காதலியின் சிரிப்பிலே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 11, 2015
பார்வையிட்டோர்: 26,786 
 

‘ஏண்டா, நீ ஆம்பளைதானா?’

பள்ளி நண்பர்கள் கேலி செய்தபோதெல்லாம் அதைச் சிறிதும் பொருட்படுத்தாத எனக்கு அன்றிரவுதான் அச்சந்தேகம் பயங்கரமாக முளைத்தது.

ஹாலில் எனக்குப் பக்கத்தில் தரையில் படுத்திருந்த என் மாமா எப்போது அவ்வளவு நெருங்கி வந்தாரோ, தெரியவில்லை. அவருடைய கை என் உடல்மேல் படர்ந்து, போகக்கூடாத இடத்தில் எல்லாம் சஞ்சரித்தபோது விழிப்பு வந்தது.

“ஐயோ!”

அந்த அலறல் என்னிடமிருந்தில்லை. நான்தான் என்ன நடக்கிறதென்றே புரியாது, உடல் முழுவதும் விறைத்துக்கொள்ள, மூச்சை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தேனே!

மாமா சட்டென்று விலகி, மூக்கை உறிஞ்சினார். நான் இன்னும் உறைந்திருந்தேன். அப்பாதான் விரைந்தெழுந்து விளக்கைப் போட்டார். அடுத்து, ஆம்புலன்சை போன் போட்டு வரவழைத்தது, தாத்தாவை இருதய ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றது எல்லாம் தெய்வத்தின் குறிக்கீட்டால்தான்.

“தாத்தாவோட நானும் போறேன்!” என்று நான் வீட்டிலிருந்து தப்பிக்கப் பார்த்தேன்.

“என் செல்லம்!” அம்மா நெட்டி முறித்தார்கள். “என் கண்ணுக்குத்தான் தாத்தாமேல எவ்வளவு பாசம்!”

என் நான்கு அண்ணன்களைப்போல் நானும் கல்யாணம், படிப்பு என்று எதையாவது சாக்கு வைத்து, வீட்டைவிட்டுப் போய்விடப் போகிறோனோ என்று அம்மாவுக்குப் பயம். அதனால் அளவுக்கு மீறிய கொஞ்சலில் என்னைக் கட்டிப் போட்டிருந்தது எனக்குத் தெரியாமல் இல்லை. ஆனால், அம்மா அடிக்கடி என் கன்னத்தைத் தடவுவதும், தினமும் காலையில் என் தலைக்கு எண்ணெய் வைப்பதும் எனக்கு வேண்டித்தான் இருந்தது. அதனால்தானோ என்னவோ, பெண்களைப் பார்த்தால் மரியாதையுடன் ஒதுங்கத் தோன்றியது. அவர்களை வம்புக்கு இழுக்கும் என் வயதொத்தவர்களைப் பிடிக்காமல்போய், தனித்தே இருந்தேன்.

ஆம்புலன்ஸ் விரைந்துகொண்டிருந்தது. என் எண்ணமோ ஒன்றையே சுற்றிச்சுற்றி வந்தது.

‘ஆண்’ என்றால், இயற்கையிலேயே எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் கிளர்ச்சி தோன்றவேண்டுமோ, மீசை முளைத்தவுடன்? என்னிடம் தப்பை வைத்துக்கொண்டு, மற்ற பையன்கள்தாம் ‘ரௌடிகள்’ என்று மனதிற்குள் வைதேனே!

இன்று எப்படியோ மாமாவிடமிருந்து தப்பித்தாயிற்று. வேறு யாராவது இப்படி நடந்துகொள்ளமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? நாளை மாமாவே…! நினைக்கவே பயமாக இருந்தது.

இனி நானும் பிற ஆண்களைப்போல நடந்துகொள்ளவேண்டும் என்று முடிவெடுத்தேன். சினிமா கதாநாயகனைப்போல், எதிர்ப்படும் இளம்பெண்களை எல்லாம் காதலிக்க ஆரம்பிக்க வேண்டும். குறைந்த பட்சம், அவர்கள் என்னைக் கவனிக்கவாவது வைக்கவேண்டும்.

“என்னடா முழிச்சிட்டிருக்கே? ஆஸ்பத்திரி வந்தாச்சு. இறங்கு!”

அப்பாவின் குரலைக் கேட்ட செல்வம் படிகளைச் சட்டைசெய்யாது, எம்பிக் குதித்தான். புதியதாக வீரம் பிறந்துவிட்டதில் பெருமை பீறிட்டது.

“தாத்தாவுக்குத் துணையா நான் இங்கேயே தங்கறேம்பா!” என்று செல்வம் கேட்டுக்கொண்டபோது, ஆபீசுக்குப் போகவேண்டியிருந்த அப்பா மறுத்துப் பேசவில்லை.

நாள் பூராவும் கண்ணை மூடியபடி தாத்தா படுத்திருக்க, அந்த அறையிலிருந்து வெளியே வந்தான் செல்வம்.

‘இந்த இடத்தில்தான் நோயாளிகளின் உறவுக்காரப் பெண்களும், நர்சுகளுமாக எத்தனை இளம்பெண்கள்!’ என்ற பிரமிப்பு ஏற்பட்டது. அவர்கள் எல்லாருமே அவனைவிட வயதில் மூத்தவர்கள் என்பதை அவன் நினைத்துக்கூடப் பார்க்க விரும்பவில்லை.

சுடுநீர்ப் போத்தலைக் கையில் பிடித்தபடி நடந்து வந்த அப்பெண் கண்ணில் பட்டாள். எவ்வளவு அழகு! தமிழ்ப்பெண்ணாகவேறு இருக்கிறாள். துணிந்து இவன் புன்னகைக்க, பதிலுக்கு அவளும் சிறுநகை புரிந்தாள்.

“எங்க தாத்தாவுக்கு ஆபரேஷன். நான்தான் பாத்துக்கறேன்!” என்று பெருமையுடன் தெரிவித்தான்.

அவனை மதித்து அவள் உரையாடியபோது, வயதிலும், அனுபவத்திலும் பல வருடங்கள் கூடிவிட்டதுபோல இருந்தது செல்வத்துக்கு.

“சரிங்க, அக்கா!” என்று அவளுக்குப் பிரியாவிடை கொடுத்தான்.

அடுத்த முறை அவளைத் தேடி பக்கத்திலிருந்த பெண்கள் பகுதிக்குப் போகவேண்டும் என்று முடிவு செய்துகொண்டான். அப்போது ஒரு நர்ஸ் அந்தப் பக்கம் வர, “இப்படி ஓயாம நடக்கறீங்களே, சீமா! கால் வலிக்கலே?” என்று கரிசனப்பட்டான்.

ஆடையில் குத்தப்பட்டிருந்த பெயர் அட்டையிலிருந்து தன் பெயரைத் தெரிந்துகொண்டு, உரிமையுடன் அழைத்த அவனது துணிச்சலைப் பாராட்டுவதுபோல அவள் சிரித்தாள்.

“பழகிப்போச்சு!” அவள் அவனைக் கடந்து சென்றுவிட்டபோதும், ஏதோ இன்பக் கிறக்கத்தில் அவள் போன திசையையே பார்த்துக்கொண்டிருந்தான் செல்வம்.

‘டேய்! தான் எங்க தாத்தாவோட ஆஸ்பத்திரியில் தங்கியிருந்தபோது நீங்க என்னைப் பாத்திருக்கணும். சும்மா, ‘காதல் மன்னன்’னு பட்டமே குடுத்திருப்பீங்க!’ என்று நண்பர்களிடம் வீறாப்பு காட்டுவதாகக் கற்பனை செய்துகொண்டான். ‘வீரம்’ வளர்ந்தது.

“அக்கா!” அவன் இருமுறை கூப்பிட்டபிறகுதான் பெண்கள் வார்டிலிருந்த அப்பெண் அவனைக் கவனித்தாள்.

தன் கையிலிருந்ததை நீட்டினான் அவளிடம். “ஒங்களுக்கும் பாட்டு பிடிக்கும்னீங்களே! ஒரு புது ஏ. ஆர். ரஹ்மான் கேசட் வாங்கினேன். கேட்டுப் பாருங்க!” ஆஸ்பத்திரி கேண்டீனில் சாப்பிட என்று அப்பா கொடுத்துவிட்டுப்போன பணத்தில் அவளை நெருங்கவென்றே அவன் அதை வாங்கிவந்தான் என்பதை அவள் அறியவா போகிறாள்!

“தாங்க்ஸ்!” அவள் அதை வாங்கி, அருகிலிருந்த டிரான்சிஸ்டரின்மேல் வைத்தாள். பின், அவன் அங்கிருப்பதையே மறந்தவளாய், தன் தாயைக் கவனிக்கத் தொடங்க, ‘முதல் நாளுக்கு இது போதும்’ என்ற திருப்தியுடன் வெளியேறினான் செல்வம்.

அன்றிரவு ஒன்பது மணிக்குள் மருந்துகளின் உபயத்தால் தாத்தா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். பொழுதுபோகாது, தூங்கவும் பிடிக்காது, அவரிருந்த தனியறையைவிட்டு வெளியே வந்தான் செல்வம். வெளியில் ஒரு பொது ஹால். அதில் டி.வி. ஓடிக்கொண்டிருந்தது — ஓசை எழுப்பாமல்! எதிரிலிருந்த சோபாக்களில் சிலர் — நோயாளிகளின் மனைவிமார்களும், உடல்நிலை சற்றே தேறியவர்களும். ஓரிருவர் உட்கார்ந்த நிலையிலேயே அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தனர். அவர்களுள் ஒருவனாகும் எண்ணமே கசப்பை விளைவிக்க, செல்வம் வராந்தாவில் நடந்தான்.

வழியில், ஒரு கௌண்டருக்குப் பின்னால் அமர்ந்திருந்த தாதியர் ஏதோ குறிப்பெடுத்துக்கொண்டிருந்தனர். மேலே நடந்தான் — எதிரே சுவர் மறைக்கும்வரை. வலது கோடியில் இருந்த பெண்கள் வார்டு அவனை ‘வா, வா’ என்று அழைத்தது. அவன் வருகையை எதிர்பார்த்திருந்ததுபோல, கதவும் திறந்தே கிடக்க, மேலே யோசிக்காமல், உள்ளே நுழைந்தான்.

இவன் மனத்தைக் கவர்ந்த பெண் நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள். நேரே அவளருகே சென்று, “பாட்டைக் கேட்டீங்களா?” என்று கேட்டான். பேச்சை ஆரம்பிக்க ஒரு வழி கண்டுபிடித்த தனது புத்திசாலித்தனத்தைப் பாராட்டிக்கொண்டபோதே, அரைப்பரீட்சையில் மலாய் தவிர மற்ற எல்லாப் பாடங்களிலேயும் பெயில் ஆனதும், அப்பா, “புத்தி இல்ல?” என்று கேட்டபடி, பிரம்பால் அடித்ததும் நினைவில் எழுந்தன. ‘அப்பா கிடக்கிறார்!’ என்று அதை ஒதுக்கினான்.

“இன்னும் இல்லை,” என்றவள் முகத்தில் சிறு புன்னகை. “என்ன படிக்கிறீங்க?” மரியாதையை உத்தேசித்துக் கேட்டமாதிரி இருந்தது. ஆனால் செல்வத்துக்கோ உற்சாகம் தாங்கவில்லை. ‘இவளுக்கு என்னைப் பிடித்திருக்கிறது! எவ்வளவு அக்கறையாக விசாரிக்கிறாள்!’

“எஸ்பிஎம் எழுதியிருக்கேன்!”

“ஓ! ரிசல்ட்டுக்காகக் காத்திருக்கீங்களா?”

தான் நினைத்தும் பார்க்க விரும்பாத ஒன்றை அவள் ஞாபகப்படுத்தவும், அவன் உள்ளுக்குள் சுருங்கிப்போனான்.

சீக்கிரத்தில் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “ட்ரையல் பரீட்சையில எட்டுப் பாடங்களிலே நான் ‘ஏ’ வாங்கினேன். விளையாட்டிலும் நிறையப் பரிசு கிடைச்சிச்சா! மிகச் சிறந்த மாணவன்’னு பரிசு குடுத்தாங்க!” என்று அளந்தான். காதல் முளைக்கும்போதே அலட்டலும் வந்துவிடாதா!

‘இவ்வளவு குண்டாக இருப்பவன் எல்லாம் விளையாடிக் கிழித்தான்!’ என்றெல்லாம் அவள் அவநம்பிக்கைப்பட்டதாகத் தெரியவில்லை.

‘என்ன பாவம் செய்தோமோ இப்படி ஒரு வியாதி வர!’ என்று பலவாறாக ஓயாது புலம்பிக்கொண்டிருக்கும் நோயாளிகளிடையே அவனுடைய சிறுபிள்ளைத்தனமான பேச்சு வித்தியாசமானதாக, வரவேற்கத்தக்கதாக இருந்திருக்கவேண்டும். அதிகம் பேசாது, அவன் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டாள். சுமார் ஒரு மணி நேரம் அவள் பக்கத்திலேயே நின்றபடி, தன் பிரதாபங்களை அளந்தான் செல்வம். நடுவே, தன் மனதை உறுத்திக்கொண்டிருந்ததையும் கேட்டேவிட்டான்: “ஒங்களுக்கு ‘பாய் ஃப்ரெண்ட்’ இருக்கா, அக்கா?”

அவள் சிரித்த முகத்துடன், ‘இல்லை’ என்று தலையாட்டியதும், அவனுக்குச் சொர்க்கமே தெரிந்தாற்போல் இருந்தது.

உபசாரமாக, “நான் நம்பமாட்டேம்பா! அக்கா இவ்வளவு அழகா இருக்கீங்க!” என்று சீண்ட, அவள் மீண்டும் சிரித்தாள்.

“ஒங்க பேரு என்னக்கா?”

“செல்வராணி!”

“நெசமாவா? நான் செல்வம். நம்ப பெயர் பொருத்தத்தைப் பாத்தீங்களா?”

அவனுடன் அவளும் சேர்ந்து சிரித்தபோதுதான் அவனுக்கு மகிழ்ச்சி கலந்த அந்தக் குழப்பம் எழுந்தது: ‘இவளுக்கு நம்பமேல ஒரு ‘இது’ வந்திருச்சோ?’

அவளுடன் கைகோர்த்து பொது இடங்களுக்குப்போவதாகவும், அவனுடைய அதிர்ஷ்டத்தைப் பார்த்துப் பயல்கள் எல்லாம் வயிற்றெரிச்சல் படுவதாகவும் கற்பனை செய்துபார்த்தான். தாத்தாவின்மேல் நன்றி சுரந்தது. அவரால்தானே தனக்கு இவ்வளவு அயனான சந்தர்ப்பம்! ‘தாத்தாவுக்கு விரைவில் குணமாகவிடக்கூடாது, சாமி!’ என்று பிரார்த்தித்தான்.

மறுநாள் காலை எழுந்திருக்கும்போதே மனம் உல்லாசமாக இருந்தது. செல்வராணியின் சிரிப்புதான் எவ்வளவு அழகு! அவளை நினைக்கும்போதே மனம் பரபரத்தது. அவளை அப்போதே பார்க்கவேண்டும்போல இருந்தது. ‘வேண்டாம். பகலில் டாக்டர்கள் நடமாட்டம் அதிகம்,’ வேண்டாவெறுப்புடன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டான்.

தாத்தா ஒருமுறை கண்விழித்து, “ஒனக்கு ஏண்டா இந்த வயசிலே கஷ்டம்? வீட்டுக்குப் போ!” என்று முனக, “நல்லா… ஒங்களை விட்டுட்டுப் போவேனே!” என்று கூறி அவரை அதிசயிக்க வைத்தான்.

‘பையன் ரொம்பப் பொறுப்பு!’ நிறைந்த மனத்துடன் தாத்தா கண்ணை மூடிக்கொண்டார்.

ஆஸ்பத்திரியை நினைக்கும்போதே செல்வராணிதான் தெரிந்தாள். அவளோ, இல்லை தானோ, என்றாவது வீட்டுக்குத் திரும்பிப் போகவேண்டும் என்ற நிதரிசனமே அதிர்ச்சியை அளித்தது. அதற்குள் அவளும் தன்னை எண்ணி ஏங்கும்படி செய்துவிட வேண்டும். அதற்கென்ன, அவனைவிட வயதில் சற்றே மூத்தவள்தான். ஆனால், உடல் ஆகிருதியில் அவன்தானே பெரியவன்? அது போதாதா, என்று என்னென்னவோ நினைத்தே பொழுதைக் கழித்தான்.

மாலைப் பொழுது… நோயாளிகளைக் காண வந்த உறவினர்களும், நண்பர்களுமாக மூன்றாவது மாடியிலிருந்த வார்டு கலகலத்துக்கொண்டு இருந்தது. இதுதான் தக்க சமயமென செல்வம் பெண்கள் வார்டுக்குள் நுழைந்தான். கண்கள் காதலியைத் தேடின.

“ஆன்ட்டி! அக்கா எங்கே?”

விரக்தியுடன் காணப்பட்ட முதியவள், “இல்லே!” என்றாள் பதிலாக.

“கேண்டீனுக்குப் போயிருக்காங்களா?” என்றான் விடாப்பிடியாக.

“வீட்டுக்கு!”

அவனுடன் பேசுவதையே தவிர்க்க விரும்புபவள்போல் நடந்துகொண்டவளிடம் மேற்கொண்டு என்ன பேசுவது என்று புரியாது, சற்று விழித்துவிட்டு, ஏமாற்றத்துடன் வெளியே நடந்தான்.

எட்டு மணிக்கு வார்டே காலியானது. நப்பாசையுடன் மீண்டும் சென்று, “ஆன்ட்டி! அக்கா..,” என்று அவன் இழுக்க, “அக்காவோட என்ன பேசணும் ஒனக்கு?” என்று மிரட்டலாகக் கேள்வி வந்தது.

முதலில் அதிர்ந்தவன், விரைவில் சமாளித்துக்கொண்டான். காதல் என்றால் லேசா? அதற்கு எவ்வளவு துணிச்சலும், சாமர்த்தியமும் வேண்டும்!

“அக்காகிட்ட என்னோட கேசட் ஒண்ணு குடுத்தேன்..”

“அக்கா கேட்டாங்களா?” முகத்தில் அடிக்காத குறை.

‘உடம்பு முடியாம இருக்கறப்போவே கிழவி இந்தப்போடு போடுதே! ஐயோ!’ என்று மிரண்டவன், தோள்பட்டை முன்னால் சரிய, அங்கிருந்து வெளியேறினான்.

மறுநாள் காலை அப்பா வந்தார். முகத்தில் கடுமை.

“புறப்படுடா!” என்று இரைந்தார்.

அந்த வீட்டுக்கா! அவனுக்கு உதறல் எடுத்தது. மாமாவின் கை தன்மேல் படர்வதைப்போல் பிரமை எழ, சிலிர்த்துக்கொண்டான்.

“தாத்தாவைப் பாத்துக்கிட்டு, இங்கேயே இருக்கேனேப்பா!” அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டான்.

“போதும், நீ பாத்துக்கிட்ட லட்சணம்! பொம்பளைங்க படுத்திருக்கிற இடத்திலே ஒனக்கென்னடா வேலை?” அப்பா உறுமினார். “மானம் போகுது எனக்கு! ஒங்கம்மா காதில விழுந்தா, உசிரையே விட்டுடுவா!”

தாத்தா ஈனஸ்வரத்தில் குறுக்கிட்டார்: “எத்தனை நேரம்தான் என் மூஞ்சியையே பாத்துக்கிட்டு ஒக்காந்திருப்பான்? காலார நடந்து போயிருக்கான், பாவம்!”

“நீங்க வேற! டாக்டர் என்னைக் கூப்பிட்டுச் சொல்றார், ‘ஒங்க பையன்மேல ஒரே புகார்! நர்சுகளை வம்புக்கு இழுக்கிறானாம், பெண்கள் வார்டுக்குள்ளே போய், ராத்திரி ஒரு பொண்ணோட ஒரே அரட்டை. எல்லாரோட தூக்கமும் கெட்டுப்போச்சாம்!’ அப்படின்னு. இவனுக்குப் பயந்து, அந்தப் பொண்ணோட அம்மா அதை வீட்டுக்கு அனுப்பிட்டாங்களாம். வெட்கக்கேடு!”

தலை குனிந்தபடி, அவர் பின்னால் நடந்தான் செல்வம். புதிய கேசட் போனது போனதுதான் என்ற துக்கம் ஒருபுறம் எழ, அதைப் போட்டு பாட்டு கேட்டுக்கொண்டு, தன் நினைவாகவே செல்வராணி இருப்பதைப்போல் ஓர் ஆனந்தமான உணர்வு துக்கத்தை மீறி எழுந்தது. அது அவனுக்குள் ஒரு புது தெம்பை ஊட்டியது.

அவன் வருகையை எதிர்பார்த்தவர்போல், வீட்டு வாசலிலேயே காத்திருந்தார் மாமா.

“வாடா! எங்களை எல்லாம் மறந்தே போயிட்டியா?” கேலியாகப் பேசுவதுபோல், அவனது இடுப்பை அவர் கையால் வளைத்தார். விலகிப்போன இரை தானே வலியவந்து மாட்டிக்கொண்ட சந்தோஷம் அவர் முகத்தில் தெரிந்தது.

‘என்னையும் ஒரு பெண் மதித்துப் பேசி இருக்கிறாள்!’ என்ற நினைவே அபார தைரியத்தைக் கொடுக்க, முரட்டுத்தனமாக அவர் கையை விலக்கினான் செல்வம். முறைத்தபடி, “ஒங்க கை ஒங்ககிட்டேயே இருக்கட்டும். என்மேல பட்டா, அப்புறம் அது ஒங்க ஒடம்பில இருக்காது!” என்று பல்லைக் கடித்தபடி, அடிக்குரலில் மிரட்டினான்.

அவனிடம் ஏற்பட்டிருந்த மாறுதலை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது தலையைப் பின்னுக்கு இழுத்துக்கொண்ட வேகத்தில் தெரிந்தது.

நிமிர்ந்த தலையுடன் வீட்டினுள் நுழைந்தான் செல்வம்.

“கண்ணு! ஆஸ்பத்திரியில இருந்திட்டு வந்திருக்கே! மொதல்லே குளி, போ!” அம்மாவின் வரவேற்பு.

செல்வத்துக்கு எங்கிருந்தோ கோபம் வந்தது. “நான் ஒண்ணும் சின்னப்பிள்ளை இல்ல. ஒவ்வொண்ணையும் மத்தவங்க சொல்லிக் குடுத்திட்டு இருக்க வேணாம்!” என்று இரைந்தான்.

‘இந்தப் பயலுக்கு என்ன ஆயிடுச்சு!’ என்ற குழப்பத்தில் ஆழ்ந்தாள் பெற்றவள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *