கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 9, 2024
பார்வையிட்டோர்: 2,237 
 
 

‘தன்முனைப்பு’ எனும் ஈகோ இருக்கிறதே அதனால் அதல பாதாளத்துக்குள் போனவர் ஆயிரக் கணக்கானோர். உலகத்தில் எல்லாரும் நல்லவர்களாகத்தான் பிறக்கிறார்கள். சிலர் அந்த நல்ல தன்மையைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் சிலர் உலக ஆசாபாசங்களுக்கு அதை அடமானம் வைத்து விடுகிறார்கள்.

எல்லாருக்கும் இரங்குவதும் ஏழைக்கு இரங்குவதும் உன்னதமான மனிதப் பண்புகள். உதவி செய்கிறோமே என்று உள்ளத்தில் நினைப்பு வந்துவிட்டால், அதுவே அவனை அதலபாதாளத்தில் வீழ்த்திவிடும். அப்படி எண்ணம் வராமல் வாழ்வதும், ஈவதுமே சிறப்பு!

ரங்கராஜன் எல்லாருக்கும் பணவிஷயத்தில் பட்சம் பார்க்காமல் உதவுவார். ‘சார், உங்க நல்ல மனசுக்கு கடவுள் ஒரு குறையும் வைக்க மாட்டார் என்று யாராவது பாராட்டினால், அதைத் தலைகவிழ்ந்து புறக்கணிக்காமல், அவர் ஒன்று சொல்வார் அதுதான் அசிங்கமாக இருக்கும்.

‘ஏழைக்கு இரங்குகிறவன் கடவுளுக்குக் கடன் கொடுக்கிறான். நான் கடவுளுக்கே கடன் கொடுக்கிறேன்.’ என்று தன்முனைப்பு தோன்றப் பேசுவது சிலருக்கு வருத்தத்தைத் தந்தது.

‘என்னடா இவர் இப்படிப் பேசுகிறாரே?’ என்று முகஞ்சுளிப்போரும் உண்டு. முகத்தைத் திருப்பிக் கொள்வோரும் உண்டு! ஆனால் யாரும் அவர் குறையைச் சுட்டிக் காட்டியதில்லை. எல்லாருக்கும்தான் தேவை இருக்கே!’

ஒருநாள் உலகநாதனுக்கு ரங்கராஜன் பேச்சு கோபத்தை உண்டு பண்ணியது. ’நீ கடவுளுக்கே கடன் கொடுக்கிறதா மமதையா பேசறயே..

ஏழைக்கு இரங்குகிறவன் கடவுளுக்குக் கடன் கொடுக்கிறான். உண்மைதான். நீயாவது கடன் கொடுக்கிறாய்..! ஆனால் கடவுளோ நமக்கெல்லாம் இந்த வாழ்க்கையையே இரவலாத் தந்திருக்கிறான்.

‘இரவல் தந்தவன் கேட்கின்றான். அதை இல்லை என்றால் அவன் விடுவானா?’ என்று கண்ணதாசனே ஒரு பாட்டில் சொல்லியிருக்கிறார். நீ கொடுத்த கடனை கடவுள்ட்ட திருப்பிக் கேட்டுடுவயோ…முடியுமோ உன்னால்?! நீ கொடுப்பதெல்லாம் இறைவன் கொடுத்தது!. நீ கடன் கொடுக்கலை. அவர் கொடுத்த இரவலை.. தவணை முறையில் திருப்பிக் கொடுக்கிறே! நியாபகம் இருக்கட்டும்!!. ‘நான் கடவுளுக்கே கடன் கொடுக்கிறேன்’ என்று உன் மனசில் நினைப்பு வரும் அந்த ஒரு நிமிடம் இது உன் நினைவுக்கு வரட்டும்னு!’ சொல்லிட்டுக் கோபமாப் போனார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *