சங்கர ராமன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 20, 2014
பார்வையிட்டோர்: 8,049 
 

சங்கரன்:

15 ஜூன் 1960 மதியம் 3.30 சதய நட்சத்திரம், சங்கரன் ஜனனம். அப்பா சாரதி, அம்மா ராதை. சென்னையில் அண்ணா நகரில்.

சங்கரன் மூன்றாவது குழந்தை, இரண்டு பெண் குழந்தைகளுக்கு பிறகு. நடுத்தர வர்க்க குடும்பம். சாரதி ஒரு சைவ ஹோட்டல் நடத்திக் கொண்டிருந்தார். ஏற்ற இறக்கமான வாழ்க்கை. ‘அதிர்ஷ்டம் இல்லாதவனுக்கு கலப்பால் வந்தாலும், அதையும் பூனை குடிக்குமாமே?’ சாரதியின் ராசி அந்த வகை.

ராமன்:

15 ஜூன் 1960 மதியம் 3.30 சதய நட்சத்திரம், அதே நாளில், அதே நேரம் ராமன் ஜனனம். அப்பா கோவிந்தன், அம்மா கல்யாணி . சென்னையில் புரசைவாக்கம்.

ராமன்தான் முதல் குழந்தை. அப்பா கோவிந்தன், நல்ல பசையுள்ளவர். சமூக மேல் தட்டு. சென்னையில் நான்கு வீடு, ஊட்டியில் எஸ்டேட், பெரம்பூரில் பெரிய நகைக் கடை, இதைத்தவிர ரியல் எஸ்டேட் பிசினஸ் வேறு. செல்வம் கொழித்துக் கொண்டிருந்தது. தொட்டது துலங்கியது. ‘இல்லாரை எல்லோரும் எள்ளுவர், செல்வரை எல்லோரும் செய்வர் சிறப்பு’ , இது இயற்கை தானே!

முன் குறிப்பு: இந்த கதை சங்கரன் ராமனை பற்றியது. அவர்களது பெற்றோர் பற்றி அல்ல.

****

குழந்தை பிராயம் :

சங்கரன்:

பிறவியிலேயே திறனாளி. ஆண் குழந்தை செல்லம் வேறு, அம்மா அலட்டிக் கொள்(ல்)வதற்கு கேட்பானேன்?

“எங்க சங்கரன் ரொம்ப கெட்டிக்காரன் தெரியுமோ? எட்டு மாசத்திலே பேச ஆரம்பிச்சுட்டான். மூணு வயசிலே எ,பி,சி,டி சொல்லுவான்!”

“சங்கரா! எங்க எ,பி,சி,டி சொல்லு ?”

“இசட்,ஒய்,எக்ஸ்,டபிள்யூ…”

“அட தலை கீழா சொல்றானே!” – அதிசயிப்பார்கள். “ஆச்சரியமா இருக்கே! குழந்தைக்கு சுத்தி போடு ராதா! கண்ணு பட போறது!”

ராமன்:

ராமனும், சங்கரனை போன்ற திறனாளிதான். ஒன்று அல்லது இரண்டு மாற்று குறைவாக இருக்கலாம்.

ராமனின் அம்மா கல்யாணியும் எல்லா அம்மாவை போல்தான். கொஞ்சம் படித்தவள். மேல்தட்டு. அதனால், கொஞ்சம் ஆங்கிலத்தில் அலட்டிக் கொள்வாள்.

“ராமா ! ஆண்டிக்கு ரைம்ஸ் சொல்லு” – அம்மா பெருமை பிடி படாது.

“பாபா ப்ளாக் ஷீப் …”

“அடேடே! ரொம்ப கெட்டியா இருக்கானே!”

“இதேல்லாம், இவன் போன வருஷமே பண்ண ஆரம்பிச்சுட்டான். இப்போ, ஒன் டு 100 கூட திருப்பி ரிவர்ஸ்லே சொல்லுவான். சொல்லு ராமா.”

“100,99, 98,97,…”

“ஆச்சரியமா இருக்கே! தலை கீழா சொல்றானே ! இதெல்லாம் எப்படி தெரியும் குழந்தைக்கு! சுத்தி போடு கல்யாணி! கண்ணு பட போறது!”

“இவன் ஐ.க்யு ரொம்ப அதிகமாம். இப்போ சரியா சொல்ல முடியாதாம். பின்னாளில், ஒன் ட்வென்டிக்கு மேலே இருக்குமாம். அமெரிக்கா அனுப்பி பெரிய டாக்டராக்கணும். ஹார்வர்ட்லே சேக்க போறோம். இதே நினைப்பு தான் அவருக்கு”

****

இடைநிலை பள்ளிப் பருவம்:

சங்கரன்:

சங்கரனுக்கு படிப்பு வெகு எளிதாக வந்தது. மிக நன்றாக படித்தான். முதல் மார்க் எதிலும். தனது வருமான தகுதிக்கு கொஞ்சம் அதிகமாகவே, சாரதி அவனை பெரிய பள்ளியில் சேர்த்தார். ராமனும் அதே பள்ளியில், அவனது வகுப்பில். சேர்ந்தே படித்தனர். இருவரும் நல்ல நண்பர்கள்.

“சங்கரா! சாயந்தரம் நீ என்னடா பண்ணுவே!” – ராமன்

“கிரிக்கெட் விளையாட போயிடுவேன்”- சங்கரன்

“எங்கே?”

“வேறெங்கே! தெருவிலே தான். பக்கத்து வீட்டு ராஜா, செல்வம், குமார் எல்லாரும் சேர்ந்து ஆறு மணி வரை விளையாடுவோம்”

“அப்புறம்?”

“அப்புறமென்ன? குளிச்சுட்டு, சாமி கும்பிட்டுட்டு, படிப்பேன். அப்புறம் சாப்பாடு. தூக்கம். நீ என்ன பண்ணுவே?”

“நானா! எங்க வீட்டிலே கேம்ஸ் எல்லாம் ஆட விட மாட்டாங்க! போனவுடனே, டுயஷன், அப்புறம் மியூசிக் கிளாஸ், ட்ரம்ஸ் கத்துக்கணும். ஞாயிற்றுக்கிழமை வந்தா போதும், அம்மா கராத்தே கிளாஸ் போ, யோகா போன்னு சொல்லி படுத்துவாங்க. ரெஸ்டே கிடயாது. டிவி கூட கொஞ்சம் தான் பாக்க விடுவாங்க”

“பாவண்டா நீ!”

இவர்கள் இருவருக்குமே பகுத்தறிவு (analytical intelligence) மற்றவரை விட அதிகம். ஆக்கபூர்வ அறிவும் (creative intelligence) மற்ற மாணவரை விட மிக அதிகம்.

***
சங்கரன்

சங்கரனின் அம்மாவிற்கு வீட்டு வேலையே சரியாக இருந்தது. மூணு குழந்தைகளை கவனிக்கணும். சமையல் வேலை. கணவர் வீட்டுக்கு வரவே, ஒரு 11.00 மணி ஆகிடும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் ஆசை இருந்தாலும், நேரம் இருவருக்குமே இல்லை.

சங்கரனே தன் முயற்சியால், கணித போட்டிகளில் கலந்து கொண்டான். வினா விடை போட்டிகளில் பெயர் கொடுத்து பரிசு வாங்கினான். ஸ்கவுட்டில் சேர்ந்தான். பேச்சு போட்டி, மற்றும் கட்டுரை போட்டிகளில், ஆசிரியர் சொல்படி கலந்து கொண்டு, பள்ளிக்கு பெயர் வாங்கி கொடுத்தான்.

சாரதியோ, ராதாவோ இதற்கு தடை சொல்லவும் இல்லை. ரொம்ப கேட்டுக்கொள்ளவும் இல்லை. அவர்கள் கவலை அவர்களுக்கு குடும்பம் நடக்கணுமே? பார வண்டி. படிப்பு, கல்யாணம், காசு வேணுமே?

ராமன்:

ராமனின் பெற்றோர், சங்கரனின் பெற்றோருக்கு நேரெதிர். ஒரே குழந்தை. செல்லம். பார்த்து பார்த்து செய்தனர். அவனது ஒவ்வொரு செய்கையிலும் ஈடுபட்டனர்.

“என்ன ! ராமா! இரண்டாவது ரேங்க் தான் வாங்கியிருக்கே?. எனி ப்ராப்ளம்? பரவாயில்லே. விடு. இது கூட ரொம்ப சந்தோஷம் தான். நெக்ஸ்ட் டைம்லேருந்து எப்பவும் முதல் ரேங்க் வாங்கணும் என்ன? அப்பதான், ஹார்வர்ட்லே சேர்க்க முடியும்!”

“ஏன் ராமா, அசதியா இருக்கா? டாக்டரை வர சொல்லட்டுமா? வேணா, இன்னிக்கு கராத்தே வகுப்பு வேண்டாம். சேர்த்து நாளைக்கு பண்ணலாம் என்ன?”

“ராமா, மாத்ஸ் கிளப் சேர்ந்தியே, இன்னிக்கு என்ன பண்ணினே சொல்லு?”

“உன்னோட சயின்ஸ் டுயஷன் மாஸ்டர் நல்லா பாடம் எடுக்கிறாரா?”

ராமனின் வளர்ப்பில், கோவிந்தனும், கல்யாணியும் ஆர்வம் காட்டினர். உற்சாகப் படுத்தினர். ஊக்கமளித்தனர். செஸ் போட்டி, பில்லியர்ட்ஸ் போட்டி, நீச்சல் பயிற்சி, ஸ்கேட்டிங், என ஒரு செயலிலிருந்து மற்றொன்றிற்கு அவனை அடிக்கடி மாற்றி கொண்டிருந்தனர். வாழ்க்கையை எதிர்கொள்ள அவனை தயார் பண்ணினர்.

அவர்களிடம் நேரம் இருந்தது. செலவு செய்ய பணம் இருந்தது பையனிடம் பிரியம் நிறையவே இருந்தது. எதிர்பார்ப்பும் இருந்தது. ராமனிடம் அதற்கேற்ற உழைப்பு இருந்தது.

****

மேல்வகுப்பு பள்ளி படிப்பு

சங்கரன்:

ஆசிரியர் சுஜாதா சொல்வது போல், மத்திமர் வர்க்கத்தை சேர்ந்த சங்கரனின் பெற்றோர் சாரதி மற்றும் ராதா கொஞ்சம் பயந்த சுபாவம். அதிகார வர்க்கத்தை, பள்ளி நிர்வாகத்திடம், எதிர்க்க துணிவு கொஞ்சம் கம்மி. பணிந்த, அடங்கிய தொனி.

ஆசிரியர் பெற்றோர் சந்திப்புகளில், ராதா மட்டும் கலந்து கொள்வாள். ஆசிரியை, ஆசிரியர் என்ன சொன்னாலும், பதிலே பெசாமல், கேட்டுக் கொள்வாள். மறுப்பே சொல்ல மாட்டாள். சங்கரனுக்காக பரிந்து பேசவே மாட்டாள்.

“அப்படியா மேடம்!”
“ சரி மேடம்!. நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்”
“தேங்க்ஸ் மேடம், நீங்க சொல்றபடியே செய்யறேன்.”

இப்படியே இருக்கும், சங்கரனின் அம்மா ராதாவின் பேச்சு.

டீச்சர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். அவங்களுக்கு தெரியாதா என்ன? ஆசிரியர் சொன்னதை சங்கரனிடம் பகிர்ந்து கொள்வதும் குறைவே. நேரமின்மையும், கட்டுப்பட்டித்தனம், பகிர்ந்து கொள்ளும் எண்ணமின்மையுமே காரணமோ என்னவோ?.

ராமன்:

ராமனின் பெற்றோர், இந்த விஷயத்திலும் சங்கரனின் பெற்றோருக்கு நேரெதிர். கோவிந்தனும், கல்யாணியும், ராமனுடன் சரி சமமாக அமர்ந்து அவனுடன் பேசினார்கள். விவாதம் செய்தனர். பகிர்ந்து கொண்டனர். நிறைய தகுதி வளர்த்துக் கொள்ள மறைமுகமாக ஊக்குவித்தனர்.

ஒரு நாள், ராமனுக்கு பல் வலி. டாக்டரும் போக வேண்டி வந்தது. அப்பாவுடன் காரில்.

“அப்பா! ஏம்பா! என் பல் வலிக்குது?”
“உன் பல்லுலே குழி இருக்கு. கொஞ்சம் ஈறு பிரச்னை கூட இருக்கும் ராமா.”
கூட வந்த அம்மா “ நீ டாக்டர்கிட்டே உன் சந்தேகமெல்லாம் கேக்கணும்? கூச்சப் படகூடாது. என்ன?”
“என்ன வேணாலும் கேக்கலாமா?”
“அவர் அதுக்கு தானே இருக்கார். தாராளமா கேள். தைரியமா கேக்கணும் என்ன?”

***

பல் டாக்டரின் அறை:

“என்ன ப்ராப்ளம் ராமன்?
“பல்லு வலி டாக்டர்.”
“ஆ! காட்டு”
“ஆஆஆஆ”
“குட். சின்ன பிரச்னை தான். சரி பண்ணிடலாம். ஆனா, கொஞ்சம் வலிக்குமே பரவாயில்லையா? வலிக்காம இருக்க ஊசி போடறேன். ஓகே வா”
“ஓகே டாக்டர். ஆனா, ஊசியை வலிக்காம போடுங்க”
“சரி சார், அப்படியே ஆகட்டும்”- டாக்டர் சிரித்தார்.
“டாக்டர், ஏன் எனக்கு பல்லிலே வலிக்குது?”
‘அதுவா! உன் ஈறுலே இன்பக்ஷன்”
“இது ஏன் எனக்கு வந்தது?”
“உணவுத்துகள்கள் ஈறுகளில் போய் ஒட்டிக் கொள்ளும்போது ரசாயன மாற்றம் நடக்கும். இதனால் ஈறுகளில் ரத்தம் வரும்”
“ ஆனால், டாக்டர், அப்பா எனக்கு பல்லிலே குழி இருக்குன்னாரே!”
“அது கூடத்தான். ஆனால் அடைச்சிடலாம்”
“பல்குழின்னா என்ன?”
“பாக்டீரியா நமது உணவில், முக்கியமா இனிப்பை லேக்டிக் அமிலமாய் மாறுகிறது. அமிலம் எல்லாவற்றையும் அரிக்கும் ஆனால் டென்டின் அடுக்கை அடையும் போது கூச ஆரம்பிக்கும். அப்போதான் பல் குழி விழும்.”
….
இப்படியே போகும் டாக்டருடன் ராமனின் விவாதம்.

ராமனின் பெற்றோர் வாக்குவாதம் செய்ய அவனை தூண்டினர். பதவியில் இருப்பவரிடம், படித்தவரிடம் அவனை விவாதம் செய்ய முடுக்கினர். அவர்கள் அவனது வளர்ச்சிக்காக, உரமிட்டனர், தண்ணீர் ஊற்றினர், களை எடுத்தனர், மருந்து அடித்தனர்

ஆசிரியர் பெற்றோர் சந்திப்புகளில், கல்யாணி மற்றும் கோவிந்தனும் தவறாமல் கலந்து கொள்வார்கள். ஆசிரியை, ஆசிரியர் என்ன சொன்னாலும், ராமனுக்காக கச்சை கட்டிக்கொண்டு பரிந்து பேசுவார்கள். ஆசிரியர் சொன்னதை ராமனிடம் உடனுக்குடன் பகிர்ந்து கொள்வர்.

“மேடம், ராமன் இந்த தடவை ஆங்கிலத்தில் மார்க் 75 தான் வாங்கியிருக்கான். ஏன்?”

“சரியாய் படிக்கலை என நினைக்கிறேன்!”

“சாரி மேடம்! ராமன் ரொம்ப கஷ்டப்பட்டு படித்தான். டியுஷன் வேறே போறான். எனக்கு சந்தேகமா இருக்கு! இன்னொரு தடவை அவன் பேப்பர் செக் பண்ணுங்க ப்ளீஸ்”

“இருக்காதே. ஆனாலும், உங்களுக்காக மீண்டும் சரி பார்க்கிறேன்”.

சிறிது நேரத்திற்கு பின் ஆசிரியை “சாரி கல்யாணி மேடம், நீங்க நினைச்சது சரி, 85 மார்க் வாங்கியிருக்கிறான். கூட்டல் பிழை. மாத்திட்டேன்”

“எனக்கு தெரியும், எங்க ராமன் பத்தி”

****

குண நலன்கள்

சங்கரன்:

கீழ்ப்படிதல், சத்தம் போடாத அமைதி இது அவனது குணமாயிற்று. தனது நேரத்தை உபயோகமாக செலவழிக்க கற்று கொண்டான். சொந்தக் காலில் நிற்க கற்றுக் கொண்டான். ஆனால், மற்றவரிடமிருந்து ஒதுங்கி போனான். கொஞ்சம் ரிசெர்வ் டைப்.

கொஞ்சம் குறைவான தன்னம்பிக்கை, தாழ்வு மனப்பான்மை, விட்டுக் கொடுத்தால் என்ன என்று எண்ணும் போக்கு சங்கரனுக்கு. அடித்துப் பேசும் திறமை இல்லை. அதை அவன் வளர்த்துக் கொள்ள வில்லை. என்ன காரணம்? பெற்றோரின் ஜீனா, வளர்ப்பா, மத்திமர் குணமா, சுற்று சூழலா?

ராமன்:

ராமனுக்கு கிடைத்த வளர்ப்பு, எக்ஸ்போசர் காரணமாகவோ என்னவோ, அவனுக்கு நிறைய அனுபவம் கிடைத்தது. கூட்டு முயற்சி, கட்டுக் கோப்பாக இருக்க கற்றுக்கொண்டான். பெரியவர்களுடன் அழகாக பேச. “யாரிடம், எதை, எப்படி, எப்போது சொல்கிறோம்” என்பது வாழ்க்கையில் முன்னேற மிக முக்கியம் என சொல்வர். நடைமுறை அறிவாற்றல். (Practical Intelligence) ராமன் அதை மிக அழகாக வளர்த்துக் கொண்டான். அவன் வளர்ந்த விதம் அப்படி.

ராமனுக்கு தனது தேவை என்ன என்பது தெரிந்திருந்தது. தான் என்ன படிக்க வேண்டும் என்பதை அறிந்து வைத்திருந்தான். அப்பா அம்மாவின் முழு பக்க பலமும், பண பலமும் இருந்தது.

மருத்துவராகட்டும், கல்லூரி, விளையாட்டு, நண்பர் குழாம், எங்கும் அவன் பேச்சு எடுபட்டது.

****

இன்று:

காஞ்சிபுரம். பெரிய பட்டுப் புடவைக் கடை. ஒரு பெரிய வெளி நாட்டுக்கார் வந்து நின்றது. பின்னாடியே ஒரு ஜீப். இரண்டு அரசு அதிகாரிகள் இறங்கினர். காரிலிருந்து கோட் அணிந்த நபர் இறங்கினார்.

புடவைக் கடை முதலாளி வாயெல்லாம் பல்லுடன் வரவேற்றார். “ வாங்க! வாங்க! உங்களுக்காகத்தான் காத்துகிட்டு இருக்கிறோம். கலக்டர் ஆபிஸ்லேருந்து இரண்டு மூணு கால்ஸ் வந்துடுத்து, நீங்க வந்துட்டீங்களான்னு கேட்டு” –பெரிய இடம். வரவேற்புக்கு கேக்கணுமா?

கோட் அணிந்த நபர் சிரித்துக் கொண்டே படி ஏறினார். கூடவே அவரது மனைவியும், மகளும்.

வாசலில் யாரோ தன்னையே பார்ப்பது போலிருக்கவே, திரும்பினார். ஆச்சரியம். தனது பள்ளிக்கூட நண்பன். எத்தனை வருஷமாச்சு பார்த்து? இருவரும் ஒருவரை ஒருவர் உற்றுப் பார்த்தனர். இருவர் முகத்திலும் மலர்ச்சி.

“நீங்க! நீ ! சங்கரன் தானே?”

“நீங்க ராமன்தானே? ஆளே அடியாளம் தெரியாம மாறிப் போயிட்டிங்க?”

“நீ மாறவேயில்லை சங்கரா! நீ இங்கே எங்கே?”

“நான் இப்போ காஞ்சிபுரத்திலே தான் இருக்கேன். கடைக்கு தான் வந்தேன்! உன்னை பார்த்து அப்படியே நின்னுட்டேன்”

“சரி வா! வா! உள்ளே போய் பேசலாம்”

****

சங்கரன், வயது 53.

காஞ்சிபுரத்தில், ஒரு பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளர். உதவி பேராசிரியர் பதவி இன்னும் கிடைக்கவில்லை. திறமை இருந்தும், அவருக்கு வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. உள்நாட்டில் டாக்டரேட் செய்ய விருப்பம்தான். ஆனால், வசதியில்லை.

நல்லவர். அருமையான ஆசிரியர். எந்த ஒரு கடினமான பிரச்னைக்கும் மிக அழகாக பதில் சொல்லுவார். அவ்வளவே.

விருப்பபட்டு, காஞ்சிபுரம் வந்தார். சுமாரான சம்பாத்தியம். சொந்த வீடு. மனைவி , இரண்டு குழந்தைகள். காலையில் காபி அவரே போடுவார். தினமும் நடை பயிற்சி. கோவில். அவரது அப்பாவை விட நல்ல நிலையில் இருக்கிறார்.

டாக்டர் ராமன் வயது 53

ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் டாக்டரேட், அப்பாவின் விருப்பப் படி படித்தார். பெற்றோரின் முழு ஆதரவு, பண பலம் தொடர்ந்தது. அமெரிக்காவில் பெரிய கல்லூரியில் வேலை கிடைத்தது. தனது வாக்கு சாதுரியத்தினாலும், பேச்சு திறமையினாலும் பதவிகளை தட்டி பறித்தார். படிப்படியாக முன்னேறி, பேராசிரியர், பெரிய கல்லூரியின் டீன், பின்னர் இந்தியா திரும்பினார். ஒரு நிகர்நிலை பல்கலைக்கழக துணை வேந்தரானார். இப்போது ஒரு பத்ம பூஷன். மத்திய அரசின் கல்வித்துறை அமைச்சகத்தின் முக்கிய ஆலோசகர். பல கமிட்டிகளில் பணி புரிகிறார்.

தேவைக்கு அதிகமாகவே நிறைய சொத்து. இவர் சம்பாதித்தது, அப்பாவுடையது. பெரிய பங்களா, பெயர், புகழ், மனைவி மக்கள். அப்பாவின் சமூக அந்தஸ்து அவருக்கு துணை வந்தது.

****
பின் குறிப்பு:

படிப்பில் சங்கரனுக்கு ஒன்றாம் இடம். ஆனால், வாழ்க்கையில் ராமனுக்கு ஒன்றாம் இடம்.

‘அப்போ வசதி இருக்கிரவர்தான் வாழ்க்கையில் முன்னேற முடியுமா? லாஜிக் சரியில்லயே.!’

ஸ்டாப். ஸ்டாப். நீங்க நினைக்கிறது சரிதான்.

எத்தனையோ மத்திம மட்டும் கீழ் தட்டு மக்கள், மிக உயர்ந்த நிலைக்கு வந்திருக்காங்க. அதேபோல், எத்தனையோ மேல்தட்டு , வசதி படைத்தவர் பசங்க வாழ்க்கையில் சுமாராதான் இருந்திருக்காங்க. அதனாலே, பணம் மட்டுமே ராமனின் மேன்மைக்கு காரணமில்லை என்றே தோன்றுகிறது.

சரியா? கதையை சொல்லிவிட்டேன்.

இப்போ என் கேள்வி இதுதான்.

கேள்வி: ஒருவர் வாழ்க்கையில் முன்னேற காரணங்கள் என்ன?
.
.
.
.

பதில் :

வாழ்க்கையில் முன்னேற நிறைய காரணங்கள் உள்ளன. ஜீன், வளர்ப்பு, பெற்றோர், வசதி, சந்தர்ப்பம், பகுத்தறிவு, நடைமுறை அறிவாற்றல், ஆக்கபூர்வ அறிவு போன்றவை சில. தன்னம்பிக்கை, ஊக்கம், அயராத உழைப்பு, கொஞ்சம் அதிர்ஷ்டம் இவை போன்றவையும் தேவை.

ஆனால், ராமனிடம் இருந்த மிக முக்கியமான ஒன்று, சங்கரனிடம் குறைவாக இருந்த ஒன்று, “நடைமுறை அறிவாற்றல்” ( Practical Intelligence).

சங்கரன் ஒரு ஜீனியஸ் தான். எதிலும் முதல். அவனது ஐ.க்யு 160க்கும் மேல்தான். ( மிக பெரிய விஞ்ஞானி ஐன்ஸ்டைன் ஐ.க்யு 150). ஆனால், வாழ்க்கையில் பெரிய வெற்றி பெறவில்லை. வாழ்க்கையில் தோற்றான் என சொல்ல முடியாது. ஆனால் பணம், புகழ் கிட்டியது குறைவே. மாறாக,

ராமனின் ஐ.க்யு 140. ஆனால் அவனது ‘நடைமுறை அறிவாற்றல்’ அவனை வாழ்க்கையில் எதிலும் வெற்றி பெற வைத்தது.

சரி; நடைமுறை அறிவாற்றல் என்றால் என்ன?

“யாரிடம், எதை, எப்படி, எப்போது சொல்கிறோம்” என்னும் திறமை. இதையே Practical Intellignece என்கிறோம். . இது படிப்பினால் மட்டும் வருவதல்ல. படிப்பு கொஞ்சமே சொல்லிக் கொடுக்கும். சுற்று சூழ்நிலை, சமூகம் மற்றும் வளர்ப்பினால் வருவது. முயன்றால், நாமும் வளர்த்துக் கொள்ள முடியும். நமது பிள்ளைகளை வளர்க்க முடியும்.

இந்த திறமையுடன் , ஆக்கபூர்வ ஆராயும் மற்றும் பகுத்தறியும் திறமையும் ( Creative and analytical intelligence – இது படிப்பினால் , பிறப்பு ஜீனினால் வருவது) சேரும்போது ஒளிர முடியும், வெற்றிப்பாதையில்.

உங்கள் ‘நடைமுறை அறிவாற்றல்’ பெருக வாழ்த்துக்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *