காவியத் தலைவனும் காலி வீடும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 20, 2021
பார்வையிட்டோர்: 3,143 
 

இவ்வளவு உயரத்திலிருந்து பட்டம் விட முடியுமா என்பது சந்தேகமாக இருந்தது சாந்திக்கு.

பிரவீனா வெயில் பட்ட கருத்து முகத்துடன் கேட்டாள். முகத்துச் சோர்வு அவளின் வயதைக்க்கூட்டியிருந்த்து.

“உனக்கு புடிச்ச பட்டம் வுடறது இங்க வைச்சுக்க முடியுமா. இங்கிருந்து.பட்டமெல்லா வுட முடியுமா இல்ல நிலத்திலிருந்து உடறது நல்லா இருக்கும். ஆமால்ல ..”

“எனக்கு சந்தேகம் வருது. இங்கிருந்து பட்டம் வுட முடியுமான்னு”.

“ஆம்பள பசங்க பண்ற வேலை அது எப்படி உனக்கு சூட்டாச்சு ன்னு தெரியல எனக்கும் தெரியல..”

“என்னமோ பட்டம் வுட ஆரம்பிச்சுது ஒரு பழக்கமாப்போயிடுச்சு.பசங்க போடுற பட்டத்தையும் மாஞ்சா அடித்து கீழே தள்ளி விடுவேன். பட்டம் மேலே பறக்க பறக்க நானும் மேலெ பறக்குற மாதிரி இருக்கும்”.

“அதனாலதான் இந்த கட்டடத்தில் கடைசி மாடிக்கு வீடு பிடித்து இருக்கியா அப்படி சொல்லலாம்னு நினைக்கிறேன் ஆனால் அது உண்மையில்லை. கடைசி மாடியில் தான் வெலை கம்மியா இருக்கு..கிரவுண்ட் ஃப்ளோர் ஒண்ணாவது இரண்டாவது புளோரிலே வெலை ஜாஸ்தி ..இங்கே கம்மியா இருக்கு. அதுதான் வந்து இதை வாங்கலாம்ன்னு னெநச்சுட்டு இருக்கேன்”

“லிப்ட் ன்னு ஒன்னு இல்லாமல் போச்சுன்னா”

“ஆமாம் ..நீ ரொம்பவும் விபரீதமா கற்பனை பண்றே பிரவினா”

“இல்ல யோசிச்சு பாரு அப்படியும் நடக்க வாய்ப்பு இருக்கு .பலநாட்கள் கரண்ட் கட் ஏதாவது பிரச்சினை இல்லை லிப்ட் போடாம இருக்க வாய்ப்பு இருக்கு ..அப்ப எல்லாம் இந்த பத்தாவது மாடிக்கு ஏறி வருவது சுலபமா”

“அதுக்கு ஏதாவது வழி பிறக்கும். இப்படி பெரிய கட்டிடத்தைக் கட்டறவங்க அது பத்தி யோசிக்காம இருப்பாங்களா”.

“சரி உன் புருஷனுக்கு இந்த பத்தாவது மாடி பிடிக்குமா”

“எத்தனாவது மாடின்னு சொல்லலே. வெலையைச் சொல்லிட்டேன்”

“அப்போ அவர ஏமாற்ற.மாதரி தானே”

“அப்படி இல்ல பத்தாவது மாடியில்ன்னு சொன்னா ஏதாவது வேண்டாம்னு சொல்லி இருப்பாரோன்னு ஒரு பயம்”

“அப்புறம் எதுக்கு பத்தாவது மாடியில செலக்ட் பண்ணின”

“அதுதான்..பட்டம் விடுவோம்ன்னா இப்பதான் நீ கேள்வி கேட்ட பிறகு யோசித்துப் பார்க்கிறேன்..இங்கிருந்தும் பட்டம் விடுவாங்களா அப்படின்னு”

பிரவீனா மொட்டை மாடிக்கு செல்லும் வழியில் இருந்த படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டாள். கைகளை பக்கவாட்டில் ஊன்றிக்கொண்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். அவளின் சீரான மூச்சு குறைந்த வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் வாகனம் போலிருந்தது.

வானம் லேசான நீலத்தைக் கக்கியபடி இருந்தது. மழை வருவதற்கு இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தது. ஆனால் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.எல்லாம் சட்டுனு போயிடும்.

ஆமாம் வீடு என்கிற கனவு நிறை வேறும். வீட்டுக்குள்ள பத்து பேர் இருக்கிறது. ஓயாம எதுவும் சண்டை மாதிரி. எதுவும் மீன்கடை மாதிரி பேசிட்டு …பேச்சு இருந்துட்டே இருக்கிறது எல்லாம் காணாமப் போயிடும்.

வெயில்ல காஞ்சி கருவாடா போறது சாதாரணமாயிரும். சாயங்காலம் வீசும் காத்துல வந்து இருந்து பாரு பு டிக்கும் அதுதான் எதார்த்தம்.

சாந்தியின் கணவன் சார்ஜாவில் இருந்தான். அலுவலகம் துபாய் என்றாலும் அவன் தங்கியிருக்கிற இடம் சார்ஜா .துபாயில் வீடுகள் வாடகைக்கு கிடைப்பது சிரமமாக இருந்தது .கிடைத்தாலும் அதிகமாக இருந்தது.அதனால் காரில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ஊர்ந்து வந்து சார்ஜா வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டியிருக்கும் ரமேஷிற்கு உக்கிரமான வெயில் அவன் உடம்பை உருக்கி படுக்கையில் சாய்ந்து விட்டால் சீக்கிரம் தூக்கம் வந்துவிடும்.

ஆனால் சாந்திக்கு அப்படி இல்லை தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருப்பாள் . வீட்டில் காற்றில் அலைந்து கொண்டிருந்தாலும் மின்விசிறிக் காற்றை துழாவிக் கொண்டிருந்தாலும் அவளுக்கு தூக்கம் வராது.நடுராத்திரியில் தூக்கம் வரும். அது எப்போது முழிப்பைக் கொண்டு செல்லும் என்பது தெரியாது. இரண்டு மணிக்கு கூட விழிப்பு வந்துவிடும். அந்த சமயங்களில் கழிப்பறைக்கு சிறுநீர் கழிப்பதற்காக செல்லும் வேலை தவிர வேறு எதையும் செய்துவிட முடியாது .இருக்கும் இரண்டு அறைகளில் தூங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு சிரமமாகிவிடும் தொலைக்காட்சியைப் பார்த்து கொஞ்ச நேரம் ஆசுவாசப்படுத்திக் முடியாது. வெறுமனே தான் படுக்கையில் கிடக்க வேண்டி இருக்கும். படுக்கையில் கிடப்பதை விட படுக்கையில் உட்கார்ந்து கொண்டிருப்பது சிரமமானது என்று கூட அவள் உணர்ந்தாள் .ஆனால் அவள் சென்ற ஒரு பயிற்சியில் தூக்கம் வராவிட்டால் படுக்கையில் உட்கார்ந்து இருக்கும்படி சொன்னார்கள். முந்நூற்றிலிருந்து ஒவ்வொன்றாக கீழே இறங்கி வரும் எண்களை நினைத்துக் கொண்டே வந்து பூஜ்ஜியத்தை தொட வேண்டும். அதற்குள் தூக்கம் வந்துவிடும் என்றார்கள் சா.ந்திக்கு அப்படியெல்லாம் தூக்கம் வரவில்லை. மீண்டும் 500 லிருந்து கீழே வர ஆரம்பிப்பாள் .உட்கார்ந்து இப்படி எண்களை எண்ணிக் கொண்டிருப்பதும் கண்களை மூடிக் கொண்டிருப்பதும் தூக்கத்தை கொண்டு வந்து விடும் என்று அவள் பல சமயங்களில் நினைப்பாள். ஆனால் அது நிறைவேறாது. அப்படியே சாய்ந்து படுக்கையின் ஓரமாக தன் உடம்பினை ஒட்டிக் கொள்வாள்.

ரமேஷ் அப்படித்தான் அங்கே கிடப்பானா என்று யோசிப்பாள். ஆனால் வெயிலில் அலைந்து மணல் உடம்பு முழுக்க தடவி விட்டது போல் ஆகியிருக்கும். இரவு நேரத்தில் அவனுக்கு தூக்கம் சாதாரணமாக வந்து விடுவது பற்றி அவன் பல சமயங்களில் சொல்லியிருக்கிறான்.

“நான் இங்கே தூக்கம் வராமல் கிடப்பேன் நீங்க அங்க நல்லா தூங்குங்க. ஆம. எவ கூட தூங்குவீங்க”

“அதுதான் சித்ராதேவி. நாள் முழுக்க வெயில் அலைகிறது. கறுத்து சூடான உடம்பை பார்க்கிறோம்”

“ஓஹோ என்னெத் தவிர உங்களுக்கு அங்கு ஒருத்தி இருக்காளா..அந்த நிலையிலதான் சொகமா தூங்குறீங்க”

“ஆமா சொன்னேனே, நித்திரா தேவி.அ வதான் கைய புடிச்சு கால புடிச்சு தூங்கு தூங்கு ன்னு சொல்லுவா..”

“எனக்கு எந்த விதமான தேவையும் வந்து கைய பிடிக்கல்லை.கால பிடிக்கிறதுக்கு யாரும் இல்லை, தூங்குவதில்லை.. சிரமப்படுகிறேன்”

“சரியாயிடும் ..எல்லாம் சரியாயிடும்”

“எப்ப சரியாகும், நீங்க அங்க வேலைக்கு போயாச்சுன்னா இதோ ஒரு வீடு கட்டப் பணம் பயன்படும். அவ்வளவுதான். கொள்ளை கொள்ளையாக பணம் வர்ற மாதிரி ஏதாவது பிசினஸ் பண்ணலாம்னு ஆசை கூட கிடையாது உங்களுக்கு…இப்படியே போயிட முடியுமா”.

“வேற என்ன பண்ண முடியும். நீ சொல்ற மாதிரி எப்பவாச்சும் காசு மிச்சமாகும்..வீடு வாங்கலாம்.இன்னும் கொஞ்ச வருஷம் போயிட்டு ஏதாவது மிச்சமாச்சுன்னா இங்க வந்து ஏதாவது தொழில் பண்ணலாம்”.

“ஆமா என்ன தொழில் பண்ண முடியும் .கோடி கோடியா போட்டவன் எல்லாம் தலையில் துண்டை போட்டுக்கொண்டு நிக்கிறாங்க. ஜிஎஸ்டி ,வரி என்னமோ சொல்லிட்டு எல்லாம் ஒதுங்கிப் போறாங்க. நமக்கெல்லாம் பிசினஸ் ஒத்து வருமா..சொத்து சேருமா”

“நீ அதையும் சொல்றே.. இதையும் சொல்ற நான் என்ன பண்ணட்டும்”

ஒரு வீடு வாங்கி விட்டால் ஆசுவாசமாக இருக்கும் என்று நினைத்திருக்கிறாள். கணவன் வரும் சமயங்களில் தனித்து இருக்க உதவும் .தனித்திருக்கையில் நேரம் போக என்ன செய்யலாம் என்றுகூட யோசிப்பாள். யோசித்துப் பார்த்தால் இப்போது அத்தை மாமா கொழுந்தியா கணவனின் தம்பி என்று இருக்கும் குடும்பத்தில் சமைக்கவும் வீட்டை பராமரிக்கும் அவளுக்கு நேரம் போதவில்லை. இதில் ஜிஎஸ்டி கவலையோ ,துபாய் வெயில் கவலையோ அவளுக்கு வந்ததில்லை .ஆனால் இப்படி ஒரு வீடு வாங்குகிற போதே அவள் ரமேஷிடம் சொல்லி இருந்தாள்.

“வீடு வாங்கணும். நான் இங்கே இருக்க மாட்டேன். நிரந்தரமா. நாம வாங்குற வீட்டுக்குத்தான் நான் போவேன்”.

“அப்ப அவங்க எல்லாம்”

“அவங்க அவங்களா இருக்கட்டும் ..எனக்கான வாழ்க்கையை நான் வாழனும்”.

“தனியா இருக்கறது வாழ்க்கையா.நான் ஆறு மாசத்துக்கு ஒரு டைம் வர்றேன்.ஒரு மாசம் தாங்கும்.அப்புறம் போறேன் ஒரு வருஷத்துல ஒரு மாசம் உன்னோடு இருக்கன். அவ்வளவுதான் அதுக்குள்ள ஒரு குழந்தை ஆகாமிய போகும்”

“ஓ நீ அப்படி வர்றியா”

ஆமா குழந்தையை வைத்து காப்பாற்றுவது பத்திரமா பாத்துக்கொள்வது தனது உலகம் என நினைத்தாள்

“குழந்தை ஆகற வரைக்கும் ஏதாவது வேலைக்கு போகலாம்னு இருக்கேன்”

“உனக்கெல்லாம் வேலை ஒத்து வருமா”

“ஒத்துவராமல் இருந்தாலும் போய்த்தான் ஆகணும்”. ஏதோ ஒரு வேலை அமையும் அவள் அப்படித்தான் தீர்மானித்திருந்தாள்.

இப்படி துபாய் சார்ஜா என்று போகிற ஆட்கள் எல்லாம் ஏன் பெண்டாட்டியை விட்டு விட்டு போகிறார்கள் என்பதற்கு பல சாட்சியங்கள் இருந்தன. திருமணம் செய்கின்ற போது அவன் கூட்டிக்கொண்டு போவான் என்றுதான் நினைத்திருந்தாள்.

“டூரிஸ்ட் மாதிரியாச்சும் கூட்டி போயி காமிச்சிட்டு அனுப்பலாம் இல்ல”.

“அதுக்கு ஏற்பாடு பண்றேன். அதுக்கு ஒன்னும் சிரமமில்லை”

“இப்படித்தா வருஷக்கணக்கில் சொல்லிட்டு இருக்கீங்க”

“இந்த வீடு வாங்குற செலவும் முடியட்டும் .அப்புறம் உன்ன டூரில் கூட்டிட்டு போறேன்”

“அப்போ என்னவா இருந்தாலும் அங்க என்னோட குடும்பம் என்னோட ந டத்த மாட்டேங்க”

“அதெல்லாம் சிரமம். ரொம்ப செலவு அதிகம் வீடு .வாடகை எடுக்கிறது ஒரு வீட்டுக்கான செலவு எல்லாம் ரொம்ப ஜாஸ்தி …அப்புறம் சேமிக்க முடியாது”

“அங்க நாம கூட இருந்த அது போதுமே”

“முடியலெ.. அப்புறம் என்ன விஷயம் இப்போ”

“அதுதான் எல்லா துபாய் காரர்களும் பொண்டாட்டி இங்கேயே விட்டுட்டு போடுறாங்க . போற ரகசியமா”

“அப்படி கூட நீ வச்சுக்கலாம்”.

“என்னமோ ஏமாந்துட்டேன்னு தோணுது ..ஏமாற்றம்தான்”

“ஏமாந்துட்டேன்ன்னு நெனைக்காதே”

“இல்ல மனசுக்குள்ள அப்படி ஒரு பக்கம் இருந்துட்டே இருக்கு”.

இந்த அடுக்கு மாடி வீட்டை வீட்டின் ஒரு பகுதியை வாங்க திட்டமிட்டு இருந்தபோது அவளுக்கு மலைப்பாக தான் இருந்தது. முதலில் இதற்கான கடனையெல்லாம் கட்டியாக வேண்டும் .அதற்காக வேலைக்கு போக வேண்டும் என்பதை அவள் மனதில் இருந்தது அந்த குடியிருப்பு மெல்ல வளர்ந்து கொண்டிருப்பதை அவள் கண்ணாலேயே ரசித்துக் கொண்டிருப்பது போல் இருந்தது .அ.வ்வப்போது பிரவினாவைக் கூட்டிக்கொண்டு வந்து பார்த்துவிட்டு செல்வாள் .இப்படி மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. இப்போது உயரத்தில் கட்டடம் நின்றுகொண்டு எதைஎதையோ மறப்பது மறைப்பது போல் இருந்தது.
அந்த வளர்ந்து வரும் குடியிருப்பின் முகப்புப் பகுதியில் காவலாளியாக முன்பு தென்பட்ட ரமேஷ் நாயர் உடம்பு முடியாமல் கீழ்தளத்தில் ஒரு இடத்தில் படுத்துக் கிடப்பதை அவள் கவனித்திருக்கிறாள் . அவரைப்பற்றி அவள் விசாரித்தாள். குவைத் நாட்டில் வேலை செய்து பணம் ஈட்டி வீட்டிற்கு தந்திருக்கிறார். பிறகு வயதான காலத்தில் எதற்கு இருக்கும் நிலமும்இடமும் என்று மகன்கள் பாசத்துடன் கேட்க அதை பிரித்து எழுதிக் கொடுத்துவிட்டார் .அதன் பின்னால் ரமேஷ் நாயர் யாருடன் இருப்பது என்பது பிரச்சினை ஆகிவிட்டது .மனைவி இறந்த பின்னால் மனைவி பால மணியம்மையை நினைத்துக்கொண்டு காலம் தள்ளினார். மகன்கள் காப்பாற்றுவார்கள் என்று கூறிக்கொண்டிருந்தார் .அவர்களை யாரும் கவலைப்படவில்லை. புதிதாக எழுப்பப்படும் குடியிருப்பு பகுதிக்கு சென்று அங்கு ஏதோ ஒருவகையில் காவலாளியாக இருப்பது என்பதுதான் நான்கு ஆண்டுகளாக வாடிக்கையாகிவிட்டது. அவருக்கு. அவ்வப்போது மகன்கள் வந்து கையில் கொண்டு வந்திருக்கும் பிரியாணியும் மிச்சர் பொட்டலத்தையும் கொடுத்து விட்டுச் செல்வார்கள் .உடம்பு முடியாமல் நடக்கின்ற போதும் அப்படித்தான் அதில் மாறுதல் இல்லை .ஆனால் யாரும் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போக வில்லை. குவைத்தில் அவர் சம்பாதித்த பணம் வீடுகளாக மகன்கள் பெயரில் இருந்தன. யாராச்சும் கூட்டிட்டு போயி வீட்டில் வையுங்கள் என்று கூட கதறி இருக்கிறார் .அப்போதுதான் அவருக்கு தெரிந்த முத்துசாமி இறந்தது கூட ஞாபகம் வந்தது. அவரின் சொத்தையெல்லாம் மகன்களுக்கும் மகள்களுக்கும் எழுதிவைத்த பின்னால் பெரிய மகன் வீட்டில் ஒரு அறையில் இருந்தார் .மருத்துவச் செலவு என்று வருகிறபோது அவர் திண்டாடினார். யாரும் உதவவில்லை .கையில் வைத்திருந்த வீட்டுமனைப் பத்திரங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு உறவினர்களிடம் போய் பசங்கள சும்மா விடக்கூடாது கேஸ் போட போறேன்.. இப்படி பண்ணிட்டாங்களே என்று புலம்பிக் கொண்டு வந்தார்..பிறகு ஒருநாள் இரவில் தொடர்வண்டி பாதையில் தலை நசுங்கி இருக்க தொடர் வண்டியில் விழுந்து இறந்துவிட்டார் .அவரின் பக்கம் இருந்த பையில் வீட்டு மனைகளின் பத்திரங்களின் நகல்களும் இருந்தன.தன் சாவுக்கு மகன்கள் தான் காரணம் தன் மருத்துவச் செலவுக்கு கூட அவர்கள் பணம் தர வில்லை என்ற குற்றச்சாட்டும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளும் இருந்தது. ஆனால் அதை மறைப்பதற்காக மகன்கள் நிறைய செலவு செய்ய வேண்டி இருந்தது .முத்துசாமியின் மருத்துவ செலவிற்காக பணம் தராதவர்கள் அவர்கள் முத்துசாமியின் மரணம் தந்த கசப்பை நீக்க நிறைய செலவு செய்ய வேண்டியிருந்தது. வழக்கில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக ஏதேதோ அவர்கள் செய்ய வேண்டியிருந்தது .
அப்படி ஏதாவது ஒரு முடிவை மாவட்ட ஆட்சியரின் மனுதாரர் நாளில் சென்று மகன்களை குற்றம்சாட்டி மனு தருவது என்பது கூட அவருடைய மனதில் இருந்தது .அதை வெளியில் கூடச் சொல்லிக் கொண்டிருந்தார்.ஆனால் எதற்கும் பலன் தராமல் உடம்பு சீரழிந்து விட்டது.

இன்னைக்கு அந்த மலையாளத்துக்கார்ரைப் பார்க்க முடியலையே .எங்காச்சும் ஒரு ஓரமா படுத்துக் கிடப்பார் .அப்பார்ட்மெண்ட் வேலையெல்லாம் முடிஞ்சது இல்லயா.. என்ன அபசகுணமா அவரு ..அவர வைத்திருப்பார்களா.. நல்ல கருவேப்பிலையே தூக்கி எடுத்துட்டு போயிட்டு இருப்பாங்க …காஞ்ச கருவேப்பிலை எதற்கு பயன்படும் ..எங்க தூக்கி போட்டு இருப்பாங்க ளோ.. செத்துப் போய் இருப்பாரா..தெரிஞ்சா நாம போன் பண்னீ விசாரிக்கலாம் போறப்போ விசாரிக்கலாம் ..ஆமா செத்துப்போய் இருந்தாலும் நாம என்ன பண்ண முடியும் .என்னமோ பொழப்பு வெளிநாடு போவது சம்பாதிக்கிறது.. அப்புறம் யார் கண்ணிலும் படாமல் செத்துப்போறது

“இது எல்லாருக்கும் பொதுவா சொல்லாதே”

கதவின் உள்புறம் கோலம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது .

“என்ன கோலம் எல்லாம் வாசல்ல தான் போடுவாங்க இந்த கோலம் கதவுக்கு இந்த பக்கம் வந்துருச்சு”

“இதெல்லாம் ஸ்டிக்கர் தானே எங்க வேணா ஒட்ட வைக்கலாம் ..வெளியே ஒண்ணு ஓட்டி இருக்கேன்”

“அப்போ கோலம் போடுற வேலையெல்லாம் இல்லாமெப்போச்சு”.

“நிஜமா போடணும் அப்படி போட்டும் என்ன பண்ண போறோம் அதுவும் போடணும்”

ஒருமையுடன் நினது திருவடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் எங்கிருந்தோ ஒரு மெல்லிய பாடலாக அது பறந்து வந்தது

சாந்தி ரமேஷ் தோளில் ஒருக்களித்துச் சாய்ந்திருந்தான் .

உத்தமர் அப்படி உங்களுக்கு பெயர் வைத்திருக்கலாம் .

“ரொம்ப மரியாதையா இருக்கு எப்படி ..உத்தமன்னு தான் பேர் வெச்சு இருப்பாங்க, நீ உத்தமர் ன்னு சொல்றே. மரியாதையா இருக்கு. அப்படியே வந்து நெனச்சா நெனச்சா நல்ல விஷயம்தான்”.ரமேஷின் தொண்டையிலிருந்து பரபரப்பாய் குரல் கரகரவென்று மாறிக்கொண்டிருந்தது .

கடுக்காய் சீரகம் பெருஞ்சீரகம் பனங்கற்கண்டு போட்டு கசாயம் வைத்து தரட்டுமா

“பரவால்ல பாட்டி வைத்தியம் கூட உனக்கு தெரிஞ்சிருக்கு”

“இது பாட்டி வைத்தியம்.கை வைத்தியம் பாட்டி எல்லாம் போயி ரொம்ப நாளாச்சு இல்ல”

ரமேஷ் துபாயிலிருந்து வந்தபின் பத்தாவது மாடிக்கு குடியேற்றமும் நடந்துவிட்டது ஒருவகை நெகிழ்ச்சியுடன் தான் அவனும் இருந்தான் .தனக்கென ஒரு வீடு ஆகி இருப்பதில் அவனுக்கு மகிழ்ச்சி இருந்தது. ஆனால் வாங்கியிருந்த கடனை கட்டுவதற்கு வேலை ஒத்துழைக்க வேண்டும் என்பது அவளுடைய மனதில் இருந்தது .

இந்த டீமானிட்டேசேஷன் வந்தது.எங்க போனாலும் அதைக் காரணம் காட்டி இந்திய பணத்தில் தான் சம்பளம் தருகிறார்கள் .அங்க வேலை செய்வதற்கு கூட ஆளு நிறைய வந்துட்டாங்க .அவங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கு .அந்த ஊர்ல எல்லாம் கட்டட வேலைதான் எப்போதும் இருக்கும் …குறையாது .அதிலேயே கூட சிரமம் வந்துட்டு இருக்கு .

அவன் தொண்டை மறுபடியும் கரகரத்தது .

“ஏதாவது கசாயம் போட்டுத்தான் ஆகவேண்டும்”

“இல்லல்ல நாலு நாளா தொடர்ச்சியா இங்கேயே உன்கிட்ட விழுந்து கெடக்குறன் பாரு அதனால் வந்த பலவீனமா இருக்கலாம் .விழுந்து கிடக்கிறேன். ஆமா பின்ன என்ன எங்கேயும் போகாமல் சொந்தக்காரங்க வீட்டுக்கு போகாம கூட இருக்கன்”.

“சரி அது நல்லதுக்கு தான் இருக்கும் .என் கூட இருக்கற மாதிரி இருக்கும்”

“எனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லை”

“ஆயிரம் திறமைகள் இருந்தாலும் அங்கீகாரம் ஒரு பெரிய விஷயம். இல்லையா ..பொறுப்பான வாழ்க்கை அதுதான் அங்கீகாரம் .அப்புறம் என்ன தோழியாப் பார்க்கிறது. ஒரு தோழியை ஒரு மனுஷனா அனுபவித்து பார்க்க முடிஞ்சா அதுதான் நல்ல வாழ்க்கை. துணை ..”

“ஓகே”

இருமல் சத்தம் வந்து ஒளிந்தது போல இருந்தது.

“அன்பு செலுத்த எதுவுமே தொலைந்து போகாது”

மறுபடியும் தத்துவமா நல்லாதான் இருக்கு அப்புறம் அந்த இடத்துல அதிகாரத்துக்கு இடம் இல்ல அப்புறம்

“என்ன நான் தத்துவமா படிச்சிட்டு சொல்லிட்டு இருக்கேன்”

“சரி சத்தம் வேண்டாம் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்க சினிமாவுக்கு போகலாம்”

“சரி பக்கத்துத் தியேட்டர்ல என்ன படம் ஓடுது”

“காவியத்தலைவன் ..”

“உங்க அப்பா காலத்து படமா”

“இல்ல இல்ல இல்ல உங்க காலத்துப் புதுப்படம் .பாட்டுல எப்படி ரீமிக்ஸ் பண்றாங்க.அதுமாதிரி இப்பல்லாம் டைட்டில் வந்து ரீ மிக்சிங் பண்ணிக்கறாங்க”

“சரி காவியத்தலைவன் நல்லாதான் இருக்கு”

“போகலாம் நீங்கதான் காவியத்தலைவன்.. அப்படியே நான் காவியத்தலைவி சரி போலாம்”

“சரி”

“ஆனால் தலைவன் எப்ப இங்க வருவான்னு பார்த்துட்டு இருக்க வேண்டி இருக்கு வரப்ப எல்லாம் மடியில் போட்டு வேண்டியிருக்கு”

“அது சுவாரசியமா இல்லையா”

“அந்த ஏக்கம் பெரிய எரிமலையா மாறுதே.. அது எப்படித் திரும்பி பார்க்கக் கூட பயமா இருக்கு”

“நான் உன் கூட இருப்பேன்”

“பொய் சொல்றீங்க சினிமா தியேட்டர் போறப்போ ய் இரண்டு மணி நேரம் கூடவே இருப்பீங்க. அது தெரியும் . அது மட்டும் வேண்டாம்ன்னு இல்லெ .அப்புறம் எப்பவும் இது மாதிரி இருக்கணும்
அதுதான் ஏதாச்சும் சம்பாதித்து வந்துட்டு இங்க ஒரு சின்னதா பிசினஸ் பண்ணலாமே”

“அதுகூட பார்க்கலாம் ஆனா இப்போ ஜிஎஸ்டி , வரி இனி இந்த மாதிரிப் பிரச்சனை இருக்கிற மனுஷன ஓடிட்டே இருக்கான்” .

“அப்போ தலைவி வந்து தலைவனுக்காக காத்திருக்கும் காலம் முடியாதா ..இருக்கலாம்.. அது மாறுவது கூட சீக்கிரம் வரலாம்”.

“காத்துக்கொண்டிருப்பது தலைவனுக்கு தானே பெருமை இல்லையா”

“பெருமையா இருக்கு அந்த பாதுகாப்பு இல்லாத மாதிரி தோணுது சரியா .நாம நம்ம பாதுகாப்பு பண்ணிக்குவோம் ரமேஷ்”

சாந்தி அணைத்துக் கொண்டபோது அவளின் உடம்பில் ஈரத்தன்மை சரியாக உணர்ந்து கொண்டான்.வெதுவெதுப்பு மெல்ல ஆக்கிரமிக்க ஆரம்பித்தது

இப்போ தலைவனும் தலைவியும் இல்லை. ஒரே ஆள்தா.

“ஒரு கதை சொல்லுங்க”

“கதை வேண்டாம் ..கணக்கு”

“பொதுவானக் கணக்கிலெ ஒன் பிளஸ் ஒன் டூ .. புருசன் ஒன்னு.. பொண்டாட்டி ஒன்னு . குடும்பத்தை கணக்குல ஒன் பிளஸ் ஒன்னு .. ஒண்ணுதான்”

ஒண்ணா ஆடியடறதிலெ.. தலைவன் தலைவி மறஞ்து போனாங்க

தலைவனுக்கு உள்ளே தலைவி இருக்கா அதுதான். தூரமா இருந்தாலும் பக்கமா இருக்கறதா நெனச்சுக்க வேண்டியிருக்கு

“அடுத்த பிறவியிலும் இதுமாதிரி நீங்களும் ஒன்னு, நானும் ஒன்னா, சேர்ந்தும் ஒன்னா இருக்கணும். அப்பப்போ பிரிவு இருந்தாலும்.அது போதும்”.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *