சிறைச்சாலையை விட்டு வெளியே வந்த மாறன் தன் இரண்டு கைகளையும் நெட்டி முறித்து அண்ணாந்து பார்த்தான். நிர்மலமான நீல வானம்! மூச்சை இழுத்து விட்டு சுதந்திரமாக காற்றை சுவாசித்தான். மிகவும் சந்தோஷமாக இருந்தது.
ஏழு வருட சிறை வாழ்க்கையில் மாறனின் கைகளும் தோள்களும் நன்கு உரமேறியிருந்தன!
சிறையில் கடுமையாக வேலை வாங்கி விட்டார்கள். அதுதான் காரணம்! வேடிக்கை என்னவென்றால் மாறன் செய்யாத கொலைக்கு தண்டனை. சந்தர்ப்பமும் சாட்சிகளும் அவனுக்குஎதிராக செயல்பட்டு சிறை தண்டனை வாங்கிக் கொடுத்து விட்டன. அதனால் ஏழு வருட சிறை வாழ்க்கை அவனுடைய கேரியரையே ஸ்பாயில் செய்து விட்டன. எதிர்காலமே கேள்விக் குறியாக இருந்தது. மாறனை மாட்டிவிட்டவன் ரமணன். ரமணன் அறிவழகன் என்கிற ஒரு பெரிய அரசியல் புள்ளியின் ஒரே மகன்.
சிறையைவிட்டு வெளிவந்ததிலிருந்து மாறன் மனத்தில் வன்மம் கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது!
செய்யாத கொலைக்கு அநியாயமாய் ஏழு வருட சிறை தண்டனை அனுபவித்தாயிற்று. இனி அடுத்ததாக செய்யப் போகும் கொலைக்கு தன்னைத் தயார்படுத்திக் கொண்டான். மீதி வாழ்க்கை என்று ஒன்று இருந்தால் அதை சிறையிலேயே கழித்து விடலாம். அல்லது தூக்கு தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளலாம் என்ற உறுதியான முடிவு மாறன் மனதில் எழுந்தது.
தன்னை அநியாயமாக கொலைக் குற்றத்தில் மாற்றிவிட்ட ரமணன் உயிருடன் இருக்கக் கூடாது. எப்பாடுப் பட்டாவது ரமணனைத் தீர்த்துவிட அவன் மனத்தில் திட்டம் தயாரானது. இது மே மாதம். அடுத்த ஜூன் மாதம் ஏழாம் தேதி. ஏழு வருடம் முன்னால் ஜூன் ஏழாம் தேதிதான் மாறன் சிறையில் அடைக்கப்பட்டான். அதே ஏழாம் தேதி ரமணன் இந்த உலகைவிட்டு விலகவேண்டும் என ஆவல் கொண்டான்.
கொஞ்சதூரம் நடந்த மாறன் ரோடோரமிருந்த டீ க்கடையில் நுழைந்து டீ குடித்தான். பணம் கொடுத்துவிட்டு திரும்பும் யமுன்னால் அவன் பார்வை எதேச்சையாகஒரு தமிழ் தினசரியின் போஸ்டர் மீது சென்று அப்படியே விழி குத்தி நின்றது!
‘நேற்று அதாவது மே 7 ம் தேதி நிகழ்ந்த ஒரு கோர ஏர் க்ராஷ் விபத்தில் விமானத்தில் பயணம் செய்த பிரபல அரசியல் கட்சியைச் சார்ந்த திரு. அறிவழகன், அவரின் ஒரே மகன் ரமணன், மற்றும் சக பயணியர் அனைவரும் கொல்லப்பட்டனர்….’
மாறன் கொலை செய்ததாக பொய்க் குற்றம் சுமத்தப்பட்ட அதே மே 7ம் தேதி! இப்போது ரமணன் ஏர் க்ராஷில் கொல்லப்பட்ட தேதியும் அதே மே 7ம் தேதி. ஆனால் வருடங்கள்தான் வேறு!
தன்னால் கொலை செய்யப்பட வேண்டியவன் இப்பொழுது விமான விபத்தில்
கொடூரமாக மாண்டுபோனான். இதுதான் ஆக்ஸிடெண்டல் என சொல்லுவார்களோ என்று சிலிர்த்துக் கொண்டபடி அங்கிருந்து அகன்றான் மாறன்.