நான் உன் அம்மாவாக…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 3, 2023
பார்வையிட்டோர்: 1,683 
 

“வர்ஷா….! நீ வேலைக்குப் போயே ஆகணும்னு அடம் பிடிக்கறது சரி இல்லை… குழந்தையை பார்த்துக்க தகுந்த ஆள் கிடைக்கற வரைக்கும் நீ அவளோட இருக்க வேண்டாமா? பிடிவாதம் பிடித்தால் எப்படி?” ஜீவா சற்று கோபமாய் பேசியதில் தூங்கிக் கொண்டிருந்த 2 மாதக் குழந்தை அம்ருதா “வீல்” என்று அழ ஆரம்பித்தது…

வர்ஷா கோபத்தில் இருந்ததால்… ஜீவா “சோ… என்ன குட்டி… தூங்கு !” என்று தட்டி தூங்க வைத்தான் மிகவும் பாசத்தோடு…

“வா வெளியே… குழந்தை தூங்கட்டும் ” என்று கூறி இரண்டு பக்கத்திலும் பெரிய தலையணையை வைத்து விட்டு வெளியே வந்தனர்…

வர்ஷாவின் அம்மா இவளுக்கு 8 வயது இருக்கும் பொழுதே இறைவனடி சேர்ந்து விட்டாள் . இவள் ஒரே பெண்.. அப்பாவிற்கு உடம்பு சரி இல்லை… பார்த்துக்கொள்ள ஆள் இல்லாததால் அவரை ஒரு ஹோமில் சேர்த்துவிட்டாள் ..அதில் கொஞ்சம் கூட ஜீவாவிற்கு விருப்பமில்லை… நம் வீட்டில் இல்லை என்றாலும் பக்கத்தில் ஒரு போர்ஷன் பார்த்து நாமளே பார்த்துக்கலாம் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தான்.. ” அதெல்லாம் நடை முறைக்கு சரி வராது.. வேண்டாம் ” என்று ஹோமில் சேர்த்தாள் .

ஜீவாவின் பெற்றோர் தஞ்சாவூரில் …. இவர்களுடன் இருக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை…. “எங்களுக்கு இங்கே சொந்த வீடு இருக்கு… பென்ஷன் இருக்கு … எங்கள் பாடை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்று கறாராய் கூறிவிட்டார் மாமியார்…

ஜீவா… “அம்மா … கொஞ்சம் பிரசவத்திற்கு வந்து ஒரு மாசமாவது இருக்கலாம் இல்லையா? பாவம்மா. வர்ஷா… நீதானேம்மா அவளுக்கு அம்மாவா இருந்து செய்யணும்…?” என்ன எடுத்து சொல்லியும்…. குழந்தை பிறந்ததை கேட்டவுடன் வந்தனர் தம்பதியர்…புண்யோ வஜனம் முடிந்ததும் கிளம்பிவிட்டனர்….

ரொம்பவும் எதிர்பார்த்தாள் வர்ஷா… கட்டாயம் தன மாமியார் தன்னுடன் இருப்பார்… என்று….

தன அம்மா உயிரோடு இல்லை என்கிற எண்ணம் மேல் நோக்கியது…. எத்தனை உறவுகள் இருப்பினும் இந்த நேரத்தில் பலத்தை அளிப்பது அம்மாதான்..ஒரு பெண்ணிற்கு…

மனதை தேற்றிக்கொண்டாள்….இனி ஒருவரையும் கேட்கவேண்டாம் என முடிவெடுத்தாள்

அந்தக் காலம் போலவா..?.நீ, நான் என்று போட்டி போட்டுக்கொண்டு உறவினர் செய்தனர்… இப்பொழுது?

“வர்ஷா… கவலைப் படாதே… நான் இருக்கேன்… உங்க அம்மா இருந்தால் எப்படி உன்னையும், குழந்தையையும் பார்த்துப்பாளோ அப்படி பார்த்துக்கறேன்… நீ மனசை போட்டு அலட்டிக்காதே…. ” மனைவியின் தலையை தடவி ஹாஸ்பிடலில் ஜீவா பேசியது இன்னும் நன்றாய் நினைவிருக்கு….

தன்னுடைய எம். டி. யி டம் தன நிலைமையை விளக்கி 2 மாதங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டான்…. ஜீவா

பத்திய சாப்பாடு செய்யும் முறையை படித்து , படித்து செய்தான்… தன அப்பா, அம்மா விற்கும் சேர்த்து சமையல் செய்தான்…. எத்தனையோ ஏளனப் பேச்சுக்கள்… ஜீவாவும், வர்ஷாவும் தாங்கி கொண்டனர்…. தொட்டிலில் குழந்தையை போட்டு பெயர் சூட்டி ஆயிற்று…. மறுநாளே கிளம்பி விட்டனர் ஜீவா பெற்றோர்..

குழந்தை பராமரிக்கும் விதம் , குளிப்பாட்டும் வாகு எல்லாவற்றையும் தன தோழிகளிடம் கொஞ்சமும், கூகுள் இருந்து நிறையவும் கற்றுக் கொண்டாள் … ஜீவாவே ஆச்சரிய பட்டான்…

ஜீவா தன மீது கொண்டுள்ள நேசத்தை அணு அணுவாய் ரசித்தாள் வர்ஷா…

வர்ஷாவும் , ஜீவாவும் ஒன்றும் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் இல்லை…. பெற்றவர்கள் பார்த்து முறையாய் செய்த கல்யாணம்தான்…. ஜீவாவின் அம்மாவிற்கு சற்று “தான் மாமியார் ” என்கிற கர்வம் ஒரு புறம், வர்ஷாவிற்கு அம்மா இல்லாததால் ஒரு அலட்சியம்…. பல இடங்களில் இது மாறுபட்டு பார்த்திருக்கிறோம்… தாய் இல்லாதா பெண்ணிற்கு பெரும் பாலானோர் அம்மாவாக இருப்பதை… என்ன செய்வது? தான் ஏன் தன சுகத்தை வீட்டுக் கொடுக்கணும் என்கிற எண்ணம்…. ஜீவாவின் அப்பா எப்பொழுதும் தன மனைவி பேச்சை மீறாத மனுஷர்..

ஜீவாவிற்கு விடுப்பு இன்னும் 3 நாட்களில் முடிந்து அவன் வேலைக்கு சேரவேண்டிய நிர்பந்தம்… வீட்டு வேலை செய்து கொண்டிருந்த குமுதா என்பவளுக்கு முதுகு தண்டில் ஏதோ கோளாறாம் அதனால் இன்னும் 2 மாதங்களுக்கு அவளால் வேலைக்கு வர முடியாது என்று கூறி விட்டாள் … சோதனைதான்..

வர்ஷாவிற்கு இன்னும் 15 நாட்கள் விடுப்பு உள்ளன… ஜீவாவின் வாதம் … ஒரு 6 மாதங்கள் கழித்து வேலைக்கு செல்லலாம்…. ஒரு நல்ல ஆள் குழந்தையைப் பார்த்துக்க ஏற்பாடு செய்தபின் போகலாம்… அப்படி இல்லை என்றால் ஒரு வருடம் கழித்து பார்த்துக்கொள்ளலாம் என்பது..

மாறாக வர்ஷா “நான் சீக்கிரம் ஏற்பாடு செய்யறேன்… நாம ரெண்டு பேருமே பிரைவேட் வேலையில் இருக்கிறோம்…. வேலையை விட்டால் எனக்கு திரும்ப தேடுவது கஷ்டம்… ” என்கிறாள் …

இதற்கு ஜீவாவின் பதில்…. “இதோ பாருமா வர்ஷா….. நான் இருக்கேன்…. பார்த்துக்கலாம்…. குழந்தை ஸ்கூல் போக ஆரம்பிக்கட்டும்… அப்புறம் நீ தாராளமாக போ…. உன் கிட்டே நல்ல எடுகேஷன் இருக்கு … திறமை இருக்கு..

ஏன் கவலைப் படரே? ஒன்னு யோசி..உன் அம்மா உன்னை சின்ன வயசிலே விட்டுட்டு போய்ட்டானு எவ்வளவு வருத்தப்பட்டே … கதை கதையா சொல்லிருக்கேல… நம்ம குழந்தைக்கு எந்தக் குறையும் கூடாது…. உன்னால் முடிந்தது அவளை உன் பாதுகாப்பில் வளர்க்கணும்… இது என்னுடைய ஆசை… நீயும் அதைத்தான் விரும்பறேன்னு எனக்கு தெரியும்…. உன்னுடைய உதடுதான் நான் அவளை விட்டு வேலைக்கு போறேன்னு சொல்றதே தவிர… மனசால இல்லை…. ஏன் ? ஒன்னும் ப்ராப்ளம் இல்லை வர்ஷா…. உன் மனசை போட்டு அலட்டிக்காதே…. நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ…. நீ நல்லா இருந்தால் தான் நம்ம குடும்பமும் நல்லா இருக்கும்….. ரெஸ்ட் எடுத்துக்கோ… நல்ல முடிவா எடு… ” தெளிவாய் ஆனால் பாசமாய் பேசிய ஜீவாவை கனிவோடு கட்டிக் கொண்டாள் வர்ஷா..

“எப்ப வாறே வேலைக்கு?” கூட வேலை செய்யும் கனகா கேட்க “ஒன்னும் புரியலே…. குழந்தையை யார் பார்த்துப்பா? யாராவது ஆள் இருந்தால் சொல்லு… ” வர்ஷா போனில் பேசினாள்

“கிரேஷில் விசாரிச்சியா?” கனகா கேட்டதற்கு…

“சான்ஸே இல்லை…. கட்டாயம் ஜீவா ஒத்துக்க மாட்டார்…. எங்க மாமா பெண் அவள் குழந்தையைப் பார்த்துக்க ஒரு மாமியை போன வருஷம் ஏற்பாடு பண்ணா.அவ கிட்ட இன்னிக்கு பேசப்போறேன்… சரி. நான் உன்னை நாளைக்கு கூப்பிடறேன்…”

தன மாமா பெண்ணிடம் பேசினாள் வர்ஷா…. “அந்த மாமி இப்போ ஆஸ்திரேலியா போய்ட்டாளே …. வேறு யாரவது இருந்தால் சொல்றேன்..” என்று கூறிவிட்டாள்

“ஏஜென்சி மூலம் தேடலாமா? கட்டாயம் ஜீவா எதுக்கமாட்டார்…. ” மனதில் பலவித எண்ணங்கள்…

குழந்தை அழும் சத்தம் கேட்டு தன நினைவில் இருந்து விடுபட்டு அதை தூக்கிக் கொண்டாள்

இதோ, ஜீவாவும் வேலைக்கு இன்று போயாச்சு…. இனி குழந்தையை தனியாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்… இந்நிலையில் எப்படி தனியாக விட்டு வேலைக்குப் போவது….?

யோசித்தாள் … “சே… நான் ஏன் இப்படி இருக்கிறேன்? என்ன ஆச்சு எனக்கு? ஜீவா மாதிரி ஒருத்தர் துணை இருக்கும் பொழுது? உம் … மனசை ஒரு நிலை படுத்திக்கணும்..

என் வாழ்க்கை முக்கியம்…. இந்தக் காலம் என்பது பொற் காலம்.. திரும்பி வராது. இழக்க விரும்பல…. குழந்தைக்கு என் பாசமும், பராமரிப்பும் அவசியம்… ஜீவாவை நோகடிப்பது வீண் ..ஒரு முடிவிற்கு வந்தாள் ..இருப்பினும் ஒரு முறைக்கு பல முறை இரண்டு நாட்கள் நன்கு யோசித்தாள்

“ஜீவா… நான் வேலையை ரிசைன் பண்றதா முடிவெடுத்திருக்கேன்…. நம்ம அம்ருதா ஸ்கூல் போற வரைக்கும். அப்புறம் பார்த்துக்கலாம்..” சந்தோஷமாய் சொன்ன வர்ஷாவை மெதுவாக அணைத்துக் கொண்டான் ஜீவா.

– மே 2017

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *