புலிக்கு புலி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: February 23, 2019
பார்வையிட்டோர்: 9,600 
 

புலியார் அன்று மகா கோபமாக இருந்தார். காலையில் அவர் கேட்ட செய்தி அவரை அவ்வளவு கோபப்பட வைத்து விட்டது. அதற்கு காரணம் நரியார் சொன்ன செய்திதான்.

விடிந்த பின் எழுந்த சூரியன் அப்பொழுதுதான் மேலேறிக்கொண்டிருந்தான்.

புலியார் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கண்ணை மூடி குட்டி தூக்கம் போட்டுக்கொண்டிருந்தார். அப்பொழுது மெதுவான காலடி ஒசை கேட்டது. என்னதான் தூக்க கலக்கத்தில் இருந்தாலும் புலியாரின் காதுகள் விருக்கென் விறைத்து காலடி சத்தத்தை உன்னிப்பாக கேட்டது. நடை பதுங்கி பதுங்கி நடப்பது போல காதுக்கு பட்டது. பட்டென கண்ணை விழித்து சற்று தொலைவில் நரியார் பதுங்கி பதுங்கி நடந்து கொண்டிருப்பதை பார்த்தது.

என்ன நரியாரே சத்தமில்லாமல் போறீரு? இங்கே வாரும். ஒரே கேள்வி தான், நரியார் சப்த நாடியும் ஒடுங்கி, வாலை குலைத்து மெல்ல புலியார் அருகில வந்தது.

ஐயா ஒண்ணுமில்லை, என்று மென்று முழுங்கியது.எங்கே போறீரு? கேட்ட புலியாருக்கு நம்ம காட்டுக்கு புதிசா புலியார் ஒருத்தர் வந்திருக்காரு, அவர் ஏதோ என்னை பாக்கணும்னு வர சொல்லியிருக்காரு. அதான் போய் பார்த்துட்டு வந்துடலாமுன்னு போயிட்டிருக்கேன்.

நல்ல தூக்க கலக்கத்தில் இருந்த புலியாருக்கு வந்த கோபத்தில், அதனுடைய தூக்க கலக்கம் எல்லாம் காணாமல் போய் விட்டது. இந்த காட்டுக்கு புதுசா புலி ஒண்ணு வந்திருக்கா? அது வந்து உன்னை வர சொன்னா நீ போயிடுவியா? ஒரு உறுமி உறுமி விட்டு, கேட்டது.

ஐயோ, அப்படி எல்லாம் ஒண்ணுமில்லைங்க, போகலையின்னையாலும், கஷ்டம் தானுங்க, அது என்னை சும்மா விடாதுங்களே. நீ இப்ப திரும்பி போ, அது உன்னை வந்து கேட்டா நாந்தான் போக வேண்டாமுன்னு சொல்லிட்டேன்னு சொல்லு. என்ன தெரிஞ்சுதா?

சரிங்க, நான் இப்பவே கிளம்பறேனுங்க.. சொல்லிவிட்டு சட்டென ஓடி மறைந்து விட்டது.

அப்பொழுது ஆரம்பித்த கோபம், அன்று முழுவதும் யார் அந்த புதிய புலி?

யோசித்து, யோசித்து மண்டையை உடைத்துக்கொண்டதுதான் மிச்சம்.

ஒரு வேளை இந்த நரியார் நம்மை ஏமாற்றை இப்படி பொய் சொல்லுகிறதோ?

ஒரு முறை முயலார் சிங்கத்தை ஏமாற்றீ குழியில் தள்ளி விட்டதை போல, நம்மையும் ஏதாவது சிக்கலில் மாட்டி விடுகிறதோ என்று சிந்தனை செய்தது.

இப்படி யோசித்து யோசித்து அது களைத்து போய் விட்டது. அதற்கப்புறம் நரியாரும் கண்களில் தென்படவே இல்லை. இது காடு முழுவதும் சல்லடை போட்டு தேடி விட்டது, புதிதாக புலி ஒன்று வந்ததற்கான அறிகுறியே காணப்படவில்லை.

நரியார் நம்மிடம் பொய் சொல்லி இருக்கிறது, வரட்டும் பேசிக்கொள்கிறேன், என்று மனதுக்குள் கறுவிக்கொண்டது நான்கைந்து நாட்கள் ஓடி விட்டது, வேட்டையாடி சாப்பிட்ட களைப்புடன் நடந்து போய்க்கொண்டிருந்த புலியார் திடீரென அங்கு நரியாரை பார்த்தது. அதற்கு கோபம் கரை புரண்டு வந்தது. “ஓய் நரியாரே” அன்னைக்கு பொய்தானே சொன்னீர், வேறொரு புலி உன்னை வர சொன்னது என்று? நரியார் பயத்துடன் இல்லைங்க ஐயா, உண்மையிலேயே புலிதான் வர சொல்லுச்சுன்னு என் பக்கத்து குகைக்காரன் சொன்னான்.

அப்படியா அவனும் நரிதானே? ஆமாங்கய்யா. அப்ப புலிய எங்க பாத்தானாமா?

இந்த காட்டை தாண்டி எல்லையில இருக்குது புலி, அங்க போய் பாருன்னு சொல்லுச்சு.நானும் கிளம்பி போகும்போதுதான், வழியில உங்களை பாத்தேன்.

நடுங்கிக்கொண்டே சொன்னது.சரி அந்த நரிய நீ பாத்தியின்னா உடனே எங்கிட்ட கூட்டிகிட்டு வரணும், என்ன சரியா? சரிங்க கண்டிப்பா கூட்டிட்டு வறேனுங்க. சொல்லிவிட்டு சிட்டென ஓடி மறைந்து விட்டது.

இந்த காட்டு எல்லையில இருக்குதாமா ! பார்த்துடறேன் ஒரு கை ! சொல்லிவிட்டு விறு விறு வென காட்டின் எல்லை நோக்கி நடக்க ஆரம்பித்த்து.

காட்டின் எல்லை போய் அடைய சுமார் நூறு மைல் தூரம் நடக்க வேண்டும். அதனால் அது போய் சேரும்போது மெல்ல இருள் வர ஆரம்பித்து விட்டது.

நடந்து வரும்போதே சற்று தொலைவில் அந்த புலியை பார்த்து விட்டது.

இதனை விட பிரமாண்டமாயும், கம்பீரமாயும் நின்று கொண்டிருந்தது அது.

பெரிய திண்டின் மேலே நின்று கொண்டிருந்தது.பார்த்தவுடனே பயந்து விட்டது.

அம்மாடியோவ் நம்மை விட பெரியதாய் இருக்கிறது. ஒரே அடியில் என்னை அடித்து விடும் போல் இருக்கிறதே. ஆச்சர்யத்துடன் சற்று தள்ளி நின்றே பார்த்து கொண்டிருந்தது. இனி இந்த காட்டில் என்னை யாரும் மதிக்க மாட்டார்கள்.

இனிமேல் இதுதான் ராஜா. மனதுக்குள் துக்கம் கவிழ திரும்பவும் காட்டுக்குள் நடந்து சென்றது.

இப்பொழுதெல்லாம் புலியார் மிகவும் சோகமாகவே காணப்பட்டார். எல்லாம் என் தலை விதி. அந்த புலி ஒரு நாள் என்னையும்,இந்த காட்டை விட்டு விரட்ட போகிறது. மனதுக்குள் கவலையுடனே நாட்களை ஓட்டியது.

ஒரு நாள் நல்ல மழை பிடித்துக்கொண்டது. இடைவிடாத மழை. மூன்று நாட்களுக்கு பெய்தது. எல்லா மிருகங்களும்,மழைக்கு பயந்து குகைகளில் பதுங்கிக்கொண்டன, புலியார் அந்த மழையிலும் பசி தாங்காமல் ஏதாவது ஒன்றை வேட்டையாட வெளியே வந்தது. நல்ல மழை காரணமாக எல்லா மிருகங்களும் பதுங்கிக்கொண்ட்தால் இதற்கு ஒன்றுமே கிடைக்கவில்லை. அப்படியே நடந்து நடந்து காட்டு எல்லை வரை வந்து விட்டது. வந்து பிறகு தான் அதற்கு ஞாபகம் வந்தது, அட்டா நம்முடைய விரோதி இங்கொருவன் இருக்கிறானே என்று. சற்று பயத்துடன் அன்று அந்த புலி நின்று கொண்டிருந்த இடத்தை பார்த்தது. என்ன ஆச்சர்யம் அங்கு புலி இல்லை. வெறும் திண்டு மட்டும்தாம் இருந்தது. சுற்றிலும் மண்தான் சகதியாய் கிடந்தது.

இதற்கு ஒரே ஆச்சர்யம், அந்த புலி எங்கே? சுற்று முற்றும் பார்த்தது. புலி அங்கு இருப்பதற்கான அறிகுறிகள் தென்படவே இல்லை.அந்த மழையிலும் புலிக்கு ஒரே ஆனந்தம். அப்படியானால் நம்முடைய விரோதி இந்த மழைக்கு பயந்து ஓடி விட்டான். ஆஹா… மகிழ்ச்சியில் அதற்கு பசியே மறந்து போயிற்று.

அதே நேரத்தில் நகரத்தில் காட்டிலாகாவின் அலுவலக அறையில் ஒருவன காவலர், குறை ஒன்றை அதிகாரியிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

“சார் நாம் இது புலிகள் இருக்குமிடம் அப்படீன்னு காட்டறதுக்காக வச்சிருந்த புலி பொம்மை, இந்த மழையில கரைஞ்சு போயிடுச்சு. புதுசா ஒரு மண் பொம்மையை கொண்டு போய் வைக்கணும்”.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *