கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 14, 2023
பார்வையிட்டோர்: 1,230 
 

(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

(தமிழ்நிலா, தேன்மொழி, இளவழகன் ஆகியோர் வீட்டில் இருக்கிறார்கள். ஒருவர் வானொலி கேட்கிறார். மற்றவர் உடுப்பை அழுத்துகிறார். அடுத்தவர் மின் விசிறியின் கீழ் படுத்திருக்கிறார். அறிவழகனைக் கூட்டிக் கொண்டு வீட்டிற்கு வருகிறார் அன்பரசன்)

(நடந்து வந்தவர்கள் ஓரிடத்தில் நின்று கதவைத் தட்டுவது போலவும் உள்ளே வானொலி கேட்டுக்கொண்டிருந்தவர் எழுந்து வந்து கதவு திறக்க இவர்கள் உள்நுழைந்து கதிரைகளில் அமர்வது போலவும் ஊமம் நிகழ்தல்)

அன்பரசன் : நிலா, புதியவர் ஒருவரை நான் இங்கு அழைத்து வந்திருக்கிறேன்

தமிழ்நிலா : யாரென்று தெரியவில்லை.

தேன்மொழி: எங்களுக்கு பாடசாலை ஒழுங்காக நடக்காத இந்த நேரத்தில்…. புதியவர்கள் வந்தால் கதைத்துப் பொழுதைப் போக்கலாம்.

அன்பரசன்: பொழுது போவது மட்டுமல்ல.. இவரோடு கதைத்தாற் புதிய விடயங்களை அறிய லாம்.

இளவழகன் : அப்படி என்றால் இரட்டை இலாபம்.

அன்பரசன் : ஆம் இவரது பெயர் அறிவழகன். இவரோடு உரையாடுவது இன்பம்.

அறிவழகன் : வணக்கம். உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.. தமிழ்நிலாவும், தேன்மொழியும் அன்பரசனின் சகோதரிகள் என்று முகம் சொல்கிறது…இளவழகன்..?

அன்பரசன் : அவர் அயல் வீட்டு நண்பர்.

தமிழ்நிலா : அவரது பரம்பரையே நல்ல புத்தி ஜீவிகள்.

தேன்மொழி : ஓம் அவருடைய பாட்டாவைப் பற்றி ஒரு கதை. மோட்டார்க் கார் இலங்கைக்குப் புதிதாக வந்த காலத்தில் வாழ்ந்தவர். ஒருநாள் தெருவிலே கார்வருவதைக் கண்டு உள்ளே ஓடி ஒளித்துவிட்டாராம்.

தமிழ்நிலா: பாட்டி என்ன விஷயம் என்று கேட்டாவாம்.

தேன்மொழி: அது. றையில் குட்டி அறுத்துப் போட்டுத் தண்டவாளத்தை விட்டு, றோட்டில் ஓடி வருகிறது என்று சொன்னாராம் பாட்டா!

அன்பரசன்: அப்படியான பரம்பரை அவர்.

இளவழகன்: உங்களுக்குத் தருவேன் முறையாக.. இவர் போகட்டும்.

(எல்லோரும் சிரித்து அடங்கிய பிறகு)

அறிவழகன்: நாங்கள் வரும்போது நீங்கள் மூவரும் ஒவ்வொரு மின்சார உபகரணத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தீர்கள்.

இளவழகன்: ஓம்.. வானொலி, மின் அழுத்தி, மின் விசிறி.

அறிவழகன்: இந்த மின்னுக்கு ஆங்கிலத்தில் என்ன பெயர்?

அன்பரசன் : எலெக்ரிசிற்றி (Electricity)

அறிவழகன் : பழைய கிரேக்கப் பெயரான எலக்ரோனில் இருந்துதான் எலக்ரிசிற்றி என்ற பெயர் வந்தது.

தேன்மொழி : இது எப்போது கண்டுபிடிக்கப்பட்டது அண்ணா?

அறிவழகன்: கி.மு.600 இல் இது கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழ்நிலா : மின் விளக்கு, வானொலி, தொலைபேசி, குளிர்சாதனப்பெட்டி இவை எல்லாம் 20ம் நூற்றாண்டில் தானே பாவனைக்கு வந்தன?

அறிவழகன்: ஆம், மின் இயக்கச் சாதனங்கள் நடை முறைக்கு வர 2500 ஆண்டுகள் எடுத்தன.

அன்பழகன்: மின்சாரத்தை முதல் கண்டது யார் அண்ணா?

அறிவழகன் : கி.மு 600 இல் தால்ஸ் என்ற கிரீஸ் விஞ்ஞானி ஒரு அம்பர் (Amber) துண்டைக் கொண்டு மின்சாரத்தைக் கண்டு பிடித்தார்.

இளவழகன்: ‘அம்பர்’ (Amber) என்றால் என்ன?

அறிவழகன்: முதிர்ந்த ‘பைன்’ மரத்தில் இருந்து வடியும் ‘பால்’ கல் மாதிரி இறுகிவிடும்.

தேன்மொழி: அதை ஏன் எடுத்தார் தால்ஸ்?

அறிவழகன்: தால்ஸ் காலத்தில் இந்த அம்பரை விலை கொடுத்து வாங்கி நகைகளில் வைப்பார் களாம். ஒரு நாள் அவர் ஒரு அம்பர்த்துண்டைத் தன் போர்வையில் தேய்த்துப் பார்த்தார்

இளவழகன்: ஒரு வேளை அதை மெருகேற்றத் தேய்த்திருக்கலாம்.

அறிவழகன்: இருக்கலாம், அப்போது அதில் உண்டான பொறிகள் அவரை வியப்பில் ஆழ்த்தின. நன்கு ஆராய்ந்து அந்தச் சக்தியானது ‘அம்பரில் மட்டுமே இருப்பதாக’ முடிவு செய்தார். அதற்கு ‘எலக்ரிசிற்றி’ என்று பெயரிட்டார்.

அன்பழகன் : தால்ஸ்ஸுக்கு யாரும் பரிசு கொடுத்தார்களா?

அறிவழகன்: கொடுத்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் அவர் அதைச் சொல்லி 2000 ஆண்டுக ளின் பின்னும் மக்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை.

இளவழகன் : அப்படியா?

அறிவழகன்: ஆம். கிபி 1600 இல் தான் சேர் வில்லியம் கில்போட் என்ற ஆங்கிலேய விஞ்ஞானி அம்பருக்கு மட்டுமன்றி கண்ணாடி, கந்தகம், வைரம் ஆகியவற்றிற்கும் இந்தச் சக்தி இருப்பதை அவதானித்தார். பெஞ்ச மின் பிராங்கிளின் (Benjamin Fraklin) என்ற அமெரிக்க விஞ்ஞானியும் நிலை மின் (Static Electricity) பற்றிய ஆராய்ச்சி களை மேற்கொண்டார்.

தேன்மொழி: மின்சாரத்தைப் பிறப்பிக்க உதவும் ‘டைனமோ’ வைக்கண்டு பிடித்தவர் யார் அண்ணா?

அறிவழகன்: டைனமோவைக் கண்டு பிடித்தவர் மைக்கேல் பரடே (Michael Faraday) என்ற ஆங்கில விஞ்ஞானி. ஏழு வருட ஆராய்ச் சிக்கு பின்னர் ஓட்ட மின்னை (Current Electricity) உருவாக்க வல்ல மின்பிறப் பாக்கிகளை அவர் கண்டு பிடித்தார். மின்காந்தத் தூண்டல் (Electro magnetic Induction) எனும் விளைவை அவர் கண்டு பிடித்ததால் இது சாத்தியமாயிற்று.

தமிழ்நிலா: அவர் நல்ல புத்திசாலியாக இருக்க வேண்டும்.

அறிவழகன்: ஆம் இந்த ஃபரடே ஒரு வித்தியாசமான மனிதர். அவர் எந்தப் பல்கலைக் கழகத்திலும் பட்டம் பெறவில்லை. அச்சகம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த அவர் ஹம்பிரி டேவி (Humprey Davy) என்ற விஞ்ஞானியின் ஆய்வு கூடத்தில் உதவியாளராகச் சேர்ந்தார். அங்கு தன் சுய முயற்சியால் ஆராய்ச்சிகள் செய்து மாபெரும் விஞ்ஞானியாக உயர்ந்தார். அத்தோடு அவர் மிக அடக்கமான மனிதர். இலண்டன் அரச விஞ்ஞான சங்கத்தினால் (Royal Society) அளிக்கப்பட்ட தலைமைப் பதவிகளையும் வீரப்பட்டத்தையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

இளவழகன் : அடக்கம் அமரருள் உய்க்கும் இல்லையா அண்ணா?

அறிவழகன் : ஆம். சரி நேரம் ஆகிறது. நான் புறப்பட வேண்டும்.

தேன்மொழி : இன்று உங்களுடன் உரையாடி பல விடயங்களை அறிந்தோம். மிக்க நன்றி போய்வாருங்கள்.

அறிவழகன் : வருகிறேன் ஆறுமணிக்குச் சில சமயம் மின் நின்றுவிடும். அதற்கு முன் நான் போக வேண்டும்.

எல்லோரும் : போய்வாருங்கள் அண்ணா. மீண்டும் சந்திப்போம்.

– விஞ்ஞானக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 2000, கலை இலக்கியக் களம் தெல்லிப்பழை, ஸ்ரீலங்கா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *