கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 25, 2024
பார்வையிட்டோர்: 2,181 
 
 

(சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நாவல்)

அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8

அத்தியாயம்-5

இரண்டு நாட்களுக்கு ஆசை காட்டிவிட்டு ஊமைப் புழுக்கமாக வாட்டுவாயோ என்று மண்-வானைப் பார்த்து உருகும் வெப்பம். கோவை நகரத்தில் பொதுவான நிலையிருந்தாலே நீருக்கு நெஞ்சுலரக் காத்துக் கிடக்க வேண்டும். பஞ்சாலைகளில் சீக்குப் பிடித்தது போக ஆரோக்கியமானவைகளும் தண்ணீர்த் தட்டில் தவிக்கும் நிலை. வறுமையும் புழுதியும் வறட்சியும் தெருவெல்லாம் உற்சாகங்களை அடியோடு வறட்டி இருக்கின்றன. மலையடிவாரத்திலிருந்து வரும் வண்டிக்காக ஜோசஃபும் யமுனாவும் நிற்கின்றனர். அவர் அவளை ரயிலேற்றிவிட்டு மறுநாள் பாதயாத்திரையில் பங்கு கொள்ளப் போகிறார்.

பெண்கள் வாசனை முகப்பொடியும் பூவுமாகக் கடைவிரித்து அலங்காரம் செய்து கொள்ளும் அறையில் அந்த மணங்களை அமுக்கிக் கொண்டு உட்புறமிருந்து நாற்றம் வீசுகிறது. குடலுக்குள் புகுந்து அங்கு என்ன இருந்தாலும் தள்ளி விடுவேன் என்று சவால் விடுகிறது.

தங்கள் மனப் பலவீனங்களையும் உடல் அழுக்குகளையும் வெளியில் காட்டுவதைப் பண்புக் குறைவாகவும் அநாகரிகமாகவும் கருதும் காலம் பழையதாகி விட்டது என்று அவளுடைய அம்மா சொன்னது நினைவுக்கு வருகிறது. தந்தை படுக்கையோடு படுக்ககயாக நோயில் விழு முன் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் அவளும் தாயும், மதுரைப் பக்கத்துக் காந்தி கிராமத்துக்குப் போனார்கள். மதுரை ரயில் நிலையத்துப் பொதுக் குளியறையில் அம்மா பெண்கள் முகம் சுளிக்க ஒரு அறிவுரை நல்கிவிட்டுத் தேய்த்துக் கழுவினாள். இப்போது இன்னும் காலம் முன்னேறிச் செல்கிறது. சந்திர மண்டலத்தில் முதல் மனிதன் அடிவைத்து விட்டான்.

நகரமே பார்க்காத, வெளிச்சம் தெரியாத ஆதிவாசிப் பெண்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் புறத் தூய்மையின் சுகத்தை அறியாத பேதைகள். ஒரு வகையில் அந்த எளியவர்களுக்குச் சுத்தம் ஆடம்பரமும் கூட. இந்த மலைக்காட்டு ஏழைகள் குளித்துத் துணி துவைத்தால் துணிகள் கரைந்துவிடும் என்று துவைக்காமலிருக்கிறார்கள். ஆனால் இந்தப் பளிங்குக்கல் பரவிய குளியலறையில் வந்து புழங்கும் நாகரிக மக்கள் சுதந்திரத்தின் சுகம் மிஞ்சி, அகம்பாவமாகிவிட்ட நிலையில் தங்கள் மலினங்களை நாணமின்றி வாரி இறைக்கின்றனர்.

குளித்து உடை மாறும் அணியலறையில் செருப்பைத் தொடும் தேக்க நீர் நாற்ற நீராக இருக்கிறது. பீங்கான் பாண்டத்தில் எவளோ ஒருத்தி போடக் கூடாத பொருளைப் போட்டு, அது அடைத்து போகும் பணியைச் செய்திருக்கிறாள்.

யமுனா துடைப்பம் தேடித் தேக்க நீரைத் தள்ளித் துப்புரவு செய்கையில் ஒரு முப்பது வயசுக்காரி, மூன்று வயசுக் குழந்தைக்குரிய உடையுடன் அங்கு வருகிறாள். யமுனாவை அவள் துப்புரவுக்காரி என்று நினைத்திருக்க வேண்டும்.

“அப்புறம் சுத்தம் செய், அப்பால் போ!” என்று விரட்டுகிறாள். யமுனா நிமிர்ந்து பார்க்கிறாள்.

“பொது இடங்களில் கொஞ்சம் பொறுப்பாக நடந்து கொள்ளக் கூடாதா, பெண்கள்? அதுவும் படித்த பெண்கள் இதை நினைத்துப் பார்க்க வேண்டாமா?”

அவள் மறுமொழி ஏதும் கூறவில்லை. “அப்படியா சேதி?” என்று ஏளனமாகக் கேட்பது போல் பார்வையை வீசிவிட்டுப் போகிறாள்.

துடைப்பத்தை மூலையில் வைத்துவிட்டு அவள் அலுப்போடு வெளியே வருகிறாள். அரை வயிறும் முக்கால் முதுகும் தெரியக் காட்டிக்கொண்டு நாலைந்து பெண்கள். கொடுக்கு மீசைகள் குறுந்தாடிக் கோலங்களில் சில இளைஞர்கள். மனிதன் சந்திரனில் காலூன்றி, மனித குலத்துக்கு ஒரு முன்னேற்றத் தாவல் என்று முழங்கிய வீரனைப் பற்றிய விமரிசனங்கள்; கலகலக்கும் சிரிப்புகள்; கத்திக்குத்து இரத்தங்கள், பெண்ணுடலின் விரிவான கோலங்கள்; காமக் களியாட்டங்களின் சங்கேதப் படலங்கள் ஆகியவற்றை அட்டைகளில் விளம்பரம் செய்து கொண்டிருக்கும் புத்தகங்களைத் தள்ளு வண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டு ஒரு அழுக்குச் சட்டைப் பையன் ரெயிலடி மேடையில் ஊர்ந்து செல்கிறான். அந்தப் புத்தகங்களில் பொதிந்துள்ள விஷயங்களைப் பற்றி அவனுக்கு ஏதும் தெரியாது; அக்கறையுமில்லை. அவற்றை அவன் ஆங்கிலம் படித்த மேல்நாட்டு நாகரிகக்காரர்களுக்குத்தான் விற்கிறான்.

“எந்தா யமுனா சிந்தனை வயப்பட்டது?”

“ஒண்ணுமில்ல; பாத்ரூம் கழுவப் போனேன்; தண்ணீரில்லை.”

“ஓ; அது சரி. ஆனா இது பாபுஜி இருந்த காலமில்ல. நீ செய்வதைப் பார்த்து நாணி யாரேனும் உதவ வரலியே?”

“நான் இந்த வேலையைக் கூலிக்குச் செய்வதாக நினைத்தாள் ஒருத்தி…”

யமுனா கலகலவென்று சிரிக்கிறாள்.

அவரோ அவளைப் பெற்று வளர்த்த தந்தை தன் மகள் கணவன் வீடு செல்ல விடைபெற நிற்பது போல் உணர்ச்சி தழுதழுக்க நோக்குகிறார்.

“யமுனா, எனக்கு உன்னைப் பார்க்கப் பெருமையாயிருக்கு; ஒரு கலாகாரன், தன் சிருஷ்டியைப் பார்த்துச் சந்தோஷப்படுவது போல், நிண்டம்மையும் அச்சனும் காட்டுக் குழந்தைகளை மக்களாய் சுவீகரிச்சு உன்னை நான் சுவீகரிச்சு, மகளே வில்வித்தையும் குதிரையேற்றமும் கற்பிச்சு மகனை யுத்தரங்கத்துக்கு அனுப்புவது போல் எனக்குள்ளே ஒரு எண்ணம். என் கண்முன் வளர்ந்த நீ எப்படி இருக்க வேணும்னு நினைச்சேனோ, அதெல்லாம் கை கூடினாப் போல் சந்தோஷம். ஆனால் எத்ர கட்டிக் கொடுத்தாலும், சொல்லிக் கொடுத்தாலும், சமர பூமியைக் கண்டதும் நடுநடுங்கிப் போகிறவர்கள் தான் இந்த அஹிம்சா வழியில் அதிகமான பேர்களும், பதவியையும் பொறுப்பையும் வகிக்க வருபவர்கள் தான் எல்லாரும். அந்தக் களத்தில் மின்மினிப் பூச்சிகளாக ஆண்மையிழந்து சுற்றிக் கொண்டிருப்பவர்களையே இன்றைக்கு நாடு முழுசும் பார்க்கிறோம். நீ ஏது பதவி வகிச்சாலும் எரிமுட்டை தட்டி ஜீவனம் செய்தாலும் பத்து நூறு குட்டிகளுக்குப் படிப்பிச்சாலும், ஒரு முரட்டுப் புருஷனுக்கு மணவாட்டியானாலும் சத்தியத்தையும் அஹிம்சையையும் முழு வடிவத்தில் அந்த வாழ்விலே, அந்தத் தொழிலிலே காணவேணும். அப்போள் லோகத்துள்ள சக்தியெல்லாம் நிண்டே பங்கில் வரும். சத்தியமே ஜயம்னு ஏட்டில் வரஞ்சு வச்சாப்போல அது வராது குஞ்ஞே. அதை வாழ்விலே வரைந்து கொள்ள வேணும். நான் உனக்கு என்றென்றைக்கும் எப்போதும் சொல்லும் ஒரே அறிவுரை இதுதான். ஊருக்கு இதைச் சொல்லத்தான் உன்னை ஆசையோடு உருவாக்கினேன்…”

சரளமாக மெதுவாக இழிந்து கொண்டிருந்த அருவி பெரிய பெரிய பாறைகளையும் மண்ணையும் காட்டிக் கொண்டு வறண்டு விட்டாற்போல் அவளுக்குத் தோன்றுகிறது. தண்ணீர் வழியும் போது தோன்றாத அச்சம், தண்ணீரில்லாத போது தோன்றுகிறது.

“எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது, அம்மாவா! சில சமயங்களில் பயமாக இருக்கிறது. உங்களை, அம்மையை, அப்பாவை, எல்லோரையும் இந்தக் காட்டிலிருந்து நாட்டுக்குக் கொண்டு போக வேண்டும் போல் ஒரு பரபரப்பு. உங்களிடம் சொன்னால் கேலி செய்வீர்கள்…”

“எந்த பயம் பற்றி?…” அவருடைய புருவங்கள் அவளுடைய முகத்தைக் கண்டு சுருங்குகின்றன.

“அக்கரையிலிருந்து மாரன்கோரனெல்லாம் இங்கு வந்து அரிசி கேழ்வரகெல்லாம் கடத்திப் போகலாமா? அம்மாவே யார் பக்கம், என்ன நினைக்கிறாள், என்னிடம் ஏன் மறைக்கிறாளென்று புரியவில்லை, அம்மாவா!”

“அம்மையோ? என்ன பொய்? எனக்குப் புரியவில்லை மகளே?”

அவள் விளக்குகிறாள்.

“ரத்தப் பசிக்காரர்க்குச் சோறிடுவது முறையோ அம்மாவா? அக்கரையில் சுதீர் அப்பாவி மலைக்காட்டுப் பணியரையும் அடியரையும் ரத்தப் பசிக்காரர்களாக்க, அந்த துரோகிகளுக்கு இங்கே தெரிந்து உதவி செய்யலாமோ?”

“யமுனா, பசியென்று வரும்போள் தராதரம் பார்ப்பவள் அம்மையல்லே. ரத்தப்பசி எப்படி வரும்? வயிற்றுப் பசி முற்றும் போது வரும். வயிற்றுப் பசி அவிஞ்சால் – பின்ன அது வரான் வழியல்ல. யமுனா, காட்டில் இருக்கும் நிசப்புலிகளை விட, நாட்டில் பசுத்தோல் போர்த்திய புலிகள் நிறைய வளர்ந்துவிட்ட அபாயத்தைச் சமாளிக்க, நிசப்புலிகளே வந்து போலிகளைக் காட்டிக் கொடுக்கும் நிலை இன்றைக்கிருக்கிறது. ஆண்டவனுக்கே அர்ப்பணமாக்கிக் கடைசி வரையில் அன்பு வழியில் தைரியமாக நடப்பது தான் நம் கடமை, யமுனா. பாபுஜி நவகாளியில் அடிவச்சு யாத்திரை செய்தப்போள் பிரார்த்தனைக் கூட்டத்தில் கொள்ளைக்காரனும் கொலைகாரனும் வந்து கண்ணீர் விட்டதை நான் பார்த்திருக்கிறேன். எனக்கு நம்பிக்கை போகாது. சுதீரனும் சகாக்களும் நம் ஆசிரமத்தை இரத்தக் களறியாக்க வரும்போதும் அஹிம்சை தீபத்தைக் கையிலேந்திக் கொண்டு, அச்சமின்மை என்ற வாளாயுதத்தை நெஞ்சில் தாங்கி நிற்போம். அச்சமேது மகளே? நீ பாடுவாயே? ‘அச்சமில்லைன்’னு அன்னுசமர நடந்த போது பாடிய பாட்டு? அது இன்னும் இருக்கு…”

இந்த நம்பிக்கையைச் செவிமடுக்கையில் உள்ளம் புல்லரிக்கிறது.

“நல்ல நல்ல காரியங்களுக்கு வேண்டி ஒரு முறை காத்திருந்தாலும் பாதகமில்லை மகளே, நம்பிக்கை இழக்கக்கூடாது.”

“பெரியப்பாவே எல்லா ஏற்பாடுகளும் செய்து இருக்கிறார் என்றால் எப்படி இருக்குமோ. அதுவேறு தெரியவில்லை. அவருடன் அதிகமாகக் கூட நான் பழகியதில்லை…”

“உனக்கு அதெல்லாம் சொல்லித் தர வேண்டுமா, யமு? அங்குள்ள சர்வோதய சங்கம் மூலமாகத்தான் பேச்செல்லாம் ஏற்பாடு செய்வார். நீ உன் ஆழமான எளிமையான பேச்சால் உண்மைக்கு உயிர் கொடுக்கணும்…”

அவள் வண்டி வரும் திசையைப் பார்த்துக் கொண்டு மௌனமாக நிற்கிறாள்.

“யாருக்குக் கல்யாணம்? பெரியச்சன் மகனுக்கோ?”

“இல்லை. மகளின் மகளுக்கு. நான் இரண்டு வருஷத்திற்கு முன் போயிருந்தப்போ கூட மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தார். நீருவுக்கு ஐ.ஏ.எஸ்.ஸாக…”

“ஓ! ரஸமாகப் பொழுது போகும், அப்போது உனக்கு?”

“நான் அங்கே படித்து முடிந்து வரவேணுமென்று ஒரே பிடியாக இருந்தார். பெரியம்மை காலமான பிறகு நான் இப்பத்தான் அங்கே போறேன்.”

“அப்ப ஒருகால் பெரியச்சன் உனக்கு மாப்பிள்ளை பார்த்து வச்சிருப்பாரோ?”

“ஓ… ஒரு ஐ.ஏ.எஸ். பார்ப்பாராக இருக்கும்!”

“த்ஸ…த்ஸ…ஐ.ஏ.எஸ்.ஸைக் கல்யாணம் கழிக்க ஆசையுண்டானால் சொல் மகளே? க்யூவில் நிற்க ஞான் கொண்டு வரும், ஆசையுண்டோ?”

யமுனா மறுமொழி ஏதும் கூறவில்லை. வண்டி வந்து விட்டது. கூட்டம் மூன்றாம் வகுப்புகளை முற்றுகை இட முண்டியடித்துக் கொண்டு ஓடுகிறது.

இடத்தைக் கண்டுபிடித்து ஏறுவதற்குள் பல பேருடன் முட்டி மோத வேண்டியிருக்கிறது. ஓரத்திலுள்ள ஒற்றை ஆசனம்.

எத்தனையோ முறைகள் பல சந்தர்ப்பங்களை ஒட்டி அவள் சென்னைக்குப் பிரயாணம் செய்திருக்கிறாள். பெரிய தந்தையின் வீட்டில் தங்கியிருக்கிறாள் எனினும் இப்போது காலவரையறை ஏதும் இல்லாத நாட்கள் தங்கக் கூடும். எதிர்காலம் திட்டவட்டமாகத் தெரியாது. வண்டி, தொழில் நகரத்துக் குடிசைகளை எல்லாம் தாண்டிச் செல்கிறது.

கோயமுத்தூரில் எல்லாப் பகுதிகளும் அவளுக்குத் தெரியும்.

வண்டி டெக்ஸ்டூலைக் கடந்து செல்கையில் விளக்குகள் பூத்துவிட்டன.

“கொஞ்சம் காலை எடுத்துக்கிறீங்களா?”

இரட்டைப் பின்னல் தொங்க அவற்றில் கனகாம்பரம் சரமும் ஊசலாட, பூக்குலுங்குவது போல் நைலான் சேலையில் நிற்கிறாள் ஒரு தங்கை.

“நீங்க…நீ… யமுனால்ல?”

“ஆமாம். அருணாதானே?”

“அருணாவேதான்.”

பெருமிதம் ததும்பும் சிரிப்பொன்று இதழ்களில் விளையாடுகிறது. உயர்நிலைப் பள்ளியில் யமுனாவுக்கும் கீழ்வகுப்பில் அருணா படித்தாள். மாணவர் மன்றப் பேச்சுப் போட்டியில் ஆண்டுதோறும் அவள் பரிசைத் தட்டிக் கொண்டு செல்வாள். அடுக்குமொழி அருணா என்றே பெயர் அவளுக்கு. நல்ல குரல் அவளுடைய சொத்து. அவளுடைய மாமன் திராவிட முன்னேற்றக் கட்சியின் ஒரு தலையாய உறுப்பினன். அவர்களுடைய வீட்டில் அண்ணாதுரை விருந்துண்ண வந்திருக்கிறார். ஏன், அவளுக்கு அந்தப் பெயரை வைத்ததே அவர்தாம். அந்தக் காலத்திலேயே அந்தத் தலைவரின் பெயர் சொன்னாள் உருகிப் போவாள்.

“இங்கே எப்படி அருணா?”

“நாலு நாளா மேல்வட்டத்தில் பிரசாரக் கூட்டங்கள்; பேசிப் பேசித் தொண்டைக் கட்டிப் போச்சு…”

தொண்டை கட்டித்தான் இருக்கிறது.

“ஏனிப்படி மூணாங்கிளாசில் வரே?”

“ஏன் யமு? என்னை என்னன்னு நினைச்சிட்டே? நாங்க ஏழைங்க; எங்கக் கட்சி ஏழைங்க கட்சி.”

யமுனா சிரித்துக் கொள்கிறாள்.

“நீ என்ன பண்ணிட்டிருக்கே யமு? எம்.ஏ. பண்றேன்னு சொன்னாங்க…”

“ஒண்ணும் புரியலே. உன் பாடு பரவாயில்லே அருணா…”

“என்ன பரவாயில்லே? ஒரே நாளில் ரெண்டு மூணு மீட்டிங் இருந்திடுதா? சமாளிக்க முடியறதில்ல…”

“ஆனா, உனக்கு இதுதானே எத்தனை நாளாகவோ குறிக்கோளாக இருந்தது?”

அருணா அழகாகச் சிரிக்கிறாள்.

சிறு கூடான உடல்வாகு, உதட்டருகில் ஒரு மச்சம். கவர்ச்சி நிறைந்த கண்கள்! அவள் பேசும் போது கண்கள் இணைந்து பாவங்களை வெளியிடுகின்றன. சுருண்டு அடர்ந்த தலைமுடி, குட்டையான இரட்டைப் பின்னல்களாக விளங்குகிறது. மார்புப் பள்ளத்தில் அழகாக இரு உதயசூரியன் பதக்கம் இழைகிறது. கறுப்பிலே சிவப்பு ரோஜாக்கள் அச்சிட்ட சேலை.

“பிரசாரம் என்றால் என்ன பேசுவாய்?”

“பேச்சு மட்டுமில்லை. பேச்சு, பாட்டு இரண்டும் கலந்து கதாகாலட்சேபம் மாதிரி…”

“அதெப்படி?”

“ஆட்சியில் என்னென்ன சாதனைகள் செய்திருக்கிறோம் என்று கிராம மக்களுக்கு எடுத்துச் சொல்வதுதான். இந்த நடப்பு ஆண்டில் எத்தனை பள்ளிகள், சாலைகள், மருத்துவமனைகள் திறந்தோம். ஆட்சிக்கு வந்த பின் என்னென்ன திட்டமிட்டு நிறைவேற்றி இருக்கிறோம் எனப்தைப் பாட்டாக, கதையாகச் சொல்வோம்.”

“நகரங்களில் செய்யமாட்டாயா? இதெல்லாம் யார் ஏற்பாடு செய்வார்கள்?

“ஏன் செய்யாமல்? அந்தந்த வட்டத்தின் செயலாளர்கள் ஏற்பாடு செய்வார்கள்.”

“இதற்கு மாதச் சம்பளம் உண்டா?”

“இல்லே, ஒரு நிகழ்ச்சிக்கு இத்தனைன்னு பங்கு போட்டுக் கொள்வோம்…”

“நாங்கன்னா யாரு?”

“பக்க வாத்தியக்காரர்களெல்லாந்தான். நிகழ்ச்சிகளை ஒழுங்கமைக்க ஒரு குழு இருக்கிறது. ஊருக்குத் தகுந்தாற் போல் வசனங்களை மாற்றி அமைப்போம். தேர்தல் சமயத்தில் ஓய்வே இருக்காது…”

“உன்னைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது அருணா…”

அருணா அதை ஒப்புக் கொண்டு கலகலவென்று சிரிக்கிறாள். பிறகு அவள் கால்களுக்கிடையில் வைத்த கூடையை இழுத்துத் திறந்து இரண்டு வால்பேரிக்காய்களை எடுக்கிறாள். ஒன்றை யமுனாவிடம் கொடுத்து விட்டு மற்றதைக் கடிக்கிறாள்.

“ஒரே பசி. கார் அலையக்குலைய வேகமாகக் கொண்டு வந்துவிட்டது” அவள் ஒன்றைத் தின்று முடித்து இன்னொன்றைக் கடிக்கையில் யமுனா பாதிகூட மெல்லவில்லை.

“வால்பேரி நல்லாயிருக்கில்லே?”

“எனக்கு உன்னுடைய நிகழ்ச்சி ஒண்ணு கேட்கணும்னு ஆசையாயிருக்கு.”

அருணா கபடமில்லாமல் சிரிக்கிறாள்.

“நீ ரொம்பப் படிச்சிருக்கே யமுனா; நான் சொல்றதெல்லாம் கிராம மக்களுக்கு.”

“தேர்தல் சமயத்தில்தான் பிரசாரம் செய்வீங்கன்னு நினைச்சேன். எப்போதுமா பிரசாரம்?”

கண்களை உருட்டி விஷயத்தின் தீவிரத்தை அவள் விளக்குகிறாள்.

“பிரசாரம் ஒரு கட்சி நிலைச்சி நிற்க உயிர்த்தண்ணி சோறு மாதிரி. அது பதவியில் இருந்தாலும் தேவை, இல்லாட்டியும் தேவை. தேர்தல் இல்லாத காலத்தில் தான் அவசியம் தேவை.”

“அப்ப, பொய்யான பிரசாரத்தினால் கூட ஒரு கட்சி பதவிக்கு வந்து விடலாம் இல்லையா?”

அருணா யமுனாவின் கையைப் பற்றிக் கொண்டு உதட்டைக் கடித்துப் பொய்க் கோபம் காட்டுகிறாள்.

“ஏ, குறும்பு! பொய்ப் பிரசாரம் எதற்குச் செய்ய வேண்டுமாம்? பொய்ப் பிரசாரத்தில் எப்படி வரமுடியும்? நம் மக்கள் முட்டாள்களா? இந்தக் கட்சி பதவிக்கு வருவதற்கு மக்கள் எல்லோரும் இதற்கு முன் இருபது வருஷ ஆட்சியில் தங்களுக்கு அடிப்படைத் தேவைகூடக் கிடைக்கவில்லைன்னு புரிஞ்சிட்டதுதான் காரணம். தென்னாட்டுக் கிராமங்களில் காந்தியைப் பலருக்குத் தெரியாது. ஆனால் அண்ணா என்று சொன்னால் லட்சோப லட்சம் மக்கள் உருகிப் போகிறார்கள். ஒவ்வொரு குடிசையிலும் நான் உங்களில் ஒருவன் என்று கலந்து கொண்டவர் அவர்.”

யமுனாவுக்கு ‘இப்போது அடிப்படைத் தேவைகள் கிடைக்கின்றனவா?’ என்று கேட்க ஆசைதான். அவள் கிடைக்கிறது என்று தான் சொல்வாள். இல்லை என்பதை தன்னால் நிரூபிக்க முடியாது.

“அது போகட்டும். அருணா – நீ திருமணம் செய்து கொள்ளலியா?”

“அதைப்பற்றி யோசிக்கவே எனக்குப் பொழுதில்லை. சரியாப் போகுது…”

“யார் கண்டது? அடுத்த தேர்தலுக்குப் பிறகு நீயே மந்திரியாகி விடலாம்!” அருணாவுக்கு இந்தப் புகழுரை பிடித்திருக்கிறது! சிரித்துக் கொள்கிறாள்.

“அறுபத்தேழிலேயே அண்ணா, ‘பாப்பாவை நிறுத்தி வச்சா ஓட்டை வாரிட்டு வந்திடும். வயசாகலியேன்னு பார்க்கிறேன்’ என்றார். ஆனால் நான் தேர்தலுக்கு நிற்க மாட்டேன்.”

“ஏன்?”

“எனக்கு இந்த வாழ்க்கை தான் பிடிச்சிருக்கு. இது கலை. கலைக்காக வாழ்வதுதான் எனக்கு இஷ்டம்…” என்று உதயசூரியன் முகப்பை உதட்டில் வைத்துக் கொள்கிறாள்.

கலை! பிரசாரமும் ஒரு கலையோ? இருக்கலாம். அறுபத்து நான்கு கலைகளில் அதுவும் ஒன்றாக இருக்கலாம்.

வாழ்க்கையில் அரசியல் என்றாலும் அதில் ஒரு முகமாகக் குவிய, திட்டவட்டமாக இளவயசில் ஒரு கோட்பாட்டை வரையறுப்பது சுதந்திர சிந்தனைகளைத் தடைச் செய்வதுதானே? பொதுவுடைமைத் தத்துவ நாடுகளில் இதைக் கண்ணுங் கருத்துமாகச் செய்கிறார்கள். சுதந்திர சிந்தனை என்றாலும், சட்டதிட்டக் கூடுகளில் வளரும் செடியாகவே வளருகிறது. அவளும் அப்படித்தான் அம்மாவனும் அப்படித்தான். அவர்கள், காந்தி என்ற ஒருவர், இலட்சியம் என்று கண்ட சட்டதிட்டங்களுக்கு தம்மைப் பழகிக் கொண்டிருக்கின்றனர். யமுனாவுக்கு டெரிலீனும் காஞ்சிபுரமும் பிடிக்கவில்லை. பழக்கந்தானே காரணம்?

ஆனால்… இப்போதெல்லாம் காந்தியடிகளின் பெயரைச் சொன்னாலே அவள் மனமொன்றி விடுவதில்லை. அது குருட்டு பக்தி என்று அறிவு குறுக்கிடுகிறது. சத்திய வாழ்வு வாழ முடியுமா என்று அவர் தம்மைச் சோதனைக்குள்ளாக்கிக் கொண்டார். வெற்றியின் பிசிறுகளை உலகம் கண்டு கொண்டது. அவருடைய மட்டத்துக்கு கோடானு கோடியும் உயர முடியுமா? ஆழ்ந்து சிந்தனை செய்தால் சுதீர் கூறினாற் போல் வாழ்க்கையில் ஒரு போலித்தனம் வளரவே அவர் வழி காட்டி இருக்கிறார்…

திடீரென்று எங்கோ வழிமாறிப் போவது போல் குளிர் சிலிர்ப்பு ஓடுகிறது. உடல் குலுங்குகிறது இலேசாக.

“என்னைப் பற்றியே கேட்டியே? நீ இப்போ எங்கே போயிட்டிருக்கே அதைச் சொல்லலியே?”

“நானா? பெரியப்பா வீட்டுக்கு…”

“பட்டணமா?”

“ஆமாம்; பரங்கிமலைக்கும் பல்லாவரத்துக்கும் நடுவே வீடு… சந்தானம்னு, செகரிடேரியட்லேருந்து ரிடையராகி இருக்கிறார்.”

“போன முனிசிபல் எலெக்ஷனில் சுதந்திரக் கட்சியிலே நின்னாரே அவரா?”

“ஆமாம். அப்படின்னு என்னை வரச்சொல்லி லெட்டர் கூட எழுதியிருந்தார்.”

“நீ ஏன் வந்திருக்கக் கூடாது. யமு? நான் கூட்டணி பிரசாரத்துக்குப் போயிருந்தேன். அவரு கார் தானே வந்தது? எங்க மாமனுக்கு ரொம்ப வேண்டியவர். புத்தி வாக்கம் தொகுதியிலே எங்க மாமன் சட்டமன்றத்துக்கு நின்னு வெற்றி பெற்றப்ப சந்தானமையரு கூட்டணிப் பக்கம் இருந்தாரே?”

“ஓ…?”

“நீ ஏன் வரலே?”

“எனக்கு அரசியல்னா பயமாயிருக்கு அருணா.”

“நீ இப்படிச் சொல்வது தப்பு. ஆளுங்கட்சியோடு கூட்டா இருக்கிறப்ப உனக்கென்ன பயம்…”

“எனக்கு உன்னைப் போலெல்லாம் பேசத் தெரியாது அருணா.”

“அதெல்லாம் சும்மா. நான் நம்பமாட்டேன். சொகுசா கல்யாணம் கட்டிக்கிட்டு உக்காந்திடுவியோ என்னமோ?”

அருணாவோடு அவளும் சேர்ந்து சிரிக்கிறாள்.

“அதுவும் கூடத் தப்பில்லே…”

அத்தியாயம்-6

சென்டிரலில் பெரியப்பாவின் வீட்டிலிருந்து யாரேனும் வந்திருப்பார்கள் என்று யமுனா எதிர்பார்த்திராமல் இல்லை. பெரியப்பா வயோதிகர். வீட்டோடு இருக்கும் பெரியம்மாவின் விதவைத் தங்கை வெளியில் வரமாட்டாளாக இருக்கும். நீரு, பெரியப்பாவின் மகள் வயிற்றுப் பேத்தி. அவளை எதிர் கொண்டழைக்க வரலாம். ஆனால் அவளுக்குத் திருமணம் நிச்சயமாயிருக்கிறதாம். வருகிறாளோ இல்லையோ? நீருவின் தம்பி ரவி… வரலாம். அல்லது கார்தானே; பெரியப்பாவே வருகிறாரோ? அல்லது ஓட்டி மட்டுமே ரெயிலடி மேடையில் நிற்கிறானோ?

அருணாவை வரவேற்கத்தான் கறுப்பு சிவப்புக் கரைத்துண்டுகளுடன் நாலைந்து பேர் நிற்கின்றனர்.

“நான் வரேன் யமு! ஒரு நாளைக்கு நிச்சயமாக நீ என் நிகழ்ச்சிக்கு வரணும்!” என்று விடை பெற்றுக் கொண்டு அருணா கைப்பையை ஆட்டிக் கொண்டு குதி உயர்த்தும் குமிழ் செருப்பு டக்டக்கென்று ஒலிக்க நடந்து செல்கிறாள்.

கைப்பெட்டியும் கையுமாக யமுனா இறங்கிச் சில நிமிடங்கள் கூட்டம் கலைவதைப் பார்த்துக் கொண்டு நிற்கிறாள்.

அப்போதுதான் நீண்ட கதர் ஜிப்பா. கறுப்புக் கரையிட்ட கதர் வேட்டி ஆகிய கோலத்துடன் ஓர் இளைஞன் அவளை நோக்கி வருகிறான்.

செந்தாழை நிறம், அந்தணன் என்ற நிலைக்குரிய மென்மையையோ, மேன்மையையோ உடனே ஏற்றி வைத்துவிட முடியாமல் முகத்தில் ஒரு முரட்டுத்தனம் தெரிகிறது. கண்கள் இலேசாகச் சிவந்திருக்கின்றன. வெற்றிலை, சிகரெட் பழக்கம் உண்டு என்று அறிவிக்கும் உதடுகள், முடி வெட்டிக் கொள்ள நேரம் இல்லாது போன்றதொரு கிராப்பு.

“நமஸ்காரம்.” குரலில் சுரசுரப்பு. கைகள் குவிகின்றன.

“நமஸ்காரம். நீங்கள்…”

“இந்துநாத்! தென்வட்டம் யூத் காங்கிரஸ் லீடர். நேத்துதான் நீங்க வரதா பெரியப்பா சொன்னார். வாங்கோ வண்டி வெளியே இருக்கு…”

இப்படி அரசியல் கலப்பட வரவேற்பை அவள் சற்றும் எதிர் நோக்கி இருக்கவில்லை.

அவளுக்குத் தெரிந்து பெரியப்பா கதர் உடுத்தியவரல்ல. அந்தக் காலத்தில் குடும்பத்துக்கு ஒட்டாமல் போய்விட்டான் என்று தந்தையைப் பற்றி கண்டவர்களிடமெல்லாம் குற்றம் சொல்வாராம். சென்ற தடவை அவள் பெரிய தந்தையின் வீட்டில் சில நாட்கள் தங்கிய போது கூடக் காங்கிரஸின் கொள்கைகளை வாயில் வறுத்து அரைத்துக் கொண்டிருந்தார். இந்த இளம் காங்கிரஸ் தலைவன் பெரியப்பாவுக்கு வேண்டியவன் தானா?

“பெட்டியை இப்படிக் கொடுங்க?” என்று அவன் கேட்க, அவள் பரவாயில்லை என்று தடுக்க இறுதியில் சற்றுப் பலமாகவே பிடுங்கினாற் போல் பெற்று, கூட வந்த ஒரு போர்ட்டர் தலையில் வைக்கிறான்.

“எனக்கு எத்தனையோ நாளாக உங்களைப் பார்க்க வேண்டுமென்றே ஆவல்! பெரியப்பா சொன்னார். நானே அழைச்சிண்டு வந்துடரேன்னு கிளம்பிட்டேன். சர்வசேவா சங்கத்துக்காரா ஏதோ மீட்டிங்குக்கெல்லாம் ஏற்பாடு பண்றதாகச் சொன்னார். நீங்க பேசாம எங்கிட்ட விட்டுடுங்கோ. நான் திக்கெட்டும் பேர் சொல்றாப்போல விளம்பரம் பண்ணிட மாட்டேன்? லீடர்ஷிப் உங்களைத் தேடி வந்திண்டிருக்கு. உண்மையைச் சொல்லப் போனா, மிஸ் யமுனா, தென்னாடே காத்துக் கிடக்கு. அப்பா, அம்மா, குடும்பமே தேசத் தொண்டர்கள். நாட்டுக்காக விரலசைக்காத கபோதிகள்ளாம் கதரின் பேருக்கே ஒரு கெட்ட பேர் ஏத்த மாட்டிண்டு இன்னிக்கு இம்பாலா காரில் போறப்ப, இப்படியும் ஒரு குடும்பம் இருக்குமான்னு ஆச்சரியப்பட்டேன்…”

நல்ல வேளை, இந்துநாத் அவள் பேசவேண்டுமென்று எதிர்பார்க்கவில்லை. கார்க் கதவைத் திறந்து, “உட்காருங்கள்” என்று உபசரிக்கிறான். புதிய அம்பாஸடர் கார். ஓட்டியும் புதியவனாக இருக்கிறான். அவன் முன்புறம் அமர்ந்து கொள்கிறான். வண்டி சென்டிரலைக் கடக்கிறது. தென்படும் சுவர்களிலெல்லாம் போஸ்டர்கள், சினிமா, அரசியல், இலக்கியம், தனி மனிதப் பிரவாகம் எல்லாமே சுவர்களில்! ஓ! நகரம் நகரம் தான்!

“இந்தப் போலிகளுக்கெல்லாம் சாவு மணி அடித்து உண்மையான தியாகிகளை, நாட்டுப்பற்று உள்ளங்களைச் சேர்த்து, அரசியலைப் புனிதமாக வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடனே நான் அரசியலுக்கு வந்தேன் மிஸ் யமுனா. நான் ஏற்கெனவே நம் வட்டத்திலேயே நாலு கூட்டங்களுக்கு காந்தி நூற்றாண்டு விழாக் கொண்டாட ஏற்பாடு பண்ணியாச்சு. உங்களுக்கு நல்ல பின்னணி, படிப்பு, பர்ஸனாலிட்டி, பெண்ங்கற கிளாமர் எல்லாம் இருக்கு. நீங்க சும்மா மேடையில் நின்னாலே போதும், கூட்டம் தன்னால மயங்கிடும்” என்று சொல்லிவிட்டு அவன் கண்ணாடியில் அவள் முகம் தெரியாதபடி நகர்ந்து கொள்கிறான்.

“நீங்கள் நினைப்பதுபோல் என் எண்ணங்களில் பொதுக் கூட்டங்களும் தலைமைப் பதவியும் கொஞ்சமும் கிடையாது. உண்மையைச் சொல்லப் போனால் நான் தப்பித் தவறிக் கூட அரசியல் பக்கமே போக விரும்பவில்லை.”

“அப்பா?” அவன் சட்டென்று அவளைத் திரும்பிப் பார்க்கிறான்.

அவள் புன்னகை செய்கிறாள். நீண்ட முடி வறட்சியாகப் பறந்து முகத்தை மறைக்க வந்து விழுவதே அழகாக இருக்கிறது. நீலத்தில் கறுப்புப் பூ எல்லைக் கட்டிய கதர்ச் சேலை. புதைய புதைய அதே மாதிரியான சோளி. கைகளில் இரண்டு கண்ணாடி வளையல்கள். அணிமணிகள் வேறொன்றுமே இல்லையெனினும் அடுக்கு நந்தியா வட்டை மலர்ந்தாற் போன்ற புன்னகை முகம்.

“மிஸ் யமுனா, நம்முடைய நட்பு பிரமாதமான பலனைக் கொடுக்கப் போறதுன்னு நிச்சயமாக நான் நம்பறேன். அதனால் முதலிலேயே உங்கள் கருத்து தப்புன்னு சொல்லக் கூடாதுன்னு பார்க்கிறேன். இந்த மாதிரி இன்டலக்ச்சுவல்களெல்லாம் ஒதுங்கி ஒதுங்கித்தான் இன்னிக்கு அரசியல் சாக்கடை மட்டத்துக்கு வந்திருக்கு…”

சில வினாடிகள் மௌனம்.

தொடர்ந்து விடுவிடென்று கேட்கிறான்.

“அரசியல் வேண்டாம்! அப்ப சர்வோதயம் அது இதெல்லாம் எப்படிச் செயல்படும்? பேப்பரில் ஒரு நாலு வரிச் செய்தி போட வேண்டுமானால் அதற்கு ஒரு மந்திரி பேர் இருந்தால் தான் வரது. அரசியல் பதவிங்கற துருப்புச் சீட்டு இல்லாம ஒண்ணும் நடக்காது. அதனால் அரசியல் பதவியைச் சம்பாதிக்க முதலில் முயற்சி செய்யணும். அதில்லாமல் ஒரு சுக்கும் நடக்காது…”

யமுனா மௌனமாகிறாள்.

அவர்களுடைய கானகப் பகுதியில் அரசியல் கூட்டங்கள் நடப்பதில்லை என்றாலும் பல இடங்களிலும் அவள் அரசியல் கூட்டங்கள் கேட்டதில்லையா? எதிர்க்கட்சிக்காரர்கள் பன்றியை கழுதையைக் கூட்டத்தில் புகுத்துவார்கள். கட்சித் தலைகளின் நடத்தைகளில் அவதூறுகளைக் கோத்து வீசுவார்கள். அடுக்கு மொழி அலங்காரங்கள்; நீதி நூல்களிலிருந்து மேற்கோள்கள் – சொற்களே ஆயுதங்கள்! அத்தகைய அரங்குகளுக்கா அவள் தயாராக வேண்டும்?

அவளால் அதை ஒப்ப முடியவில்லை. உயர் பண்புகளுடைய பெண் ஒருத்தியின் மனசில் கற்பு நெறி எப்படி வேரூன்றியிருக்குமோ, அப்படித் தீர்மானமான அரசியல் பதவிகளைச் சாராத பொறுப்புக்குரியவளாகவே அவள் தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறாள். அந்த வெறுப்பு அவள் சுற்றுமுற்றும் கண்டறிந்ததால் வளர்ந்ததுதான்.

தொடக்கமே குழப்பம். வீடு வரும் வரையில் அவள் பேசவில்லை. பொட்டலில் ஒரு பசுந்தீவு – மாஞ்சோலையிடையே பெரியப்பாவின் பங்களா காட்சியளிக்கிறது. அங்கே அவர் வீடு கட்டிய காலத்தில் ரெயில் நிலையம் இருந்த ஒன்றரை மைல் தொலைவுக்கும் சில குடிசைகளைத் தவிர சுற்று வட்டத்தில் ஒரு வீடு கிடையாது. இப்போதோ அழகழகாகச் செப்புகள் போல் இங்கொன்றும் அங்கொன்றுமாக வீடுகள் எழும்பியிருக்கின்றன. போட்டி போட்டுக் கொண்டு குடிசைகளும் கட்சிக் கொடிகளும், தேநீர்க் கடைகளும் சாக்கடைகளும் பெருகி இருக்கின்றன. கடைவீதி ஒன்று குடிசைகளைப் பிரித்துக் கொண்டு வட்டத்தில் முதுகெலும்புபோல் ஓடுகிறது. நசநசவென்று குழந்தைகள் தெரியும் ஒரு கூரைக் கொட்டகை – பள்ளிக்கூடம் போலிருக்கிறது. தையற் கடைகள், கசாப்பு, மின்கடை, லாண்டிரி, சைக்கிள் கடை, அடகுக் கடைகள்…!

கடைகள், மனிதர்கள், அரசியல் கட்சிகள், தெருக்கள், குடிசைகள், சாக்கடைகள், கடன்காரர்கள்… இவை வளர்ச்சியின் அம்சங்கள் தாமோ? வளமையின் அறிகுறிகள் தாமோ?

வண்டி மரத்தடியில் வந்து நிற்கிறது. கதவை அறைந்த ஓசை கேட்டுச் சோடாபுட்டி மூக்குக் கண்ணாடியும் டிரான்சிஸ்டர் கையுமாக ரவி வருகிறான்.

“என்ன ரவி?”

ரவி ஒரு சிரிப்புச் சிரித்துத் தலையை ஆட்டிவிட்டு உள்ளே ஓடுகிறான். இந்துநாத் “தாத்தா இருக்காரா? பரவாயில்லை. பூஜையில் இருந்தால் கூப்பிட வேண்டாம். அப்புறம் வந்து பார்க்கறேனென்று சொல்! நான் வருகிறேன் மிஸ் யமுனா” என்று அவளுடைய பதிலுக்குக் காத்திராமல் சொல்லிவிட்டுப் போகிறான்.

நீரு மாடிப்படியிலிருந்து விரைந்து இறங்கி வருகிறாள். ஒடி வந்து தழுவிக் கொள்கிறாள். உள்ளிருந்து சின்னம்மா ஈரக்கூந்தலும் நெற்றி நடுவில் துளி நீறுமாக வந்து புன்னகையுடன் வரவேற்கிறாள்.

நீரு எப்படி வளர்ந்திருக்கிறாள்? பாவாடை தாவணியுடன் இல்லை. நல்ல உயரம், பருமன், மஞ்சளில் இளம் பச்சை இலைகள் அச்சிட்ட நைலக்ஸ் – அதே கடுகு மஞ்சளில் குட்டைக் கையும் அரை முதுகுமாகச் சோளி.

“பழனி! பெட்டியை மாடியில் கொண்டு வை” என்று உத்தரவிடுகிறாள் சின்னம்மா. இடுப்பு நிஜாரைச் செருகிக் கொண்டு வெற்று மேனியாய் ஒரு பத்து வயதுப் பையன் பெட்டியைத் தூக்கிக் கொண்டு போகிறான்.

முன்பு மாடியில் ஓர் அறையும் வராந்தாவுந்தான் இருந்த நினைவு – இப்போது இரண்டு பக்கங்களும் இரண்டு படுக்கை அறைகள், குளியலறைகள் இருக்கின்றன. மொஸெய்க் தரையில் முகம் தெரிகிறது. நீருவின் அறையில் நுரை மெத்தைப் படுக்கையில் நேர்த்தியான பூவிரிப்பு. மெல்ல விசிறி சுழல்கிறது. ஓரத்தில் முகம் பார்க்கும் கோழி முட்டை வடிவக் கண்ணாடி கூடிய ஒப்பனை மேசை. அதில் தான் எத்தனை வகையான குப்பிகள், ஜாடிகள்!

“நீ இங்கே குளிச்சு டிரஸ் பண்ணிக் கொள்ளலாம் யமு. கிணற்றில் ‘போர்’ போட்டப்புறம் மேலே தண்ணீர் கொட்டுகிறது. ஒரு கெய்ஸர் வாங்கி வையுங்கோன்னா தாத்தாவுக்கு இன்னும் மனசு வரல…”

“பரவாயில்லை நீரு. நான் கிணற்றங்கரையிலேயே துவைத்துக் குளிப்பேன். எனக்கு இந்த ஆடம்பரங்கள் தான் பழக்கமில்லை…”

“அதெல்லாம் உங்க காட்டிலேதான் தலையெழுத்து. இங்கே என்ன கஷ்டம்! பழனி! பழனி! அம்மாவுக்கு வெந்நீர் இங்கே கொண்டு வை!”

“எனக்கு வெந்நீரே வேண்டாம். நான் என்ன மாப்பிள்ளையா, இப்படி உபசாரத்துக்கு?”

இதற்குள் சின்னம்மா காப்பியை எடுத்துக் கொண்டு வருகிறாள்.

“அடடா… நீங்க ஏங்க எடுத்து வரணும்?…”

சின்னம்மா பதிலுக்கு புன்னகையுடன் போகிறாள்.

குளியலறையில் அமிழ்ந்து குளிக்கும் பிளாஸ்டிக் தொட்டி, துடைக்கும் துண்டுகள், சோப்பு வாசனைகள். இரண்டு வாளிகளில் வெந்நீர் வருகிறது.

இத்தகைய ஆடம்பரங்களை யமுனா முன்பு இங்கு கண்டதில்லை. வாழ்க்கையின் இன்பங்களெல்லாம் இத்தகைய சுகங்களில்தான் இருக்கின்றன என்று தான் எல்லோரும் கருதுகிறார்கள்.

நீரு கல்லூரியில் புகுந்த முதல் ஆண்டே தவறிப் போனாள்.

தந்தை உத்தரப்பிரதேசத்திலோ ராஜஸ்தானத்திலோ ஐ.ஏ.எஸ். வர்க்கம். இவளும் ரவியும் படிப்புக்காகவே பாட்டனார் வீட்டில் தங்கி இருக்கின்றனர். தோழிகள் அரட்டை. வஞ்சனையில்லாத நாவுக்கு வேண்டிய நல்ல உண்டிகள். சினிமாக்கள் – இப்படி உல்லாசப் பொழுது போக்காக இவளுக்குப் போகின்றன நாட்கள். மேனி சம்பங்கிப் பூவின் மென்மையோடு மினுமினுக்கிறது. இனி… திருமணம்.

உலர்ந்த சேலையை உடுத்திக் கொண்டு தலையில் துண்டுடன் அவள் வெளியே வருகையில் மாடியில் யாருமே இல்லை போலிருக்கிறது.

“நீரு?…” என்று திரையைத் தள்ளிக் கொண்டு ஓரடி வைத்தவள் திடுக்கிட்டாற் போல் பின்வாங்குகிறாள்.

ஆயிரம் கோணல்களாக உடல் குறுகுறு போல் தோன்றுகிறது.

பம்பாய் டையிங் விளம்பரத்தில் காணும் ஆண் மகனைப் போல் ஓர் ஆடவன். நீரு அவன் மார்போடு ஒட்டிக் கிடக்கிறாள்.

யார்… இவன் தாம்… இவர் தாம்… அவளுக்கு நிச்சயிக்கப் பட்ட…

பட்டுத் துணியைக் கொண்டு மூடினாற் போல் செவிகள் சூடேற, வாளியில் சேலையைப் போட்டு வந்து ரெயிலழுக்குப் போகத் துவைத்துத் தோட்டத்தில் உலர்த்துகிறாள்.

பெரியப்பா எத்தனை நேரமாகப் பூஜை செய்கிறார்.

மோடாவில் நாள்தாள் கிடக்கிறது. ஊஞ்சற்பலகையில் யாருமில்லை.

பூஜை அறைப் பக்கமிருந்து தான் மனசைக் கவ்வும் பத்தி வாசனை வருகிறது. சின்னம்மா நிவேதனம் கொண்டு போகிறாள்.

யமுனா இருப்புக் கொள்ளாமல் நாள்தாளைப் பிரித்துப் பார்க்கிறாள்.

பாங்கி தேசியமயச் சட்டம் லோக்சபாவுக்கு வந்திருக்கிறது. சந்திரப் பிரயாண விவரங்கள்; பாராட்டுதல்கள்… கட்சிப் பிளவின் காரசாரத் தாக்குதல்கள்.

மனம் பதியவில்லை.

மெள்ளப் பூஜை அறைப் பக்கம் செல்கிறாள்.

அடிவைக்குமுன் தூக்கி வாரிப் போடுகிறது, அங்கிருந்து வரும் ஒலி.

“மலையாளத்தான் இருக்கும் வரை உருப்படாது…”

‘பெரியப்பா யாரிடம் என்ன பேசுகிறார்?’

“ஏதோ ஒரு பையனைச் சுமாராகப் பார்த்து இந்தப் பெண்ணை, நம்மாலானது, பிடிச்சுக் கொடுக்கலாம்னு பார்க்கிறேன். காந்தியாவது பிரசாரமாவது?”

ஒட்டுக் கேட்பது இரத்தத்தைச் சுவைப்பதற்கொப்ப அருவருப்பைக் கொடுக்கிறது.

“என்ன பெரியப்பா? பூஜையின் போது பேசமாட்டீர்கள் என்று வெளியே இருந்தேன். பேச்சுக் குரல் கேட்டது. பூஜையின் இடைவேளையா?”

“உன்னைப் பத்தித்தான் கேட்டேன். இந்துநாத் வந்திருந்தானா?”

“உம்…”

பெரியப்பா கற்பூரத்தைக் கொளுத்திச் சம்புடத்திலுள்ள சாளக்கிராமங்களுக்குக் காட்டுகிறார். பெரியப்பா நல்ல சிவப்பு. வெளியில் அலையாத மினுமினுப்பு; தலை முழுதும் வழுக்கை.

“கற்பூரம் ஒத்திக் கொள்…”

காதில் துளசியுடன், கழுத்தில் உருத்திராட்ச மாலையுடன் அபிஷேக நீரைக் கொடுக்கிறார். உள்ளுக்குள் ஏதோ ஒன்று கையை நீட்டாதே என்று தடுக்கிறது.

‘மலையாளத்தான் யார்?…யாரை…?’

அபிஷேக நீரை வாங்கிக் கொள்கிறாள். பூவை ஈரக் குழலில் சூடிக் கொள்கிறாள். சின்னம்மாவுடன் விழுந்து வணங்குகிறாள். உள்ளுணர்வு என்ற ஒன்று அந்தச் சொல்லில் பொங்கி எழுகிறது. அவள் பட்டும்படாமலும் இயங்குகிறாள்.

– தொடரும்…

– வேருக்கு நீர் (இந்திய அரசின் சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நாவல்), முதற் பதிப்பு: 2010, நாம் தமிழர் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *