கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 5, 2023
பார்வையிட்டோர்: 1,605 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கதைமூலம்: யூஜோ யாமா மோட்டோ, ஜப்பான்

‘அண்ணா, இது நல்லது தானே?’

‘எங்கே, இப்படிக் கொண்டா பார்ப்போம்’ என்று மூத்தவன், தன்னிடம் காட்டப்பட்ட காளானைப் பார்ப்ப தற்காகத் திரும்பினான். ‘ஊங் ஹும். நல்லதில்லை: நான் பிடுங்குவதுபோல இருக்கவேண்டும்.’

தான் பிடுங்கிய காளானைச் சின்னவனிடம் காட்டினான.

‘இல்லியா?’ என்றான் சின்னவன். அவன் குரலில் ஏமாற்றம் தொனித்தது. கையிலிருந்த நாய்க் குடையை பார்த்தபடியே நின்றான்.

‘அதில்லை’ என்றான் மூத்தவன். ‘குடைக்குக் கீழே துணி கொசுவி வைத்தமாதிரி இருக்கணும்,நீ பிடுங்கியது வெறும் நாய்க் குடை.’

இவனுக்கு வயசு பதினொன்றுதான், என்றாலும் தம்பியுடைய அறியாமையைச் சகித்துக்கொள்ளக்கூடிய பொறுமை இருந்தது. அவனுக்காக இவன் மனசும் கஷ்டப்பட்டது. இவர்கள் இருவரும் நடந்து வந்ததும் வெகு தொலைவு. சின்னவனுக்குக் கால் கடுத்துவிட்ட மாதிரி தெரிந்தது. அதனால் மஞ்சள் நிறத்தில் தரையில் படர்ந்த செடிகளினூடே எதுவும் இருப்பது தெரிந்தால், ‘ஷின்சான்’ இங்கே பாரு ஒனக்கு இதோ ஒண்ணு இருக்கு’ என்று குரல் கொடுத்தான்.

குழந்தையும் தன்னால் முடிந்தவரை தேடியது. அதன் கண்களுக்கு வாடி மஞ்சளேறிப்போன இலைகள் தான் பட்டது.

‘அதோ உன் காலடியில் இருக்கு பாரு. உனக்குத் தெரியலே’ என்றான் அண்ணன்.

‘எங்கே?’

‘அங்கேதான்’

கடைசியில் அவன் தான் தொட்டுக் காண்பிக்க வேண்டும்.

‘எலை நெரையா இருக்கு பாரு, அதான் எனக்குத் தெரியலை, இதுதானே’ என்றது குழந்தை.

அண்ணன் ‘ஆமாம்’ என்ற பிற்பாடே குழந்தை செத்தை குப்பைகளைத் தள்ள ஆரம்பித்தது.

‘இது நாய்க்கொடே இல்லியே?’

‘நெசமா அதுதான் காளான் ‘

‘அதெப் பிடுங்கட்டா’

‘ஊம்’

சிறுவன் அதைப் பிடுங்கினான். ஆனால் அதை உடனே கீழே எறிந்துவிட்டான், அசிங்கத்தைத் தொட்ட மாதிரி.

‘ஏண்டா? ஏன் எறிஞ்சுட்டே?’

‘அசிங்கமா இருக்கு’

‘ஏன்’

குழந்தை பதில் ஒன்றும் சொல்லவில்லை. தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டிருந்தது. அண்ணனுக்குப் புரிந்ததினால் புன்சிரிப்பு வந்தது.

‘அது அப்படித்தான். நீ தொட்டதும் அதன் வர் ணம் மாறினதைப் பார்த்துத்தானே ஆச்சரியப்பட்டே? காளானைத் தொட்டா அப்படித்தான் வர்ணம் மாறும்’ என்றான் அண்ணன்.

‘அப்பிடின்னா ஒண்ணுஞ் செய்யாதே?’

‘ஒன்றும் பண்ணாது’

சிறுவன் பயம் தெளிந்து சிரித்தான்.

‘எல்லாத்தோடையும் அதைப் போட்டு வச்சுக்கோ’ என்று தரையில் வைத்திருந்த தொப்பியைக் காட்டினான் அண்ணன். அது நிறைய அவன் சேகரித்த காளான்கள் நிறைந்திருந்தன.

குழந்தை அந்தக் காளானை எடுத்து அந்தத்தொப்பி யில் போட்டு வைத்தது. அண்ணன் கண்டுபிடித்த காளான்கள் எத்தனை என்று அவன் எண்ண ஆரம்பித் தான்.மூத்தவன் செத்தை குப்பைகளை எல்லாம் தள்ளித் தள்ளிக் காளான் முளைத்திருக்கிறதா என்று தேடிப் பார்த்துக்கொண்டிருந்தான். கழுத்தை நீட்டிக்கொண்டு அவன் நிற்பதைப் பார்த்தால், அவனுடைய பாட்டியார் மாதிரி இருந்தது. அதுவும் அவள் விடியற் காலையில் எழுந்து நின்றுகொண்டு தன் படுக்கையில் மொய்க்கும் ஈக்களை விரட்டுவது போல இருந்தது. அவன் அப்படித் தலையை நீட்டிக்கொண்டு தேடுவதைப் பார்க்கத் தம்பிக்கு வேடிக்கையாக இருந்தது. தனக்கும் அப்படித் தேட முடியும் என்று அவன் நினைத்தான். அவனும் குனிந்த படி கண்ணைச் சாயவைத்துக்கொண்டு பைன் மரத்தினடி யில்(குளிர்ப்பிரதேசங்களில் வளரும் ஒருவி தமான சவுக்கு மரம்)தேட ஆரம்பித்தான். அவன் கண்ணுக்குக் காளான் எதுவும் தென்படவில்லை என்றாலும் மனசில் மட்டும் குதூகலம் குதிபோட்டுக்கொண்டிருந்தது.

திடீரென்று தொப்பெனக் காதில் விழுந்த சத்தம் மூத்தவனைத் திடுக்கிடவைத்தது. அவன் நிமிர்ந்து பார்க்கும்போது சின்னவன் லேசான சரிவில் சற்று தூரத்தில் விழுந்து உருண்டுருண்டு செல்வதைப் பார்த் தான். ஒருவேளை காலில் வேர் எதுவும் தடுக்கியிருக்கும். அதைப் பார்க்க அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. அவனுடைய உதவிக்குப் போகாமல் குழந்தையைக் கேலி பண்ண விரும்பினான். இருந்தாலும் மறு நிமிஷம் அவன் சின்னவனருகில் சென்றுவிட்டான். அதற்குள் மற்றொருவேர் உருண்டு சென்ற குழந்தையைத் தடுத்து விட எழுந்திருந்து நிற்க அதற்கு ஒத்தாசை செய்தான். அவன் கண்களில் தேங்கிய கவலை அவனுடைய உள்ளப் பரிவைக் காட்டியது. அவனைக் கண்டவுடன் சின்னவன் சிரிக்க ஆரம்பித்தான். பெரியவனும் சிரித்தான். கண்ணீருக்கு அவசியமில்லை எனவே மனச்சுமை அகன்றது.

சிரிக்க முடிந்தால் அவனுக்கு அடிபடவில்லை என்று தான் அர்த்தம். ஆனால் அந்தச் சிரிப்புச் சற்றுக் கோணி யிருந்தது. அது என்னமோ விபரீதமாக இருந்தது. இளையவன் கன்னத்தில் மண் ஒட்டியிருப்பது மூத்தவன் கண்ணில் விழுந்தது. கீழே விழுந்தபோது ஒருவேளை ஒட்டிக்கொண்டிருக்கக்கூடும். கையால் தேய்த்து துடைத் துவிட முயன்றான். அது போகவில்லை. பிறகு சட்டைக் கைக்குள் கையை இழுத்துக்கொண்டு, அந்தத் துணியை பிடித்துக் கன்னத்தில் வைத்துத் துடைத்தான். அப்படி யும் போகவில்லை. கடைசியாகச் சட்டைத் துணியில் எச்சிலை உமிழ்ந்து அந்த ஈரத்தைக் கொண்டு சின்னவன் கன்னத்தைச் சுத்தமாகத் துடைத்துவிட்டான்.

இத்தனைக்கும் சின்னவன், கொஞ்சங்கூட புகார் பண்ணாமல் பேசாமல் நின்று கொடுத்தான்.

பிறகு இருவரும் மறுபடியும் காளான்கள் சேகரிக்க ஆரம்பித்தார்கள். சிறிது நேரம் கழித்துப் பெரியவன் தனனுடைய தொப்பியை நிறைத்து அம்பாரமாகக் காளான்களை ஏற்றிக்கொண்டிருந்தான்.

‘ஷின் – சான் போதும் போதும் நெறையப் பறிச்சாச்சு’ என்றான் மூத்தவன்.

‘டேய், பசங்களா, அந்தக் காளான்களை அப்படியே கீழே வச்சுடுங்க’ என்று ஒரு இடிக்குரல் கேட்டது.

பையன்கள் பயந்தே போனார்கள். அவர்கள் திரும்பிப் பார்க்க பின்புறம் காவல்காரன் நிற்பதைக் கண்டார்கள். கண்ணி வைத்துப் பிடித்தவனுடைய நிச்சயம் அந்தக் கிழவனுடைய கண்களில் ஜொலித்தது. தொப்பியைப் பிடுங்கிக்கொண்டு பெரியவன் கன்னத்தில் ஒரு அறை கொடுத்தான்.

‘திருட்டுக் கழுதைங்களா.’

மூத்தவன் அழவில்லை, வெட்கத்தால் தலைகுனிந்தான். மேலே விரல் படாதுபோனாலும் வீச்சென்று குரலெடுத்தான் சின்னவன். தோட்டத்திற்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றதாக அவர்களிருவரையும் மூச்சு விடாமல் வைதுகொண்டிருந்தான் தோட்டக்காரன்.

‘இந்தப் பக்கத்திலே காலெட்டி வச்சிங்களா முறிச்சு தொங்கவிட்டுடுவேன்’ என்று கூவிக்கொண்டே கிழவன் அவர்களை விரட்டிக்கொண்டு சென்றான். தோட்டத்தின் எல்லையை அடைந்ததும், தொப்பியிலிருந்த காளான் களைத் தன் கூடையில் போட்டுக்கொண்டு குல்லாவை அவர்கள் பக்கமாக விட்டெறிந்தபின் ‘லொங்கு லொங்’ கென்று வேறு திசை சென்றுவிட்டான்.

சின்னவன் தேம்பித் தேம்பி அழுதுகொண்டே விழுந்த குல்லாயை தரையிலிருந்து எடுத்து அண்ண னிடம் நீட்டினான். அண்ணன் அதை வாங்கிக்கொள்ளா மல் அவனுடைய கன்னத்தில் பளீரென்று அறைந்தான். கிழவன் மேலிருந்த ஆத்திரத்தைக் காட்ட வேறு ஒரு ஆள் கிடைத்தது என்ற நினைப்பில் அவன் அடிக்க வில்லை. தனக்கும் சின்னவன் வந்து தன்னைப் பார்த்துக் கொள்ளுவதா என்ற கோபந்தான். வலியாலும் திக் பிரமையாலும் சின்னவன் இன்னும் உரக்க வீரிட்டழ ஆரம்பித்தான்.

பிறகு மூத்தவன் கண்களும் கலங்கின. அவனும் அழ ஆரம்பித்தான். இருவரும் வாய்விட்டு உரக்க அழுதுகொண்டு நின்றார்கள். சிறிது நேரம் கழித்துக் கண்ணீர்ப் பிரவாக வேகம் குறைந்து நின்றது.

அண்ணே ‘தெரியாமச் செஞ்சிட்டேன்’ என்றது குழந்தை.

‘உம்’ என்று ஒப்புக்கொண்டான் மூத்தவன், தன்னுடைய விம்மல்களுக்கிடையில்.

கீழே விழுந்த மண் படிந்த குல்லாயை யெடுத்துத் தன் முழங்காலில் நாலைந்து தடவை தூசி தட்டினான். அதையொரு கையிலும் சின்னவனையொரு கையிலும் பிடித்துக்கொண்டு வீடு நோக்கிப் புறப்பட்டான்.

வழியெல்லாம் விம்மி விம்மிக் குமுறிக்கொண்டு நடந்தார்கள்.

– தெய்வம் கொடுத்த வரம், தமிழில்: புதுமைப்பித்தன், முதற் பதிப்பு: செப்டம்பர் 1951, ஸ்டார் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *