலதிகாரியான ஜப்பானிய ஆபீசருக்கு என்மீது அபார நம்பிக்கை. ரொம்பப் பிரியம். ஆகவே, ஸ்டோரிலிருக்கும் எந்தப் பொருள் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளும்படி அனுமதி அளித்திருந்தார்.

‘நான் எடுத்துக் கொள்வது போதாதென்று சில சமயங்களில் அவராக எவ்வளவோ தருவதும் உண்டு. ஒரு சமயம் பாருங்கள்; என் ஐந்து வயது மகன் அந்த ஜப்பான்கார ஆபீசருடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது ஆபீசர் கொஞ்சம் அரிசியை அள்ளி என் மகனுடைய சட்டைப் பையிலே போட்டார். இவன் மற்றொரு பையைக் காட்டி அதிலும் அரிசி போடச் சொன்னான். ‘ஏண்டா பயலே, வீட்டில் அரிசி கிடையாதா?’ என்று வேடிக்கையாகக் கேட்டார் ஆபீசர், ‘இல்லை’ எள்றான் பயல். அதைக் கேட்டதும் அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. உடனே ஒரு லாரியில் முப்பதுமூட்டை அரிசியை ஏற்றி என் வீட்டுக்கு அனுப்பிவிட்டு பையன் கன்னத்தைத் தட்டிக்கொண்டே ‘போதுமா பயலே?’ என்றார்!

‘என் வீட்டில் அப்போது மூட்டை மூட்டையாக அரிசி குவிந்து கிடக்கும். எத்தனையோ வீடுகளுக்கு நான் அரிசி வழங்கியுமிருக்கிறேன்!’ என்று கதைத்து முடித்தார்.

‘நாடு முழுவதும் கடும் பஞ்சம். கொடிய வறட்சி. பசி பட்டினி. ஆனால், நீங்களும் உங்கள் குடும்பமும் வளமாக வாழ்ந்திருக்கிறீர்கள், இல்லையா?’ என்று பொடி வைத்தே கேட்டேன் நானும்.

பொடி வைக்காமல் பதில் அளித்தார் அவர். ‘என்னுடைய நல்ல நேரம்தான் அதற்குக் காரணம்!’


நான் கதை கேட்ட மூன்றாம் மனிதர் ஒரு காரோட்டி.

பலசரக்குக்கடை முதலாளியாயிருந்த இவர் காரோட்டியாக மாறியதே ஜப்பானியரால் தானாம்.

ஜப்பானியச் சிப்பாய்கள் ஒருநாள் திடு திடு’ வென்று ஊருக்குள் பிரவேசித்தார்களாம். அவர்களில் சிலபேர் இவருடைய பலசரக்குக் கடைக்கு முன்னால் வந்து நின்று கொண்டு இவரை வெளியில் வரும்படி கை அசைத்துக் கூப்பிட்டார்களாம். என்ன செய்யப் போகிறார்களோ என்று பயந்த இவர் சற்றுத் தயங் கவே, ஜப்பானியச் சிப்பாய்கள் துப்பாக்கிச் சனியனை இவருடைய மார்புக்கு நேராகப் பிடித்துக்கொண்டு ‘நட’ என்றார்களாம். சாவி கொடுத்த பொம்மை மாதிரி இவரும் நடந்தாராம். சாலை ஓரம் நின்ற ஒரு காருக்குள் அந்த ஜப்பான் சிப்பாய்கள் ஏறி அமர்ந்து கொண்டு இவரை நோக்கிக் ‘காரை ஓட்டு’ என்று சைகை காட்டினார்களாம்.

கார் ஓடும் என்பதைத் தவிர அது எப்படி ஓடும். எப்படி ஓட்டுவது என்பதெல்லாம் கடுகளவும் தெரியா தவர் இவர்! அதோடு, இவரை ‘ஜன்ம விரோதி’ யாகப் பாவிக்கும் எதிர்த்த கடைக்காரருடையதாம் அந்தக் கார்! அதை ஓட்டும்படி துப்பாக்கி முனையில் ஜப்பான் காரன் உத்தரவு!

ஆசாமியின் நிலைமை எவ்வளவு பயங்கரமாகவும் பரிதாபகரமாகவுமிருந்திருக்கும்?

மேல் மூச்சு கீழ்மூச்சு இழுக்க, வியர்வை ஆறாய்ப் பெருக, கண்கள் இருள, கைகால்கள் வெடவெட வென்று நடுங்க…… ‘கடவுளே’ என்று கதறியபடி ஏறி னாராம் காருக்குள்!

‘எதை இழுத்தேனோ, எதைத் திருகினேனோ, எதை மிதித்தேனோ, எதைத் திறந்தேனோ, என்ன தான் சைய்தேனோ…எனக்கு எதுவும் தெரியாது! ஆனால் அந்தக் கார் ஒரு துள்ளுத் துள்ளி ஒரு குதி குதித்துக் குமுறி இரண்டு மூன்று தரம் பாய்ந்து, எகிறி ஏழெட்டு முறை தாவி, குலுங்கு குலுங்கென்று குலுங் கிப் பிறகு நின்று அப்புறம் கிளம்பியதுதான்-ஒரே ஓட்டமாக அது எப்படியோ எங்கெங்கோ ஓடியது…” என்று தன் அனுபவத்தை விவரித்தார் முன்னாள் பல சரக்குக் கடை முதலாளியும் இந்நாள் காரோட்டியு மான அவர்.

‘எவ்வளவு முட்டாள் தனமான கொடுங்கோலர்கள் அந்த ஜப்பான்காரர்கள். சே!’ என்றேன் அனுதாபம் தொனித்த குரலில்.

மற்றவர்களுக்கு ஜப்பான்காரர்கள் கொடுங்கோலர்கள் தாம், சித்திரவதைக்குத் சிறிதும் அஞ்சாதவர் கள் தாம். ஆனால், எனக்கு அவர்கள் எவ்வளவோ நல்லவர்கள்’ என்று கடைசியில் ஒரு ‘ஜப்பான் குண்டையே’ தூக்கிப் போட்டார் காரோட்டி.

துள்ளி நிமிர்ந்தேன், ‘எப்படி அது?’ என்று கேட்டுக்கொண்டு.

‘அன்றைக்கு என்னைப் பயமுறுத்திக் காரோட்ட வைத்த அந்தச் சிப்பாய்கள் அவர்களுடைய மேலதிகாரிகளிடம் என்னைக் கூட்டிப் போய் நிற்கவைத்து அவர்கள் மொழியில் என்னைப் பற்றி ஏதோ சொன்னார்கள். பிறகு அவர்களாகச் சிரித்துக்கொண்டார்கள். அன்று முதல் அவர்களுக்குக் காரோட்டியாக என்னை அமர்த்திவிட்டார்கள். ஜப்பான்காரர்களிடம் வேலை செய்தவர்களுக்கு அப்போது ஒரு குறையுமில்லை. துணிப் பஞ்சம் ஏது? சோற்றுப் பஞ்சம் ஏது? இதெல்லாம் மற்றவர்களுக்குத்தான், சொல்லப்போனால் அந்த ஜப்பான் காலத்தில் ராஜபோக வாழ்க்கை வாழ்ந் தவன் நான்’ என்று கதையை முடித்தார் காரோட்டி.

சொல்லொண்ணாக் கொடுந் துயரில் மக்களெல் லாம் துவண்டபோது இவர் வாழ்ந்தது வெறும் போகமில்லை-ராஜபோகம்! எப்படியிருக்கிறது கதை!


ஒரு பானைச் சோற்றுக்கு மூன்று சோறு பதம் பார்த்தால் போதா?

நான் கதை கேட்ட நபர்கள் அனைவருமே இப் படித்தான் சொல்கிறார்கள்-‘நான் மட்டும் கஷ்டப் படவில்லை’ என்று!

ஜப்பான் காலத்திலே குடிக்க நீரின்றித் தவித்தவர்கள், உண்ணச் சோறின்றிச் செத்தவர்கள், உடுத்தத் துணியின்றி அலைந்தவர்கள் யார் யாரென்றால் நம்மிடம் கதை சொல்கிறவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாருமாம்!

ஜப்பான்காரர்களின் கொடுமைக்கு இலக்கானவர்கள், படுகொலைக்குப் பலியானவர்கள், அடி உதைக்கு ஆளானவர்கள் யார் யாரென்றால் நமக்கு அந்தக் காலத்துக் கதை சொல்லும் ஆசாமிகளைத் தவிர மற்றவர்கள் தாமாம்.

ஆயிரம் பேரை விசாரித்துப் பார்த்தாலும் சரி தான். மற்றவர்கள் எல்லாரும் படாத பாடுபட்டார்கள். நான் மட்டும் சுகமாக இருந்தேன்’ என்று தான் ஆயிரம் பேரும் சொல்கிறார்கள்!

மனிதர்களின் சுய கௌரவம் எப்படியெல்லாம் விசித்திரமாகப் புளுக வைக்கிறது பாருங்கள்!

– மீன் வாங்கலையோ, முதற் பதிப்பு: 1968, மாதவி இலக்கிய மன்றம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *