காதல் ‘எங்கி’கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 22, 2023
பார்வையிட்டோர்: 6,489 
 
 

(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உயிருக்குயிரான ஒரு நண்பனுக்கு மூவாரில் திருமணம். அழைப்பிதழ் வந்தது. அத்துடன் அன் புக் கட்டளையுமிருந்தது பின்வருமாறு:-

“குடும்பத்தோடு கட்டாயம் கட்டாயம் கட்டாயம் வரவேண்டும்!”

வரவேண்டும் என்று அழைத்தது சரிதான். கட்டாயம் என்று கூப்பிட்டதும் சரிதான். ஆனால், ‘குடும்பத்தோடு,’ என்று குறிப்பிட்டதுதான் கொஞ்சமும் சரியில்லை!

நான் சம்சார சாகரத்தில் விழுந்து பத்தாண்டுகள் ஆகப்போகின்றன. இந்தப் பத்தாண்டு கால உலக மக்கட் பெருக்கத் தொகையில் என் பங்கும் கணிசமாக உண்டு. அதாவது, ‘எங்க குடும்பம் பெரிசு!’

பக்கத்துத் தெருவில் இருக்கும் உறவினர் வீட்டுக் குப் போய் வருவதென்றால்-அதாவது ‘குடும்பத் தோடு போய் வருவதென்றால்—புறப்படத் தயாராவதி லிருந்து போய்ச் சேர்ந்து திரும்பி வீடு வந்து சேருவது வரையில் நிகழும் அவதிகள், அடிதடிகள், ஆர்ப்பாட் டங்கள் இன்னபிற நவரச நாடகங்கள் எல்லாம் எவ் வளவு என்கிற கணக்கு மணமாகி ஆண்டுகள் சில ஆன பிறகுதான் புரியும்! ‘பேச்சிலர்’ நண்பனுக்கு எப்படிப் புரியும்? புரியாததால் தான் எளிதாக எழுதிவிட்டான் குடும்பத்தோடு வருகவென்று.

திருமணச் செய்தி வெளிப்பட்டதும் குதூகலத்தோடு புறப்படத் தயார் என்று என் குடும்பம் அறிக்கை விடுத்தும் நான் மட்டுமே மூவாருக்கு புறப்பட்டேன்.

குடும்பம் என்னுடன் கிளம்புவதைத் தவிர்ப்பதற்காக நான் புளுகித் தள்ளிய சாக்குப் போக்குகளையும் சமாளிப்புகளையும் எழுதுவதென்றால் அதுவே ஒரு தனிப் பெருங் கதையாகும். அதிருக்கட்டும்.


ஜோகூருக்குப் பஸ்ஸில் வந்து சேர்ந்தபோது பிற்பகல் மணி மூன்று இருக்கும். பேசாமல் பஸ்ஸி லேயே மூவாருக்குப் புறப்படாமல் டாக்சியில் ஏறியது தான் வம்பை விலை கொடுத்து வாங்கிய கதையாகி விட்டது.

டாக்சியில் டாக்சியோட்டிக்குப் பக்கத்தில் நான் அமர்ந்தேன். பின்புற இருக்கையில் விவசாயிபோல் தோற்றமளித்த ஒரு மலாய்க்காரரும் ஓர் இளஞ் ஜோடியும் இருந்தார்கள்.

அது காதல் ஜோடியா கல்யாணமான ஜோடியா என்பது கடைசியில் தான் தெரிந்தது.

இளஞ் ஜோடி என்றால் அது எந்த இனத்தைச் சேர்ந்த இளஞ் ஜோடி என்பது ஆராய்ந்து கண்டறிய வேண்டிய விவகாரமாயிருந்தது! பார்த்ததும் புரிந்து கொள்ள முடியாத ‘எங்கி இனம்!’

முதலில் என் கண்களில் தென்பட்டது அவர் களுடைய ‘பரட்டைத் தலை’ முடி அலங்காரம்தான்.

எண்ணெய் தடவி எத்தனை காலமாகி விட்டதோ?- செம்பட்டையாயும் பஞ்சுபஞ்சாயும் காற்றில் ஊசலாடி யது. ஆடவனின் குடுமி முன்னோக்கி நின்ற கம்பீரம், ற பெண்ணின் கூந்தல் வானத்தை நோக்கிய ஒய்யாரம்… ‘எங்கித் தனம்’ எவ்வளவு ‘பளிச்’சென்று தெரிகிறது!

ஆண் எங்கிக்கு இருபது வயதிருக்கும். ஒட்டிய வயிற்றோடு ஒட்டிக் கிடந்த பனியன்மீது ‘சிவப்பிந்தி யன்’ உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. குண்டர்கள் குழுவின் அடையாளங்களில் இது ஒன்று என்பதாகக் கேள்ளிப்பட்டிருக்கிறேன். அவனைப் பார்த்தால் கொஞ்சமாவது ‘குண்டாக’ இல்லை. “கொத்தவரக் காய் வத்தல் கேங்” என்று ஏதாவது இருந்தால் மட்டுமே அவனைச் சேர்த்துக்கொள்ள முடியும். அவன் கால்சட்டை உடுத்தியிருந்தது நன்றாக உற்றுப் பார்த்த பிறகுதான் கண்ணுக்குப் புலப்பட்டது. அவ்வளவு பிடிப்பான கால்சட்டை. உடுத்தும்போது எத்தகைய சித்திரவதை அனுபவிப்பானோ பாவம்! ஆனால் கழட்டும் போது பாம்புக்குத் தோல் உரிப்பதுபோல் ஒருவழியாக உரித்து எடுத்து விடலாம்!

சட்டைப் பொத்தான்களைப் பொருத்திக் கொள் ளாமல் திறந்த மார்போடு, காட்சியளிக்கும் எங்கி களின் “இண்டர் நேஷனல்” நடைமுறையில் அணு வளவும் பிசகவில்லை அவன்!

இந்தக் கூட்டத்துக்காகப் பொத்தான்கள் வைக் காமலேயே சட்டைகள் தைக்கலாம். இதனால் பொத் தான்கள் உபயோகம் குறைந்து விலையும் குறையக் கூடும்.

கால் சட்டைக்காகவோ இடுப்புக்காகவோ என்றில்லாமல் கைத்துப்பாக்கிச் சின்னம் ஒன்றைக் காண்பிக்க வேண்டும் என்பதற்காகவே அவன் இடைவார் (பெல்ட்) அணிந்திருந்தது குறிப்பிடவேண்டிய இன்னொரு ‘ஸ்டைல்!’

மூக்குக்குக் கீழே கொஞ்சசம் கரி தடவினாற்போல் தெரிந்தது. அது அரும்பு மீசையாக இருக்கலாம்!

விரலிடுக்கில் அவன் ‘சிகரட்’ பிடித்திருந்த ஆடம் பரமும், உதடுகளை நெளித்து குவித்து வளையம் வளைய மாகப் புகையை ஊதித் தள்ளிய அலட்சியமும் சிகரெட் டைக் கண்டுபிடித்துத் தயாரிக்கும் மேனாட்டான் பார்வையில் படவேண்டிய அரிய காட்சி!

வானம் மப்பும் மந்தாரமுமாயிருந்தும் கூட அவன் கண்களை மறைத்திருந்த கறுப்புக் கண்ணாடியைக் கழட்டவேயில்லை. அதற்குக் காரணமும் கடைசியில் தான் விளங்கியது.

நிற்க,

அவனுக்கு நானென்ன மட்டமா?’ என்று சவால் விடுவதுபோல் பக்கத்தில் கொலுவீற்றிருந்தது ‘பெண் எங்கி!’

முதலில் தான் தலை அலங்காரம் கண்டுவிட்டோமே இப்போது முக அலங்காரம் காணலாம்.

மீன் விழிகள் மான் விழிகள் என்றெல்லாம் பெண் களின் கண்களை வர்ணிக்கிறார்கள், இந்த எங்கிப் பெண்ணின் விழிகளைப் பார்த்தால் ‘பேய் விழிகள் போலிருந்தன! அவற்றைக் காணும் யார் விழிகளும் நடுங்கும்! விழிகளா அவை? முழிகள்! அம் முழிகளைச் சுற்றிலும் தடவியிருந்த கருப்பு மையைக் கழுவுவ தென்றால் நூறு காலன் தண்ணீர் போதாது!

கன்னங்களைச் சிவந்த கன்னங்களாக்குவதற்கும் பவுடர் பூச்சுப் பூசியதெல்லாம் பலிக்காமல் கன்னம் வெறும் கன்னமாகவே அழுதது! பவுடர் விலகியிருந்து பகட்டுக் காட்டியது!

உதடுகளில் அப்பியிருந்த சிவப்புச் சாயம் சகிக்க முடியாத கோரம்! இப்படிக் ‘கோவைச் செவ்வாய்’ காட்டாமல் வெறும் வாயுடன் இவர்கள் இருந்தால். பிசாசுகள் எப்படியிருக்கும் என்பதை அறியாத நமக்குப் பிசாசுகளின் நினைவே வராது!

முக அலங்காரம் இந்த லட்சணத்தில் இருக்கும் போது உடை அலங்காரம் எந்த லட்சணத்தில் என்பதை எழுத வேண்டுமா, என்ன?

‘ஆடையைப் பாரு. ஜாடையைப் பாரு, பெண்ணல்ல இது பெண்ணல்ல’ என்ற பாட்டுக்காகவே அவ தரித்த ஜென்மம்! அது எப்படியிருக்கும் என்று கற்பனை செய்துகொள்வது சுவாரஸ்யமாய் இருக்கும்.

வத்தல் உடம்புக்குச் சற்றும் பொருத்தமில்லாத செயற்கை அலங்காரங்களால் உயிருள்ள ஒரு மரப் ‘பாச்சிபோல் ‘ஜொலிப்பைக்’ கொட்டிக்கொண்டிருந்த அந்த எங்கிப் பெண்ணுக்கு ஒரே ஓர் அங்கம் மட்டும் உண்மையிலேயே அழகாக அமைந்திருந்தது. அது தான் பல் வரிசை!

மல்லிகை மொட்டுக்களைக் கோர்த்ததுபோல் அடுக்கடுக்கான-கவர்ச்சியான பச்சரிசிப் பற்கள்! ஆனால், அவள் தன் ‘டேஞ்சர் வண்ண’ இதழ் திறந்து சிரித்தபோதெல்லாம் எனக்கு ஏனோ திகிலாக இருந்தது!

அந்தப் பல்லழகு எங்கிக்குப் பதினாறு வயதிருக்கும்.

ஆக, எங்கியும் எங்கியும் இணை சேர்ந்திருந்தது. பொருத்தமான வயசு! பொருத்தமானி மனசு!

சொந்தத் தாய்மொழி தெரியுமோ தெரியாதோ- ஆங்கிலம் அவர்களுக்குத் தண்ணீர்பட்ட யிருந்தது. ஆனால், உருவமும் நிறமும் முகரைக்கட்டை யும் அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என் பதை வெளிச்சமாக்கித் தொலைத்தன!

அவர்களைப் பொறுத்தவரை, அதுதான் இந்தக் காலத்தில் கடவுள் செய்யும் மகாப் பெரிய தப்பு!


டாக்சி மூவார் நகரை நெருங்கிக் நகை கொண்டிருந்தது. டாக்சி ஓட்டியும் நானும் விவசாயிபோல் தோன்றிய மலாய்க்காரரும் இடையிடையே ஏதோ பேசிக்கொண்டோம். ஆனால், அந்த எங்கி ஜோடியுடன் எங்களில் ஒருவர்கூடப் பேசவில்லை. ‘அதுகளும்’ எங்களுடன் பேச முடியவில்லை. தங்களுக்குள் ‘உஷ் புஷ்’ என்று இங்கிலீஷில் ஏதோ பேசிக் கொண்டன.

அந்த ராக்கெட் யுகத்து நவநாகரிகப் பிறவி களுக்கு நாங்கள் ‘கற்கால மனிதர்களாகத்’ தோன்றினோமோ என்னவோ!

டாக்சி பிரவேசிக்கப் ஆயிற்று. மூவாருக்குள் போகிறது. வேகமாக ஒரு வளைவில் திரும்பிய சமயம். என்ன கோளாறே…டாக்சி சாலையை விட்டு விலகி ஒரு பள்ளத்தில் ‘கடமுடா’ என்று ஏறி இறங்கி எதிரில் நின்ற மரத்தில் ‘டமார்” என்று மோதிவிட்டு ஒரு குலுக்குக் குலுக்கி நின்றது.

இமைப்பொழுதில் நிகழ்ந்தது இவ்விபத்து.

மூர்ச்சை தெளிந்து நான் கண்விழித்தபோது எங்களைச் சுற்றிப் போலீசார் சிலர் நின்றனர்.

டாக்சியோட்டிக்குத் தலையில் காயம் பட்டிருந் தது. ஒரு போலீஸ்காரர் அவருக்குச் சிகிச்சை செய்து கொண்டிருந்தார்.

பக்கத்தில் நின்ற ஒரு பாட்டியம்மாளை வேறொரு போலீஸ்காரர் ஏதோ விசாரித்துக் குறிப்பு எழுதி யதைப் பார்த்ததும் திகைத்தே போனேன்! யார் இந்தப் பாட்டியம்மாள்?

ஆகா! என்ன விந்தை! டாக்சியில் வந்த எங்கிப் பெண்-பதினாறு வயது மதித்த பருவப் பெண் அல்லவா இவள்? ஒற்றைப் பல்-ஒரு சொத்தைப் பல் கூட இல்லாத பொக்கை வாய்ப் பாட்டியாக எப்படி மாறினாள்?

இதோ இப்படிமாறினாள் என்று சுட்டிக்காட்டியது அவள் கையில் வைத்திருந்த பொய்ப்பல் செட்! வாயி லிருந்த பல் வரிசை!

விபத்திலே வேஷம் கலைந்துவிட்டது! ‘கைபுனைந்தி யற்றியும் கவின் பெரு வனப்பு!’ ‘மேக்கப்’பின் ஆதரவை இழந்தால் பதினாறு வயதுப் பருவம் பாட்டி யம்மாள்போல் தோற்றம் பெறுகிறது! பவிசைப் பறி கொடுத்த எங்கி நாகரிகத்தின் பரிதாபக் கோலம்!

‘இதோ பாருங்கள் ஆசாமியை’ என்று ஒரு குரல் கேட்டுத் திரும்பினேன். விவசாயிபோல் எங்களுடன் டாக்சியில் பிரயாணம் செய்த மலாய்க்கார உளவு பேதா அந்த ஆண் எங்கியைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளிக்கொண்டு வந்தார்!

டாக்சி விபத்துக்குள்ளானதும் அவன் எழுந்து தப்பினோம் பிழைத்தோம் என்று தலைதெறிக்க ஓடினா னாம். அவனை ஜோகூரிலிருந்து கண்காணித்து வந்த உளவுபேதா துரத்திச் சென்று பிடித்திருக்கிறார்.

கறுப்புக் கண்ணாடியில்லாத அவன் முகத்தை அப் போது உற்றுப் பார்த்தேன். ‘அசல் அஞ்சடி’ என்று அவன் நெற்றியில் எழுதியிருப்பதுபோல் எனக்குத் தோன்றியது.

கடைசியில் கதை என்னவென்றால், எல்லாம் காதல் விவகாரம்!

பெற்றோருக்குத் தெரியாமல் ஓடிப் போய்க்கொண் டிருந்த எங்கிக் காதலரை டாக்சி விபத்து தடுத்துத் தொலைத்தது!

‘எவனோ ஒரு காலிப்பயல் என் பெண்ணைக் கடத்திச் சென்றுவிட்டான்’ என்று குமரியின் தகப்பனார் போலீ சில் புகார் செய்திருக்கிறாராம்.

குமரனுக்குப் பெயர் ‘காலிப்பயல்’ என்றால் குமரிக்குப் பெயர் என்னவோ?

என்னவாயிருந்தாலென்ன? அந்த டாக்சியில் புறப்பட்டதன் பலன்… நான் மூவார் போய்ச் சேருவதற்குள் நண்பனின் திருமணம் சீரும் சிறப்புமாக நடந்து முடிந்திருந்தது!

– மீன் வாங்கலையோ, முதற் பதிப்பு: 1968, மாதவி இலக்கிய மன்றம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *